அதிரனின் வீட்டில் அவன் குடும்பத்தாருடன் சர்மி, அருள் இருவரும் கூடியிருக்க, அந்த இடமே ஊசி விழுந்தால் கூட அதன் ஓசை துல்லியமாய் கேட்குமளவு அவ்வளவு அமைதியாக இருந்தது..
புவனேஸ்வரி வீட்டார் இன்று காலை தான் கோயம்புத்தூரில் இருந்து வந்தவர்கள் அதன் பின்னர் தான் அதிரனின் திருமண விஷயம் அறிந்தனர்.. முதல் முறை மகன் தன்னிடம் மறைத்து செய்த விஷயம் அவன் திருமணமாகத் தான் இருக்க வேண்டுமா?” என்று புவனேஸ்வரி உடைந்து போய் அமர்ந்திருந்தார்..
அவரின் அந்த அமைதியைத் தாங்காது அதி சொன்ன சமாதானங்கள் எல்லாம் அவர் செவியுள் சென்றதா என்றே தெரியவில்லை.. பின் எப்படி மூளை அவன் சூழ்நிலையைக் கிரகிக்கும்? தன் மகன் தான் இன்றி திருமணம் செய்து கொண்டான் என்பதோடு இத்திருமணம் எவ்வாறெல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டது என்பது தொடங்கி சர்மி அதிரனின் தோழி முதற்கொண்டு ஆருத்ரா, அதிரண் இருவருக்கும் முன்னரே இருந்த அறிமுகம் வரை அனைத்தும் அறிந்து கொண்டவரால் அதை ஜீரணிக்க முடியவில்லை.. இருந்தும் ஒரு வலி தரும் ஒரு வார்த்தையைக் கூட அவர் நா உச்சரிக்கவில்லை.. ஆயிரம் ஆனாலும் அவர் பெற்ற மகன் அவன் அல்லவா? தான் ஏதும் மனம் சுணங்கி ஒரு வார்த்தை சொல்லி அதை அவன் காலம் முழுக்க சுமக்க வேண்டாம் என்று நிதானம் காத்தார்..
அம்பிகா தம்பி மனைவியை விடாது முறைத்துக் கொண்டிருக்க தனசேகர் தன்னாலும் எதும் காரியம் ஆகுமென்பது போல் மனைவி அருகில் நின்று வேடிக்கை பார்த்திருந்தார்..
அம்பிகா கையில் இருந்த மொபைல் வழி இது எல்லாவற்றையும் லைவ் ஆக பார்த்துக் கொண்டிருந்த நர்மதா தான் பேச்சைத் தொடங்கினாள். கட்டிக் கொடுத்தாலும் மகள்களும் குடும்பத்தில் அடக்கம் என்ற புவனேஸ்வரியின் கொள்கை மகனின் வாழ்வில் விளையாட இருப்பதை அறியவில்லை புவனேஸ்வரி.
“என்ன அதி, பண்றது எல்லாம் பண்ணிட்டு சமாதானத்துக்கு ஆயிரம் காரணம் சொல்லிட்டு இருக்க? அம்மா உன் மேல எவ்ளோ நம்பிக்கை வச்சிருந்தாங்கன்னு உனக்குத் தெரியும் தானே? ஏன் நாங்களுமே தான்.. இப்படி நாங்க யாருமே இல்லாம உன் கல்யாணத்தை நடத்திட்டு வருவேன்னு நாங்க கனவுல கூட நினைக்கலையேடா? இதெல்லாம் நீ பண்ணலடா உன்ன புடிச்ச கிரகம் இப்படி எல்லாம் பண்ணச் சொல்லி உன்ன தூண்டி விடுது.. அவங்க அப்பா கல்யாணம் வேணாம்னு சொன்னப்போவே யாரும் எதுவும் யோசிக்காதீங்க.. நம்ம அதிக்கா பொண்ணு கிடைக்காது, இவளை விட நல்ல பொண்ணு கிடைக்கும், இதை இப்படியே விட்டிடுங்க.. எல்லாம் நல்லதுக்குத் தான்னு அவ்வளவு தூரம் எடுத்து சொன்னனே.. கேட்டியா நீ? போயும் போயும் அந்த தரித்திரம் புடிச்ச குடும்பத்துக்கிட்ட மாட்டிருக்க..” என்றவள் கத்திக் கொண்டே போக, அவளை இடைவெட்டியது சர்மியின் கோபக் குரல்..
