ஆருத்ரா தோசைக் கல்லை அடுப்பில் ஏற்றி தோசை வார்க்க ஆரம்பிக்க அவள் பின்னோடு உள்ளேயே வந்த அதிரன் கிச்சன் மேடையில் ஏறி அமர்ந்து கொண்டவன், எந்த தொந்தரவும் இன்றி ஆருத்ராவை பார்வையால் அங்குலம் அங்குலமாக வருடினான்..
அவளுக்கு அவன் அப்படி பார்ப்பது உள்ளூர சங்கடமாக இருந்தாலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாது வெளியே விறைப்பாக நின்று தோசை வார்ப்பதில் முனைப்பு காட்டினாள் ஆருத்ரா.. இப்படியே விட்டுச் சென்று தன்னறையில் அடைந்து கொண்டால் இந்த அவஸ்தையில் இருந்து தப்பிக்கலாம் தான்..
ஆனால் பசிக்கிறது என்று வாய் விட்டுக் கேட்டவனை உனக்குப் பசித்தால் எனக்கு என்ன? என்று விட்டுச் செல்லும் அளவுக்கு அவள் மனம் இன்னும் கல் ஆகவில்லை.. அதைத் தெரிந்து தான் அவனும் குறி பார்த்து அடித்தானோ?
அவளுக்கு இவனாவது சற்று வெளியே இருந்தால் தேவலாம் போல் இருந்தது.. எங்கே அவன் என்ன முடிவில் இருந்தானோ அந்த இடத்தில் இருந்து அசைவதாகவே இல்லை..
அன்று அவன் மீண்டும் லண்டன் செல்லவா? என்று கேட்டதும், எங்கே இசை மீண்டும் தந்தை பாசத்துக்கு ஏங்கி விடுவாளோ? என்றஞ்சி அவன் முடிவு எதுவாகினும் தனது என்று சொல்லி விட்டாளே தவிர இதுவரை அதைப் பற்றி அவள் எதுவுமே யோசித்திருக்கவில்லை.. அவள் என்ன முடிவு சொல்வாளோ? என்று காத்திருக்கும் அதிரனுக்கு இது மட்டும் தெரிந்ததானால் நொந்து வெந்து சாம்பலாகித் தான் போவான் பாவம்..
அதிரனுக்கோ வேறு நினைவு.. அன்று சர்மி வீட்டில் அவர்கள் இருவரையும் வெளியே அனுப்பி விட்டு இவளுடன் தனிமையை நாடினான்.. இன்றோ கார்த்தி, ஹரிணி கூடவே இசையையும் அனுப்பி வைத்தாகிற்று.. இந்த நிலை மாறி என் விழி மொழி புரிந்து என் ருத்ரா தானாக தன்னோடான தனிமையைக் கொடுக்கும் காலம் என்று வரும்? என்று தான் ஏக்கம் கொண்டது அவன் காதல் மனது..
இருவர் நினைவின் வெப்பத்தில் தோசை தீயாது போனதே பெரிது.. சுட்ட தோசையை தட்டில் வைத்து சாம்பார் சட்னியையும் வைத்துக் கொடுத்தாள்..
நெடு நாட்களின் பின் அவள் கையில் உணவு உண்ணும் வரம் பெற்றவன் நிமிட நேரத்தில் கணக்கின்றி தோசையை உள்ளே தள்ளினான்.. அவன் வயிறு ஐயோ போதும்.. என்று கதறவும் தான் பாவம் பார்த்து அவளிடம் போதும் என்றான்.. அவன் போதுமென்றவே அவள் அடுப்பை அணைத்தாள்..
அதைப் பார்த்தவன் ” நீ சாப்பிடலையா ருத்ரா?” என்று கேட்டபடியே கடைசி தோசையை பிய்த்து அவள் வாயருகே நீட்டினான்.. அவளை இன்று இவ்வளவு நெருக்கத்தில் பார்த்ததில் இடையிலிருந்த கசப்பான காலம் அவனுக்கு மறந்து போனது போலும்.. என்னவோ தினம் தான் ஊட்டி விட்டு தான் அவள் உண்பது போல் இயல்பாய் அவள் புறம் உணவை நீட்டினான்..
ஆனால் அவளுக்கு எதும் மறக்கவில்லையே.. தனக்கு ஊட்ட வந்த அவன் கையையே சிறிது நேரம் வெறித்தவள் விழிகளில் இருந்தது என்ன என்று அதிரனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும் அது அவனுக்கு வலித்தது..
“ருத்ரா..” என்றவன் அழைப்பில் அவனை நிமிர்ந்து பார்த்தவள் முகம் இறுக சிறிதும் யோசிக்காது அவனை அறைந்திருந்தாள்.. நொடி நேரத்தில் நடந்துவிட்ட நிகழ்வுக்கு சாட்சியாக அதிரன் கன்னத்தின் வலியே மிஞ்சியிருக்க, அவளை அதிர்ந்து போய் பார்த்திருந்தான் அவன்.. அவனை நோக்கி வெறுப்பை உமிழும் ஒரு பார்வையை வீசியவள், அங்கிருக்க விருப்பமின்றி வெளியேறினாள்.. அவள் வெறுப்பில் அதிரன் அந்தரத்தில் உணவுடன் நின்ற கைகளையும் இறக்க மறந்து வேதனையில் வீழ்ந்தான்..
