ஆருத்ரா அதிரனின் அறையில் அமர்ந்திருந்தவள், இன்று ஒரு நாளில் தன் வாழ்வில் ஏற்பட்ட திடீர் மாற்றங்களை எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தாள்..
அவர்கள் இங்கு வந்து இறங்கும் போதே மணி ஆறுக்கு அருகில் இருக்கும்.. இதில் இவர்கள் வந்த போதே வீடு வேறு காலியாக இருந்தது.. ஆரத்தி எடுத்து வரவேற்க கூட யாரும் இல்லாத நிலையில் நடந்த திருமணத்தை எண்ணி ஆருத்ராக்கு சற்று வருத்தமாகக் கூட இருந்தது.. ஆனால் அதிரனுக்காக தன் வேதனைகளை மறைத்துக் கொண்டாள்..
இந்த நேரம் யாரும் வீட்டில் இல்லாது போக மாட்டார்களே என்று யோசித்த அதிரன் தன்னிடம் உள்ள சாவியைக் கொண்டு வீட்டைத் திறந்து ஆருத்ராவை தன்னறை அழைத்துச் சென்றவன்,
“சாரிடா ருத்ரா.. வீட்ல யாரும் இல்லை.. எங்க போனாங்கன்னு கூட தெரியல.. நீ கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ.. நான் அம்மாக்கு கால் பண்றேன்..” என்றவன் ஆறுதலாக அவள் நெற்றியில் இதழொற்றி விட்டு தன் அலைபேசியுடன் வெளியேறினான்..
சைலண்டில் வைக்கப்பட்டிருந்த அதிரனின் மொபைலுக்கு ஏகப்பட்ட தவறிய அழைப்புகள் வந்து குவிந்திருந்தது. மூத்த தமக்கை, அவளின் கணவன் தனசேகர், நர்மதாவின் கணவன் வசீகரன் , ஜீவா , தாய் என்று ஒட்டு மொத்தமாய் அவன் குடும்பமே மாறி மாறி அழைத்திருக்க அவனுக்கு யாருக்கு என்னவோ என்று பதறியது .
நேரே ஜீவாவுக்குத் தான் அழைத்தான். அவனிடம் பேச ஆரம்பித்த போது தான் விசயம் அறிந்தவனுக்கு கலக்கம் போய் மகிழ்ச்சி சூழ்ந்து கொள்ள மொத்த குடும்பத்துடனும் ஒரு ரவுண்டு பேசிக் கொண்டிருந்தான்.
இங்கே அவனுக்கு காத்திருந்து காத்திருந்து போரடித்த ஆருத்ரா எழுந்து வந்து பார்க்க அவன் இன்னும் பேசி முடிக்கவில்லை. தனது ஃபோனும் வீட்டில் இருக்க செய்வது அறியாது மீண்டும் சென்று கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.
ஒரு வழியாக பேசி முடித்து முகமெல்லாம் சிரிப்பாய் வந்த அதிரன் அவள் கன்னம் கிள்ளி முத்தம் வைத்தவன்,
“ஹே ருத்ரா, நர்மதாக்கு பொண்ணு பொறந்திருக்கா. அதான் யாரும் வீட்ல இல்ல. எல்லாரும் கோயம்புத்தூர் போய் இருக்காங்க.. அவன் மகிழ்ச்சி அவளுக்கும் தொற்றிக் கொள்ள ,
“பேபிய வீடியோ கால்ல பார்த்தீங்களா? என்னைக் கூப்டு காட்டிருக்கலாமே..” என்று ஆர்வம் தாங்காது கேட்டாள்..
“ஆஹான் அதெல்லாம் அம்மா நல்லா பொறந்த குழந்தைய காமெரால காட்ட விட்டுட்டு தான் மொத வேலை பார்ப்பாங்க . அதோட நான் எப்டி உன்னைக் கூப்டு காட்ட முடியும்? நான் தான் இன்னும் நம்ம மேட்டரை சொல்லவே இல்லையே..” என்று அவளை இடித்துக் கொண்டு அமர்ந்தான்.