“கொஞ்சம் மரியாதையா பேசுங்க நர்மதா.. முன்ன பின்ன பார்த்தே இருக்காத எங்க குடும்பத்தை நீங்க எப்படி இப்படி சொல்லலாம்? இதுதான் நீங்க படிச்ச நாகரிகமா? இல்ல உங்க நல்ல குடும்பத்தில சொல்லிக் கொடுத்து வளர்த்தது இத தானா?” என்று அவள் நறுக்கென்று கேட்கவும், நர்மதா கொதிப்படைந்து விட்டாள்..
“ஏன் உங்க குடும்பத்தை பத்தி தெரியாம? தங்கச்சிக்கும் ப்ரெண்டுக்கும் புரோக்கர் வேலை பார்த்துட்டு எதுவும் தெரியாத மாதிரி அங்க வந்து நிக்கிறதுலேயே தெரியல, உங்க குடும்பம் எப்டின்னு?” என்று சர்மியை நக்கலாக சாடினாள்..
இருக்கும் பிரச்சனையில் இவர்கள் வேறு என்று சலித்த அதிரன், “ரெண்டு பேரும் கொஞ்சம் சும்மா இருக்கீங்களா? ” என கத்தியிருந்தான்.. ஆனால் அருள் இம்முறை மனைவி பேசுவதைத் தடுக்கவில்லை.. அவனுக்குமே நர்மதா பேசியது அத்தனை உவப்பாக இருக்கவில்லை..
“உன் சிஸ்டர் பேசுறதுக்கு நீ சும்மா இருக்குற வரைக்கும் நான் சும்மா இருக்க மாட்டேன் அதி.. உன்னை உயர்த்திப் பேசுறேன்னு என் தங்கச்சி, என் குடும்பத்தை தரக் குறைவா பேசினா நான் சும்மா இருக்கணுமா? உங்கம்மா வருத்தப்படுறாங்க.. உன்கிட்ட பேச மாட்டுறாங்கன்னு மட்டும் யோசிச்சிட்டு உட்கார்ந்திருக்கியே.. கொஞ்சமாச்சும் ஆரு நிலைமை என்னன்னு அவள திரும்பியாச்சும் பாத்தியா? நானும் சரி.. அப்புறமா உன்ன பத்தி அறிஞ்சுகிட்ட எங்க அப்பாவும் சரி.. உனக்கு பொண்ணு கொடுக்க தயங்கினதே இந்த ஒரு விஷயத்துக்காக மட்டும் தான்..” என்றவள் கூற்றில் அதிரன் ஆருத்ராவைத் திரும்பிப் பார்த்தாள்..
அங்கிருந்த சுவரோடு சுவராக ஒன்றி நின்றவளுக்கு யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.. நர்மதா தன் பேச்சிலேயே அவள் தான் குற்றவாளி என்பது போல் உணர வைத்திருந்தாள்..
அதைக் கடக்க முடியாமல் ஒரு வித அழுத்தத்தில் நின்றவளுக்கு தமக்கை தன்னைக் குறித்து அதிரனிடம் பேசவும் அழுகை வந்து விடவா? என்று அழைப்பு விடுத்தது..
