ரஞ்சித்தை ஏதும் செய்யமாட்டேன் என தாத்தாவிற்கு வாக்கு கொடுத்தபோதும் மனம் கணன்று கொண்டேதான் இருந்தது.
தன் குடும்பத்தோடு சேர்த்து இன்னும் எத்தனை குடும்பத்தை சீரழித்தானோ? ஆனால் தற்போது அவன் குடும்பத்தோடு சந்தோசத்தோடு இருக்கிறான் என்பதை ஆற்றிக்கொள்ள முடியவில்லை மதியழகனால்.
மகனை கொன்றதற்காக தன்னை பழிதீர்க்க என்றாவது ஒருநாள் அவனாக வம்பிற்கு வந்தால் தக்க பாடம் கற்பிக்க வேண்டுமென அச்சமயத்தை எதிர்பார்த்து காத்திருந்தான். இக்காரணத்திற்காகவே திருமண வாழ்க்கையே வேண்டாம் எனும் முடிவில் இருந்தான்.
ஆனால் அப்படியொரு சமயம்தான் இன்றுவரை வரவில்லை. நிச்சயமாக மித்ரன் சார்தான் கடுமையாக மிரட்டியிருப்பார், இல்லையேல் அவனாவது அடங்குவதாவது என நினைத்துக்கொண்டான்.
ம்.. அவனைபோலவும் ஒரு அதிகாரி, இவரை போலவும் ஒரு அதிகாரி என அவ்வப்போது பெருமையாய் நினைத்துக்கொள்வான் மித்ரன் இன்ஸ்பெக்டரை.
மேலும் ஒரு மாதம் கழிந்திருக்க, மஞ்சுவை காணச் வந்திருந்தான் மதியழகன். இன்று மஞ்சரியின் பிறந்தநாள். வேலைநாள் ஆதலால் பள்ளிக்கு கிளம்பிடுவாள் என காலை ஏழு மணிக்கே வந்தான்.
“மஞ்சு பேபி..” என்ற சந்தோசக்குரலில் உற்சாகத்தோடு வெளியே வந்தாள் மஞ்சரி. “பட்டுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.” என பையை நீட்டி, நெற்றி முத்தம் வைத்து தானும் கன்னத்தில் வாங்கிக்கொண்டான்.
மஞ்சு ஆவலாய் பையை பிரிக்க, வழக்கம்போல் புத்தாடை, பரிசுப்பொருள்கள், சாக்லேட் என அவளுக்கு பிடித்தவைகள் இருந்தது அதனுள்.
“வா மதி.. அஞ்சு மாசம் கழிச்சி இன்னைக்குத்தான் வர வழி தெரிஞ்சதா?” என கோபித்தபடி கிச்சனிலிருந்து வந்தார் காமாட்சி.
“டியூஷன் பிள்ளைங்க ரொம்ப அதிகமாகிட்டாங்கத்தை, எங்கயும் நகர முடியமாட்டுக்குது, இன்னைக்கே காலை டியூஷனை கட் பண்ணிட்டு வந்தேன்.” என்றான்.
மதிக்கு சுத்தமாய் பிடிக்காத தாமரைக்கு மதியின் மீது பிடித்தம் வந்ததோ என்ற சந்தேகம் வந்ததால் கடந்த ஏழு மாதமாக இரவில் பாதுகாப்பிற்கென மதியை அழைக்கவில்லை கதிரேசன்.
இனி தாத்தாவை தனியே விட்டு வருவது கடினம், முடிந்தவரை வெளியூர் செல்வதை குறைத்துக்கொள்ளுங்கள் என முன்பொரு நாள் நான் சொன்னதால் கதிரேசன் தன்னை அழைக்கவில்லை என நினைத்திருந்தான் மதியழகன்.
தலைக்கு குளித்த தாமரை தன் நீண்ட கூந்தலை மாடியில் நின்று உலர வைத்துக்கொண்டிருந்தாள். வரும்போதே அந்தப்புறம் திரும்பி நின்றிருந்தவளின் ஈரக்கூந்தலை பார்த்துவிட்டுதான் உள்ளே வந்தான் மதியழகன்.
