மதுரையில் பிரபல கல்லூரியில் கணிதம் மூன்றாம் ஆண்டு படித்துகொண்டிருக்கும் தாமரையிடம்.. ‘தாமரை செமஸ்டர்க்கு எல்லாம் படிச்சிட்டியா?” என்றாள் அவளின் தோழி பவித்ரா.
பவித்ரா ‘நீ அப்படித்தான் சொல்லுவ.. ஆனா மார்க் வாங்கிடுவ..”
‘இல்ல பவி.. எங்கப்பா என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்றாரு.. மாப்பிள்ளை இரயில்வேல இன்ஜினியரா இருக்கானாம்.. எங்கப்பாக்கு தெரிஞ்சவங்களாம்.. அவனுக்கே கல்யாணம் பண்ணி கொடுக்கனும்னு ரொம்பஆசைப்படுறார். அதனால என் மைண்ட் ரொம்ப டிஸ்டர்ப்பா இருக்கு.. புக் எடுத்து பத்து நாளைக்கு மேல ஆகுது.”
‘மாப்பிள்ளை எப்படி இருப்பாங்களாம்? இரயில்வேயில இன்ஜினியரா இருக்காருன்னா பேசாம கல்யாணம் பண்ணிகிட்டுபோக வேண்ணியதுதான? ஏன் உனக்கு கல்யாணத்தில இஷ்டம் இல்லையா? இல்ல.. எம்.எஸ்.சி படிக்கப்போறியா?”
‘கல்யாணத்தில விருப்பம் இல்லன்னு சொல்ல முடியாது.. ஆனாலும் இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்கிற ஆர்வமும் வரமாட்டுது.. அதனால எம்.எஸ்.சி முடிச்சிட்டு பண்ணிக்கிறேன்னு சொல்லியிருக்கேன்..”
‘நீ என்னவோ பண்ணு.. இப்ப படிக்கலாமா?”என்றாள்.
‘இல்ல.. நீ படி.. நான் அப்புறம் ஜாயின் பண்ணிக்கிறேன்.” என்று யோசனையில் ஆழ்ந்தாள்.
கல்லூரி முடிந்து மாலை வீட்டிற்கு வந்த தாமரையிடம்.. ‘இதுதான் மாப்பிள்ளையோட ஃபோட்டோ பாரு..” என்று காமாட்சி கொடுக்க.. அதை பார்க்கும் ஆர்வம் இல்லாமல்.. ‘போட்டோ வேணாம், நேர்லையே பார்த்துக்கிறேன்மா..” என்று தனதறைக்குள் புகுந்து கொண்டாள்.
காலையில் எழுந்ததும் வெளியே வந்த தாமரையின் மனதில் மதியழகனின் உருவம் நினைவு வர.. கிச்சனுக்கு சென்றவள்.. ‘அம்மா.. ஏன்மா நான் மட்டும் கருப்பா இருக்கேன்?” என்றாள்.
எப்பொழுதும் தாமரையின் இந்த கேள்விக்கு பொறுமையாக பதில் சொல்லும் காமாட்சிக்கு இன்றைக்கு கோபம் வந்திட.. ‘நீ கருப்புன்னு யாரு சொன்னா? கலராத்தான் இருக்க..” என்றார் கடுப்பாக.
‘நான் கலர்ன்னா.. அப்ப நீ என்ன கலர்?” என்று அம்மாவின் முகத்தோடு தன் முகத்தை இழைத்தாள்.
கையில் இருந்த கரண்டியை கீழே விசிறியவர்.. ‘நீ காலேஜ்தான போற? அங்க எல்லாரும் உன்னைவிட கலராத்தான் இருக்காங்களா? உன் நிறத்தில யாருமே இல்லையா? அப்படியே கலர் கம்மியா இருந்தாலும் அவங்களெல்லாம் அழகில்லையா?” என்றார் கோபமாக.
அதெல்லாம் எனக்கு தெரியாது.. ‘அவ மட்டும் உங்களை மாதிரியே சிவப்பா இருக்கா..” என்று தன்னைவிட ஐந்து வயது இளைய சகோதரியான மஞ்சுவிடம் வந்து நின்றாள்.