இசையை சுமந்த ஆரம்பத்தில் வாந்தியும் தலை சுற்றும் போட்டி போட்டு வதைக்க உண்ணப் பிடிக்காது அலைபவளை உருட்டி மிரட்டி ஊட்டும் போது எல்லாம் காலையில் அவன் வேலைக்கு செல்ல வேண்டும் என்று அமைதியாக சாப்பிடுபவள், மதியமும் அவன் தன்னருகில் இல்லாது தன்னை எண்ணி வருந்துவானே என்று ஒரளவு ஒழுங்காய் உண்ணுவாள்.. ஆனால் இரவில் மட்டும் வேண்டுமென்றே பாதி உணவில் போதும் என்று விட்டு உறங்க சென்று விடுவாள்.. அவனும் அவளைத் திட்டி விட்டு உறங்கவென்று படுத்தால் அடுத்த அரை மணித்தியாலத்தில் பசிக்குது என்று அவனை எழுப்பி விடுவாள்..
அந்த நேரம் அவன் தெரியாமல் முறைத்து விட்டால் கூட உங்க பொண்ணுக்கு மட்டும் நல்லா ஊட்டு்னிங்க.. இப்போ எனக்கு பசிக்குது ஊட்ட மாட்டியா? என்று சட்டமாய் பேசி அவன் கையால் வாங்கி உண்ணுவாள்.. போகப் போக இவள் போக்குப் புரிந்து அறைக்கு வரும் போதே உணவோடு தான் வருவான் அதிரன்..
வயித்துல இருக்கற புள்ளை கூட போட்டி போடுறியேடி.. என்று அவன் அதட்டினால் வயித்துல இருக்கும் போது மட்டும் இல்ல வெளியே வந்தாலும் இந்தப் போட்டி கன்டினியூ ஆகும் என்று அவனிடம் வக்கனைப்பாள்..
ஆனால் இன்று அவன் அவதானித்த வரை தாய், மகளுக்கு இடையில் எந்த போட்டியும் இல்லை.. காரணம் இருவரும் போட்டி போட்டு பெற்றுக் கொள்ள தானோ, தன் அன்போ அவர்கள் அருகில் இல்லையே.. தன் வெற்றிடத்தை நிரப்ப இருவருமே ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பாகவும் ஆதரவாகவும் இருந்துள்ளார்கள்..
அன்று ஆருத்ராவின் ஆபீஸ் தோழி அவளை சிங்கிள் மதர் என்று சொல்லும் போது வலித்தது என்றால் இன்றோ அந்த வார்த்தையில் இருந்த உண்மையின் வீரியம் சுட்டது..
தனியாக நின்று தன் சிந்தனையில் திளைத்து இருந்தவன், ஆருத்ரா நினைவு வர அவள் நிலை என்னவோ? என பதறி அவளறை புகுந்தவன் கண்டதோ தன் கட்டிலில் அமர்ந்து கசங்கிய முகத்துடன் தலையணையில் தன் கைகளை குத்திக் கொண்டு இருந்த ஆருத்ராவைத் தான்..
இத்தனை நாட்களில் முதன் முதலில் அவன் முன் தன் உணர்வுகளை வெளிக் காட்டுகிறாள்.. ஆனால் அவள் முகம் பார்த்த அதிரனால் அதை எண்ணி மகிழத் தான் முடியவில்லை..
அவளிடம் ஓடிச் சென்றவன் அவள் கைகளை பிடித்து நிறுத்திட,
” விடு… விடு…” என்று திமிறினாள்..
“உன் கோபம் போக இன்னும் வேணா என்னை நல்லா அடிடி… நான் தான தப்பு.. தப்பே பண்ணாத என் ருத்ராவை இத்தனை நாளும் நான் தண்டிச்சதே போதும்.. அவளைத் தாங்கிக்குற பில்லோக்கு கூட இனி அந்த கொடுமை வேணாம்டி..” என்றவன் அவள் கை பிடித்து தன் கன்னத்தில் தானே அடிக்க, அவனிடம் இருந்து கைகளைப் பிரித்து எடுத்தவள் அவனைத் தன்னிலிருந்து தள்ளி விட்டாள்..
ஆனால் அவனுக்கு இனியும் அவளை தள்ளி நிற்கும் எண்ணம் துளியும் இல்லை.. அதனால் அவள் தள்ளி விட்டதைக் காட்டிலும் வேகமாய் மீண்டும் அவளை அள்ளி அணைத்துக் கொண்டான்.. ஆருத்ரா அவனை தன்னை நெருங்க விடாது இத்தனை நாள் கடைப்பிடித்த நிதானம் எல்லாம் உணர்ச்சி வசப்பட்டதில் எங்கோ தொலைந்து போனது..
அவன் அணைப்பில் இருந்து வெளிவர அவனை அடித்துக் கிள்ளி என்று அவனிடம் இருந்து திமிறியவள் அடிகளை எல்லாம் தடுக்காது வாங்கிக் கொண்டான் தன் மேல் வாங்கிக் கொண்டான் அதிரன்.. ஆனால் அவளை தன்னை விட்டு நீங்க மட்டும் விடவில்லை.. இவளின் இந்த நிலையை இசை கண்டு விட்டால் என்ற எண்ணம் வரவே ஒரு கையில் அவளை சமாளித்துக் கொண்டூ, மறு கையில் சிரமப்பட்டு ஃபோனை எடுத்து சர்மிக்கு அழைத்தான்..
“சர்மி, என்ன ஏதுன்னு கேட்காம கார்த்தி கூட இருக்க இசை, அத்தை மாமா எல்லாரையும் அங்கவே கூப்பிட்டு தங்க வச்சுக்கோ.. ருத்ரா கூட நான் இருக்கேன்..” என்று கூறி கட் செய்து விட்டான்..
“அக்கா இசையை இங்க வர சொல்லு..” என்று அவன் வைத்த பின்னே கத்தியவளைப் பார்த்து,
“இல்லைடா இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தான்.. அங்க இருக்கட்டும்..” என்று மென்மையாய் சொன்னான்..
