சட்டென நியாபகம் வரவில்லையென்றாலும், அவளின் விழாவின்போது சொன்னோம் என அடுத்த ஐந்தாவது நிமிடம் நியாபகம் வந்திருந்தது மதியழகனிற்கு.
விளையாட்டிற்கு சொன்னதை தவறாய் நினைத்துக்கொண்டு இத்தனை வருடமாக மனதில் வைத்து வருந்தியிருப்பாள் என மதியழகன் நினைத்தே பார்க்கவில்லை.
அவளின் பாட்டி பேச்சை கேட்டு, அவர்கள் இறந்த பின்னும் தன்னை புறக்கணித்ததில் நிறைய கோபம் இருக்கிறது மதிக்கு. ஆனாலும் தன்னால் காயப்பட்டிருக்கிறாள் என்றதும் மனம் தவிக்கத்தான் செய்தது.
நீ நினைக்கும்படி நினைத்து சொல்லவில்லை, உன் அழகில் மயங்கி சொன்னேன் என்று உண்மையை சொல்ல விழைந்த போதும், இனி சொல்லி என்னாகப்போகுதென அமைதியாகி, வழக்கம்போல் என்னை பகைவனாகவே நினைத்துக்கொள், அதுவே உனக்கும் எனக்கும் நல்லது எனத்தோன்ற கோபமில்லாமல் அத்தையை அவளோடு அனுப்பி வைத்தான்.
வீட்டிற்கு வந்ததும் அவனின் அறைக்கு சென்றவன், டைரியை பார்க்க, எதை எங்கு வைத்திருந்தானோ அதே இடத்தில்தான் இருந்தது. படித்துவிட்டு இருந்தபடி வைத்தாளா? இல்லை படிக்கவில்லையா? அவ்வளோ நேரம் ரூம்ல இருந்தாளே? என யோசிக்க, அதற்குமேல் மதியை யோசிக்கவிடாமல்.. “அழகுமாமா பசிக்குது.” என மஞ்சு அவனின் கவனத்தை கலைந்தாள்.
“அரைமணி நேரம் மஞ்சு.” என சமையலறை செல்ல, பின்னோடு வந்த பழனியப்பன்.. “காமாட்சி ஏன் வரல? எதாவது சொன்னியா மதி?” என்றார் கவலையோடு.
“ப்ச்.. அத்தையை என்ன சொல்லபோறேன்? என்னை பார்த்தா எல்லார்கிட்டயும் சண்டை போடறவன் மாதிரியா தெரியுது?” என்றான் சலிப்பாக.
மதி கோபமில்லாமல் கேட்பதே பழனியப்பனிற்கு மேலும் சந்தேகத்தை உண்டாக்க.. “இல்ல.. வரனேனு சொல்லிட்டு ஏன் அங்க போய்டுச்சினுதான் கவலையாகிடுச்சி. காலேஜ்க்கு போனபின்ன தாமரையேது படிக்கலனு திரும்ப ஆரம்பிச்சி, அதனாலயேது பிரச்சனை வந்து திட்டிட்டியோனு சந்தேகமாகிடுச்சி.” என்றார் பாவமாக.
“அப்படியெல்லாம் எதுவுமாகல..” என சமையலில் கவனமானான். பின்னே அனைவரும் உண்டு, மஞ்சுவிற்கு மாத்திரை கொடுத்து மீண்டும் ஓய்வெடுக்க சொல்லி, மாலை ஐந்து மணிபோல் வீட்டிற்கு அழைத்து வந்தான்.
வந்தவன் கண்கள் தாமரையைதான் தேடின. அவளின் அறைக்கதவு திறந்துதான் இருந்தது. ஆனால் வழக்கம்போல் உள்ளிருந்து வரவில்லை தாமரை.