“என்னது சொல்லலையா? ஏன் அதிரன்?” என்று அவள் சற்றுக் கவலையாய் கேட்க,
“ஏன்னா எப்டி சொல்ல முடியும்? பேபி பிறந்ததுல அங்க எல்லாரும் ஹேப்பியா இருப்பாங்க.. இங்க நடந்தத சொல்லி அவங்க சந்தோஷத்தைக் கெடுக்கணுமா?” என்று யோசிக்காமல் சொல்லி விட ,ஆருத்ரா முகம் விழுந்து விட்டது.
ஓ … அப்போ நம்ம கல்யாணம் சந்தோசமான நிகழ்ச்சி இல்லையாமா? என்று சுணக்கமாய் எண்ணிக் கொண்டாள்.
“என்னாச்சு ருத்ரா, சடனா டல்லாகிட்ட?”
“ம்ஹீம்…”
“என்னன்னு சொன்னா தான தெரியும்?”
“கல்யாணமும் சுப நிகழ்ச்சி தான் அதிரன்.” அவள் சாதாரணமாய் சொல்லி விட,
சட்டென எழுந்து நின்று அவள் முகம் பார்த்தவன் , அவள் தோளைப் பிடித்து எழுப்பி மெல்ல அவளையும் நிற்க வைத்திருந்தான்..
“ஏய் ருத்ரா, நான் என்ன சொன்னா நீ அதை என்ன மாதிரி புரிஞ்சு வைச்சுக்கிற? அவங்களுக்கு என் கல்யாணம் அவங்க யாரும் இல்லாம இப்படி நடந்தது தெரிஞ்சா கவலைன்னு தான் சொன்னேன். வேற மீனிங்ல இல்ல.
ஆனா எனக்கு மனசுல உங்க அப்பா மேல தான் கோபமே தவிர.. நம்ம கல்யாணம் நடந்ததுல எந்த வருத்தமும் இல்லடி. ஊரைக் கூட்டி கட்டிக்கிட்டாலும் நீயும் நானும் மனசார ஏத்துக்கிட்டா தான் அது கல்யாணம்.. முன்னாடியே சொன்னது தான்.. நான் மனசார உன்னை என் பொண்டாட்டியா நினச்சு தான் தாலி கட்டினேன். யார் சொல்லியும் உன்னையோ , உன்னோட எனக்கு உண்டான பந்தத்தையோ நான் கை விடுறதா இல்ல..” ஆணித் தரமாய் சொன்னவன் அதைப் பின் நாளில் அவனே மறந்து போவான் என்று எண்ணியிருக்க மாட்டான்..
அவன் சொற்கள் தந்த நிம்மதியில்
கலக்கங்கள் அகல மெல்ல அவனைப் பார்த்துப் புன்னகைத்தவள், தானே முன் வந்து அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்..
இப்போதே திருமண இரவின் தனிமை உணர்ந்த அதிரனுக்கு அவள் ஸ்பரிசம் அவனை எங்கோ இழுத்து செல்வதாக இருக்க, ஏற்கனவே எதிர்பாராத சம்பவங்களால் நிறைய களைத்துள்ளாள்.. இன்று எதுவும் வேண்டாம் என்று அவளுக்காய் நினைத்து அவளை விலக்கலாமா? என ஒரு நொடி நினைத்தான்.. பின் வேண்டாமென்று அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டவன் பிடி சிறிது சிறிதாக இறுகியது.
ஆருத்ரா நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவளுக்கு அவன் பார்வையை சந்திக்க ஒரு வித நாணம் பிறக்க மீண்டும் அவன் மார்பிலே முகத்தை மறைத்துக் கொண்டாள்..
சிரித்துக் கொண்ட அதிரன் மெல்ல அவள் காதிலே மென் முத்தம் ஒன்று வைக்க, அவள் மேனி ஒருமுறை சிலிர்த்தடங்கியது..
“ருத்ரா..” என்ற அழைப்பே மென்மையிலும் மென்மையாய் கிறங்கி முயங்கி வர , அவன் மீசை முடி காதில் உரச, “எனக்கே எனக்கான உன்னை எடுத்துக்க உன்கிட்ட பர்மிஷன் கேட்கணுமாடி?” என அவன் கேட்டதே தனிக் கவிதையாய் இருக்க அவள் தலை இட வலமாய் ஆடி அவன் மார்பிலே உரசியது.
