மகளின் விருப்பம் கேட்ட காமாட்சிக்கு பெரும் சந்தோசம்தான்.. ஆனாலும் மதி இதற்கு ஒப்புகொள்வானா என்ற கவலையும் இருக்க, அதோடு மதி வேலை செய்யும் காலேஜ் என்பதால் அங்கு படிக்கமாட்டேன் என அத்தனை ஆர்பாட்டம் செய்தவள், தன் மாமியார் பேச்சை கேட்டு இத்தனை வருடம் பேசாதிருந்ததோடு, மதி வந்தாலும் தனதறைவிட்டு வெளிவராதவள்.. சட்டென இப்படி சொன்னது பெரும் வியப்பையும் பயத்தையும் கொடுத்தது.
தாமரை பதில் சொல்லும் முன்.. “என்ன ஆச்சி பேசுற? நீயா போய் என் பொண்ணை கட்டிக்கோனு கேக்கப்போறியா?” என்றார் கோபமாக.
காமாட்சி கலக்கமாக பார்க்க.. “தாமரை புரியாத பேசறான்னா நீ எடுத்து சொல்றதை விட்டுட்டு, அவளோட சேர்ந்து உளறிட்டிருக்க.” என கண்டித்து, “மதிக்கும் உனக்கும் ஆகாதுதான? இப்போ என்ன புதுசா? கல்யாணத்தை தள்ளி போட புது ப்ளான் கண்டுபிடிச்சிருக்கியா?” என முறைத்தார் கதிரேசன்.
“அப்பா..” என தாமரை கண்கலங்கினாள்.
உண்மையில் மதி தன்னை திருமணம் செய்ய சம்மதிக்கமாட்டான், திருமணத்தை தள்ளி போட இதைத் தவிர்த்து வேறு வழியில்லை என்றுதான் நேற்றிரவெல்லாம் யோசித்தாள்.
ஆனால் மதியை பிடித்திருக்கிறது என்று சொல்லும்போது மனதும் இனித்ததை அந்த நேரம்தான் உணர்ந்தாள். உணர்ந்தும் சந்தோசமாகவில்லை, தன்னை சுத்தமாய் பிடிக்காதவனை தமக்கு பிடித்திருக்கிறதே என்ற வேதனையே மனதை வலிக்கவும் செய்தது. அதனாலேயே மனதை வெளிப்படுத்தும் போது கண்ணீர் நிற்காமல் கொட்டியது.
மகள் அழுவதை சகிக்க முடியாமலும், மதியை மருமகனாக்கிக்கொள்ள இதைவிட சிறந்த தருணம் வராதென்ற நினைப்போடும் அவ்விடம் விட்டு தனதறை வந்த காமாட்சி மதிக்கு அழைத்தார்.
சமையல் செய்து கொண்டிருந்தவன்.. “ப்ச்..” என சலித்தவாறு மொபைலை எடுத்தவன், “அத்தையா?” என முனுமுனுத்தவாறு அழைப்பை ஏற்க.. “மதி.. அப்பாகிட்ட கொடு.” என்றார்.
“இதோ கொடுக்கறேன்.” என தாத்தாவிடம் கொடுத்தவன்.. “அத்தை பேசனுமாம்.” என்றான்.
“காமாட்சி..” என்ற பாசக்குரலில் கரைந்தவர்.. “அப்பா மதியை கூட்டிட்டு உடனே வீட்டுக்கு வாங்க.” என்றார்.
காமாட்சியின் மாமனார் மாமியார் இறப்பிற்கு பிறகு இவர்கள் வீட்டிற்கு வர மதியழகனும் அனுமதித்ததில்லை, சம்மந்தியின் குணமறிந்து பழனியப்பனும் பேரன் பேச்சினை மீறியதில்லை.
அனைத்தும் அறிந்திருக்கும் மகள் இத்தனை வருடம் கழித்து மகள் அழைக்கிறாள் என்றால் என்னவாய் இருக்கும் என்ற யோசனையோடு.. “நானா? எதுக்கும்மா? என்ன விசயம்?” என்றார் பதட்டமாக.
“ஏன்ப்பா.? எனக்கெதாவது ஒன்னுனா கூட மதியை கேட்டுட்டுத்தான் வருவிங்களா?” என்றார் கோபமாக.
“வாய கழுவு காமாட்சி, என் மகனையும் மருமகளையும் வாரி கொடுத்த வேதனை பத்தாதா?” என்றார் கோபமாக.
தந்தையின் கோபத்தில் தன் கோபம் குறைத்து.. “அப்போ உடனே கிளம்பி வாங்க.” என்க.. “சரி வரேன்.” என்றதும், மதியிடம் பேசினால் ஏதேனும் சாக்குபோக்கு சொல்லி தந்தையை அழைத்து வரமாட்டான் என இணைப்பை துண்டித்திருந்தார்.