அவள் நிலை காண சகியாத அதிரண் தன் கண்களை ஒரு முறை இறுக மூடித் திறந்தவன், நர்மதாவைப் பார்த்து ஏதோ பேச முற்பட, அவனை முந்தி கொண்ட புவனேஸ்வரி ,
“நர்மதா, நீ பேசினதுலாம் போதும்.. உன் குழந்தையோட பேரு வைக்கிற விழா முடிஞ்சதும் ரிசப்ஷனுக்கு நாள் வைக்கும் போது அதி முறையா உங்க வீட்டுக்கு வந்து அழைப்பு வைப்பான்.. எந்த குப்பையையும் மனசுல தூக்கி சுமக்காம விஷேசத்துக்கு குடும்பத்தோட வந்து சேரப் பாரு.. இப்போ போன கட் பண்ணு..” என்றவர் பெரிய மகளிடமும்”அம்பி போனை கட் பண்ணிடு..” என கட்டளையிட்டார்..
அம்பிகாவும் தாய் சொல்லி விட்டாரே என்று மனமே இன்றி அழைப்பைத் துண்டித்தாள்.. நர்மதாவோ கோவையின் வெயிலை விட கொடும் வெப்பத்தில் கொதித்துக் கொண்டிருந்தாள்.. பின்னே இன்னும் கொஞ்ச நேரம் விட்டிருந்தால் பேசிப் பேசியே ஆருத்ரா அதிரனை இன்றே பிரித்திருப்பாளே.. அந்த நல்ல காரியத்தை நடக்க விடாது செய்து விட்டாரே தாய்..
இப்படி யோசிக்கும் நர்மதா சின்ன வில்லி தான்.. அமைதியாய் வேடிக்கை பார்க்கும் அம்பிகா தான் பெரிய வில்லியே..
பெரிய வில்லிக்கு தாய் வீட்டில் நடக்கும் பிரச்சனையை தான் ஊதிப் பெரிதாக்கினால் அது திரும்பித் தன்னையே தாக்கினால் தாய் வீடு தன்னைக் கை கழுவி விட்டு விட்டால் ஊதாரிப் புருஷனை நம்பி ஒற்றைப் பெண்பிள்ளையை வைத்து அவள் என்ன செய்வது? அதனால் தான் நர்மதாவிடம் எல்லாப் பிரச்சனைகளையும் கூறி அவளிடம் தீர்வு கேட்பது போல் அவளைப் பெரிய ஆளாக எண்ண வைத்து அவளை முன் நிறுத்தி தான் கலகத்தின் பின் மறைந்து கொள்வாள்..
நர்மதாவுக்கு இவளது நிலை போல் எதுவும் இல்லை.. அவளின் புகுந்த வீடு செல்வ செழிப்பில் குறைந்தது இல்லை.. அதனால் அவளுக்கு பிறந்த வீட்டு ஆதாயம் எதுவும் தேவையில்லையாதலால் அவள் எதையும் தயங்காது பேசி விடுவாள்..
இரு மகள்களையும் புவனேஸ்வரி அடக்கிய விதம் அவர் தன் மகள்களை தப்பிக்க வைக்கும் முயற்சி என்று அருள், சர்மி,ஆருத்ரா மூவருக்கும் புரிந்தது.. அருள் , கோபமான மூச்சுகளோடு புவனேஸ்வரியையும் அதியையும் பார்த்து நின்ற மனைவியை எப்படி சமாளிப்பது என்று கலங்கிப் போனான்..
ஆருத்ரா மெல்ல தமக்கை அருகில் வந்து அமர்ந்திருந்தவள் தோளில் கை வைத்து அழுத்த. சர்மி அவளை நிமிர்ந்து பார்த்து முறைத்தாள்..
இப்போ சொல்லுங்க மேற்கொண்டு என்ன செய்யணும் என்று நேரே சர்மி அருளைப் பார்த்துக் கேட்டார் புவனேஸ்வரி..
அருள் தான் எங்களுக்கு மறுபடி முறையா கல்யாணம் பண்ணி பொண்ணை அனுப்ப தான் விருப்பம்.. ஆனா உங்க மகனுக்கு அதுல விருப்பம் இல்லன்னு அன்னைக்கே சொல்லிட்டார்..
