ஜீவா தர்ஷி இருவரின் திருமணத்துக்கான விடியல் அந்த திருமண மண்டபத்தில் விடிந்தது..
புவனேஸ்வரி குடும்பம் மொத்தம் நேற்றே மண்டபத்திற்கு வந்திருந்தது.. நர்மதாவும் கணவன் மகளுடன் நேற்றே வந்து விட்டிருந்தாள்.. அனைவரும் நேரமே எழுந்து தம் வேலைகளை முடித்துக் கொண்டு எஞ்சியுள்ள சிறு சிறு கல்யாண வேலைகளையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.. கூடவே பேச்சும் குறைவில்லாமல் தானிருந்தது..
இன்னும் முகூர்த்தத்துக்கு மூன்று மணி நேரம் இருக்க தர்ஷிக்கு இப்போதே அலங்காரத்தை ஆரம்பித்து இருந்தனர் பியூட்டிஷியன்ஸ்.. இரவு ஜீவாவுடனே உறங்கிய அதிரன் தான் குளித்து தாயாரானவன் ஜீவாவையும் எழுப்பி குளிக்க அனுப்பி விட்டு தன் கார் சாவியுடன் மண்டப வாயிலை நோக்கி நடந்தான்..
அவன் செல்வதைக் கண்ட நர்மதா , “இந்த நேரம் எங்க அதி கிளம்பிட்ட?” என்று சத்தமாகக் கேட்டாள்..
அங்கே அவள் அருகே தான் பெண் வீட்டு, மாப்பிள்ளை வீட்டு நெருங்கிய சொந்தங்கள் எல்லாம் குழுமி இருந்தனர்.. அனைவருமே அதிரன் ஆருத்ரா ரிஷப்சனில் ஒரளவு அறிமுகமானவர்கள் என்பதால் ஒன்றாக அமர்ந்து அடுத்த வீட்டைப் பற்றி அலசிக் கொண்டிருந்தனர்.. அதில் மெயின் டாபிக்காக போய்க் கொண்டிருந்தது தாயையும் மகனையும் பிரித்த கொடுமைக்கார மருமகள் ஆருத்ரா என்பது தான்..
அதை ஆதார பூர்வமாக நிரூபிக்கத் தான் நர்மதா அதிரனை அழைத்தது.. அவளுக்குத் தான் தெரியுமே அவன் இப்போது செல்வது மனைவியின் குடும்பத்தை அழைத்து வர என்று..
நர்மதாவை கூர்மையாகப் பார்த்த அதிரன் , “ஏன் உனக்குத் தெரியாதா? நான் எங்க போறேன்னு?” என்று எதிர்க் கேள்வி கேட்டான்..
அது.. என்று தடுமாறியவள்,
“இல்ல இங்க வேலையெல்லாம் போட்டது போட்ட படி இருக்க உன் மாமியார் வீட்டைக் கூட்டிட்டு வர வேற யாரையும் அனுப்பாம நீ கிளம்புறியேன்னு கேட்க வந்தேன்.. அதை விடு.. நேத்தே அவங்க இங்க வந்து தங்கியிருந்தா இந்த அலைச்சல் தேவை இல்லை தானே உனக்கு? பொண்ணு வீட்டுக்காரங்க ஒன்னும் அவங்களுக்கு அன்னியமும் இல்லையே? என்னவோ போ… ” என்று சலித்துக் கொள்வது போல் சொல்ல, சுற்றியிருந்தவர்கள் முக பாவமும் அதானே என்று பார்த்திருந்தது..
அதிரன் எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்திருந்தவன் தாயைப் பார்த்தான்.. அவரிடம் இப்போதும் அமைதி.. ஆக அவர் மனதிலும் இதே தான் உள்ளது.. தன்னால் முடியாததை கேட்க ஒரு ஆள் இருக்கிறது என்ற திருப்தி.. இதைத் தவறு என்று ருத்ரா பலமுறை தன்னிடம் சொன்ன போதெல்லாம் அவளை அலட்சியம் செய்திருக்கிறான்.. இப்போது அவர் நர்மதாவை அடக்கவில்லை என தனக்கே இவ்வளவு கோபம் வருகிறது எனில் ருத்ராக்கு வந்தது ஒன்றும் தவறில்லையே.. எல்லாம் காலம் கடந்த ஞானம்..