“இரண்டு நாளைக்கு ஸ்கூல்க்கு அனுப்பவேண்ட்டாம்த்தை, நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும்.” என்று காலை, மாலை எந்த மாத்திரை குடிக்கவேண்டுமென விளக்கி.. “நான் கிளம்புறேன்த்த.” என எழுந்தவன்.. யோசனையோடு நிற்க.. இங்கு தண்ணீர் மட்டுமே குடிப்பான் என்பதால்.. “தண்ணி வேணுமா மதி?” என்றார்.
“ம்.. குடுங்கத்தை.” என மீண்டும் அமர்ந்தான்.
தன்னை கண்டால் எப்பொழுதும் வெளியே வராதவள், அன்று தான் பார்க்கும்போது அவளும் பார்த்தது, மஞ்சுக்கு வாங்கிய பூவை நான் எப்படி வைக்க முடியும் என தாத்தாவிடம் சொன்னது, தனதறையில் வெகுநேரம் இருந்தது, இத்தனை நாள் சுமந்து கொண்டிருந்த கருவாச்சி என்ற வார்த்தை என அனைத்தும் நினைத்தபடி அமர்ந்திருந்தவனுக்கு காமாட்சி தண்ணீர் கொடுத்தார்.
வாங்கி பருகியவன்.. “காலேஜ்ல எதுக்கத்தை அழுதாளாம்? என்னனு கேட்டிங்களா?” என்றான்.
இந்த காரணம் உண்மையற்றதாய் தோன்ற.. “ஓ..” என்றவன்.. “இரண்டு நாளைக்கு லேட்நைட் வரைக்கும் முழிக்காத, சீக்கிரம் தூங்கிடு, மாத்திரை சரியா சாப்பிடு.” என்று கிளம்ப எத்தனிக்க.. “அழகு மாமா.. நாளைக்கு வரிங்களா?” என்றாள்.
“இல்லடா, நாளைக்கு காலேஜ்க்கு போகனும். நான் கால் பண்றேன்.” என்று கிளம்பினான்.
** ** ** ** **
இதோ ஏழு மாதங்கள் முடிந்துவிட்டது, மதியழகன் வகுப்பெடுக்கும் வகுப்பறைக்கு நேரெதிரில்தான் தாமரையின் வகுப்பறை. அவளை காணவேண்டுமென்றால் தேடி சென்று பார்க்கவேண்டுமென்றில்லை, ஓய்வு நேரங்களில் வெளியில் நின்றாலே தெரிவாள்.
கல்லூரி ஆரம்பித்ததிலிருந்து தினமும் பார்க்க நேரிடுகிறது, திருமணம் வேணாம் என முடிவெடுத்த பின்னேதான் இப்படிலாம் நடக்கனுமா என நொந்துகொள்வான்.
வீட்டில் முன்புபோல் தாமரையில்லை, அவள் விருப்பப்படி வேறு கல்லூரியில் சேர்த்திருக்கலாமோ என கதிரேசன் வருந்தும் அளவிற்கு அவளின் நடத்தைகள் இருக்க, எப்படி படிக்கிறானு விசாரி மதி. எப்பவும் மார்க் விசயம் அவங்கம்மாகிட்டதான் சொல்லுவா, இப்போ நான் புதுசா கேட்டேன்னா தப்பா நினைப்பா.” என கதிரேசன் கேட்டு கொண்டதற்காக அவளின் வகுப்பிற்கு செல்லும் ஆசிரியர் வருகைக்காக காத்திருந்தான்.
“தாமரை.. ஏன் ரொம்ப டல்லடிக்கிற?” என்றாள் பவித்ரா.
“ப்ச் ஒன்னுமில்ல.” என சலிப்பாய் சொல்ல, தோழிகள் எதோ கேட்பதும், இவள் விருப்பமின்றி பதில் சொல்வதும் தெரிய, இவளுக்கென்னதான் பிரச்சனை? என கடுப்பாக நினைத்தான் மதியழகன்.