“அதை சொல்ல நீ யாரு? எனக்கு என் பொண்ணு இங்கே இப்போ வேணும்.. வர சொல்லு.. இல்ல நானே போய் கூட்டிட்டு வரேன்.. ” என்று எழ முயற்சி செய்தாள்.. ம்ஹும்… அதிரனின் இரும்புப் பிடி இளகுவதாய் இல்லை..
“ருத்ரா இங்கே பாருமா.. நான்..”
“சொல்லாத… அந்த பேரை சொல்லாத..” என்று வீறிட்டு கத்தியவளை விழியில் தேங்கிய வலியுடன் பார்த்தான் அதிரன்..
“ஆமா அன்னைக்கு திடீர்னு வந்து அப்பாகிட்ட என் பொண்ணு, என் உரிமை அது இதுன்னு பேசுனீங்களாம் சார்.. முதல்ல உரிமையைப் பத்தி பேச உனக்கு என்ன உரிமை இருக்கு? அவ பொறந்து அத்தனை வருசத்துல ஒரு தடவை அவ முகம் பார்த்து இருப்பியா? இல்லை நான் தான் அப்பான்னு உன் முகத்தை தான் காட்டி இருப்பியா? ஆனா உரிமைய மட்டும் தூக்கிட்டு வந்துட்டாரு ஐயா.. ஒரு வேளை மாசம் மாசம் அனுப்பின பணத்துல வந்த உரிமையோ அது?” என்று நக்கலாக கேட்டாள்..
“அதான் நீ வாங்கலையே..”என்றான் வருத்தத்துடன்..
“எதுக்கு நான் வாங்கணும்? இசையை சுமந்து பெத்ததுக்கு கூலியாவா? நான் ஒன்னும் செரகேட்டட் மதர் இல்ல.. காசுக்கு குழந்தை பெத்துத் தர..” கூர் பார்வையுடன் கூராக்கி தீட்டிய வார்த்தைகள் அவனைக் குத்திக் கிழித்தன..
“ருத்ரா! என்ன பேச்சுடி இது? ஏன்டி இப்படிலாம் பேசுற? எனக்கு வலிக்கவா? இல்ல உனக்கு வலிக்கவா?” வேதனையைத் தாண்டி அதிருப்தியாகவும் அதிர்ச்சியாகவும் அவளைக் கேட்டான்..
ஆனால் அவள் கலங்கவில்லை..
“நான் நிஜமா தான் கேட்கிறேன்.. நீங்க எதுவுமே சொல்லாம கொள்ளாம விட்டுட்டு போய் காசை மட்டும் கணக்கா குடுத்தனுப்புவீங்க.. நான் அதை வாங்கிக்கணும் இல்ல? ஏன்னா நான் காசுக்கு அலையுற… “
“ருத்ரா!!! ஸ்டாப் இட் இடியட்..”
அடுத்து அவள் சொல்லப் போகும் வார்த்தை உணர்ந்து உடல் அதிர கத்தி விட்டிருந்தான் அதிரன்.. கோபத்தில் கண்கள் சிவக்க அவளைப் பிடித்த பிடியை இறுக்கினான்.. அதில் ஆருத்ரா வலியில் முகம் சுழிக்க தன் பிடியைத் தளர்த்தியவன்,
“என் பொண்டாட்டி, என் புள்ளை என் பொறுப்புன்னு நான் ஆத்மார்த்தமா என் குடும்பத்துக்கு சம்பாதிச்சு குடுத்தது அது.. அதை நீ வாங்கல அத்தோட நிறுத்திக்கோ.. ஆனா அதை வச்சே உன்னை நீ தாழ்த்திக்கிறதயோ தப்பா பேசுறதையோ நான் அனுமதிக்க மாட்டேன்..” என்று கோபம் மாறாது உறுமினான்..
ஆருத்ரா அவன் பேச்சில் இகழ்ச்சியாய் இதழ் வளைத்தவள், “நீங்க அனுமதிச்சு தான் இங்க எல்லாம் நடக்குதா என்ன? இதை சொல்ல வேற யாரும் தேவை இல்ல.. நீங்க பணம் அனுப்பின விசயம் மட்டும் அவங்களுக்கு தெரிஞ்சிருந்தா உங்க வீட்டுக்காரங்களே எனக்கு எத்தனையோ பேரு வச்சிருப்பாங்க.. என் பொண்ணு பிறப்பையே தப்பா பேசினவங்க தானே உங்க அக்கா? அதை ஒன்னும் சொல்லாம கேட்டுட்டு வேடிக்கை பார்த்துட்டு இருந்த பாவத்துக்கு தான் உங்க அம்மா, இன்னவரைக்கும் பாட்டி என்ற வார்த்தைய இசை வாயில இருந்து கேட்காமலே இருக்காங்க..”என்றாள் கண்கள் வெறியில் மின்ன..
ஆருத்ரா சொல்ல சொல்ல அதிரனுக்குள் இருந்த ரணங்கள் இன்னும் அதிகரிக்க அவனுக்கு தன் வீட்டினர் மேலிருந்த கோபமும் குறையாது பெருகிக் கொண்டே போனது.. ஆனாலும் அதை எதையும் காட்டிக் கொள்ளாது பேசுபவளை இன்னும் பேச வைத்து அவள் மனதின் பாரங்களை இறக்கி வைக்க நினைத்தான்..
“அப்டின்னா இசை நீ சொல்லி தான் அம்மாவை பாட்டின்னு சொல்றதும் இல்ல, அவங்க கூட சேர்றதும் இல்லையா?”