கண்ணை மூடித் திறந்து தன்னை அடக்கியவன்,
“இப்போ நான் இருந்து தான் முடிக்கணும்னு இருக்கற வேலை ஏதாவது இருந்தா சொல்லு.. நான் முடிச்சிட்டு போறேன்..” என்று நர்மதாவிடம் கேட்க, என்னவென்று சொல்வாள் அவள்.. அவன் தான் நேற்றிலிருந்து எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு செய்து முடித்து விட்டானே..
அவள் எதை சொல்ல என்று தடுமாறிக் கொண்டிருக்க, அதிரன்
“அப்படியே இருந்தாலும் நைட்டு வந்ததுமே தூங்கப் போன உன் புருஷனை எழுப்பி விடு.. மச்சானுக்கு செய்றதுல ஒன்னும் கொறைஞ்சிட மாட்டாரு..” என அவளுக்கு திருப்பிக் கொடுத்தான்.
“அதி என்ன இது சபைல வச்சு மருமகனை மரியாதை குறைவா பேசிட்டு..” என்று இவனை அதட்டிய தாயை சலனமே இல்லாமல் பார்த்தான் அவன்..
அதிரன், “இவளோ நேரம் இதே சபைல வச்சு தான் உங்க மருகளோட சேர்த்து அவ வீட்டு ஆட்களையும் உங்க பொண்ணு வாய்க்கு வந்தது போல பேசினா.. அப்போ நீங்க எதும் சொன்னது போல என் காதுல விழலையே அம்மா..” என்ற ,
புவனேஸ்வரி இவனின் இந்தக் கேள்வியை எதிர் பார்க்காதவர் என்ன பேசுவது என்று தெரியாது விழித்தார்..
சுற்றியும் இவர்களை சுவாரஸ்யமாக பார்த்தவர்களைப் பார்த்து,
“இங்க பாருங்க நீங்க ஒரு சுப நிகழ்வுக்காக இங்க கூடி இருக்கீங்க.. இங்க சந்தோஷமா பேச வேண்டிய எத்தனையோ விஷயங்கள் இருக்கும்.. அதைப் பத்தி மட்டும் பேசுங்க.. இவங்க சொல்றது எல்லாம் கேட்டு நடந்த உண்மையே தெரியாம என் பொண்டாட்டிய பேசாதீங்க.. அவ மேல எந்தத் தப்பும் இல்லை.. இது எனக்கு மட்டும் தெரிஞ்சா போதும்.. அதையெல்லாம் உங்க எல்லார்கிட்டயும் நிரூபிக்க என்கிட்ட டைம் இல்ல.. ஏன்னா என் வாழ்க்கைய நான் வாழணும் பாருங்க.. ஏற்கனவே கேட்பார் பேச்சைக் கேட்டு புத்தி கெட்டு போய் நிறைய இழந்துட்டேன்.. அதனால நடந்தது இது தான்னு தெரியாத நீங்க பேசுறதைக் கேட்டு நானும் என் பொண்டாட்டியும் திருந்தணும்ன நல்ல எண்ணத்தில யாராச்சும் பேசி இருந்தா வெரி சாரி.. திருந்தி வாழற அளவுக்கு நாங்க தீவிரவாதி இல்ல.. எங்க விஷயத்துல உங்க வாய் எப்போதும் திறந்தே தான் இருக்கும்ன்னா, எங்க காது எப்போவுமே மூடித் தான் இருக்கும்..”
அவன் பேசி முடிக்கவும் அவன் மொபைல் அழைக்கவும் எடுத்துக் காதில் வைத்தான்..
“அப்பா சித்தா கல்யாணம் முடியறதுக்கு முன்னாடி வந்து கூட்டிப் போவீங்களான்னு அம்மா கேட்டாங்க..” என்று அவன் இசை குயில் கூவியது..
இத்தனை நேரம் இருந்த எரிச்சல் கடுப்பு எல்லாம் மகள் குரல் கேட்டு மறைந்து போக,
“இதோடா அப்பா கிளம்பிட்டேன்.. அம்மாகிட்ட சொல்லிடுங்க..” என்று விட்டு புறம் பேசும் வீணர்களைத் திரும்பியும் பார்க்காமல் சென்றான்.. அவனைப் பொறுத்தவரை இவர்களுடன் இவ்வளவு பேசியதே வீண் தான்.. இவர்களுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டே இருந்தால் அவன் எப்போது அவன் வாழ்வை வாழ்வது?..
