மஞ்சுவின் பேச்சில் மனம் இலகினாலும்.. தாமரை விண்ணப்பத்தை கிழித்த கோபம் இருக்கவே.. ‘நான் என்ன உங்கக்காக்கு வேலைக்காரனா? அவ வாங்கிட்டு வர சொன்னதும் வாங்கிட்டு வரதுக்கு?” என்றான் முறைப்பாக.
“இது வேலைக்காரன் அப்படியில்ல அழகுமாமா, அப்ளிகேஷன் வாங்க உங்களால மட்டும்தான் முடியும். காலேஜ்ல உங்க பவர் என்னனு தாமரைக்கு புரிஞ்சிருக்கு, அதான் உங்ககிட்ட ஹெல்ப் கேக்குறா.. ஆமாதான தாமர?” என்றாள்.
ஆமாம் என்பதாய் தாமரையும் தலையசைத்து ஒப்புகொள்ள, அப்பொழுதும் தாமரை எதிர்பார்க்கும் உதவிக்கு பதிலளிக்காமல்.. “நல்லா பேச கத்துக்கிட்ட வாலு.” என மஞ்சரியை பாராட்டினான்.
பழனியப்பன்.. “இவ்வளோ நேரம் படிக்கலனு ஒருத்தர் மாத்தி ஒருத்தர் வரிசை கட்டிட்டு திட்டுனிங்கள்ல? இப்போ படிக்கிறேங்குதில்ல? காலேஜ்ஜில சேர்த்துவிடு மதி.” என்றார் உரிமையாக.
மதியழகன் முறைக்க.. “நீ மட்டும் சொல்பேச்சு கேக்குறியா என்ன? கல்யாணம் செய்ய இரண்டு வருசமா சொல்லிட்டிருக்கேன்? என் பேச்சுக்கு மதிப்பிருக்கா?” என தானும் முறைத்தார் பேரனை.
கவிதை மீதிருந்த கோபத்தில்.. “நல்லா கேளுங்க தாத்தா.” என தாமரை வாய்விட்டே சொல்லிவிட, முதன் முதலாய் தன் விசயத்தில் தலையிடும் தாமரையை எண்ணி அதிசயித்தவன்.. “ஏன் உன் பேத்தியும் நீயும் பொண்ணு பார்த்து வச்சிருக்கிங்களா?” என இருவரையும் முறைத்தான்.
காமாட்சி முகம் பேரத்திர்ச்சியை காட்ட, “மஞ்சு குட்டி என்ன சொல்லுது? எனக்கொன்னும் விளங்கல.” என்றார் பழனியப்பன்.
“அது வந்து தாத்தா, என்னோட டென்த் மிஸ் ஒருத்தங்க.. அவங்க பேர் நேத்ரா. அவங்களுக்கு அழகு மாமாமேல ஒரு கண்ணு.. பேரண்ட்ஸ் மீட்டிங்க்கு அழகுமாமா வரும்போதெல்லாம் பயங்கரமா சைட் அடிப்பாங்க.” என்றாள் சிரிப்போடு.
“ஏய் மஞ்சு? என்னடி பேச்சிது? வாய மூடு.” என காமாட்சி கோபத்தோடு அதட்ட, “படிக்கிறதை விட்டுட்டு இதைதான் நோட் பண்றியா?” என மதியும் முறைத்தான்.
பழனியப்பன்.. “சின்ன பிள்ளைக்கு என்ன தெரியும் காமாட்சி? பள்ளிகூடத்து நடப்பை நம்மகிட்ட மறைக்காம சொல்லுது. அது மேல கோவிக்காத.” என மகளை சமாதானம் செய்து.. “எத்தனை பேர் மதியை பார்த்தாலும், என்பேரன் யாரையும் தவறா பார்க்கமாட்டான். அப்படி யாரையாவது பிடிச்சிருந்தா இந்நேரம் என்கிட்ட சொல்லியிருப்பான்.” என்றார் நம்பிக்கையோடு.
தந்தை சொல்வது உண்மைதான் என்றாலும், மதியை எவளோ ஒருத்தி பார்ப்பதை சுத்தமாய் ஏற்க முடியவில்லை காமாட்சியால். எனவே.. “இந்த வருசமும் அந்த டீச்சர் உன் க்ளாசுக்கு வருதா?” என்றார்.
மஞ்சரியிடம் இப்படி விசாரணை பிடிக்காமல்.. “இந்த பேச்சை விடுங்கத்தை.” என்றான் மதி.
இவன் விசயத்துல மட்டும் யாரும் தலையிடக்கூடாது, ஆனா என்னை மட்டும் படிக்க மிரட்டுவானா? என்ற கோபத்தோடு.. “ம்மா.. எனக்கு வீட்டுக்கு போகனும்.” என்றாள்.