அது எதுவும் வேணாம் சார். மேரேஜ் ரிஜிஸ்டர் பண்ணிட்டு எங்க வாழ்க்கைய நாங்க பார்த்துக்கிறோம்.. யாருக்கும் தெரிவிக்க வேண்டியது இல்லை. அப்பறம் சீர்ன்னு எதுவும் இங்க வரக் கூடாது என்று உறுதியாய் சொல்ல அருளுக்கே சலித்தது அவன் பிடிவாதம்.. அன்று ரிசப்ஷன் பற்றி பிறகு பேசுவோம் என்றான்.. இன்று அது எதுவும் வேணாம் என்கிறான்.. என்ன தான் இவன் கணக்கு என்று அருளுக்கு மண்டை காய்ந்தது..
அருள் அமைதியாய் புவனேஸ்வரியை பார்த்தவன் திரும்பி சர்மியைப் பார்க்க சர்மி சாமியாட ஆரம்பிக்கும் அறிகுறி நன்றாகவே தெரிந்தது.
இந்த முறையும் அருள் அவளை தடுக்கவில்லை.ஏனென்றால் தடுக்க முடியும் என்றும் தோன்றவில்லை..
“அதி.. எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு. நானும் பொறுமையா போலாம்ன்னு போனா நீ ரொம்ப தான் என்னை சோதிக்கிற? என்னடா நினைச்சிட்டு இருக்க உன் மனசுல? நீயா உன் தங்கச்சியை புடிச்சிருக்குன்னு பொண்ணு கேட்ப.. பழகின பாவத்துக்கு உனக்கு உதவி பண்ணா உன் வீட்டு ஆளுங்க என்னை கேவலமா பேசுவாங்க , என் தங்கச்சியை தரக் குறைவா பேசுவாங்க . இதெல்லாம் நான் பார்த்துட்டு அமைதியா போயிடணும் இல்ல?
நல்ல வேளை இப்டிலாம் நடக்கும்ன்னு கணிச்சு எங்க கூட வர இருந்த அம்மா அப்பாவை நிறுத்தினேன். வந்திருந்தா அவங்க வயிறு குளிர்ந்து போயிருக்கும்..
ஆமா தெரியாம தான் கேட்குறேன், அதென்ன எல்லா முடிவையும் நீயே எடுத்துட்டு அதை ஆரு மேல திணிக்கிற? ஏன் அவளுக்குன்னு எந்த ஆசையும் இருக்கக் கூடாதா என்ன? அவளுக்கே தெரியாம தாலி கட்டி நீ வான்னதும் வந்தால்ல? அந்த ஒரு விசயத்தை மனசுல நிறுத்தியாச்சும் அவ மரியாதைக்காகவாச்சும் இந்த
ரிசப்ஷன நடத்துற வழியைப் பாரு.. இல்ல? இல்ல என்ன இல்ல? ரிசப்ஷன் நடந்தே ஆகணும்..” என்று சீறியவள் பின் சற்றே தன் குரலைத் தணித்து,
யோசிச்சுப் பாரு அதி,
“நாம என்ன பண்ணாலும் நம்ம பின்னாடி வருவா என்ற நம்பிக்கையில தான அவ பர்மிஷன் கூட இல்லாம தாலி கட்டின.. நீ கூப்டு அவ வரமாட்டேன்னு சொல்லியிருந்தா அங்க எங்க வீட்டு ஆளுங்க முன்னாடி உன் மரியாதை என்னாகிருக்கும்? அவ மரியாதைய நீயும் விட்டுக் குடுத்திடாத அதி..” என்று இறைஞ்சுதல் போல் முடித்தாள்.