ஆனால் உடனே மதியிடமிருந்து அழைப்பு வரவும்.. “என் மகளைப் பத்தின முக்கிய முடிவெடுக்கனும்.. அப்பாவை கூட்டிட்டு வா மதி.” என்றவர், மதி பேசுவதற்கு வாய்ப்பளிக்காமல் இணைப்பை துண்டித்தார்.
மதியழகன்.. “தாத்தா.. உன் பேத்தி நம்பருக்கு போன் பண்றேன். என்ன விசயம்னு கேளு. இப்போ அங்க போனா, திரும்ப உன்னை கூட்டிட்டு வந்து வீட்டுல விட்டுட்டு காலேஜ்க்கு போக நேரமாகிடும்.” என்றான்.
“வேணாம்ய்யா, ஒரெட்டு போய்ட்டே வந்துடலாம், காமாட்சி என்னைக்கும் இப்படி பேசினதில்ல.” என்றார் கவலையாக.
“சரி வா.” என்க.. “இருய்யா, துணி மாத்திட்டு வரேன்.” என பழைய வேஷ்டி சர்ட், களைந்து சென்ற தீபாவளிக்கு வாங்கி உடுத்தாமல் வைத்திருந்த கரையிட்ட வேஷ்டியை உடுத்தி வர.. “அங்க பிரச்சனைனு கவலைபட்டுட்டு வருவனு பார்த்தா, என்னவோ ஜம்முனு கிளம்பிட்ட.?” என்றான் ரசனையாக.
மகளைப் பற்றிய முக்கிய முடிவெடுக்கனும் என காமாட்சி சொன்னதாய் மதி சொல்லவும், மாப்பிள்ளை பார்க்கும் விசயமாகத்தான் இருக்கும், முன்புபோல் பேத்தி திருமணத்திற்கு மறுத்திருப்பாளாய் இருக்கும் என உறுதியாய் நம்பிய பழனியப்பன், இம்முறை வாய்ப்பு கிட்டினால் பேத்தியை பேரனுக்கு கேட்டிடலாம் என்ற உற்சாகத்தோடு கிளம்பினார்.
“கவலையோ? சந்தோசமோ? மகள் வீட்டுக்கு போகும் போது பதவிசா போனாதான என்னை கண்ணுக்குள்ள வச்சி தாங்குற பேரனுக்கு மரியாதையா இருக்கும்? அதான் புதுசு போட்டுட்டு வந்தேன்.” என்று சந்தோசத்தோடு கிளம்பினார் மதியோடு.
தாத்தா வந்திருக்கிறார், வா என்று அழைக்கவில்லை என மதிக்கு கோபம் வர.. “அவ்வளோ அவசரமா எதுக்கத்தை தாத்தாவை கூட்டிட்டு வர சொன்னிங்க? எனக்கு காலேஜ்க்கு போகனும்னு தெரியும்தானே?” என்றான் சிடுசிடுப்பாக.
“ஒரு நாள் காலேஜ்க்கு போகலைன்னா ஒன்னும் ஆகாது.” என உரிமையாய் கடிந்து.. “வாப்பா..” என்று காமாட்சி சொல்லவும் பிறகுதான் தன் தவறுணர்ந்து.. “வாங்க மாமா.. வா மதி.” என வரவேற்றார் கதிரேசன்.
“பேத்திங்களை எங்கம்மா காணோம்?” என விசாரித்தபடி சோபாவில் அமர, “மஞ்சு எப்பவும் நைட் படிச்சிட்டு லேட்டாதான் எழுவா. குளிச்சி யுனிஃபார்ம் போட்டு எட்டு மணிக்கு சாப்பிட வருவா. தாமரை உள்ள இருக்கா.” என்றார் காமாட்சி.
கதிரேசன் முகம் இறுகியிருக்க.. இனி தாமதித்தால் வீட்டிற்கு வந்த தாத்தாவிடம் சரியாக பேசவில்லையென மதி தன் கணவனை தவறாக நினைப்பான் என.. மாப்பிள்ளை பார்க்கும் விசயத்தையும், தாமரை அதற்கு மறுப்பு சொன்னதையும் கவலையோடு சொன்னார் காமாட்சி. “பேத்திதான் படிக்கிறேன்னுதே.. அப்புறம் ஏன்ம்மா அவசரப்படுறிங்க?” என்றார் பழனியப்பன்.
“நல்ல இடமா அமையும்போதே செய்தாதானப்பா?” என காமாட்சி கேட்க, கல்யாணம் செய்து வைக்க ப்ளான் இருந்தா அப்புறம் எதுக்கு பி.ஜி சேர்த்த பாடாபட்டாங்க? என நினைத்த மதியின் முகம் இறுகியது.