தாமரையும் அவளின் பைக் சத்தத்தில் வந்துட்டான் என கண்டுகொண்டாள். ப்ச் முன்னவே உள்ள போயிருக்கலாம் என சலித்தவாறு கீழிறங்கினாள்.
தன்னை கண்டாலே ஓடுபவளுக்கு தன் மீது கோபம் வருவது தாமரையினுள் எதோ மாற்றம் எனப்புரிய, அது உரிமைக்கோபமோ, இல்லை பிடித்தமின்மையால் வந்த கோபமோ, அவளின் மாற்றம் தன் மனத்திடத்தை உடைத்திடும் எனத்தோன்ற, திருமண வாழ்க்கைக்கு தகுதியில்லாத நாம் இனி அவளின் வீட்டிற்கு முடிந்தவரை செல்லக்கூடாதென இங்கு வருவதை மதியும் தவிர்த்திருந்தான்.
இன்று மஞ்சு பிறந்தநாள், வழக்கம்போல் மதிய உணவு வேலையில் பள்ளிக்கு சென்று பார்ப்பதோடு விடமுடியாது, நான் போகவில்லையென்றால் பிறந்தநாளே கொண்டாடமாட்டாள் என மஞ்சுவைப் பற்றி நன்கு தெரிந்தவனாதலால் வேறு வழியின்றி வந்திருந்தான்.
“நான் போய் புது டரெஸ் போட்டுட்டு வரேன்.” என மஞ்சு உள்ளே போக, மாடியில் இருந்து வீட்டினுள் நுழைந்த தாமரை லகான் கட்டியதை போல் தனதறைக்கு சென்றாள்.
அப்பொழுதுதான் தனதறையிலிருந்து வந்த கதிரேசன்.. “வா மதி.. மாமா நல்லாயிருக்காரா?” என்றார்.
“நல்லாயிருக்கார் மாமா.” என்றான்.
வழக்கம்போல் வேலை, நாட்டு நடப்பு பற்றி சற்று நேரம் உரையாடினார்கள். மஞ்சு புத்தாடை அணிந்து வந்து காட்டும்வரை இங்கிருந்தாக வேண்டுமே என கதிரேசனோடு பேசிக்கொண்டிருந்தான்.
பள்ளிக்கும் கிளம்பவேண்டியிருக்கவே பத்து நிமிடத்தில் மதி வாங்கி வந்த ஆடையுடுத்தி வெளியே வந்தாள் மஞ்சரி.
“அழகுமாமா.. பர்ஃபக்ட் ஃபிட்டிங். எனக்கு பிடிச்ச லேவென்டன் கலர்.. எப்படியிருக்கு?” என்றாள் உற்சாகத்தோடு.
“என் மஞ்சுகுட்டிக்கு எதுபோட்டாலும் அழகாத்தான் இருக்கும்.” என கொஞ்சியவன், “ம்.. சரி சரி, கேக் கட் பண்ணு, டைம் ஆச்சு.” என அவசரப்படுத்தினான்.
இளைய மகளுக்கு கேக் மட்டும்தான் கதிரேசன் வாங்குவார், மற்றதனைத்தும் மதிதான் வாங்குவான். வழக்கமாய் தண்ணீர் மட்டும் குடிப்பவன், மஞ்சுவின் பிறந்தநாள் அன்று மட்டும் கேக் உண்பான்.
“தாமர.. ரெடியாகிட்டியா? சீக்கிரம் வா.” என மஞ்சு குரல் கொடுக்க, தான் போகாமலும் கேக் வெட்டமாட்டாள் என்பதால் வெளியே வந்தாள் தாமரை.
இரண்டு மாசம் முன்னதான் தாமரையின் பிறந்தநாள் வந்தது. மதிக்கு நிச்சயம் நியாபகமிருக்கும் என காமாட்சி, கதிரேசன் இருவருக்குமே தெரியும். தாமரையின் பத்து வயதுவரை பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு மதியும் வருவான்.