அப்பொழுதுதான் தன் அறையில் இருந்து வெளியே வந்த கதிரேசனுக்கு மகள் பேச்சு காதில் விழ.. ‘தாமரை.. நீ உன்னை கருப்புன்றியா? இல்ல என்னை அசிங்கப் படுத்திறியா?” என்றார் கோபமாக.
பதறியடித்து அப்பாவிடம் வந்தவள்.. ‘அப்பா என்னப்பா இப்படி சொல்றிங்க? உங்களைப் போய் அப்படி நினைப்பேனா? எனக்கு எல்லாமே நீங்கதான்ப்பா..” என்று கண்கலங்கினாள்.
தாமரையின் கண்களில் கண்ணீர் வரவும்.. ‘என் பொண்ணு இனி இப்படி பேசமாட்டா.. நீ உடனே ஆரம்பிக்காத.. போய் சமையலை கவனி..” என்றார் அதட்டலாக.
காமாட்சி கோபத்தோடு கிச்சனுள் நுழைய, மகளுடன் அரைமணிநேரம் பேசிக்கொண்டிருந்தவர்.. ‘ஆச்சி.. டிபன் ரெடியா? எனக்கு டைம் ஆச்சி..” என்றார்.
‘எத்தனை முறை சொல்றது? என்னை ஆச்சின்னு கூப்பிடாதிங்கன்னு? ஆச்சின்னா பாட்டின்னு அர்த்தம்..” நான் உங்களுக்கு பாட்டியா?” என்றபடி டிபனோடு வந்தார்.
‘அதெல்லாம் எனக்கு தெரியாது.. ஆச்சின்னா என்னை பொருத்தவரை என்னை ஆட்சி செய்யும் காமாட்சின்னு அர்த்தம்.. நான் அப்படித்தான் கூப்பிடுவேன்..” என சிரித்து சூழலை இலகுவாக்கினார்.
கதிரேசன் கிரேனைட் கம்பெனி நடத்தி வருபவர். தனது அப்பா ஆரம்பித்த மார்பிள் கம்பெனியை சில வருடங்கள் நடத்தி வந்தவர்.. தாமரையின் பிறப்பிற்கு பிறகு கிரேனைட் சப்ளை செய்யும் தொழிலையும் ஆரம்பித்து.. நடுத்தர வர்கமாக இருந்த தன் குடும்பத்தை மஞ்சரியின் பிறப்பிற்கு முன்னரே.. கார் பங்களா என தனது குடும்பத்தை மேல்தட்டு வர்கத்திற்கு நிகராக முன்னேற்றிவர்.
அதனாலேயே கதிரேசனுக்கு மஞ்சரியை விட தாமரையின் மீது பாசம் அதிகம். மகளின் திருமணத்திற்கு பார்க்கும் இந்நேரத்தில் தாமரை தன்னை கீழாக நினைப்பது கதிரேசனுக்கும் கோபம்தான். ஆனாலும் தாமரையின் கண்ணீர் கோபத்தை கட்டுப்படுத்த, சாப்பிட்டு கம்பெனிக்கு கிளம்பினார்.
தன்னை திட்டிய அன்னையை திட்டினாலும், தந்தை தன்னிடம் வழக்கம்போல் பேசாமல் சென்றதால் சோர்ந்தவளாய் இட்லியை பிசறிக்கொண்டிருந்தாள் தாமரை.
“இட்லியை எதுக்கு உப்புமாவாக்கிட்டிருக்க? காலேஜ்க்கு டைம் ஆகிடுச்சி, சீக்கிரம் சாப்பிடு.” என அதட்டினார் காமாட்சி.
“இட்லியும் வேணாம், ஒன்னும் வேணாம்.” என பிணக்கோடு எழுந்தவள் சாப்பிடாமலே கல்லூரிக்கு கிளம்பினாள்.
இளைய மகளோடு தன்னை ஒப்பிட்ட தாமரையின் பேச்சில் ஏக கடுப்பான காமாட்சியும், மகளை சமாதனப்படுத்த விழையவில்லை.