மதிப்பெண் பற்றி அவளின் ஆசிரியரிடம் விசாரிக்க, நல்லா படிக்கிற பொண்ணு, இப்போ பி.ஜி வந்ததும் படிக்கிறதில்ல சார்.” என்ற பதில் வர.. செமஸ்டர் தேர்வுகளில் சராசரி மதிப்பெண்களையே வாங்கியிருக்கிறாள் என கதிரேசனுக்கு அழைத்து சொன்னான் மதியழகன்.
“என் மார்க் இன்னும் எனக்கே தெரியாது, உங்களுக்கு யார்ப்பா சொன்னாங்க?” என்றாள்.
“இப்போ இந்த விசாரணை முக்கியமா? ஏன் இப்படி இருக்க?” என்றார் சிறு கோபத்தோடு.
“பிடிக்காத வேலை செய்யும்போது எப்படிப்பா சந்தோசமா இருக்க முடியும்?” என்றாள்.
“படிக்கிறது பிடிக்காதா உனக்கு?”
“படிக்கிறது பிடிக்கும், அந்த காலேஜ் பிடிக்கலனு நான்தான் சொன்னேனே.” என தலைகவிழ்ந்தாள்.
தாமரை விருப்பமின்றி கதிரேசன் செய்த முதல் செயல். அவளின் விருப்பத்தை சொல்லியும் பிடிவாதமாய் அக்கல்லூரியில் சேர்த்ததால் தாமரை அதையே நினைத்து வருந்துகிறாள் என நினைத்திருந்தார் காமாட்சி.
அப்பா உன் நல்லதுக்குத்தான் செய்வார் என எடுத்துரைத்தால், கண்கலங்கியபடி உள்ளே செல்பவளிடம் எத்தனைதான் திட்டுவது? பேசுவது? தானாய் சரியாகிடுவாள் என்ற நம்பிக்கையோடு அதன்பின் தாமரையை ஏதும் கேட்பதில்லை காமாட்சி. ஆனால் மகளிடம் முன்பிருந்த கலகலப்பில்லை என தினம் தினம் வருந்துவார்.
தற்போது மகளிடம் படிப்பு பற்றி பேசவே, தான் திட்டினால் கூட எளிதாய் கடந்திடுவாள். ஆனால் அவளின் அப்பா திட்டினால் நினைத்து நினைத்து மருகுவாள் என்பதால்.. “ஏங்க.. விடுங்க, இப்போ மார்க் கம்மியானா என்னாகிடும்? அடுத்த பரிட்சையில வாங்கிடுவா.” என்றார் காமாட்சி.
“மார்க் கம்மியானது பிரச்சனையில்ல ஆச்சி, படிப்புல கவனம் சிதறுற அளவுக்கு என்னாச்சு? அவளுக்கென்ன கஷ்டம்? நம்மகிட்ட எதையோ மறைக்கிறா, காலேஜ்ல ஃப்ரண்ட்ஸ்கிட்ட கூட சரியா பேசறதில்ல போல, அந்த பவித்ரா பொண்ணு சொன்னுச்சி.” என்றார் வருத்தமாக.
தாமரை அமைதியாக இருக்க.. “பிள்ளைகள் அப்பாம்மாகிட்ட எதையாவது மறைச்சா, ஒன்னு அந்த விசயம் தப்பானதா இருக்கனும், இல்ல அந்த அப்பாம்மா பிள்ளைகளை சரியா புரிஞ்சிக்காதவங்களா இருக்கனும்.
ஆறேழு மாசமா தாமரை முகமே சரியில்ல, காலேஜ் பிடிக்காததுனால இப்படி இருக்கான்றதெல்லாம் சும்மா, வேற எதோ இருக்கு. நம்மகிட்ட மறைக்கிறா.” என கவலைகொண்டார் கதிரேசன்.