பெரிய சாக்லேட், மற்றும் பூவோடு வருவான், பூ பைரவன் வாங்கி கொடுத்தனுப்புவார், சாக்லேட் மதியின் சேமிப்பில் வாங்குவான்.
தினக்கூலிக்கு வேலைக்கு செல்லும் பைரவனுக்கும், அழகம்மாளிற்கும் சனிக்கிழமையானால் கூலி கொடுப்பார்கள். கூலி வாங்கும் நாளில் மகனுக்கு ஐந்து ரூபாய் கொடுப்பார் பைரவன். அதுதான் அவ்வாரம் முழுவதுக்கும் மதிக்கான திண்பண்டம் வாங்கும் பணம்.
தாமரைக்கு பிறந்தநாள் வரும் மாதத்தில் தாய்தந்தையர் கொடுக்கும் பணத்தை சேமித்து அதில் தாமரைக்கு பிடித்த சாக்லேட்டை வாங்கிவருவான்.
அனைத்தும் தாமரைக்கு நியாபகம் வந்ததோ இல்லையோ? கதிரேசனிற்கு நியாபகம் வர, தன் பெற்றோர் பிரச்சனை செய்யாமல் இருந்திருந்தால் மதிக்கும் தாமரைக்கும் இடையே இடைவெளியே வந்திருக்காது என வருந்தினார்.
“அப்பா.. இப்போ கூட பிஸ்னஸ் திங்க்கிங்கா?” என கேக்கை நீட்டியபடி மஞ்சு முறைக்க, “இல்லடா இல்லடா..” என வாங்கிக்கொண்டார் கதிரேசன்.
பிறகு அனைவருக்கும் கேக் கொடுத்து பெற்றோர் பாதம் பணிந்து ஆசி வாங்கி, வழக்கம்போல் மதியழகனை அணைத்துக்கொண்டாள்.
“ஈவ்னிங் டியூஷன் முடிச்சிட்டு முடிஞ்சா வரேன்டா.” என்று கிளம்பினான்.
மதி கிளம்பியதும்.. எப்படித்தான் தினமும் காலை மாலை என சமைக்கிறானோ? நமக்கு லீவ்நாள்ல அம்மாக்கு உதவி செய்யவே சலிப்பாயிருக்கு என இது நாள் வரை யோசித்திராதவளுக்கு தற்போது தோன்ற..
தாத்தா இங்கிருந்தால் அவனின் வேலை பளு குறையும் என்றும் தோன்றவே.. “ம்மா.. தாத்தா மாசத்துக்கு ஒருமுறையாவது வந்துபோக சொன்னார், ஆனா நாம போகவேயில்ல, ஒரு பத்து நாளைக்கோ இல்ல ஒரு மாசத்துக்கோ இங்க கூட்டிட்டு வந்து வச்சிக்கலாமா?” என்றாள் அக்கறையாக.
மகளின் அக்கறையில் சந்தோசமடைந்த காமாட்சி.. “தாத்தா மதியை விட்டு வரமாட்டார் தாமர.” என்றார்.
“ஏன் வரமாட்டார்? அதெல்லாம் வருவார், அவர் எங்களுக்கும் தாத்தாதானே? நீங்க போன் செய்யிங்க, நான் கூப்பிடறேன்.” என்றாள் தாமரை.
“தாமரை தாத்தா அங்கையே இருக்கட்டும்.” என அக்காவிடம் சொல்லி, “ம்மா.. தாமரை இப்படி கேட்டதை அழகுமாமாகிட்ட சொல்லிடாதிங்க.” என்றாள் மஞ்சு.
“இதுல உனக்கென்ன பிரச்சனை? பர்த் டே அதுவுமா திட்டு வாங்காத.” என்ற தாமரை முறைத்தாள் மஞ்சு.
தாமரை முகமும் கோபம் காட்ட.. “அறிவிருக்கா உனக்கு? நம்ம வீட்டுலயாவது நாலு பேர் இருக்கோம்.. அழகு மாமாக்கு தாத்தாவை விட்டா யார் இருக்கா? தாத்தா இங்க வந்தா மாமா லோன்லியா ஃபீல் பண்ணுவார். அப்போ அவருக்கு அவங்கப்பாம்மா நியாபகம் வராதா?” என்றாள் கோபமாக.