இவனே இப்படியென்றால் ஆருத்ரா இவனை விட மேல் இருப்பாள்.. தான் தவறு செய்யாத போது தன்னை அவதூறு சொன்ன தாய் மற்றும் அதிரன் பேச்சையே சட்டை செய்யாதவள் இவர்கள் பேசுவதையா காதில் வாங்கப் போகிறாள்? அவளுக்கு நேற்றே இங்கு வந்து தங்குவதில் ஒன்றும் பிரச்சனையே இல்லை.. அதிரன் தான் இவர்கள் முன் தன் மனைவி இறங்கிப் போவதா? என்று அவளையும் இசையையும் முத்தரசன் வீட்டினில் விட்டு விட்டு ஜீவாவுக்காக தான் மட்டும் வந்தான்..
மீனாட்சிக்கு தன் சொந்தங்கள் மூலம் ஆருத்ரா தான் புவனேஸ்வரியின் நிலைக்கு காரணம் என்று தர்ஷியின் தாய் அவளை திட்டி பேசியது தெரிய வந்திருக்க அந்த அதிருப்தியில் அவர் திருமணத்துக்கு மட்டும் சென்றால் போதும் என்று முடிவெடுத்து சர்மியையும் அவ்வாறே செய்யப் பணித்தார்..
அதிரன் முத்தரசன் வீட்டில் வண்டியை நிறுத்தி விட்டு இறங்க இசை ஓடி வந்து முன் சீட்டில் ஏறப் போனாள்.. அதிரன் மகளைத் தடுத்தவன்,
“செல்லம்மா நீங்க பாட்டி தாத்தா கூட பின்னாடி உக்காருங்க.. அம்மா முன்னாடி ஏறிக்கட்டும்..” என்ற போட்டிருந்த குட்டி ஜிமிக்கி ஆட சரியென்று தலையாட்டியது குழந்தை..
அடர் நீல நிற பட்டுப் பாவாடை சட்டையில் தோள் வரை இருந்த முடியை விரித்து இரு புறமும் இருந்து முடி எடுத்து சுருட்டி பின்னால் கிளிப் செய்து அளவாக குட்டியாய் மல்லி சரம் சூடி அழகாக இருந்த குட்டி தேவதையை ரசித்துப் பார்த்தவன், “அழகா இருக்கடா குட்டி..” என்று அவள் உயரத்துக்கு குனிந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டான்..
“அப்பாவும் அழகு..”என்று பதில் முத்தம் கொடுத்தாள் கிள்ளை தந்தைக்கு..
அதை பெரும் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டவனுக்கு இப்போது மனைவி எப்படி தயாராகியிருப்பாள் என்ற ஆவல் எட்டிப் பார்க்க வாயிலைப் பார்த்தான்.. முத்தரசன் மீனாட்சி இருவரும் தான் வந்தனர் . அவளைக் காணவில்லை..
மீனாட்சி, “மாப்பிள்ளை ஆரு உங்களை உள்ள வர சொன்னா..” என்றதும் அடித்தது லக் என்று அடுத்த நொடி உள்ளே சென்று விட்டிருந்தான்..
உள்ளே சென்றவன் அதே கரு நீல நிறத்தில் பட்டுப் புடவை அணிந்து மகளின் அதே ஹேர் ஸ்டைலுடன் மல்லிப் பூவை தவிர்த்து ஒற்றை ரோஜாவை சூடி நின்ற மனைவியின் அழகில் கொஞ்சம் அல்ல நிறையவே தடுமாறிப் போனான்..
