“அப்ளை பண்ற டைம் முடிஞ்சி, உனக்காக கேட்டு வாங்கி வந்த அப்ளிகேஷனை கிழிச்சி வச்சிருக்கியே? காலேஜ்ல மதியை என்ன நினைப்பாங்க?” என திட்டினார் காமாட்சி.
அங்கு படிக்க விருப்பமில்லை என்றாலும் கிழித்திருக்க கூடாதுதான்.. ஆனால் நான்தான் இந்த காலேஜ்ல படிக்கமாட்டேனு சொல்றேனே, என் விருப்பத்தை யோசிக்கிறார்களா? என்ற கோபமும் வந்தது தாமரைக்கு.
“சொல்லுடி..” என காமாட்சி முறைக்க..
தாமரை பேச்செடுத்தாலே எரிந்து விழுபவன், தற்போது தாமரைக்காக கல்லூரியில் பேசியிருக்கிறான், படிக்கவில்லை என்றதும் எடுத்துரைத்திருக்கிறான், உரிமையாய் அதட்டுகிறான் என அனைத்தும் பெரு மகிழ்வோடு நினைத்திருந்த பழனியப்பன்.. “எதுக்கு காமாட்சி பிள்ளையை அதட்டுற? இப்போ மெத்த படிச்சி என்னாகப்போவுது? பேத்திதான் படிக்க பிடிக்கலனு சொல்லுதுல்ல? விடேன்.” என்றார் மலர்ந்த முகத்தோடு.
“பாருங்க தாத்தா..” என சலுகையோடு வெம்பினாள் பழனியப்பனிடம்.
காமாட்சி.. “அதுக்கு அப்ளிகேஷனை கிழிப்பியா?” என தாளமாட்டாமல் மீண்டும் அதட்ட.. இவளின் விசயத்தில் தலையிட்டது என் தவறுதான்.. நான் வேலை பார்க்கும் கல்லூரி என்பதாலேயே இங்கு படிக்க பிடிக்கவில்லையென்றாள்..
அவள் சொல்லியும் இவளுக்காக அப்ளிகேஷன் வாங்கி வந்ததுதான் நான் செய்த பெரும் தவறு.. என்னை உதாசினப்படுத்தவே கிழித்திருக்கிறாள்.. இவ்வளவு வெறுப்பவளை எதற்காக நான் திட்டனும்? முதலில் அவ்வுரிமையை தனக்கு கொடுத்தாளா? என தன்னை தானே கடிந்தவன்.. வேணாம் என விலகினாலும் எப்படியோ ஈர்த்துவிடுகிறாள் என்ற கடுப்பிலிருக்க..
தான் என்ன நினைப்பேனோ என காமாட்சி தாமரையை திட்டிக்கொண்டிருக்க, அதற்கு தாத்தா தாமரைக்கு பரிந்து பேசிக்கொண்டிருக்க, அதில் மேலும் கோபம் வரவே.. “அத்தை இந்த பேச்சை விடுங்க.” என்றான் கடுப்பாக.
தான் படித்த கல்லூரியில் இடம் வாங்குவது அத்தனை சுலபமல்ல, அதிலும் காலதாமதத்திற்கு பிறகு அப்ளிகேஷன் வாங்குவது நடவாத ஒன்று, என்னை இவங்களுக்கு பிடிக்கலன்னாலும் அப்பா கேட்டதிற்காக வாங்கி வந்துருக்கிறான். அதற்கு நிர்வாகத்தில் எத்தனை இறங்கி பேசயிருப்பான் என யோசித்து.. “சாரிம்மா..” என்றாள் சன்னக்குரலில்.
“சாரி கேட்டா எல்லாம் சரியாகிடுமா? அப்ளிகேஷன் வாங்குனிங்களே? அட்மிஷன் போடலயானு மதியைதான கேட்பாங்க? என்ன பதில் சொல்லுவான்?” என்றார் கோபத்தோடு.