“ஆமா… நான் தான் காரணம்.. இவங்க உன் உறவுன்னு நான் அறிமுகப் படுத்தாத யாருகிட்டவும் என் பொண்ணு பேசக் கூட மாட்டா..” அதை சொல்லும் போதே அவள் கண்களில் அத்தனை கர்வம்..
“அப்படின்னா நீ தானே என்னை அப்பான்னு அவளுக்கு அறிமுகம் செய்து வச்சிருப்ப? இல்லன்னா பார்த்த அன்னைக்கே அப்பான்னு என்கிட்ட ஓடி வந்திருப்பாளா என் பொண்ணு?”
எதிர்பாராத இந்தக் கேள்வியில் ஆருத்ரா சுவற்றை வெறித்தாள்.. ஆனால் அதிரன் பதில் வராமல் ஓய்வதில்லை என்பது போல பேசினான்..
“என்னை பொறுத்த வரைக்கும் எங்க வீட்டு ஆளுங்களை விட, உங்களுக்கு பெரிய பாவம் பண்ணது நான் தான்.. என்னை மட்டும் எப்டிடி இசைக்கு அறிமுகம் செய்து வைக்கணும்ன்னு தோணிச்சு உனக்கு? உன் இடத்தில நான் இருந்திருந்தா கூட இசைகிட்ட உங்க அப்பா செத்துப் போயிட்டார்ன்னு சொல்லி தான் வளர்த்திருப்பேன்.. நீ ஏன் ருத்ரா அதைப் பண்ணல?” என்று பாதி நன்றியுணர்வுடனும் பாதி அவளை ஆராயவும் கேட்டான்..
“ம்ம் … சொல்லி வளர்த்திருக்கலாம் தான்.. ஆனா எனக்கே சந்தேகம் நான் இன்னும் எத்தன காலம் இருப்பேன்னு.. என் வேதனைல நான் நெஞ்சு வெடிச்சு செத்துப் போயிட்டேன்னா, இசைக்கு அம்மா இல்லாம போனாக் கூட அப்பான்னு ஒரு உறவாவது இருக்கும்ல?.. அதான் இது தான் உங்க அப்பான்னு அடையாளம் காட்டினேன்..” சலனமேயின்றி அவள் சொன்ன
அந்த வார்த்தைகளில் அதிரன் நொருங்கி போய் ஒன்றுமே இல்லாது போனான்.. அவன் கண்கள் அவள் வேதனையின் தகிப்பில் கண்ணீரை சொரிய அவளை இழுத்து தன்னோடு இறுக்கி தனக்குள் புதைத்துக் கொண்டு, “ஏன்டி இப்படி எல்லாம்..?” என்று மேலே என்ன பேச என்று கூட தெரியாது மனதில் கதறினான்.. அவள் தொடர்ந்தாள்…
“அதோட எனக்கு உங்க மேலையும் நம்பிக்கை இருந்திச்சு..” என்ற… அதிரன் விழிகள் மின்ன அவளை நிமிர்ந்து பார்த்தான்.. ஆனால் அவள் அடுத்த வார்த்தைகளில் பலமாய் அடி வாங்கினான்..
“உருவம் வர முன்னாடியே உங்க குழந்தை மேல அவ்ளோ பாசம் வச்சிருந்தீங்க.. நிச்சயமா என்னைக்கோ ஒரு நாள் இசையை தேடி வருவீங்க.. அப்போ என் குழந்தைக்கு கிடைக்க வேண்டிய உண்மையான பாசம் என்னால ஏன் கிடைக்காமல் போகணும்? நான் நினைச்ச மாதிரியே நீங்களும் வந்தீங்க.. இசை பேச ஆரம்பிச்ச போதே அவளுக்கு உங்க ஃபோட்டோ காட்டி அப்பான்னு சொல்லிக் கொடுப்பேன்.. அதை மனசுல நல்லா பதிச்சுக்கிட்டவ யாரு ஃபோட்டோவ பார்த்தாலும் ‘அப்பா வா’ன்னு கூப்பிடுவா..” என்று சொன்னவள் குரல் அழுகையில் அடைக்க எச்சிலை விழுங்கினாள்.. கூடவே அன்று அவள் சுமந்த வேதனைகளையும்.. இதைக் கேட்ட அதிரன் நிலை சொல்லவே தேவையில்லை.. அவனை விட்டால் தனக்குத் தானே குழி எடுத்து உயிரோடு தன்னை அதில் புதைத்து விடும் அளவு மனம் விட்டுப் போயிருந்தான்.. வெடித்து வரும் போல் இருந்த அழுகையை உதட்டை அழுந்திக் கடித்து அடக்கிக் கொண்டான்.. ஆண் மகனல்லவா? அழுது விடக் கூடாதே? என்ற திண்ணம்..
“பிரிகேஜி சேரும் போதே அங்க மத்தப் பசங்க கூட வர அவங்க அப்பாக்களை பார்த்து என் அப்பா எங்க? என்னை கூட்டிப் போக வரலன்னு அழுவா..