ருத்ரா என்று முனகி அவளை நெருங்கி மெல்ல அணைத்தவன் நேரம் ஆகிக் கொண்டிருப்பதை உணர்ந்து தன்னுணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்து “கொல்றடி..” என்று அவள் இதழில் மெல்ல இதழ் ஒற்றி விடுவித்தவன் தள்ளி நின்று அவளை ஒரு முறை மேலிருந்து கீழாக பார்வையால் வருடினான் ரசனையாக.. ஆருத்ரா அவன் பாவங்களில் சிவந்தாலும் அவனை எதற்கும் தடை சொல்லாது அந்த நிமிட ரசனைகளை தன்னுள் சேகரித்தாள்.. இந்த இடைப்பட்ட ஆறு மாத வாழ்க்கையில் அதிரன் கொடுக்க மறுத்து ஆருத்ரா அனுபவிக்க மறுக்கப்பட்ட அனைத்தையும் அவள் திணறத் திணற கொடுத்துக் கொண்டிருந்தான் அதிரன்.. அந்த நிறைவு தந்த பூரிப்பில் ஆருத்ரா ஒரு சுற்று அழகில் மெருகேறிப் போய் இருந்தாள்.. அதை திருப்தியாய் மனதில் குறித்துக் கொண்ட அதிரன்,
“அம்மா பொண்ணு ரெண்டு பேருமே ஒருத்தரோட ஜெராக்ஸ் மாதிரியே ஒருத்தர் இருக்கீங்க..” என்றவன் உடனே குனிந்து தன் ஷர்ட்டைப் பார்த்தான்.. அது மரூன் நிறத்தில் பல்லைக் காட்டியது..
“ஹேய் என்ன? என்னை விட்டுட்டு நீங்க ரெண்டு பேரு மட்டும் ஒரே கலர்ல டிரஸ் எடுத்து வச்சிருக்கீங்க? டிரஸ் எடுக்க போலாம்ன்னு கூப்டப்போ எங்களுக்கு புதுசு இருக்கு.. உங்களுக்கு மட்டும் எடுத்தா போதும்ன்னு சொல்லி நீ போய் தான எனக்கு எடுத்த.. எனக்கு மட்டும் எப்டி நீ தனியா வேற கலர்ல எடுக்கலாம்?” என்று அவளிடம் மல்லுக்கு நின்றான்..
அவனை முறைத்தவள், கட்டிலில் இருந்த பார்சலை அவனிடம் கண்ணால் காட்டினாள்.. உள்ளே அவர்கள் உடையின் அதே நிற ஷர்டும் அதே கலர் பார்டார் வைத்த வேஷ்டியும் இருந்தது..
” எனக்கும் எடுத்திருக்கியா? நல்ல வேளை தப்பிச்ச..” என்ற,
இன்னும் முறைப்பாய் அவனை பார்த்தவள்,
“அதைப் போட்டுக்க தான் உள்ள வர சொல்லி கூப்டேன்.. என்னை ஏதாச்சும் சொல்ல விட்டீங்களா நீங்க?” என்று பொய்க் கோபம் காட்டினாள்.. மனதை மயக்கியவனிடம் மதி மயங்கி நின்றது அவளும் தானே..
“சாரிம்மா.. என் மிஸ்டேக் தான்.. சரியா? இப்போ வா.. ஷர்ட் மாத்த ஹெல்ப் பண்ணு..” என்று அவள் அருகில் வர வேகமாய் பின் நகர்ந்தாள் அவள்..
“ஆங்.. நீங்க எழுதற சீனுக்கு நான் ஆள் இல்லை.. (என்னை தான் சொல்றாளோ?) அங்க ஜீவா கல்யாணம் நடக்குது.. இங்க இவரு புது மாப்பிள்ளை வேஷம் போடுறாரு.. சீக்கிரம் ஷர்ட்ட மாத்திட்டு வந்து சேருங்க.. இல்ல நானே காரெடுத்துட்டு போயிடுவேன்.. நீங்க ஆட்டோ பிடிச்சிட்டு வர வேண்டியதிருக்கும்..” என்று அவனை முறைத்து விட்டு வெளியேறினாள்..
அவன் சிரிப்புடன் சட்டையை மாற்றிக் கொண்டு வந்தவன் மனைவியின் விழியிலேயே தன் கம்பீர அழகுக்கான பாராட்டைப் பெற்றுக் கொண்டு காரில் ஏறி காரைக் கிளப்பினான்..
இவர்கள் மண்டபத்திற்கு வரும் போது வாசலிலே இவர்களை வரவேற்றாள் சர்மி..
“என்ன சர்மி, நீ மட்டும் இருக்க.. மாப்பிள்ளை, பசங்களை எங்க காணோம்?”