தாமரை கண்ணீர் விடவே, அதற்குமேல் மகளை அதட்ட முடியாமல்.. மதியழகனிடம்… “அப்ளிகேஷன் தண்ணியில விழுந்துட்டதா போன்ல சொன்னியே? அதையே சொல்லி எதாவது செய்ய முடியுமா மதி?” என்றார் தவிப்போடு.
“இதென்ன ஸ்கூல் பிள்ளைங்க விளையாட்டாத்தை? நான் எதோ அவன் கேட்டதுக்கு சொன்னேன், இப்படில்லாம் சில்லியா போய் என்னால அங்க நிக்க முடியாது.” என திடமாய் மறுத்தவன்.. “அழகு மாமா.” என்ற மஞ்சுவின் சோர்ந்த அழைப்பிற்கு உள்ளே சென்றான் மதி.
காய்ச்சல் குறைந்து வியர்த்திருந்தது மஞ்சரியைப் பார்த்து நிம்மதியானவன்.. “இப்போ பரவால்லையா மஞ்சு.” என தொட்டு பார்த்து முகத்தை துடைத்து விட்டு.. “இங்கையே இரு மஞ்சு, டீ போட்டுட்டு வரேன்.” என கிச்சன் சென்று டீ போட்டு வர, மஞ்சு ஹாலுக்கு வந்திருந்தாள்.
“டையார்டா இருக்கும்? எதுக்கு வந்த?” என அதட்ட, “உள்ள போரடிக்குது மாமா.” என சிணுங்கியவள்.. வாடிய முகத்தோடு தந்தையிடம் விசயத்தை விளக்கிக்கொண்டிருந்த அன்னையின் பேச்சில் நடந்ததை அறிந்து தாமரையை முறைத்தாள் கோபமாக.
“மஞ்சு ப்ரட் சாப்பிடு.” என கண்டிப்பான குரலில் மதி அழைக்க, இது பற்றி தாமரையிடம் நான் பேசுவதை விரும்பாமல்தான் தன்னை அழைக்கிறார் என தன் மாமனின் எண்ணம் புரிந்து, மதியிடம் சென்றமர்ந்தாள் மஞ்சரி.
“என்ன? அப்ளிகேஷனை கிழிச்சிட்டாளா?” என கதிரேசன் கோபம் கொள்ள.. “தெரியாம பண்ணிட்டாங்க, இன்னைக்குள்ள போனா எப்படியாவது சீட் வாங்கிடலாம். நீங்க சீக்கிரம் வாங்க.” என்றார்.
“என்னால இப்போ வர முடியாது ஆச்சி. மதியம் ஒரு வியாபாரம் இருக்கு. அவங்களை வர சொல்லிட்டு நான் இல்லாம எப்படி?” என்றார் கவலையாக.
விண்ணப்பிக்கும் அவகாசம் முடிந்திருக்க, அப்ளிகேஷனும் இல்லாத நிலையில் தனக்கும் யாரிடம் எப்படி கேட்கவேண்டும் என தெரியாதே. என்ற கவலையில்.. “இன்னைக்கொருநாள் மட்டும யாரையாவது ஏற்பாடு செய்துட்டு வாங்க..” என்றார்.
“போனை மதிகிட்ட கொடு.” என்றார் கதிரேசன்.
“இந்தா மதி.. உன்கிட்ட பேசனுமாம்.” என மொபைலை நீட்ட, “இனி நான் சொல்றதுக்கு என்ன இருக்கு? நீங்களே பேசுங்க.. மஞ்சுக்கு ப்ரட் ஊட்டனும்.” என மஞ்சுவை கவனிப்பதில் கவனமானான்.
மதி சொன்னது கதிரேசனுக்கும் கேட்கவே, “ஸ்பீக்கர்ல போடு ஆச்சி.” என்க.. “போட்டுட்டேன்ங்க.” என்ற காமாட்சி மொபைலை மதியருகே வைத்தார்.