“இன்னைக்கு மதியத்துக்குள்ள காலேஜ்க்கு போகனும் தாமரை, வீட்டுக்கு போய் என்ன பண்ண?” என்றார் கவலையாக.
“அவங்க ஹெல்ப் பண்ணமாட்டாங்க. இனி அந்த காலேஜ்ல சேர முடியாது. இப்போ வீட்டுக்கு போலாம்.”
“நீ படிப்பை நிறுத்தினா உங்கப்பா திரும்பவும் உனக்கு மாப்பிள்ளை பார்ப்பார்.. கல்யாணம் செய்துக்க ரெடியா இருக்கியா?” என்றார் முறைப்போடு.
“வாய மூடு தாமரை, ஏற்கனவே பட்ட அசிங்கம் போதும்.” என காமாட்சி அதட்ட, “ஏற்கவே என்னாச்சு?” என பழனியப்பன் கேட்க.. அன்று நிச்சயதார்த்தத்தில் நடந்தைதை விளக்கினார் காமாட்சி.
“இவ்வளோ நடந்துச்சா காமாட்சி? மதி எதோ ஜாதகம் சரிவராததால நின்னுடுச்சின்னில்ல சொன்னான்? நான் கவலைப்படக் கூடாதுனு பொய் சொல்லியிருக்கான். எல்லா விசயத்திலயும் இப்படி எனக்காக பார்த்து பார்த்தே அவன் வாழ்க்கையை பத்தி நினைக்காம இருக்கான்.” என்றார் வேதனையாக.
அடுத்து அன்னை இறப்பு பற்றி அத்தையிடம் சொல்லிடுவாரோ என.. “தாத்தா.” என்றான் எச்சரிக்கும் குரலில்.
“என் மககிட்டதான சொல்றேன்? என் பாரத்தை எங்கதான் இறக்கி வைக்க?” என்றார் வேதனையாக.
“இறக்கி வைக்க முடியாதளவுக்கு என்ன பாரத்தை உன் தலையில சுமத்திட்டேன், உன் விருப்பப்படிதான இருக்கேன். கண்டதையும் சொல்லி அத்தையை தேவையில்லாம கஷ்டப்படுத்தாதிங்க.” என்றான் கண்டிப்போடு.
என்று கொலை செய்யும் அளவிற்கு துணிந்தான் என தெரிய வந்ததோ அன்றிலிருந்து.. பொண்டாட்டி, புள்ளை இல்லாத தனிக்கட்டைன்றதாலதானே இஷ்டத்துக்கு யோசிச்சிருக்கான்.
நம்மளை நம்பி ஒருத்தியிருக்கான்ற நினைப்பிருந்தா இப்படி எண்ணம் வராதென, மதியின் திருமணத்தை தீவிரமாய் யோசிக்கலானார் பழனியப்பன். தற்போது அதை கேட்கும் தருணம் வரவே.. “அப்போ இன்னும் மூனே மாசத்துல கல்யாணம் பண்ணிக்கனும்.” என்றார் சலுகையாக.
மதியழகன் முறைக்க.. தற்போதே தாமரையை கேட்டுவிட துடித்தார் பழனியப்பன். ஆனால் மருமகன் இல்லாத நேரத்தில் அது சரியில்லையென்பதாலும், தான் கேட்டு தாமரை முன்பாகவே பேத்தியை பிடிக்கவில்லை என சொல்லிவிட்டால் என்ன செய்வதென்றும் யோசித்து..
முதலில் பேரனிடம் கேட்டு, பிறகு மருமகன் மகளிடம் கேட்பதே சிறந்தது. மதிக்கு விருப்பமென்றால் மருமகன் மறுக்கமாட்டார் என்ற நம்பிக்கையும் வர.. இவர்கள் சென்ற பின்னே மிதியிடம் தனியே கேட்கலாம் என முடிவெடுத்தார்.
“சரி.. சரி முறைக்காத, நீ போனாதான் காலேஜில சேர்த்திப்பாங்கனு காமாட்சி சொல்லுது. முதல்ல அந்த வேலையை பாரு. கல்யாணம் பத்தி அப்புறம் பேசிக்கலாம்.” என்றார் தன்மையாக.
மாமாவும் அத்தனை கெஞ்சியிருக்க, இவளும் படிக்கிறேன் என்ற பின்னே, இந்த ஒருமுறை செய்திடலாம், இப்போவே போன் செய்தாதான் ஆச்சு. இல்ல மதியத்துக்கு மேல கிருஷ்ணன் சார் கிளம்பிடுவார் என.. “அத்தை நீயும் அவளும் போங்க, நான் காலேஜ்க்கு போன் பண்ணி சொல்றேன்.” என்றான்.