“ப்ச்… உள்ள இருக்காங்கம்மா.. எனக்கு தான் உள்ள வீசுற விஷக் காத்து ஒத்து வரல.. அதான் நான் வெளிய வந்துட்டேன்..” என்றாள் வேண்டா வெறுப்பாய்..
“உள்ள உனக்குப் பிடிக்காதது நடந்தும் நீ அமைதியா வந்து வெளிய நிக்குறியா?” மீனாட்சி ஆச்சர்யமாக கேட்டார் அவளை..
“எனக்கும் நல்லா குடுக்கணும்ன்னு தான் தோணுது.. என்ன பண்ண ஜீவா தர்ஷி ரெண்டு பேருக்கும் வேண்டி பார்க்கிறேன்.. அத்தோட காலைல அதிக்கிட்ட கொஞ்சம் டோஸ் வாங்கிருப்பாங்க போல எல்லாரும்.. அதான் விட்டேன்..” என்ற, ஆருத்ரா அதிரனைப் பார்த்தாள்..
அவன் சர்மியைப் பார்த்து முறைத்தான்.. இந்த டீடைல்ஸ் எல்லாம் யாரும் உன்கிட்ட கேட்டாங்களா என்று?.. அவன் கணிப்பு.. அது சரியே என்பது போல் ஆருத்ரா ஆரம்பித்து விட்டாள்..
“அதிரன்! நான் உங்ககிட்ட என்ன சொன்னேன்? இது மாதிரி பேசுறவங்க பேசிட்டே இருப்பாங்க.. எதையும் காதுல போட்டுக்காம நம்ம ஜீவா கல்யாணம்னு சந்தோஷமா பங்க்ஷன்ல மட்டும் கவனம் வைங்கன்னு சொன்னேன்ல? அங்க எல்லாத்துக்கும் தலையாட்டிட்டு இங்க வந்து தலை கீழா பண்ணிட்டு இருக்கீங்களா?”
அதிரன் சர்மியை முறைக்க ஆரம்பிக்கவுமே சிறியவர்கள் விவகாரம் வேண்டாம் என்று முத்தரசன் தம்பதி இசையைக் கூட்டிக் கொண்டு உள்ளே சென்று விட வாசலில் வைத்தே அதிரனைக் கடிந்து கொண்டிருந்தாள் ஆருத்ரா..
ஆருத்ராவின் கோபத்திற்கு அதிரன் சமாதானம் சொல்லும் முன்னே சர்மி,
“நல்லா கேளு ஆரு.. இப்டியா ஒரு கல்யாண வீட்ல, அதும் சொந்தத் தம்பி கல்யாணத்துல குழப்பம் பண்ற மாதிரி பேசுறது?..” என்று அவளுக்கு இன்னும் ஏற்றப் பார்க்க ஆருத்ரா அவளையும் முறைத்து விட்டு உள்ளே சென்று சேர்ந்தாள்..
இவ எதுக்கு இப்போ என்னை முறைக்குறா? என்று வெளிப்படையாகவே முணுமுணுத்த சர்மியின் தலையில் தன் பலம் முழுதையும் திரட்டி கொட்டி விட்டு தானும் மனைவி பின்னே சென்றான் அதிரன்..
தலையைத் தேய்த்துக் கொண்டே டேய்.. என்றவள் அவனை வாய்க்கு வந்தவாறு மென்று துப்பினாள்..
உள்ளே சென்ற அதிரன் பாவமாய் முகத்தை வைத்து அலைந்தே மனைவியின் சிம்பதி ஓட்டை ஒத்தையாளாய் மொத்தமாக வாங்கிக் கொண்டான்.. அத்தோடு இனி எந்த வீண் வாதமும் வேண்டாம் என்ற அவள் அறிவுரையையும் சமத்தாக ஏற்றுக் கொண்டு அவளை ஓரிடத்திலே அமர வைத்து விட்டு மகளைத் தன்னுடன் வைத்துக் கொண்டான்..
ஒரு வழியாக ஜீவா தர்ஷியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னவளைத் தன் பாதியாக ஏற்றுக் கொண்டான்..