“என்னால இப்போ வர முடியாது மதி, தாமரைவேற அப்ளிகேஷனை கிழிச்சிட்டா, கொடுத்த அப்ளிகேஷன் என்னாச்சுனு கேட்டா ஆச்சிக்கு சமாளிக்க தெரியாது. நீ கொஞ்சம் போய் வாயேன்..” என்றார் கெஞ்சலாக.
மதி அமைதிகாக்க.. “வீட்டுல இருந்தாள்னா இன்னும் தத்தியாகிடுவா. தாமரை செய்தது தப்புதான், எனக்காக கொஞ்சம் போய் வா மதி. இல்ல இந்த வருசமே வீணாகிடும்.” என்றார் கவலையோடு.
“நீங்க ஆசைப்பட்டா போதாது, படிக்கிறவளுக்கு விருப்பமிருக்கனும். அப்ளிகேஷனை கிழிச்சி ஒருமுறை அசிங்கப்பட்டது போதாம இன்னொருமுறை அசிங்கப்படவா என்னை கேட்டுட்டிருக்கிங்க?” என்றான் கோபத்தோடு.
“இங்கதான் இருக்கா, பேசுங்க.” என்க, “நான் சொன்னதுக்காகத்தான் அப்ளிகேஷன் வாங்கினான் மதி, அதை கிழிச்சி மதியோட சேர்த்து என்னையும் அவமானப்படுத்திருக்க, ஃபைனலா சொல்றேன், அங்க சீட் கிடைச்சா மட்டும்தான் படிக்க அனுப்புவேன், கண்டிப்பா வேற காலேஜ்ல சேர்த்தமாட்டேன்,
வேற காலேஜ்ல சேர்த்தமாட்டேன்றதுக்காக உன் விருப்பப்படி ஜாலியா வீட்டுல இருக்கலாம்னு நினைச்சிடாத, அப்புறம் வேற மாதிரி யோசிக்கவேண்டியதாயிடும்..” என கடுமையான குரலில் கண்டித்து,
“ஆச்சி.. இனி படிப்பை பத்தி எதுவும் தாமரைகிட்ட கேக்காத, படிக்கனுமா வேணாமானு அவளே முடிவெடுக்கட்டும்.” என இணைப்பை துண்டித்தார் கதிரேசன்.
கதிரேசன் பேசிய பின்னே ஐந்து நிமிடமாய் பெருத்த அமைதி நிலவ.. “காமாட்சி, இந்த மதிப்பையன் அவன் கூட்டாளிக்கு மட்டும் டீ குடுக்கிறான், நீ போய் எல்லாருக்கும் வச்சி எடுத்துவா, எல்லார்கிட்டயும் பேச்சு வாங்கி என் பேத்தி சோர்ந்து கிடக்குது.” என்றார் பழனியப்பன்.
அப்ளிகேஷனை கிழிச்சவளுக்கு இத்தனை சப்போர்ட்டா என மதியழகன் தாத்தாவை முறைக்க.. “இப்போ என்ன பத்தாவதோட படிப்பை நிறுத்திடுச்சா? காலேஜ் வரைக்கும படிச்சிட்டுதான படிச்சது போதும்னு நினைக்குது? இதுல என்ன தப்பிருக்கு? படிக்க பிடிக்கலன்னா வேற என்ன பிடிக்கும்னு கேக்குறதை விட்டுட்டு எல்லாருமா சேர்ந்து இப்படியா மல்லுகட்டுவிங்க?” என பேரனோடு சேர்த்து மகளையும் முறைத்தார் பழனியப்பன்.
“தப்பு செய்தவளுக்கு சப்போர்ட் பண்ணாதப்பா.” என தந்தைக்கு எடுத்துரைத்து கிச்சனுள் நுழைந்த காமாட்சி, தற்போதுதான் மதி தாமரை விசயத்தில் அக்கறை காட்ட ஆரம்பித்திருக்கிறான், இன்னும் கொஞ்சநாள் பொறுத்தால் தாமரையை பிடிக்கவும் வாய்ப்பிருக்கு, ஆனால் இவள் படிக்கவில்லையென்றால் உடனடியாக திருமணத்திற்கு பார்ப்பார் என கணவன் பேச்சிலிருந்து புரிய..