தாமரை தலைகவிழ.. “இப்போலாம் ஸ்கூல் பிள்ளைங்களே என்னென்ன தப்பு பண்ணுதுங்க.. வேற காலேஜ் சேர்த்து எதாவது பிரச்சனையாகிடுச்சினா என்ன பண்றதுனுதானே அந்த காலேஜ்லயே படிக்க சொன்னேன்?
உனக்கு பிடிக்கலன்னா அதுக்கு சரியான காரணம் சொல்லியிருக்கனும், அதை விட்டுட்டு வீம்புக்கு அங்க படிக்கமாட்டேன்னா கோபம் வராதா?” என ஆதங்கமாய் கேட்டு,
“சரி போனது போகட்டும். அந்த காலேஜ்ல உனக்கு என்ன பிரச்சனைனு சொல்லு, மதிகிட்ட சொல்லி என்னனு பார்க்க சொல்றேன், உன் உண்மையான சிரிப்பை பார்த்தே பல மாசம் ஆச்சு. இப்படி உன்னை பார்க்க முடியல.” என்றார் தன்மையாக.
“எல்லாத்துக்கும் அவர்தானா? அந்த காலேஜ்ல அவர்தான் எனக்கு பிரச்சனை. அவரை பார்க்க பிடிக்காமத்தான் வேற காலேஜ்ல சேர்த்து விட சொன்னேன்.
குறிப்பிட்ட வயசுக்கப்புறம் நாங்க ரெண்டு பேரும் பேசிக்கிறதேயில்ல, எல்லாம் தெரிஞ்சும் எதுக்குப்பா என் விசயத்துக்கு அவர்கிட்ட ஹெல்ப் கேட்டிங்க? எனக்கு அது சுத்தமா பிடிக்கலப்பா.” என்றாள் கோபமாக.
மகளின் கோபத்தில் பெரிதாய் அதிர்ந்தார் கதிரேசன். தற்போதும் கூட தாமரை சொன்னது மட்டும்தான் பிரச்சனை என்றிருந்தால் கதிரேசனுக்கு இத்தனை அதிர்வாகியிருக்காது,
கோபம் இருக்கும் இடத்தில்தானே பிடித்தம் இருக்கும் என்ற பயம் வரவே அதிர்வானார். மதி விரும்பி தாமரையை கேட்டால் அதைவிட பேரின்பம் இல்லையென சம்மதித்திடுவார் கதிரேசன். ஆனால் மதிக்கு அப்படி எண்ணம் இல்லை எனும்போது மகளுக்கு விருப்பமென்றால் என்ன செய்வது என்ற பயம் வந்தது.
“என்ன சொல்ற தாமர?” என அதிர்வாய் கேட்க.. “ப்ச் போங்கப்பா.. எனக்கு பிடிக்காததை செய்துட்டு இப்போதான்..” என அதற்குமேல் பேச பிடிக்காமல் வெம்பியபடி உள்ளே சென்றாள் தாமரை.
நீண்ட நேர அமைதிக்கு பிறகு.. “ஆச்சி.. தாமரை படிச்சது போதும், அவளுக்கு விருப்பமில்லன்னா வீட்டுல இருக்க சொல்லு.” என்றார் முடிவாக.
“ஏங்க.. பாதியில நிறுத்த சொல்றிங்களா?”
“ஆமாம்.. தாமரைக்கு கல்யாணம் பண்ண போறேன், அதுவும் முடிஞ்சவரை சீக்கிரம் பண்ணப்போறேன்.”
தற்போதுதான் தாமரை பற்றி ஓரிரு வார்த்தை பேச ஆரம்பித்திருக்கிறான். அன்று அவள் ஏன் அழுதாள் என மதி விசாரித்த்தில் பெருத்த சந்தோசம் காமாட்சிக்கு.
மகள் மேற்படிப்பை முடிப்பதற்குள் எப்படியாவது தந்தையிடம் பேசி மதிக்கே மணம் முடிக்க வேண்டும். தாய்தந்தை இல்லாத போதும், இந்த காலத்தில் இத்தனை ஒழுக்கத்தோடும், பொறுப்போடும் எங்கு தேடினாலும் மருமகன் கிடைக்கமாட்டான்.