தனக்கு முகம் காட்ட மறுத்து தன்னோடு ஒட்டி நின்றவள் பின் கழுத்தை பிடித்து தன் மார்பில் இருந்து அவள் முகத்தைப் பிரித்தவன் , அவள் மீண்டும் முகத்தை புதைக்கும் முன் அவள் இதழ்களில் தன் இதழ்களைப் புதைத்தான் .
ஆரம்பித்தால் அவ்வளவு எளிதில் முடியும் யுத்தமா அது? காயங்கள் கண்டாலும் இன்னும் இன்னும் வேண்டும் என்று ஏங்கி விடியா இரவை இரவல் வாங்க துடிக்கும் இன்ப யுத்தம்.. அதை மனமேயின்றி முடித்து மனைவிக்கு சிறிதேனும் ஓய்வு கொடுப்போமே.. என்று அதிரன் மனதில் கருணை பிறக்க அதிகாலை ஆனது..
அப்போதும் அவளை நீங்காது தன்னுள் பொதிந்து கொண்டே தான் உறங்கிப் போனான். இன்னும் வீட்டினருக்கு திருமணம் பற்றி சொல்லவில்லை, சொன்னால் அவர்கள் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பன பற்றி எல்லாம் மறந்து அவள் தன் அருகிருக்கும் நிறைவில் உறங்கியவன் காலை எழுந்தது தாயின் தொலைபேசி அழைப்பில் தான்..
கண்ணைக் கசக்கி எழுந்தவன் நேரம் பார்த்தால் மணி ஒன்பது என்று காட்டியது.. அருகில் இன்னும் தன் கைகளுக்குள் பொக்கிஷமாய் உறங்கும் ஆருத்ராவைக் கண்ட மாத்திரம் இரவின் மிச்சம் மீதி தொடர ஆசை கொண்டு அவளை நெருங்க முற்பட முதலில் அவன் கண் விழிக்கக் காரணமான மொபைல் மீண்டும் இசைத்தது.
“ப்பச்… ” என்று சலித்துக் கொண்டு அதை எடுத்தவன் தாய் என்றதும் முகத்தை ஒரு கையால் துடைத்துக் கொண்டு காலை அட்டென்ட் பண்ணி ,
“சொல்லுங்கம்மா..” என்றான் உள்ளே போன குரலில்..
அதி இன்னைக்கு ஞாயித்துக் கிழமை , உனக்கு லீவு தானேபா.. இங்க வந்து நர்மதா, குழந்தைய பார்த்துட்டு போயேன்..” என்று வேண்டுகோள் விடுத்த தாயின் கோரிக்கையை கட்டளையாய் ஏற்று, “வரேன்மா..” என்றான் எந்த யோசனையும் இன்றி..
“சரிப்பா..” என்ற புவனேஸ்வரி மகிழ்வுடன் அழைப்பைத் துண்டிக்க ஒரு பெருமூச்சோடு எழுந்தவன் ஆருத்ராவுக்கு போர்வையை நன்கு போர்த்தி விட்டு சென்று குளித்து முடித்து வந்தான்.
அவன் ஸ்பரிசம் நீங்கிய சிறிது நேரத்திலேயே கண் விழித்த ஆருத்ரா அவன் குளியலையில் இருப்பது அறிந்து அவசரமாக தன்னைத் திருத்திக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
குளித்து முடித்து வந்த அதிரன் ஆருத்ராவை ஒரு கணம் பார்த்தவன், “ருத்ரா, இன்னைக்கு ஒரு நாள் இங்க தனியா இருந்துப்பியா? நான் கோயம்புத்தூர் வரைக்கும் போய் நர்மதா பேபியை பார்த்திட்டு வரேன். அம்மா வர சொன்னாங்க… நைட் எப்படியாச்சும் வரப் பார்க்கிறேன்.. ” என்ற,
“முடிவெடுத்து விட்டு கேட்கிறானே , எப்படி தன்னால் பழக்க்கமில்லாத இந்த வீட்டில் தனியாக இருக்க முடியும்?” என்று யோசித்தவள் அவன் கேள்விக்கு பதில் சொல்லவில்லை..