இவன் அழகானவன், அறிவானவன்தான், அதற்காக பிடிக்காதவனுக்கு மகளை கட்டிக்கொடுக்க நினைப்பதும், அதுவும் காமாட்சியே முன்வந்து மதியை மாப்பிள்ளை கேட்க நினைப்பதும், மதியின் இறுகிய முகம் கண்ட கதிரேசனுக்கு பெருத்த அவமானமாய் தோன்ற..
“மஞ்சுக்குன்னா எதுன்னாலும் செய்வான், தாமரை விசயத்துக்கு எதுக்கு ஆச்சி இவங்களுக்கு சிரமம் கொடுத்த?” என மனைவியை முறைத்தார் கதிரேசன்.
மதி.. “வாட்ச்மேன் வேலைலயிருந்து காலேஜ்ல சீட் வாங்கி தர வரைக்கும் நீங்க கேட்டு உங்க பெரிய பொண்ணுக்கு என்ன செய்யாத விட்டுட்டேன் மாமா.?” என்றான்.
இதற்கு என்ன பதில் சொல்வார் கதிரேசன். தாமரையிடம் பேசுவதில்லையே தவிர, தான் கேட்டு எந்த உதவியையும் மதியழகன் மறுத்ததில்லையே என தலைகுனிந்தார் கதிரேசன்.
கதிரேசன் முகம் வாடி தலைகுனிவதும் மதிக்கு பிடிக்காமல் போகவே.. “இப்போ என்னாச்சு? நான் என்ன பண்ணனும்? அவளை வேற காலேஜ்ல சேர்த்தனுமா? நான் சீட் வாங்கி கொடுத்ததால இனி அங்க படிக்க மாட்டாளாமா?” என்றான் தன்மையாகவே.
கதிரேசன் முகம் இன்னமும் வேதனையை காண்பிக்கவே, முடிந்த பரிட்சையிம் மதிப்பெண் குறைந்ததால் மாமா கண்டித்திருப்பார் போல, அதற்கு எதோ பெரிய பிரச்சனை செய்திருக்கிறாள் என நினைத்து.. “அவளுக்கு இங்க படிக்க விருப்பமில்லன்னா நெக்ஸ்ட் இயர் வேற காலேஜ்ல சேர்த்து விட்டுடலாம் மாமா. வருசம் வீணாகுதேனு யோசிச்சா கரஸ்ல படிக்க சொல்லுங்க.” என்றான் மீண்டும் பொறுமையாக.
“இப்போ படிப்பு ஒரு விசயமேயில்ல, அவ கல்யாணம் செய்துக்கிறாளாம், ஆனா அதுக்கு நீ ஒத்துக்குவியான்றதுதான் பிரச்சனையே.” என ஆதங்கமாய் விசயத்தை உடைத்தார் காமாட்சி.
“என்ன சொல்றிங்க? அவ கல்யாணத்துக்கு நான் எதுக்கு ஒத்துக்கனும்? நான் சேர்த்துவிட்ட காலேஜே பிடிக்கிலன்றவளுக்கு என்னை பிடிக்குதாம்மா?” என மதி அதிர்வோடு கேட்க,
“என்னம்மா சொல்ற? தாமரைக்கு மதியை கேக்குறியா? நேரா விசயத்துக்கு வாம்மா, எனக்கு தெளிவா விளங்கல.” என சந்தோசத்தோடு இடை புகுந்தார் பழனியப்பன்.
“ நல்ல இடமா அமையும்போதே மகளுக்கு கல்யாணம் முடிச்சிடலாம்னு உங்க மாப்பிள்ளை தவியா தவிக்கிறார், ஆனா கட்டினா மதியைத்தான் கட்டிக்குவேன்னு என் மக சொன்னதை எப்படி சொல்லனு தெரியாமத்தான இப்படி சுத்தி வளைச்சிட்டிருக்கேன்?
பொண்ணு கேட்க வேண்டியவங்க அமைதியா இருக்கும்போது நானும் என்னதான் செய்யட்டும்? எங்கண்ணன் இருந்திருந்தா என் நிலைமை இந்தளவுக்கு ஆகியிருக்குமா?” என்றார் ஆற்றாமையோடும் கண்ணீரோடும்.
“எனக்கு பொய் சொல்லி பழக்கமில்ல.. உள்ளதான் இருக்கா, இருங்க கூட்டிட்டு வரேன். இரண்டு பேரும் விசாரிங்க..” என மகளறைக்கு காமாட்சி செல்ல எத்தனிக்க..