அதோடு மதி மருமகனானால் மஞ்சுவின் மொத்த பொறுப்பையும் அவன் பார்த்துப்பான். மஞ்சுவை மட்டுமல்ல, ஆண் வாரிசில்லாத எனக்கும் மகனாய் இருப்பான்.
மதி வேறொரு பெண்ணை மணந்தால், தற்போது மஞ்சுவிடம் இருக்கும் இணக்கம் குறைந்திடும், மதிக்கு குறையவில்லையென்றாலும் வருபவளால் இவர்களின் பாசத்தை ஏற்க முடியாது..
இப்படி பலதும் காமாட்சி யோசித்திருக்க, சட்டென கதிரேசன் தாமரைக்கு திருமணம் என்றதும் அதிர்ந்தவர்.. “ஏங்க.. அவ முன்ன செய்தது போதாதா? இன்னும் ஒன்னு இரண்டு வருசம் போகட்டுமே.” என்றார் தவிப்பாக.
“உனக்கு சொன்னா புரியாது, நான் சொன்னதை தாமரைகிட்ட சொல்லிடு.” என்று உறுதியோடு சொல்லி கம்பெனிக்கு கிளம்பினார் கதிரேசன்.
அன்று மாலை கதிரேசன் வருவதற்குள் மகளிடம் பேசிவிடலாமென.. “தாமர.. உங்கப்பா உன்ன சின்னதா திட்டிட்டாலே மனசு கேட்காம கம்பெனியிலயிருந்து வந்திடுவார்.
நீ இப்படி எதோ போல இருக்கிறது உங்கப்பாக்கு எவ்வளோ கஷ்டமா இருக்கு தெரியுமா? அப்பா உன்ன நினைச்சி ரொம்ப வருந்தறார்.
குடும்ப விசயத்துல எந்த உதவியானாலும் மதியை தவிர நம்பிக்கையான ஆள் நமக்கு வேற யாரிருக்கா? மதியை நம்புறதை போல வேற யாரையும் உள்ள விட முடியுமா? இந்த காலத்துல கூட இருக்கிறவங்கதான் துரோகம் பண்றாங்க.
மதியை போல நேர்மையானவனை பார்க்கவே முடியாது. அதனாலதான் குடும்ப விசயத்துல அப்பா மதியைத் தவிர யாரையும் நம்பறதில்ல. மதியாலதான் நமக்கு ஆதாயமே தவிர, நம்மளால மதிக்கு ஒரு பிரியோஜனமும் இல்ல.
மதி மேல இவ்வளோ கோபப்பபடுற அளவுக்கு உன்னை என்ன செய்துட்டான்? உன் பாட்டி சொன்னதுக்காக அவனோட பேசுறதை நீதான் நிறுத்தின. அதனால அவனும் உன்னோட பேசறதில்ல, ஒரே காலேஜ்ல இருந்தாலும் எப்போவாவது உன்னை தொல்லை பண்ணிருக்கானா?
மதி மேல இருக்க கோபத்தை விட்டுட்டு படிக்கிற வழியை பாரு தாமரை. இல்லனா அப்பா உனக்கு மாப்பிள்ளை பார்ப்பார்.” என்றார் மிக மிக பொறுமையாக.
“மாப்பிள்ளை பார்ப்பாராமா?” என கண்கலங்கினாள் வேதனையாக.
“நீ இப்படி இருக்கிறதாலதான் அவர் அப்படி யோசிக்கிறார். நீ பழையமாதிரி இருந்தேன்னா அப்பாவை மாப்பிள்ளை பார்க்க விடாம நான் பார்த்துப்பேன், சந்தோசமா சிரிச்ச முகத்தோட இருந்தா அவரும் உன் படிப்பை மட்டும்தான் யோசிப்பார்.” என்றார் பிணைப்பாக.