அவள் முகமே அவள் எண்ணத்தை அவனுக்கு சொல்ல , “இங்க யாரும் வர மாட்டாங்கடா, இது பாதுகாப்பான ஏரியா தான்.. பக்கத்து வீட்டுல ராதிகா அக்கா அவங்க ஹஸ்பண்ட் குழந்தைங்க ரெண்டு பேர் நம்ம வீட்டோட ரொம்ப க்ளோஸ்.. ஏதும் பிரச்சனைன்னா மட்டும் குரல் குடு.. ஓடி வருவாங்க.. சோ நீ பயமில்லாமல் இருக்கலாம் ..” என்று சமாதானம் சொன்னான், ஏதோ அவள் இங்கே முறைப்படி திருமணம் செய்து வந்து அக்கம் பக்கம் எல்லாம் அறிமுகம் ஆனது போல்.. அந்தி சாயும் நேரம் வீட்டிற்குள் யாரும் அறியாது வந்து இப்போது வரை இப்படியொருத்தி வீட்டில் இருப்பதே யாருக்கும் தெரியாது.. இவள் கூப்டு வரும் ராதிகா அக்கா இவள் யாரென்று தெரியாமல் பூட்டிய வீட்டுக்குள் இவள் எப்படி என்று இவளை போலீசில் பிடித்துக் கொடுத்து விட்டால்? என நினைத்தவளுக்கு இவன் கூறுவதைக் கேட்டு தலை வேதனை வந்தது தான் மிச்சம்..
“நான் வேணா எங்க வீட்டுக்கு போய் ரெண்டு நாள் இருந்துட்டு வரவா?” என்று அவள் மெல்லிய குரலில் கேட்க, அதிரனுக்கு சுள்ளென்று கோபம் வந்தது. “ஏன் அங்க இருக்கவங்க எல்லாம் ஏதோ வீராப்பா பொண்டாட்டிய கூட்டிட்டு போனான் .. ஆனா ஒரு நாள் இரவுலயே விரட்டி விட்டுட்டான்னு என்னை பேசணுமா? அப்டின்னு பேச யாரும் தேவை இல்ல.. உன் அக்கா ஒருத்தியே போதும்..” என்று பொரிந்து விட்டான்..
இவன் நேற்று செய்த செயலுக்கு வேறு யாராவதாக இருந்தால் கோபத்தில் என்ன வேண்டுமானாலும் செய்திருப்பார்கள்.. ஆனால் என் வீட்டினர் ஓரளவு பொறுமையாய் சூழ்நிலையை கையாண்டும் இவன் இப்படிப் பேசுகிறானே.. என
ஆருத்ராக்கும் கோபம் வந்தது.. எனினும் வாழ்வை ஆரம்பித்த அடுத்த நாளே தர்க்கம் வேண்டாம் என்று அதை மௌனத்தில் கடந்தாள்..
அவள் பதில் பேசாததில் இன்னும் கடியாகி தலைமுடி மொத்தமும் சீப்பினுள் கழன்று வருமளவு வேகமாய் சீவிக் கொண்டிருந்தவன் வயிறு திடீரென்று பசியென்று கத்தவே அவன் கை அந்தரத்தில் நின்றது..
என்ன செய்திருக்கிறேன் நான்? என்று எண்ணம் வரவே தலையில் அடித்துக் கொண்டவன் திரும்பி ஆருத்ராவைப் பார்த்தான்..
நேற்று உடுத்தியிருந்த சேலையையே மீண்டும் கட்டிக் கொண்டு உடலும் முகமும் இறுக தன் உள்ளங்கையில் பார்வையை பதித்து அமைதியாய் இருந்தாள்..அழுத்தம் என்று சொல்ல வேண்டுமோ?
அவ்வளவு தான் .. அடுத்த நொடி அவள் முன் மண்டியிட்டவன் அவள் மடியில் இருந்த கைகளை தன்னிரு கைகளில் பற்றிக் கொண்டு அவள் முகத்தை பார்த்து “ருத்ரா சாரிடா… சாரி…” என்று கெஞ்ச ஆருத்ரா விழிகள் நீரில் நிரம்பி தத்தளித்தது..