அப்பா பாவம் , ஃபோன்ல பேசக் கூட முடியாம வேலைன்னு சொல்லி திசை திருப்பிடுவேன்.. ஒரு வேளை கேட்ட பதிலயே திருப்பி திருப்பி கேட்டு சலிச்சுப் போச்சோ என்னவோ? ஒரு கட்டத்துல அவ அப்பாவைப் பத்தி கேக்குறதை நிறுத்திட்டா.. எங்க அவ மனசுல எதுவும் நெகட்டிவா பதிஞ்சு போய்டுச்சோன்னு நான் பயந்து போய் இருந்தப்போ தான் நீங்க வந்தீங்க.. அப்போ எனக்கு ஏற்பட்ட நிம்மதிக்கு அளவே இல்லை.. அதுனால தான் அக்கா திட்டினாலும் இசை உங்க கூட தங்குறதுக்கு கூட நான் தடை சொல்லல.. என் வாய் வழியா உங்களை பத்தி கேட்டதை இசை நிஜத்துல உணர்ந்துக்கட்டும்ன்னு விட்டேன்.. நிச்சயமா அந்த விசயத்துல நான் உங்களுக்கு நிறைய நன்றி கடன் பட்டிருக்கேன்.. என் பொண்ணுகிட்ட என் வார்த்தையை நிஜமாகிருக்கீங்க அதுக்கு ரொம்ப தாங்க்ஸ்..” என்றாள் உளமார..
“ருத்ரா வார்த்தையால கொல்லாதடி.. நான் என் பொண்ணு மேல வச்ச பாசத்துக்கு நீ நன்றி சொல்றியாடி? இதைக் கேட்கவே எதுக்குடா பிறந்தோம்ன்னு இருக்கு.. உன் மேலயும் நான் வச்ச பாசம் உண்மைடி.. இசைக்காக மட்டும் தான் வந்தேன்னு சொன்னதுலாம் கோபத்துல சொன்னது.. நான் வாழ இசை மட்டும் போதாது ருத்ரா.. எனக்கு நீயும் வேணும்டி..” வேதனை தொண்டையைக் கவ்வ அவன் குரல் கரகரத்து வந்தது..
அவனை பார்த்து கேலியாக சிரித்தவள்,
” இது எப்போ எடுத்த முடிவு? உங்க அம்மாவ தள்ளி விட்டது நான் இல்லன்னு தெரிஞ்ச அப்பறம் எடுத்த முடிவா?”
இல்லை என்று சொன்னால் நம்புவாளா? உன்னைப் பிரிந்த நொடி முதல் உனக்காய் ஏங்கினேன் என்று சொன்னால் தான் நம்புவாளா? கலங்கி சிவந்த விழிகளுடன் அவளை ஏறிட்டான் அதிரன்..
அவனின் அந்த மௌனத்தை அவள் வேறாக புரிந்து கொண்டாள் பாவை.. மௌனம் சம்மதத்தின் மொழியாகிற்றே.. அன்று உண்மை தெரியும் முன்பாக அவன் புலம்பியதை எல்லாம் மறந்து விட்டாள் பாவம்..
“இப்போ கொஞ்சம் முன்னாடி கார்த்திக்கிட்ட நீங்க பேசுனது கூட உண்மை தெரிஞ்சதால தான? நீங்க பேசினதும் அவரும் பேசினாரே.. அது மாதிரி நானும் இருக்கணும்னு எதிர்பார்க்கிறீங்களா? அதாவது தப்பு பண்ணும் போது விட்டுப் போய்ட்டு அப்பறம் தப்ப நான் பண்ணலன்னு தெரிஞ்சதும் வந்து நிப்பீங்க.. நானும் எல்லாம் மறந்து உங்க கூட வந்து ஒட்டிக்கணும் இல்லையா? என் கிட்ட ஒரு வார்த்தை இதை நீ பண்ணியான்னு கேட்கற அளவு கூட நம்பிக்கை இல்லை, பரவால்ல …. அட்லீஸ்ட் நான் தான் உங்க அம்மா காலை உடைச்சேன்னு நம்பி என் காலை உடைச்சுட்டாச்சும் என் கூட இருந்திருக்கலாமே..” என்ன மறைக்க முயன்றும் அவள் குரலில் அளவு கடந்த ஏக்கம் வெளிப்பட்டது..
அதிரனுக்கு ஐயோ என்றானது.. தன்னால் அவளுக்கு அப்படியான தண்டனை கொடுக்க முடியாது என்று தானே விலகிப் போனான்.. ஆனால் அதைவிடவும் தன் விலகல் கொடுமை என்கிறாளே இவள்? என்று துடித்துப் போனான்.. இன்னும் எத்தனை வேதனைகளை உள்ளே ஒழித்து வைத்திருக்கிறாளோ? அமுத சுரபி மாதிரி கொட்டக் கொட்ட அவள் வேதனைகள் முடிவுறாது தொடர்ந்து கொண்டே வந்தது.. எதுவாக இருந்தாலும் இன்றே மொத்தமும் கொட்டி விடட்டும் என்று அவள் விரல்களை இறுக்கிக் கொண்டு அமைதியாக இருந்தான் அவன்..
“கார்த்தி பேசினது அது.. நட்புக்குள்ள எந்த எதிர்பார்ப்பும் இருக்காதுன்னு சொல்வாங்கல.. அதனால கூட இருக்கலாம். ஆனா எனக்குலாம் நெறைய எதிர்பார்ப்புகள் இருந்துச்சே.. அதை நீங்க நிறைவேத்துவீங்க என்ற நம்பிக்கையும் நிறைய இருந்துச்சு.. நான்,நீங்க,நம்ம பொண்ணு என்ற வட்டத்துல நிறைய எனக்குன்னு நிறைய ஆசை.. ஆனா.. ஆனா… என்னை நம்ம மூணு பேரும் ஒரு வேளை சாப்பாட ஒன்னா உக்காந்து சாப்பிட முடியுமான்னு ஏங்க வச்சிட்டேல நீ?” என்றவள் முகத்தை மூடிக் கொண்டு வெடித்து அழுதாள்..