போனா போ.. ஒரு நாள் பட்டினியா கிடந்தா ஒன்னும் ஆகிடாது என மனதோடு மருகினார்.
மகளை சமாதானப்படுத்தாமல் கம்பெனிக்கு சென்ற கதிரேசனுக்கு வேலையே ஓடவில்லை.. என்றுமில்லாமல் இன்று தாமரையை திட்டிவிட்டோமே என்று வருத்தத்தில் இருந்தவர், மாலை ஐந்து மணிக்கே வீட்டிற்கு கிளம்பினார்.
தாமரை.. ‘மஞ்சு… நாளைக்கு உனக்கு ரிசல்ட்.. எப்படியும் நீ நல்ல மார்க்தான் வாங்குவ.. உனக்கு என்ன வேணும்?” என்றாள்.
மஞ்சரி தாமரையிடம் இருந்து முகத்தை திருப்ப.. ‘மஞ்சு… என்கிட்ட பேசமாட்டியா?” என்றாள் கெஞ்சலாக.
‘ஏய்.. நான் அப்படி நினைக்கல மஞ்சு.. எப்பவும் அம்மாகிட்ட இப்படி கேப்பேன்தான்.. எப்பவும் திட்டாத அம்மா இன்னைக்கு திட்டிட்டாங்களா? அதனால நானும் டென்சன்ல அப்படி சொல்லிட்டேன். இருந்தாலும் சாரி..” என்றாள் வருத்தத்தோடு.
‘நீ ஏன் தாமரை இப்படி நினைக்கிற? எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்திச்சி..” என வருந்தினாள் மஞ்சு.
‘இனிமே அப்படி பேசமாட்டேன்..” என்றாள் சமாதனமாக.
‘பேசறது இல்ல.. நினைக்கவே கூடாது..” என்றபடி கதிரேசன் உள்ளே வந்தார்.
காலையில் முகம் இறுகிச் சென்ற தந்தை தற்போது வழக்கம்போல் பேசியதில் சந்தோசமடைந்தவள்..‘அப்பா.. என்ன இன்னைக்கு இவ்ளோ சீக்கிரம் வந்திட்டிங்க.?” என்றாள் ஆச்சர்யமாக.
‘ஓ.. உங்களை சீக்கிரம் வீட்டுக்கு வரவழைக்க இப்படி ஒரு வழி இருக்கா?” என்றாள் மலர்ந்த முகத்தோடு.
“ம்..” என செல்லமாய் மகளின் கன்னம் தட்டி, உடை மாற்ற சென்றார். என்னதான் மகளிடம் சிரித்து பேசினாலும்.. கதிரேசனின் மனம் குழப்பத்தில் இருந்தது. காமாட்சியின் முகமும் பொலிவிழந்துதான் காணப்பட்டது.
இரவு உணவை முடித்துக்கொண்டு படுக்கைக்கு வந்த கதிரேசன்.. ‘ஆச்சி.. எதுக்கு இப்படி சோர்வா இருக்க? நான் மட்டும் ஆசைப்பட்டா அந்த பையன் வீட்ல தாமரையை பொண்ணு பார்க்க வரசொன்னேன்? உரிமையா கேக்க வேண்டியவன் அமைதியா இருந்தான்னா.. நாம என்ன பண்ணமுடியும்?
நாம ஆசைப்பட்டா போதுமா? அவனுக்கு நம்ம தாமரைமேல அப்படி எண்ணம் இருக்கிறமாதிரி எனக்கு தெரியலை.. மஞ்சுனா அப்படி கவனிக்கிறான். நம்ம தாமரைகிட்ட பேசாதது மட்டுமில்ல.. பார்க்கிறது கூட இல்லங்கும்போது நாம என்ன பண்ணமுடியும்?