அதன் பிறகு தான் அதிரன் ஆருத்ராவை மேடைக்கு அழைக்க வந்தவள் மணமக்கள் இருவரையும் மனதார வாழ்த்தினாள்.. ஆருத்ராவின் ஃபோன் ஒலிக்கவே அதிரனிடம் சொல்லி விட்டு அவள் இறங்கி செல்ல அதற்காகவே காத்திருந்தது போல பானுமதி நைசாக நகன்று அவள் பின்னோடே சென்றார்..
ஃபோன் பேசி முடித்தவள் திரும்ப பின்னே நின்றிருந்தவரைக் கண்டவள் குழம்பி,
“சொல்லுங்க சித்தி..” என்றாள்..
“ஆரு, நீ இவங்க கல்யாணப் பேச்ச எங்ககிட்ட எடுத்துட்டு வரும் போது என்ன சொன்ன? நம்பி கல்யாணம் பண்ணி வைங்க.. எந்த கஷ்டமும் இல்லாம ரெண்டு பேரும் வாழுவாங்கன்னு சொன்னல்ல? நானும் அதை நம்பி அதான் அவங்க அம்மாவைப் பார்த்துக்க மாப்பிள்ளையோட அண்ணா இருக்காரே.. அவரும் தனியாளு தான.. ஒன்னும் பிரச்சனை இல்ல.. இவங்க ரெண்டு பேரையும் தனிக் குடித்தனம் வைக்கலாம்னு நம்பி தான் இந்தக் கல்யாணத்துக்கே சம்மதிச்சேன்.. ஆனா இப்போ பார்த்தா இங்க எல்லாம் தலை கீழா இல்ல நடக்குது? நீயும் உன் புருஷனும் சேர்ந்து தனிக் குடித்தனம் போயிட்டு இவங்களுக்கு எக்ஸ்ட்ரா சுமையா மாப்பிள்ளையோட அக்காவையும் அக்கா பொண்ணையும் சேர்த்து விட்டிருக்கீங்க?.. இதெல்லாம் என்ன நியாயம்னு கேட்கிறேன்? மூத்த பிள்ளை தானே வீட்டு பொறுப்பை பார்த்துக்கணும்? உன் பேச்சைக் கேட்டு அவரு எல்லாத்தையும் விட்டுட்டு போனா அது மொத்தமும் எங்க மாப்பிள்ளை தலையில தானே விழும்? இத என்னன்னு பேசி இன்னைக்கே ஒரு முடிவை சொல்லு..” என்று விட்டு அவளைப் பார்த்தவர் கொஞ்சம் அரண்டு தான் போனார்..
அதிரனை எதுவும் பேச வேண்டாம் என்றவள் இப்போது கோபத்தில் தன் சித்தியை கடித்துக் குதறும் வெறியில் இருந்தாள்.. அவர் பேச்சின் சாராம்சம் எல்லாம் அதிரனுடன் இவள் வாழப் போனது தான் தவறு என்பது போலவும் அதிரன் தன் தாயை கைகழுவி விட்ட பொறுப்பில்லாதவன் என்பது போலும் அமைய அதை எப்படிப் பொறுத்துக் கொண்டு அமைதியாய் இருப்பாள் இவள்..
“இப்போ என்ன சொல்ல வரீங்க? நான் என் புருஷன் கூட சேர்ந்து வாழுறது தப்புன்னா?” ஆருத்ரா அவரை அழுந்த பார்த்துக் கொண்டே நேரடியாகக் கேட்க, அவர் “அது… அப்டி இல்ல..ஆரு..” என்று திணறினார்..
“அப்போ அவரை பொறுப்பில்லாதவருங்கிறீங்களா?”
“இல்…ல..”
“உங்க பசப்ப எல்லாம் இத்தோட நிறுத்திக்கோங்க சித்தி.. இந்த கல்யாணம் பேச ஆரம்பிச்சதுல இருந்தே நீங்க சொன்ன இதே நிலைமைல தான் எல்லாம் இருந்துச்சு.. இப்போ சடனா எதுவும் மாறல.. அப்படி இருக்கும் போது ஏன் இதை எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி கேட்காம இப்போ கேக்குறீங்க?”
என்ற அவரிடம் பதிலில்லை..
ஆருத்ராவே தொடர்ந்தாள்..