இன்னொரு வரணை கொண்டு வந்து நிறுத்தும்முன், தாமரை மீதான தன் கோபத்தை கைவிட்டு, மகளிடம் தன்மையாக பேசி, எப்படியாவது படிக்க அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்தோடு டீ வைக்கலானார்.
பத்து நிமிடத்தில் டியோடு வந்த காமாட்சி தந்தை, மதிக்கு கொடுத்து தாமரைக்கு கொடுக்க, “எனக்கு வேண்டாம்மா.” என்றாள்.
“ம்மா..” என கண்கலங்க, “கிளம்பறதுனா கிளம்புங்கத்தை, இங்க கஷ்டப்பட்டு இருக்க வேணாம்.” என கடுகடுத்தான் மதியழகன்.
“ம்மா.. எனக்கு பாத்ரூம் போகனும், அரை மணிநேரமா இந்த அவஸ்த்தையோட டீ எப்படி குடிக்கிறது?” என இவளும் வெம்பினாள் ஆற்றாமையோடு.
வீட்டினுள் மதியின் அறையில்தான் பாத்ரூம் இருக்கிறது, வெளியேயும் ஒன்று இருக்கிறது, அது தாத்தாவிற்கும் டியூஷன் வரும் மாணவர்களுக்கும் என மஞ்சு சொல்லியிருக்கிறாள்..
ஆனால் வெளியில் இருக்கும் மளிகை கடையில் உள்ளவர்கள் தான் வரும்போதே உறுத்து பார்த்ததால் அவர்கள் முன் அந்த அறைக்குள் செல்லவும் முடியாமல், இங்கே மதி அறைக்குள்ளும் செல்ல முடியாத அவஸ்த்தையிலிருந்தவளுக்கு கோபம்தான் வந்தது.
‘தாமரை.. இதுக்கெல்லாம் அழுவியா? வா நாம அழகுமாமா ரூம்க்கு போகலாம்..” என்றழைத்தாள் மஞ்சு.
‘உனக்கு எதுவும் சொல்ல மாட்டார். நான் அவரோட ரூமை யூஸ் பண்ணிக்கலாமான்னு முதல்ல கேளு..” என்று கண்கலங்கினாள்.
‘கூட்டிட்டு போ மஞ்சு..” என்ற மதியழகன்.. இவங்கப்பா என்னவோ வீட்டுலயிருந்தா தத்தியாகிடுவாங்கிறார், இப்போ மட்டும் என்ன புத்திசாலியா? பாத்ரூம் போகனும்னா அத்தைகிட்டயாவது சொல்லலாமில்ல? இப்படியா உக்கார்ந்திருப்பா? என அதற்கும் கோபப்பட்டான்.
“வா தாமர..” என மஞ்சு தாமரையிடம் வரவும்.. ‘இங்க இருக்கிற ரூமுக்கு நான் போய்க்க மாட்டேனா? நீ போ..” என்று முதன்முதலாய் மதியழகனின் அறைக்குள் நுழைந்தாள் தாமரை.
உள்ளே சென்றதும் தாமரையினுள் இனம்புரியா பரவசம் தோன்ற.. இமைகள் தானாய் படபடக்க, இப்படி உணர்வில் அதிர்ந்தவளாய் அறைக்கதவை சாற்றி தாழிட்டாள்.
பிறகு பாத்ரூம் சென்று வந்து அறையை நோட்டமிட, தேவையான பொருள்கள் மட்டுமே இருந்த மதியழகனின் படுக்கையறை மிக நேர்த்தியாகவும் சுத்தமாகவும் இருந்தது.
வெளியேறலாம் என நினைக்கும் போது அங்கு டேபிள் மேலிருந்த இருந்த டைரி கண்ணில் பட.. தவறென்றாலும் அதை பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் எழ முதல் பக்கத்தை திருப்பினாள்.