“சாரி மஞ்சு.. நான் இப்படி யோசிக்கல.” என வருந்தினாள் தாமரை.
“ப்ச் விடு..” என்று பள்ளிக்கு தயாராக தனதறைக்கு சென்றாள்.
நடந்த உரையாடலில் மஞ்சுவின் முகத்தைவிட தாமரையின் முகம் பெரிதாய் வாட்டம் கொண்டதை கவனித்திருந்த கதிரேசனுக்கு மனம் பாரமானது.
** ** ** ** ** **
தரகரிடம் சென்ற மாதமே வரனுக்கு சொல்லியிருந்தார் கதிரேசன். அவர்களும் ஆறேழு வரனை காட்டினர், ஆனால் கதிரேசனுக்கு யாரையும் பிடிக்காமல் போக, வேறு பார்க்க சொல்லியிருந்தார்.
தாமரையும், மஞ்சுவும் கிளம்பிய பின்னே தரகருக்கு அழைத்து.. “என் எதிர்பார்ப்புக்கு உங்களால பார்க்க முடியுமா? இல்ல வேற தரகர்கிட்ட சொல்லவா?” என்றார் சிறு கோபத்தோடு.
“சார் இன்னைக்கு காலைலதான் ஒரு வரன் வந்தது. நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும், எத்தனை மணிக்கு சார் கம்பெனிக்கு வரது?” என்றார்.
“பதினொரு மணிபோல வா.” என இணைப்பை துண்டிக்க.. “ஏங்க.. மாப்பிள்ளை பார்க்குறிங்களா?” என்றார் கவலையோடு.
“ஆமாம்.. மத்த்து சாயங்காலம் பேசிக்கலாம்.” என கிளம்பினார் கதிரேசன்.
தரகர் சொன்னதுபோலவே தற்போது காட்டிய பையனை கதிரேசனுக்கு பிடித்திட, நாளை காலை பெண்பார்க்க வர அனுமதித்து, மாலை வீட்டிற்கு வந்ததும் தாமரையையும் அழைத்து விசயத்தை சொன்னார்.
தாமரை.. “படிக்க சொல்லி காலேஜ் சேர்த்துட்டு இப்போ எதுக்குப்பா கல்யாணம்?” என்றாள் கவலையோடு.
“கல்யாணம் முடிஞ்சாலும் உன் விருப்பம் வரை படிக்கலாம் தாமரை. இந்த குடும்பம் ரொம்ப நல்ல குடும்பம். பையனும் ரொம்ப பொறுமை. ஆளும் நல்லா இருக்கான். போட்டோ பாரு.” என படத்தை நீட்ட..
போட்டோவை வாங்காமல்.. “முன்னல்லாம் என் விருப்பத்துக்கு மாறா சின்ன விசயம் கூட பண்ணமாட்டிங்க.. இப்போல்லாம் ஏன்ப்பா நான் சொல்றதை கேக்கவேமாட்டுக்கிறிங்க?” என்றாள் கண்ணீரோடு.
“அப்படிலாம் இல்லடா, உன்னை கல்யாணம் செய்து கொடுத்துட்டு நான் மட்டும் நிம்மதியாவா இருக்கப்போறேன்? ஆனாலும் பொண்ணுங்களும், பொண்ணை பெத்தவங்களும் இதை சந்திச்சிதான ஆகனும்?
அதுவும் நல்ல பையனா அமையும் போது விடக்கூடாது தாமரை. கல்யாணம்லாம் கடவுள் அனுக்கிரகம்.. அமையும் போது தாமதிக்காம செய்திடனும்.” என்றார் தன்மையாக.
போட்டோவை வாங்கி கடமைக்கு பார்த்தவள்.. “இந்த பையனை எனக்கு பிடிக்கலப்பா.” என்றாள்.