“உங்க பொண்ணு கஷ்டப்பட மாட்டான்னு நான் சொன்னது, ஜீவாவை மனசுல வச்சு தானே ஒழிய அதிரன் தனியாவே இருந்துடுவார்னு நினைச்சு இல்ல.. அப்பறம் அதிரன் எந்த நிலையில இருந்தாலும் அவரு பொறுப்பை என்னைக்கும் தட்டிக் கழிக்கிற ஆளும் இல்ல.. ப்ச்.. அதையெல்லாம் உங்களுக்கு சொல்லி விளக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.. பட் இனிமே இது மாதிரிப் பேசிக்கிட்டு என்கிட்ட வந்து நிக்காதீங்க.. மரியாதை இருக்காது சொல்லிட்டேன்..” என்றவும் பானுமதி வெகுண்டெழுந்தார்..
“சித்திங்கிற மரியாதை கொஞ்சம் கூட இல்லாம எப்படிப் பேசுற? இப்படிப் பேசி தானே உன் வாழ்க்கையவே தொலச்சுட்டு நின்ன.. அப்பறம் இதை ஒன்னும் நானா சொல்லல.. மாப்பிள்ளையோட அக்கா நர்மதா அவங்களே தான் சொன்னாங்க.. இனி எங்க அம்மா, அம்பி அக்கா, அவ பொண்ணு கவி எல்லாமே ஜீவா, தர்ஷி பொறுப்பு தான்.. ஏன்னா அதி இதுல இருந்து எல்லாம் மொத்தமா விலகிட்டான்.. அவன மாதிரி இல்லாம இவங்களை நீங்களும் உங்க பொண்ணும் தான் நல்லாப் பார்த்துக்கணும்ன்னு சொன்னாங்க.. ஏன் எங்களுக்குன்னு வேற வேலையே இருக்காதா என்ன? உன் புருஷனைப் பெத்துப் போட்டவங்களை பார்க்க தான் நாங்க பிறந்தமா? வேற யாரோ சொன்னாக் கூட பரவால்ல.. உன் புருஷன் கூடப் பொறந்தவளே சொல்லும் போது நான் எப்பிடி அதைத் தட்டிக் கழிச்சிட்டு போக முடியும்?” என்றவர் கேள்வியில் ஆருத்ரா இவர்கள் பேசுவதற்கு சற்று தொலைவில் நின்று இவர்களையே நோட்டம் பார்த்துக் கொண்டிருந்த நர்மதாவை நோக்கி சுடு பார்வை பார்த்தாள்..
இவரை ஓதி அனுப்பி விட்டது மட்டும் அல்லாது மேலே என்ன நடக்கிறது என்று வேவு பார்க்க வேறு பின்னாலே வந்திருக்கிறாள்.. ச்சே.. இவளெல்லாம் திருந்தவே மாட்டாளா? என்று ஆயாசமாக வந்தது ஆருத்ராக்கு..
அவள் நர்மதாவைப் பார்வையில் எரித்துக் கொண்டிருக்கும் போதே சரியாக அதே இடத்தை வந்தடைந்தாள் சர்மி..
ஆருத்ரா அருகில் பானுமதியைக் கண்டதும் அவர் அவளிடம் எதுவோ உரண்டை இழுக்கிறாரோ என்று தான் விரைந்து வந்தவள் ஆருவின் பார்வை நர்மதா மேல் இருப்பதைப் பார்த்து,
“என்ன ஆரு சனி திசைய பார்த்திட்டு இருக்க? ஏழரை சனி உன்னை தொடருதுன்னா சொல்லு சனிக்கே பில்லி சூனியம் வைக்க கைவசம் ஆள் இருக்கு..” என அதியை மனதில் வைத்து நக்கலாக கூறினாள்..
பானுமதிக்கு தான் சர்மியைக் கண்டதுமே பதறியது.. அவர் அமைதி என்று நினைத்துப் பேச வந்த ஆருத்ராவே வெடித்திருக்க, தன் குரலை உயர்த்தி அவளை ஒருவாறு பேசி சமாளித்து விட்டார்.. ஆனால் சர்மி ஏற்கனவே அணு குண்டாய் வார்த்தைகளை வீசுபவள் இப்போது எப்படி வெடிப்பாளோ என்று அவர் பயந்து கொண்டிருக்கும் போதே ஆருத்ரா அவர் பேசியதை மொத்தம் சர்மியிடம் சொல்லி விட்டாள்..