ஊசி தங்கம்னு கண்ணுலையா குத்திக்க முடியும்? என்னைக்கோ நடந்ததை நினைச்சிட்டு இன்னமும் நம்ம வீட்ல கைகூட நனைக்கிறதில்ல.. இவனை நம்பிட்டு தேடி வர நல்ல வரணையும் தட்டி கழிக்க கூடாது. நடக்கிறது நடக்கட்டும் பார்த்துக்கலாம் விடு..” என்றார்.
நம்ம மஞ்சுக்கு பேரண்ட்ஸ் மீட்டிங்கில இருந்து எல்லாமே அவன்தான் பார்த்துக்கிறான்.. நம்ம மேல அவனுக்கு பாசமெல்லாம் இருக்குங்க.. நீங்க எதுவும் கேக்க வேணாம்.. ஒரே ஒருமுறை நான் பேசி பார்க்கட்டுமா?” என்றார் தவிப்பாக.
‘இதெல்லாம் நீ சொல்லித்தான் எனக்கு தெரியனுமா? நான் இல்லாதபோது இங்க வந்து தங்கறான்னா அதுக்கு காரணம்.. ஒருநாள் அவன்கிட்ட, வெளியூர் போகும்போது எல்லாரும் தனியா இருப்பிங்க.. இங்க சாப்பிடலைன்னாலும் பரவாயில்ல.. உன் வீட்லையே சாப்பிட்டு வந்து நைட் மட்டுமாவது தங்கிக்கோன்னு கெஞ்சி கேட்கவும்தான் வரான்.
உங்க பாதுக்காப்புக்காக கெஞ்சின மாதிரி.. என் பொண்ணை கட்டிக்கோண்ணு என்னால கெஞ்ச முடியாது..” என்று மதியழகன் மீதுள்ள கோபத்தை மனைவி மீது காட்டினார்.
காமாட்சி செய்வதறியாது அமைதியாக இருக்கவும்.. தன் கோபத்தை குறைத்து.. ‘ஆச்சி.. இந்த பையனை பத்தி நல்லா விசாரிச்சிட்டேன்.. ரொம்ப நல்ல பையன். பையனோட அப்பா என்னோட தொழில்முறை பிரெண்டுதான். நீ கவலைபடாத.. நம்ம தாமரைக்கு ஒரு குறையும் வராது. நான் பார்த்துக்கிறேன்..” என்றார் சமாதனமாக.
ஆனால் காமாட்சியின் மனம்தான் சமாதனம் ஆகாமல் சண்டித்தனம் செய்தது. “ஹம்…” என கடவுளை வணங்கி கண்மூடினார்.
*** **** ****
‘அழகு மாமா…” என்று போனில் அதீத சந்தோசத்தோடு கத்தினாள் மஞ்சரி.
‘மஞ்சுகுட்டி.. நீ டென்த்ல நானுத்தி எழுபத்தி இரண்டு மார்க்.. கரெக்டா?” என்று மதியழகனும் சந்தோசமாய் கத்தினான்.
‘ம்ம்.. அதுக்குள்ள மார்க் பார்த்திட்டிங்களா? எனக்கு என்ன கிப்ஃட் தரப்போறிங்க?” என்றாள்.
‘கிஃப்ட்டெல்லாம் நேத்தே வாங்கிட்டேன்.. நீ அப்பாவோட இங்க வரியா.?” என்றான்.
‘சரி.. இன்னும் அரைமணி நேரத்தில வந்திடறேன்.. நான் வரதுக்குள்ள ரெடியாகிடு.. நாம வெளிலபோகனும்..” என்று இணைப்பை துண்டித்து.. தன் தாத்தாவிற்கு தேவையானதை செய்து முடித்து மஞ்சுவைப் பார்க்க கிளம்பினான்.
‘மஞ்சுகுட்டி..” என்றபடி உள்ளே வந்தான் மதியழகன்.
‘அழகு மாமா..” என்று ஓடிவந்தவளிடம் புதிதாய் வாங்கி வந்த வாட்சைஅணிவித்தான்.பிறகு இரண்டு செட் புத்தாடைகளையும், இனிப்பு பதார்த்தம் அடங்கிய பேகையும் கொடுத்தான்.