“எனக்கு எங்க போய் கேட்கனும்னு கூட தெரியாது மதி. நீயும் ஒரெட்டு வாயேன்.” என்றார் தயக்கத்தோடே.
அச்சோ இவனோட தனியாவா? என தாமரை அதிர்ந்த நேரம்.. “தாத்தா..” என பல்லை கடித்தவாறு மதி முறைக்க, ஓ.. என்னை கூட்டிட்டு போக மாட்டானா? என.. “அவரை கம்பெல் பண்ணாதிங்க தாத்தா. படிக்கலனா போகுது.” என்றாள் ரோசமாக.
மதி தாமரையை முறைக்க.. “தாமரையை ஏண்டா முறைக்கிற? நீ கூட்டிட்டு போக மறுக்கவும்தான் அது படிக்கலங்குது.” என பழனியப்பன் திட்ட..
“இத்தனை நாளா அத்தை சமைச்சிதான் சாப்பிட்டியா?” என முறைத்து.. டேக்ஸிக்கு அழைப்பு விடுத்து, “அத்தை இப்போ டேக்ஸி வந்திடும், நீங்களும் அவளும் அதுல வந்திடுங்க, நான் முன்ன போறேன்.” என்று.. “மஞ்சு தாத்தாவோட இருடா, அரைமணி நேரத்துல வந்துடறேன்.” என கிளம்பினான்.
*** **** ****
ஒரு மணிநேரத்தில் கல்லூரியில் வேலை முடிய, மீண்டும் டேக்ஸிக்கு கால் செய்தான். ஆனால் இம்முறை டேக்ஸி வர தாமதமாகவே, அங்கே மஞ்சுக்கு திரும்ப காய்ச்சல் வந்ததானு தெரியல, அவளுக்கு மதியத்துக்கு சாப்பிட எதுவும் இல்லை என யோசித்தாலும், இவர்களை தனியே விட்டு செல்லவும் மனமில்லாமல் போக, டேக்ஸி வரும்வரை காத்திருக்கலானான்.
கல்லூரியில் அட்மிஷன் போட்டதை கணவனுக்கு சந்தோசத்தோடு சொல்லிக்கொண்ருந்தார் காமாட்சி.
இவனின் தவிப்பை தவறாக புரிந்து கொண்ட தாமரை.. “இவனிற்கு தன்னை கண்டாலே ஆகாதென தெரிந்தும், இவனிடமே உதவி கேட்கும்படி ஆகிற்றே, பேசாம அப்பா சொல்லும்போதே அப்ளை பண்ணியிருக்கலாம் என நினைத்தவளுக்கு கண்கலங்கியது.
கடைசி இருவரிகள் என்னவளுக்காக என மதியழகன் கவிதையை ரசித்திருந்தது, மஞ்சு நேத்ரா டீச்சர் பற்றி கூறியது, விருப்பமேயில்லாமல் தாய் தந்தையர் நிர்பந்தத்திற்காக தனக்கு உதவியது என அனைத்தும் நினைத்தவளுக்கு மேலும் கண்ணீர் அதிகமானது.
‘இது காலேஜ். இவ்வளோ நேரம் என் கூட இருந்திட்டு இப்போ அழுதா பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க? முதல்ல கண்ணை துடை.” என முனுமுனுத்தான் கோபமாக.
‘உங்களை யாராவது தப்பா நினைச்சா, இந்த கருவாச்சியை யாருன்னே எனக்கு தெரியாதுன்னு சொல்லிடுங்க..” என்று அவளும் காட்டமாக சொல்லி, சற்று தூரத்தில் நின்று தந்தையிடம் பேசிக்கொண்டிருந்த அன்னையிடம் சென்றவள்..
“ம்மா, அவரை கிளம்ப சொல்லுங்க, நாம டேக்ஸி வந்ததும் போய்க்கலாம். மூனு வருசமா நான் படிச்ச காலேஜ், இங்க ஒரு பயமும் இல்ல.” என்றாள்.
இவளை யாரு இப்ப கருவாச்சின்னாங்க? இப்படி வேற ஒரு நினைப்போட இருக்காளா.? என யோசித்த நேரம் டேக்ஸி வந்திடவே.. “ம்மா நம்ம வீட்டுக்கு போலாம், மஞ்சுவை அவர் கூட்டிட்டு வந்திடுவார்.” என்றபடி டேக்ஸியில் ஏறினாள்.
“அப்பா நம்மளை எதிர்பார்ப்பார் தாமரை.” என காமாட்சி மறுக்க.. தாமரையின் கண்ணீரை பார்த்தவன்.. “தாத்தாகிட்ட நான் சொல்லிக்கிறேன்த்தை, நீங்க கிளம்புங்க.” என்றான் தன்மையாகவே.