இறைவா! இன்னும் எத்தனையை என் இதயம் தாங்கவேண்டும் என்று தெரியவில்லையே! என்று மருகிய அதிரனுக்கு கண்ணீர் எல்லாம் வரவில்லை.. கண்ணீர் விட்டால் எங்கே இந்த வேதனைகள் எல்லாம் என்னை விட்டு விலகிடுமோ என்று நினைத்தானோ என்னவோ? அது தனக்கு வேண்டாம்.. இது நாள் வரை இவற்றை சுமந்தவள் அவள் தானே? அதனால் அவள் அதைக் கண்ணீரில் கரைக்கட்டும்.. ஆனால் அவளுக்கு அதைக் கொடுத்த இனி அதைக் காலத்துக்கும் சுமக்க வேண்டும்.. இந்த வலிகள் என்னை விட்டு நீங்காதவாறு பார்த்துக்கொள் இறைவா! என்று மனதில் எல்லாம் வல்லவனிடம் இறைஞ்சினான் அதிரன்..
“ருத்ரா… அழாதடா… நான் தான் உன் கூட இருக்கேன்ல.. நீ என்னலாம் ஆசைப்பட்டன்னு சொல்லு.. எல்லாத்தையும் நான் பண்ணுறேன்.. வேலை வெட்டின்னு மத்த எல்லாத்தையும் கிடப்புல போட்டுடலாம்.. என் பொண்டாட்டிக்குப் பிறகு தான் மத்தது எல்லாம்..” என்று அவளுக்கு உறுதி தந்தான் அவள் கதறலில் கலங்கிய குரலில்..
உடனே அவனை உதறி எழுந்தவள், “பொய்.. எல்லாமே பொய்.. உங்க பொண்ணைத் தேடி மட்டும் தான் இங்க வந்தீங்க.. நானும் நீங்க கேட்டதைக் கொடுத்துட்டேன்.. இனி என்கிட்டக் கொடுக்க உங்களதுன்னு எதுவும் இல்லை.. ஒரு வேளை பாதி பாதி நாள்னு இல்லாம இசையைக் கூடவே வச்சிருக்கணும் என்றதுக்காக என்னை உங்ககிட்ட இழுக்கப் பார்க்க தான் இந்த நாடகம்ன்னா அது தேவையே இல்ல.. உங்களுக்கு வேணும்ன்னா உங்க பொண்ணைக் கூட்டிட்டு லண்டன் கனடான்னு என் கண்ணை விட்டுக் கூட்டிப் போய்டுங்க.. அவளும் உங்க இரத்தம் தானே? ஈசியா நான் இல்லாம வாழக் கத்துக்குவா..” என்றாள் கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று அறியாமலே..
அதிரனுக்கு இப்போது வலியுடன் சேர்ந்து கோபமும் எக்கச் சக்கமாய் வந்தது..
“எங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு நீ இருப்படி.. ஆனா எங்க ரெண்டு பேராலயும் நீ இல்லாம முடியாது.. லண்டனுக்கு என்ன நரகத்துக்கு போறதுனாலும் உன்னையும் கூட்டிட்டுத் தான் போவேன்..” என்று ஒரு நொடியில் தள்ளிச் சென்ற அவளைத் தன் கைகளுக்குள் கொண்டு வந்தவன், அவள் இதழ் தவிர்த்து முகம் மொத்தமும் ஆவேச முத்தங்களால் குளிப்பாட்டினான்..
“விடு.. என்னைய விடு..” என அவள் அவனிடம் போராட,
“அதைத் தவிர வேற சொல்லு கேட்கிறேன்..” என்றான்..
“நான் என்ன சொன்னாலும் கேட்பேன்னு சொல்லிருக்க..” என்று அவன் மறந்ததை நியாபகப் படுத்த ஒரு நொடி தடுமாறியவன் அவள் விழிகளை நேரே பார்த்தான்.
“அது நான் உனக்காக கொடுத்த வாக்கு.. ஆனா நீ அதை நான் இசையை விட்டுப் போக முடிவெடுத்தா யூஸ் பண்றதுக்காக வச்சிருந்திருக்க.. ஐ மீன் நான் உனக்குன்னு குடுத்தத நீ இசைக்குன்னு ரிசர்வ் பண்ணிருக்க, ரைட்டா?” என்ற, அவன் தன் உள்ளத்து உண்மையைக் கண்டு கொண்டதில் அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள்..
அவள் நிலையே அது தான் உண்மை என்று சொல்லி விட… “அப்போ அது தான் உண்மை இல்லையா? ஒரு சத்தியம்னா அதுல சம்பந்தப்பட்ட இரு சாராருமே அதுக்கு உண்மையா இருக்கணும்.. நீ உண்மையா இல்லாத பட்சத்தில நான் அதை மதிக்கணும்ன்னு இல்லையே.. அதோட சாகிற வரைக்கும் உன்னைக் கூடவே வச்சு சந்தோசமா பார்த்துக்கணும்ன்னு எனக்குள்ள சத்தியம் பண்ணி தான் உன்னைக் கட்டிக்கிட்டேன்.. அதையே தவறினவன் தானே நான்.. இது எல்லாம் பெரிய விசயமே இல்லை..” என்று சாதாரணம் போல் சொன்னவன் தொண்டைக்குழி வேதனையில் ஏறி இறங்கியது..
அவனின் அந்த வலி அவளையும் தாக்கியதோ என்னவோ அதன் பின் ஏதும் பேசவில்லை அவள்.. ஆனால் தனக்காக அந்த வாக்கை கேட்கலாம் என்று அவன் சொன்னதை மட்டும் குறித்துக் கொண்டாள்.. அதிரன் தன் மோன நிலை கலைந்தவன் மெல்லிய விசும்பல் ஒலியோடு தன் கையில் துவண்டிருந்தவளைப் பார்த்தான்..