‘ஐய்ய் புது டிரெஸ்.. ஸ்வீட்.. சூப்பர் மாமா.. அழகு மாமான்னா மாமாதான்..” என சந்தோசித்தாள் மஞ்சரி.
‘மஞ்சு. உன்னை ரெடியாத்தான இருக்க சொன்னேன்? ஏன் இன்னும் குளிக்காம இருக்க? போய் குளிச்சிட்டு சீக்கிரம் ரெடியாகு,வெளில போகனும்..” என அவசரப்படுத்தினான்.
எப்பொழுதும் மதியழகன் சொல்லை தட்டாமல் செய்யும் மஞ்சுவிற்கு தற்போது சங்கடமாகிட, ‘ஃபிரெண்ட்ண்ஸ் எல்லாரும் யார் யார் என்னன்ன மார்க்குனு ஃபோன்ல பேசிட்டிருந்தோம் மாமா.. டைம் போனதே தெரியல, பத்து நிமிஷத்துல ரெடியாகிடறேன்.” என்றாள் சமாதானமாக.
‘வா.. மதி..” என்றபடி பூஜையறையில் இருந்து வெளியே வந்த காமாட்சி.. ‘மதி.. உன்கிட்ட கொஞ்சம் பேசனும்..” என்றார்.
‘சொல்லுங்கத்தை..” என்றான் மொபைலை நோண்டியபடி.
‘மஞ்சு நீ போய் குளிச்சிட்டு உன் மாமன் வாங்கி வந்த புது டிரெஸ்சை போட்டுட்டு வா..” என்று அனுப்பி வைத்தவர் சற்று நேரம் மதியழகனையே பார்த்திருந்து.. ‘நம்ம தாமரையை பொண்ணு கேக்கிறாங்க..” என்றார் தவிப்போடு.
சட்டென தலை நிமிர்ந்தவன்.. ‘சரி..” என்றான் எந்த உணர்வுமில்லாமல்.
‘யாரு.. என்னன்னு கூட கேக்கமாட்டியா?”
காமாட்சியின் கேள்விக்கு பதில் சொல்லாமல்.. ‘பத்தாவதே முடிச்சிட்டா.. இன்னும் பெரிய பொண்ணாகலை. லேடி டாக்டர்கிட்ட அப்பாய்ன்மெண்ட் வாங்கிருக்கேன்.. பதினொரு மணிக்கு வர சொல்லியிருக்காங்க.. நானும் மஞ்சுவும் டாக்டர்கிட்ட போறோம்..” என்றான்.
காமாட்சி.. ‘நான் என்ன சொல்லிட்டிருக்கேன்? நீ என்ன பேசற?” என்றார் ஆற்றாமையோடு.
‘கொம்புத்தேனைப் பத்தி இந்த முடவன் கேக்க வேண்டிய அவசியமென்ன இருக்கு?” என்று எட்டு வருட வேதனையை முதன்முதலாய் காட்டினான் மதியழகன்.
நீ இன்னும் அதை மறக்கலையா? என்பதுபோல் அடிப்பட்ட பார்வை பார்த்தார் காமாட்சி.
‘தாமரை..” என மஞ்சுவின் குரல் வீட்டை அதிர வைக்க..
தாமரைக்கு முன் அறைக்குள் சென்ற மதியழகன்.. ‘என்னாச்சி மஞ்சு?” எனப் பதறினான். மஞ்சு அமைதியாய் இருக்கவும்.. மதியின் பின்னோடு வந்த தாமரை.. ‘மஞ்சு.. கதவைத் திற..” என்க, தாமரையின் குரலில் கதவைத் திறந்தாள் மஞ்சரி.
உள்ளே சென்ற தாமரை சற்று நேரத்திலேயே வெளியே வந்தாள். மதியழகன் மஞ்சுவின் கட்டிலில் டென்சனோடு அமர்ந்திருந்தான். சற்று தயங்கியபடி அவனை கடந்து போனவள்.. ஐந்து நிமிடத்தில் கவரோடு உள்ளே வரவும்.. அதைப் பார்த்த மதியழகன், நிம்மதியோடு வெளியே வந்தான்.