சர்மிக்கு அது போதுமே.. மரியாதை எல்லாம் என்கிட்ட எப்போவும் அவுட் ஆஃப் ஸ்டாக் என்பது போல் அவரைக் கிழி கிழியெனக் கிழித்து விட்டாள்..
“உன் பொண்ணுக்கு பிரச்சனை வந்தா அதைப் பார்த்துக்க நீயும் உன் புருஷனும் உயிரோட தான இருக்கீங்க? இல்லை கல்யாணம் முடிஞ்ச கையோட ரெண்டு பேரும் ஒன்னா செத்துப் போற ஐடியால எதும் இருக்கீங்களா என்ன? கல்யாணம் முடிஞ்சு கால் மணி நேரம் கூட ஆகல.. அங்க உன் பொண்ணை நல்லா இருன்னு ஊரும் உறவும் வாழ்த்திட்டு இருந்தா, இங்க பேத்தவ நீ நின்னு அவ வாழ்க்கை நாசமானான்னு நீயா ஒரு கேள்விய உருவாக்கி பதில கேட்டுட்டு இருக்க.. அதும் சம்மந்தமே இல்லாம என் தங்கச்சிய கேள்வி கேட்டுட்டு இருக்க? உன் களிமண் மண்டைல இது சம்பந்தமா கேள்வி இருந்தா அதைப் போய் உன் பொண்ணு புருஷங்கிட்டயும் அவன் கூறு கெட்ட குடும்பத்துக்கிட்டவும் கேட்டுக்கோ.. இந்தா அதுல ஒரு குப்பை இங்க பேசுற எல்லாத்தையும் ஒட்டுக் கேட்டுட்டு இருக்கே.. அதுகிட்ட கூட கேட்டுக்கோ.. அதை விட்டுட்டு இப்போ தான் எல்லாம் சரியாகி அவ வாழ்க்கைய பார்த்துக்கிட்டு இருக்க என் தங்கச்சியை உன் புருஷன் கூட ஏன் வாழ்றன்னா கேட்டுட்டு இருக்க?” மூச்சு விடாமல் பானுமதியை அவள் வாங்கிய வாங்கில் பானுமதிக்கு மூச்சு நின்று வந்தது..
“அக்கா நீ அமைதியா இருக்கா.. இவங்ககிட்ட எல்லாம் பேசி நம்ம தகுதிய எதுக்கு நாம இறக்கிக்கணும்? வா.. நம்ம நல்லவங்க இருக்க இடமா பார்த்து கிளம்பலாம்..” என்று ஆருத்ரா அவளை இழுத்துச் செல்லப் பார்க்க பானுமதிக்கும் இப்போது இவளை இங்கிருந்து யாரும் கூட்டிப் போனால் போதும் என்று தான் இருந்தது..
பின்னே இவள் இப்படியே நின்று பேசிக் கொண்டிருந்தால் இந்தப் பக்கம் உறவுகள் யாரும் வந்து, இவளிடம் பேச்சுக் கேட்பதைப் பார்த்து விட்டால் அவர் பவுசு போய் என்னாவது? அதனால் இவளை தனியாக ஒரு நாள் வைத்துக் கொள்ளலாம் என்று அவர் மனதில் ஒரு கணக்குப் போட்டார்.. பொது இடத்தில் வைத்தே இந்த பேச்சு பேசுபவள் தனிமையில் தன்னைக் கொஞ்சுவாளா? என்று சிந்திக்க மறந்தார் பாவம்..
ஆருத்ரா சர்மியை அப்புறப்படுத்த நினைத்து இழுத்துச் செல்ல அவள் இவளை இழுத்துக் கொண்டு நர்மதாவிடம் வந்து நின்றாள்.. அதில் பதறிய ஆருத்ரா பிரச்சனை வேண்டாம் என்று எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தவள் இசை அழுது கொண்டே தன்னிடம் வந்து கூறியதைக் கேட்டு நர்மதாவை நாக்கால் நாண்டு கொள்ள வைத்தாள்.. கூடவே அதிரனைப் பார்த்து அவள் கூறிய வார்த்தையில் அவன் நரகத்தின் வாயிலை உயிரோடு தொட்டு வந்தான்..
(போச்சு.. நல்லா இருந்த குடும்பத்தை நாற வாயால கெடுத்து விட்டுட்டாங்க..)