தற்போதுதான் கதிரேசனின் இதயம் இயல்பிற்கு மாறாக வேகமாய் துடிக்க.. “நிஜமா பையனை பார்த்தியா?” என போட்டோவை வாங்கியவர்.. “பையன் என்ன கலர் சர்ட் போட்டிருந்தான்?” என்றார் தீவிர பாவனையோடு.
“ப்ச் ப்பா.. அதெல்லாமா பார்ப்பாங்க? எனக்கு பையன் முகம் பிடிக்கல.. ப்ளீஸ்ப்பா, என்னை இன்னும் இரண்டு வருசத்துக்கு ஃப்ரீயா விடுங்க.” என்றாள் கெஞ்சலாக.
“இரண்டு வருசத்துக்கப்புறம் உனக்கு குருபலன் இல்ல, நீ சின்ன பொண்ணு, உனக்கு இதெல்லாம் புரியாது. அப்பா உன் நல்லதுக்குத்தான் சொல்லுவேன். இந்த பையன் வீட்டுலயிருந்து நாளைக்கு காலைல வருவாங்க.” என்றார் கட்டளைபோல்.
தாமரை அன்னையை யாசகமாய் பார்க்க.. “ஏங்க..” என மகளுக்காக பேச ஆரம்பிக்கும் போதே.. “ஏன் ஆச்சி? தாமரைக்கு பிடிக்காத மாதிரி வரனை நான் பார்ப்பேனா?” என்றார் அமர்த்தலாக.
“கல்யாணமே பிடிக்கலன்னா பையனை எப்படிப்பா பிடிக்கும்?” என அழுதுகொண்டே அறைக்குள் சென்றாள்.
பிடிக்காதவனுக்கு பொண்ணை கட்டி கொடுக்க எனக்கும் பிடிக்கல, இந்த பையன் ரொம்ப நல்லவன், பொறுமையானவன்.. நான் எல்லாம் பக்காவா விசாரிச்சிட்டேன்.
மதியைதான் பிடிச்சிருக்குனு அவளுக்கு புரியும் முன்ன கல்யாணம் செய்யலன்னா, அப்புறம் எப்பவும் கல்யாணம் செய்துக்கமாட்டா. நீ தாமரைக்கு எடுத்து சொல்லு.” என்றார் வேதனையோடு.
கணவன் சொல்வது போல தாமரை விரும்பி மதி ஒப்புகொள்ளவில்லையென்றால் அது இன்னும் வேதனைதான், பொறுமையாக தந்தையிடத்தில் பேசி, பின்னே மதியிடம் பேசலாம் என இரவெல்லாம் யோசித்து.. அடுத்த நாள் காலை.. “தாமரை.. இன்னைக்கொருநாள் சும்மா டீ மட்டும் கொடுத்துடு. படிப்பு முடிஞ்ச பின்ன கல்யாணம் வச்கிக்கலாம்னு எப்படியாவது உங்கப்பாவை சம்மதிக்க வைக்கிறேன்.”
தன்னை திருமணம் செய்துகொள்ள மதியழகன் நிச்சயம் சம்மதிக்கமாட்டான். திருமணத்தை தள்ளி போட இதை விட்டால் வேறு வழியே இல்லை என இவளும் இரவெல்லாம் யேசித்திருந்தாள் என அறியவில்லை காமாட்சி.
மகள் என்ன சொல்கிறாள் என கதிரேசனும் தாமரை அறைக்கு வர.. தந்தையை பார்த்தவாறே.. “எனக்கு உங்க அண்ணன் மகனை பிடிச்சிருக்கும்மா. என் விருப்பத்தை உங்களால நிறைவேத்த முடியுமா? உங்களால முடியலன்னாலும் பரவாயில்ல, தயவுசெய்து உங்க விருப்பத்தை திணிக்காதிங்க.” என்றாள்.
“தாமர..” என கதிரேசன் அதிர்வாக.. “என்னை வேற முடிவு எடுக்க வச்சிடாதிங்கப்பா, அப்புறம் ரொம்ப வேதனையடைவிங்க.” என்றாள் தீர்க்கமாக.