இத்தனை நாள் மௌனம் கலைத்து மன உளைச்சலில் இன்று நிறைய பேசிவிட்டாள்.. நிறையவே அழுதும் விட்டாள்.. இது போதும் இப்போதைக்கு.. அவளை உறங்க வைப்போம்.. என்று எண்ணியவனாக அவளை அப்படியே கைகளில் அள்ளிப் படுக்கையில் சுவரோரமாக படுக்க வைத்தான்.. தானும் அவள் அருகிலேயே படுத்துக் கொண்டு அவள் இமைகளில் முத்தமிட்டு “தூங்கு ருத்ரா, காலைல பேசிக்கலாம்..” என்று தட்டிக் கொடுத்தான்..
“இது எதுவும் எனக்கு வேணாம் .” அப்போதும் அடங்காது அவன் கைகளை தட்டி விட்டாள்..
“ஏன் முன்னாடி எல்லாம் போட்டி போட்டு வாங்குவ என்கிட்ட.. அப்போலாம் இனிச்சுது தானே?” என்று அவளுக்கு பழைய இனிமைகளை நினைவு படுத்தினான்..
“முன்னாடி முட்டாளா இருக்கும் போது இனிச்சது தான்.. இப்போ கொஞ்சமா அறிவு வந்ததும் உண்மை புரிஞ்சு கசக்குது..” அவனுக்கு வலிக்கவென்றே திருப்பிக் கொடுத்தாள்.. ஆனால் அவன் தான் அவள் வலிகளை ஏற்கப் பழகிக் கொண்டானே அதனால் மெல்ல சிரித்துக் கொண்டவன்,
“என் ருத்ராக்கு அறிவு வந்தா சரி தான்.. அண்ட் இனிப்ப சாப்பிட்டே இருந்தா நோய் வந்திடும்.. மருந்து கசந்தாலுமே நோய குணமாக்கிடும்.. அதனால..” என்றவன் பேச்சை நிறுத்தி குட்டி குட்டி முத்தங்களாய் அவள் முகம் எங்கும் வைத்துக் கொண்டே இருக்க அவனுடன் போராடிப் போராடியே களைத்துப் போய் ஒரு கட்டத்தில் உறங்கி விட்டாள் ஆருத்ரா..
அவள் முகத்தில் இன்னுமே அழுத சுவடுகள் அப்பட்டமாய் தெரிய அது அவனையும் ரணப்படுத்தியது.. மெல்லிய பெருமூச்சோடு அவளை விட்டு எழுந்தவன்… தன் அலைபேசியை எடுத்துக் கொண்டு கிச்சனுக்கு சென்று பாலை அடுப்பில் ஏற்றி விட்டு சர்மிக்கு அழைத்தான்..
இது வரை முப்பதிற்கும் மேற்பட்ட தவறிய அழைப்புகள் வந்திருந்தது அவளிடம் இருந்து.. அதை எதிர் பார்த்து தான் இடையூறின்றி இருக்க மொபைலை சைலண்டில் போட்டிருந்தான்..
ஒரே ரிங்கில் எடுத்தவள் ,
“டேய் எத்தனை தடவைடா உன்னைக் கூப்பிடறது? ஃபோன் போட்டா எடுக்க மாட்டியா? ஆரு எங்க? அவ ஓகே தான?”
அவளின் அத்தனை கேள்விக்கும் ஒற்றை பதிலாய் “ருத்ரா தூங்கிட்டு இருக்கா..” என்ற பதிலை சொன்னவன், “இசை வந்தாச்சா?” என்று மகளைக் கேட்டான்..
அவன் ஒற்றைப் பதிலில் கோபம் வந்தாலும் அடக்கிக் கொண்டு
“ம்ம், கார்த்தி கூட்டிட்டு வந்து விட்டுட்டுப் போறான்.. அப்பா அவர் ப்ரெண்ட் பொண்ணுக்கு ரிசப்ஷன்னு அம்மாவ கூட்டிட்டு போயிருக்கார்.. அருள் பிக்கப் பண்ண போயிருக்கார்..
“ம்ம் .. இசை என்ன சொல்றா?..”
“இரு அவகிட்ட தரேன்..” என்றவள் தன் மகன்களுடன் விளையாடிக் கொண்டிருந்த இசையை அழைத்து ஃபோனைக் கொடுத்தாள்..
“ப்பா… என்னைக் கூட்டிப் போக வரீங்களா?”
“இல்லைடா செல்லம்மா.. இன்னைக்கு ஒரு நாள் அப்பாக்காக பெரியம்மா வீட்ல தங்கிக்குறீங்களா?”
“அம்மா, ஒன்னும் சொல்லலையாப்பா? கார்த்தி மாமா அம்மாகிட்ட சொல்ல விடாம கூட்டிட்டுப் போயிட்டார்.. அம்மாக்கு கோவமா என் மேல?” குழந்தையின் குரலில் வருத்தம் அப்பட்டமாய் தெரிந்தது..
“ச்ச.. இல்லடா.. அம்மாக்கு கார்த்தி மாமா மேல தான் கோபம்.. இசையை என்கிட்ட பை கூட சொல்ல விடாம கூட்டிப் போறான்.. அவன் வரட்டும்.. அவனுக்கு பச்ச மிளகா யூஸ் குடுக்குறேன்னு சொல்லிட்டு இருந்தா என்கிட்ட..” என்று மகளின் வாட்டம் களைய கார்த்திக்கு வாய் வார்த்தையால் ஆப்பு வைத்தான் அதிரன்..