அவள் பேச்சு தன் குடும்பத்தை தாக்கி வந்தது புவனேஸ்வரிக்கு புரிந்தது. நர்மதா பேசியதற்கு பதிலடி என்றும் புரிந்தது. அதுவும் தன் முன்னே தன் மகனை டா அது இது என்று மரியாதை இன்றிப் பேசுவதும் என்று மொத்தத்தில் அவளிடம் எதுவுமே பிடிக்கவில்லை புவனேஸ்வரிக்கு. இவளே இப்படி என்றால் இவள் தங்கை எப்படியோ என்று அவர் எண்ணம் பயணிக்க, ஆருவை நிமிர்ந்து பார்த்தார். அவள் இது எங்கு போய் முடியுமோ என்று பரிதவிப்பாய் பார்த்து நின்றாள்.
அதற்குள் சர்மியின் பேச்சில் ஆருவின் தன் மேலான எல்லையற்ற அன்பு, நம்பிக்கை எல்லாம் உணர்ந்து இளகியிருந்த அதிரன் ,
“சரி சர்மி ரிசப்ஷன் பண்ணிக்கலாம்..” என்று தாயிடம் கேட்க வேண்டும் என்பதை மறந்து அவனே ஒப்புதல் அளிக்க, புவனேஸ்வரி அவனை ஒரு பார்வை பார்த்தவர் எதுவும் சொல்லாது அமைதி காத்தார்.. அவர் முக மாற்றத்தைக் கண்ட அருள் ,
“அம்மா நீங்க என்ன சொல்றீங்க?” என்று அவரிடம் கேட்டான். அதன் பின்னர் தான் தன் தவறு உணர்ந்த அதிரன் தாயை மன்னிப்பு யாசிக்கும் பார்வை பார்த்தான் . என்ன தான் மகன் மேல் வருத்தம் இருந்தாலும் அவன் சுப நிகழ்ச்சியை வேண்டாமென்றா சொல்லுவார். அவரும் சரியென்று விட அடுத்த மாதமே நல்ல நாள் குறிக்கப் பட்டது.
அடுத்த நாளே மனைவியுடன் கோவை சென்ற அதிரன் நர்மதா வீட்டினரை கல்யாணம் இக்கட்டான சூழ்நிலையில் நடந்தது என்று கூறி ரிசப்ஷனுக்கு அழைத்து விட்டு அவள் குழந்தையையும் பார்த்து சென்றான். நர்மதா புகுந்த வீட்டினர் முன் எதையும் காட்டிக் கொள்ளாது இருந்தாலும் தம்பி மனைவியை சந்தர்ப்பம் கிடைக்கும் போது எல்லாம் பார்வையிலே ஒதுக்கினாள்.
தெரிந்தும் அதிரனுக்காக என்று ஆருத்ரா எல்லாம் பொறுத்துக் கொண்டாள்.
சொன்ன தேதியில் ரிசப்ஷன் நடக்க நர்மதா வீட்டில் குழந்தை பிறந்த காரணத்தால் அவள் தவிர்ந்த எல்லோரும் வந்து இருந்தனர்.
ரிசப்ஷன் முடிந்த இருபது நாட்கள் கழித்து ஆருத்ராவின் கர்ப்பமும் உறுதியாகி விட இருவரும் எல்லையில்லா இன்ப வானில் சிறகடித்துப் பறந்தனர்.
வேலை நேரம் தவிர்ந்த நேரங்கள் எல்லாம் அதிரனின் பார்வை மொத்தம் ஆருத்ரா மேல் தான் இருக்கும். ஆருத்ராவும் அவன் இல்லா நேரங்களை வெறுத்து தான் நகர்த்துவாள்.
அவள் தன்னை நீங்காது இருக்க ஆசைப் படுவது அதிரனுக்கு உள்ளே கர்வத்தை தந்தாலும் அதை வெளியில் காட்டாது அடிக்கடி வெளியூர் செல்கிறேன் என்று அவளை டீஸ் செய்து அவள் அவன் பின்னே பெவிகால் போட்டு ஒட்டாத குறையாய் அலைவதை உள்ளே ரசிப்பான்.