எடுத்ததுக்கும் அழும் பலவீனமானவள் அல்ல அவள்.. ஆனால் இந்த காதல்,அது தரும் எதிர்பார்ப்பு.. இது எல்லாம் யாரையும் சட்டென உடைத்து விடும் போலும்..
அதிரன் எழுந்து கட்டிலில் அமர்ந்தவன், அவளை தன் கையணைப்பில் வைத்துக் கொண்டே தன் கைபேசியை எடுத்து உணவை ஆர்டர் செய்தவன், சர்மிக்கு ஃபோன் செய்து ஆருத்ராக்கு தேவையான துணிகளை புதிதாக வாங்கி யாரிடமாவது பில்லுடன் கொடுத்து அனுப்புமாறு வலியுறுத்தி விட்டு அவள் கத்த ஆரம்பித்ததை பொருட்படுத்தாது கட் செய்தான்..
அதன் பின் ருத்ரா மறுப்பை எல்லாம் அடக்கி அவளை தானே குளியலறை தூக்கி சென்று பல் துலக்கி முகம் கழுவ வைத்தவன் , அப்படியே வம்படியாய் டைனிங் டேபிளில் அவளை அமர்த்தவும் உணவு வரவும் சரியாக இருந்தது.
இன்னும் அழுகையை அடக்கியதால் சிவந்த முகத்தோடு உம்மென்று இருந்தவளை “எதுவா இருந்தாலும் சாப்டு பேசிக்கலாம் ருத்ரா.. எனக்குமே ரொம்ப பசிக்குது.. சாப்டு தெம்பா உன்கிட்ட அடி வாங்கிக்கிறேன்.. சரியா? சாப்பிடு..” என்றவன் அவளுக்குப் பரிமாறிப் பின் தனக்கும் போட்டுக் கொண்டு அமர்ந்தான்..
அவளோ “இல்லை நான் குளிச்சிட்டு சாப்பிடுறேன் ..” என்று பிடிவாதமாக அமர்ந்திருக்க, இவனா விடுவான்?
“உங்க அக்கா சோம்பேறி எப்போ டிரஸ் குடுத்து அனுப்புவாளோ தெரியாது.. அதுவரைக்கும் சாப்பிடாம இருப்பியா? இதுல நைட்டு வேற எதுவும் சாப்பிடல.. இப்போ ஒழுங்கா சாப்பிடுறியா? இல்ல நீயே பசிக்குதுன்னு சொல்ற மாதிரி ஏதாச்சும் பண்ணி டயர்டாக்கவா?” என்று விஷமமாக கேட்டு எழ, தட்டைத் தன் புறம் இழுத்தவள் அவனை முறைத்துக் கொண்டே உண்டு முடித்தாள்.
அதற்குள் திறன் தாய்க்கு ஃபோன் செய்தவன். தனக்கு திடீரென முக்கிய வேலை ஒன்று வந்ததால் தன்னால் அங்கு வர முடியாது” என்று தகவலும் சொல்லி விட்டிருந்தான்.
அவன் தன்னை விட்டு செல்லவில்லை என்றான பின் தான் ஆருத்ராவின் முகம் தெளிந்தது. அதை அவதானித்த அதிரன், “அப்போ இனி வேலைக்குப் போகும் போதும் உன்னை கூட்டிப் போய் பக்கத்துலயே வச்சிருக்கணும் போலவே.. அப்டியே சரின்னு கூட்டிப் போனாலும் நான் வேலையா பார்ப்பேன்?” என்று பேசிப் பேசியே அவளை சிவக்க வைத்தான்.
தாய் நர்மதா வீட்டில் இருந்து வர எடுத்துக் கொண்ட நான்கு நாட்களும் வேலைக்கு லீவு போட்டு விட்டு வீட்டிலேயே ஹனிமூன் கொண்டாடினான் அதிரன்.. பிரச்சனை வரும் போது அதை ஃபேஸ் பண்ணிக்கலாம் . அதற்கும் சேர்த்து இப்போதே அலட்டிக்க வேண்டாம் என்று தான் அதை பற்றி இருவரும் சிந்திக்காது தங்கள் மகிழ்ச்சியான தருணத்தை அனுபவித்துக் கொண்டாடினர்..