“அம்மா உங்ககிட்ட சொன்னாங்களா?” என்று வியந்து கேட்டது இசை பாப்பா..
“ஆமா.. ஏன்?” அவள் வியப்பு ஏனென ஒன்றும் விளங்காது கேட்டான்..
“அப்போ , நீங்க ரெண்டு பேரும் பழம் விட்டுட்டீங்களா? இனி கா இல்லையா ரெண்டு பேரும்?” என்றவள் குரலிலேயே துள்ளல் தெரிய அதிரன் இன்னுமே கூட நொந்து போனான்.. தாங்கள் இருவரும் பேசிக் கொண்டோம் என்பதிலே இவ்வளவு சந்தோஷம் கொள்கிறாள் என்றால் மற்றப் பெற்றோர்கள் போல என்னைப் பெற்றவர்கள் இல்லையே என்று நிச்சயம் அதற்காக ஏங்கி இருப்பாள் தானே? எங்களை நம்பிப் பிறந்த குழந்தைக்கு அடிப்படை குடும்பக் கட்டமைப்பைக் கூட கொடுக்காத தான் எல்லாம் என்ன தந்தை? என்று காறி உமிழத் தோன்றியது..
போதும்.. முடிந்ததை எண்ணி வருந்தியது போதும்.. இனி என் இரு உயிர்களையும் எதற்கும் தவிக்க விடக் கூடாது.. ஆருத்ரா என்னுடன் இல்லா விட்டால் என்ன, நான் அவளுடன் இருந்து விட்டுப் போகிறேன்.. என்று முடிவெடுத்தான்.. அந்த தெளிவிலே மகளிடம் மேலே பேசினான்..
“இல்லடாம்மா.. அப்பா பழம் சொன்னேன்.. ஆனா அம்மா அக்செப்ட் பண்ணிக்கவே இல்லை.. நீ தான் அப்பாக்கு ஹெல்ப் பண்ணி அம்மாவை என் கூட பேச வைக்கணும்.. இந்த மிஷன்ல நீங்க அப்பா டீம் ஓகேவா?” என்று அவளுக்கு ஆர்வம் தூண்ட பேச,
முதலில் ஏதோ விளையாட்டாய் எடுத்துக் கொண்டு “ம்ம் … ம்ம்…” என்று தலையாட்டிய இசை பின்னே அவன் தாய்க்கு எதிராக ஏதோ செய்ய சொல்வது உணர்ந்து ,
“ப்பா..” பரிதாபமாக இழுத்தாள்..
அதிரனுக்கு இருந்த இறுக்கத்திலும் மகளின் இந்த இழுவை சிரிப்பை வரவழைத்தது.. சிரிப்புடனே,
“ஓய் கேடி மம்மியோட கேடி டாட்டர்.. என்ன பம்முறீங்க? எனக்கு அதெல்லாம் தெரியாது.. டீல் இஸ் அ டீல்.. இசை மேடம் நீங்க என்னோட டீம் தான்.. “
அவன் அக்ரீமெண்ட் போட்டு சைன் வாங்கும் முன்னே இசை உஷாராகி, “ஆ … அப்பா உங்ககிட்ட பெரியம்மா பேசனுமா..” என்று போனை சர்மியிடம் தந்து விட்டு கேடி டாடியிடம் இருந்து தப்பித்து ஓடி விட்டது.. அதிரனின் சிரிப்பு இன்னும் விரிந்தது..
“கேடி பேபி, நைசா நழுவவா செய்ற? நீ நாளைக்கு இங்க தான வந்தாகணும்? என்று அவன் சொன்னதைக் கேட்டது என்னமோ சர்மி தான்..
“என்ன சார் ரொம்ப குதூகலமாக இருக்கீங்க போல?”
“குதூகலம் பத்திலாம் சர்மி புருஷன் தான் கவலைப்படணும்.. ருத்ரா புருஷனுக்கு அதுக்கு குறையே இல்ல..” நீட்டி முழக்கி அவளை சீண்டி விட்டான்..
“டேய்..” என்று அவள் ஃபோனிலேயே அலற….
“ஷ்ஷ்.. போய் குழந்தைங்க இல்லாத பக்கம் நின்னு தனியா கத்து.. நான் ருத்ராக்கு சாப்பிட குடுக்கணும்..” என்று விட்டு அழைப்பை துண்டித்து விட, இன்னும் வெறியானாள் சர்மி.. என்ன ஆனது என்று கடைசி வரை அவன் சொல்லவே இல்லையென.. இசை பேசியது காதில் விழுந்தாலும் என்னவென முழுதாக தெரியவில்லையே.. இருந்தும் அவன் பேசிய விதத்திலேயே பெரிதாய் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று புரிந்து அவனை வறுத்துக் கொண்டே குழந்தைகளை கவனிக்க சென்றாள்..
பாலை நன்கு ஆற்றி எடுத்து வந்த அதிரன் ஆருத்ராவை மெல்ல தூக்கி தன் மேல் சாய்த்துக் கொண்டு மெல்ல புகட்டி விட்டான்.. முழுதும் காலியானதும் கொஞ்ச நேரம் அவளை தன் தோளிலேயே சாய்த்து வைத்து முதுகை வருடி விட்டவன் மெல்ல தான் கட்டிலில் சாய்ந்து அவளை தன் நெஞ்சிலே சாய்த்தது தான் தெரியும்.. என்ன மாயமோ இத்தனை நாள் அவன் போராடி பெற்ற தூக்கம், இன்று உறங்காது இந்த நொடியை அனுபவிப்போம் என்று எண்ணியதை மீறி அவனை தன்னுள் இழுத்துக் கொண்டது..