அவனின் டியூசன் மாணவர்களின் ஃபீஸ் விபரம்.. அடுத்து வீட்டிற்கு வாங்கிய கடன்.. அதை அடைத்த விதம்.. கையிருப்பு என்று ஒவ்வொரு பக்கமாய் பிரித்து பார்த்தவளுக்கு சலிப்பானது.
அதென்ன அங்க கொஞ்சம் பழைய டைரி போல என நினைத்து அதை எடுக்க, இரண்டு வருடத்திற்கு முந்தைய டைரி அது.
ஆவலோடு முன் பக்கத்தை திருப்ப, மதியின் தாய்தந்தையர் நிறைத்திருந்தனர் அப்பக்கத்தை.
அன்று அன்னையின் இறப்பில் மதி அழுதது நினைவு வர தாமரைக்கு கண்கள் கலங்கியது. கண்களை துடைத்து சுதாரித்து மீதத்தையும் பார்த்துவிடலாம் என்று அடுத்த பக்கத்தை புரட்ட, கவிதை போல இருக்கே, அதெல்லாம் எழுதுவானா? என ஆவலாய் படிக்கலானாள்.
உன்னழகை காட்டுதடி
எண்ணமெனும் தேன்கூட்டில்
இன்பக் கனல் மூட்டுதடி
வான நிலாப்பெண்ணை
வட்டமிட்ட மேகனொன்று
மோன முகத்தினில
முத்தமிட்டுப் போகுதடி‚
துள்ளிவிழும் நீரலையில்
வெள்ளிமலர் பூத்ததடி
வள்ளியுனை எதிர்பார்த்த
மெல்லுடலும் வேர்த்ததடி‚
இல்லத்தில் நீயிருந்தால்
இருள்வர அஞ்சுதடி
மெல்லத் தமிழ் உனது
சொல்லில் வந்து கொஞ்சுதடி‚
கவிதையின் கீழே.. பட்டுக்கோட்டையாரே.. இந்த கவிதையை யாரை நினைச்சி எழுதினிங்களோ எனக்கு தெரியாது.. ஆனா எனக்கே எழுதிவச்ச மாதிரி இருக்கு.. அதிலும் அந்த கடைசி இரு வரிகள், என்னவள் பேசும் அழகை அப்படியே உரித்திருக்கிறது. உங்களுக்கு என் ஆத்மார்த்தமான நன்றி என்று எழுதியிருந்தான்.
என்னவளின் சிறு வயது தமிழ் என மதி மனதில் நினைத்ததை விளக்கமாய் எழுதியிருந்தால் தாமரை அறிந்திருப்பாளோ என்னவோ? இக்கவிதை தனக்கானது என தாமரை உணர வாய்ப்பில்லாமல் போனது.
இவ்ளோ நேரமா பாத்ரூம் போவா? டைரி வேற டேபிள் மேலையே இந்துச்சே.. ஒரு வேளை அதையேது பார்த்திட்டு இருப்பாளோ.? போச்சிடா.. என்று நினைத்து..
‘மஞ்சு.. உங்கக்காவை என்ன இன்னும் காணோம்? போய் என்னன்னு பாரு..” என்றான் மதியழகன்.
‘தாமரை..” என்று மஞ்சு கதவை தட்ட.. ‘இதோ வந்திட்டேன்..” என்று வெளியே வந்த தாமரை.
அது என்ன? துள்ளி வரும் நீரலையில் வெள்ளி மலர் பூத்ததடின்னு.. அந்த லைனுக்கு மட்டும் அண்டர்லைன் பண்ணியிருந்தாங்க.. ஒருவேளை மஞ்சுவோட மிஸ்சை நினைச்சி எழுதியிருப்பாங்களோ? என்று நினைத்தவளுக்கு அவளையறியாமல் மனதை பிசைய.. கண்களும் லேசாய் கலங்கியது.
காமாட்சி.. ‘எதுக்கு தாமரை எப்பப்பார்த்தாலும் அழுதிட்டே இருக்க? உன் நல்லதுக்குத்தான அப்பா அந்த காலேஜ்லயே படிக்க சொல்றார்?” என்றார் வருத்தமாக.