“வேணாம்த்தை.. நானே கேட்டுக்குறேன்.” என மதி தாமரை அறைக்கு செல்ல எத்தனிக்க, பக்கத்து அறையிலிருந்து மஞ்சு வெளியே வந்தாள்.
“அழகுமாமா.. என்ன ஆச்சர்யம்? இன்னைக்கு காலேஜ் போகலையா? ஐய்ய்ய்… தாத்தாவும் வந்திருக்கார்.. என்ன அதிசயம்.?” என சந்தோசித்தவள் பழனியப்பனிடம் செல்ல.. இன்னும் பத்து நிமிடத்தில் மஞ்சுவிற்கு ஆட்டோ வந்துவிடும், அவள் சென்ற பின்னே விசாரிக்கலாமென மீண்டும் சோபாவில் வந்தமார்ந்தான் மதியழகன்.
“மதி..” என காமாட்சி அழைக்கவும், “மஞ்சு கிளம்பட்டும்த்தை. முதல்ல அவளை பாருங்க, லேட் ஆகிடப்போகுது.” என்றான்.
“காமாட்சிம்மா, மஞ்சு குட்டி இருக்கானுதான் மதி அப்படி சொல்றான்.” என பழனியப்பன் சிரிக்க.. “என்கிட்ட என்ன மறைக்கிறிங்க தாத்தா?” என மஞ்சு முகம் சுருக்க..
“உன் அழகு மாமனுக்கு கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்டாம்மா, அதுபத்தி பேசத்தான் வந்தேன், உன் மாமன் வெக்கப்பட்டுகிட்டு நீ போன பின்ன பேசலாம்ன்றான்.” என்றார் சிரிப்போடு.
“அழகு மாமாக்கு கல்யாணமா? சூப்பர் நியூஸ்.. பொண்ணு பார்த்தாச்சா தாத்தா? எங்க காட்டுங்க.. நான் பார்க்கனும்.” என அதீத ஆர்வத்தோடு மஞ்சு நச்சரிக்க..
மதியழகன் பழனியப்பனை முறைக்க.. மதியை பார்த்தவாறே.. “உன் மாமனை தங்கமான பொண்ணுக்கு கேக்குறாங்க, போட்டாலாம் என்கிட்ட இல்ல, நீ பள்ளிகூடத்துக்கு போய்ட்டு வா, அதுக்குள்ள மதிகிட்ட சொல்லி போட்டா வாங்கி வைக்கிறேன்.” என்றார் கள்ள சிரிப்போடு.
“போட்டோ இல்லையா?” என வருந்தியவள்.. “அழகுமாமா, இன்னைக்கு லன்ச் நீங்கதான் கொண்டு வரனும், அதுவும் என் அத்தையோட போட்டோவோட வந்தாதான் நான் சாப்பிடுவேன்.” என கட்டளையிட்டு உணவுண்டு கிளம்பினாள் உற்சாகத்தோடு.
மஞ்சு சென்றதும் தாமரை அறைக் கதவை தட்டினான் மதியழகன். தாழிடாமல்தான் இருந்தது. ஆனால் பத்து நிமிடங்களாக வெளியே பேசுவதை கேட்டிருந்த தாமரைக்கு, கதவை தட்டுவது மதியென தெரிந்திருக்க, என்ன சொல்வதென தெரியாமல் அமைதிகாத்தாள் அதீத பதட்டத்தோடு.
காமாட்சி.. “கதவு திறந்துதான் இருக்கும் மதி.” என்றவாறு வந்த காமாட்சி மகளின் அறைக்கதவை திறந்து உள்ளே சென்று.. “கதவை தட்டினா வாய திறக்குறதுக்கென்ன?” என மகளை கடிந்து “பேசிட்டு வா மதி.” என வெளியேறினார்.
“வெளில வா தாமரை.” என்றான்.
பதிலில்லாமல் போகவே.. “உன்கிட்ட பேச பயப்படுறாளோ என்னவோ? ஆனா எங்ககிட்ட சொன்னது உண்மை மதி. உனக்கு நம்பிக்கையில்லன்னா உன் மாமாவை கேட்டுப்பாரு.” என்றார் காமாட்சி.
தற்போதும் தாமரை தன்னை விரும்புவாள் என்றெல்லாம் நினைக்கவில்லை, திருமணத்தை தள்ளி போட எதோ உளறியிருக்கிறாள் என நினைத்தவன்.. என்னை சாகடிக்கன்னே பிறந்திருப்பா போல என்ற கடுப்போடு.. அறை வாசலில் நின்றபடி தலைகுனிந்திருந்தபடி கட்டிலில் அமர்ந்திருந்தவளை பார்த்தவன்.. “அத்தை மாமாகிட்ட என்ன சொன்ன?” என்றான்.