இரவு நேரங்களில் அவளை டீலில் விட்டு விட்டு குழந்தையை மட்டும் கொஞ்சிக் கொண்டு பேசுகையில் எல்லாம் அவளிடம் தோன்றும் செல்லக் கோபம் மற்றும் பொறாமை எல்லாமே அவன் ரசனைகளில் முதலிடம் பிடிக்கும்.
இதில் அவர்களுக்குள் முட்டிக் கொள்வது குடும்பத்தார் விடயத்தில் தான். அதிரன் ஆருத்ராவின் தந்தையை மன்னிப்பதாகவே இல்லை.. ஆனால் ஆருத்ராக்கு அவர்களோடு பேச தடை விதிப்பதும் இல்லை.
ஆருத்ராக்கு கர்ப்ப காலத்தில் தாயை அதிகம் தேட அவரை வீட்டிற்கு அழைக்காது அவரை வெளியே எங்கேனும் சென்று சந்தித்து வருவாள்.. அதற்கு அதிரன் கத்துவான்.. இந்த மாதிரி நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம்.. உங்க அம்மாவை இங்கே வீட்டிற்கு வந்து சந்திக்க சொல் என்று.. ஆனால் அவள் கேட்பதில்லை. தாய் இங்கே வந்தால் புவனேஸ்வரி சம்பிரதாய பேச்சோடு முடித்துக் கொள்வார் என்றால் அம்பிகா அவரை வேண்டாத விருந்தாளி போல நடத்துவாள். அதனால் தான் வெளியே செல்வதே. அதை அதிரனிடம் சொல்வது இல்லை, சொல்லியிருக்க வேண்டுமோ என்று பின்னாளில் வருந்தும் நாளும் வரும்.
புவனேஸ்வரி மகனிடம் முதலில் ஒதுக்கம் காட்டினாலும் போகப் போக அவன் திருமணத்துக்கு முன் தன் சகோதரர்களுக்கு செய்த தன் கடமைகளை பிறகும் தவறாது செய்வதில் என் மகன் என்ற பெருமை மாறாது போக அவனிடம் நன்றாகப் பேச ஆரம்பித்தார். ஆனால் மருமகளிடம் அவர் போக்கு கொஞ்சம் விசித்திரமானது.
தான் அவளை குறையாக எதுவும் சொல்ல மாட்டார் எனினும் மகள்கள் எதுவும் சொன்னால் அதைக் கண்டிக்கவும் மாட்டார். அது தான் ஆருத்ராவுக்கு பிடிப்பதில்லை.
அம்பிகாவின் வீடு இவர்கள் வீட்டில் இருந்து இரண்டு தெருக்கள் தள்ளி தான் என்பதால் பெரும்பாலும் அவள் குடியிருப்பது இங்கே தான்.
நர்மதாவோ தொலைபேசியிலே தன்னாலான காரியத்தை சிறப்பாக செய்து விடுவாள்.
புவனேஸ்வரி என்னவோ அவரால் இயலாததை மகள்கள் மூலம் தீர்த்துக் கொள்வது போல் அமைதியாக இருப்பார். இது போன்ற அவர் நடவடிக்கைகள் பிடிக்காது மனதிலே தேக்கிக் கொள்வாள்.
சில நேரங்களில் அதன் பிரதிலிப்பை அதிரனிடம் காட்டி இருவருக்கும் முட்டிக் கொண்டாலும் அவனோடு அணையாது உறக்கம் கூட அவளை அணைக்காது. ஆகையால் தலை கீழே நின்றாகிலும் அவனை சமாதானம் செய்து விடுவாள்.
இப்படி சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் யார் கண் பட்டதோ வளைகாப்பு முடித்து வேலை விசயமாக பேங்க்ளூர் சென்றவனுக்கு தொலைபேசியில் கிடைத்த செய்தி , ஆருத்ரா புவனேஸ்வரியை தள்ளி விட்டதில், தாய் ஹாஸ்பிடலில் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார் என்பது தான்..