கதவை நன்றாக திறந்துவிட்டு, அவளருகே வந்தவன்.. “உன் விருப்பம் என்னனு என்னைப் பார்த்து சொல்லு.” என்றான் அழுத்தமாக.
பெரிதாய் அதிர்ந்தவளுக்கு பேச்சு வரவில்லை, எத்தனை பெரிய வார்த்தையை விட்டுவிட்டு அமுக்கமாய் அமர்ந்திருக்கிறாள் என மதிக்கு கோபம் வர.. “முதல்ல என்னை பாரு தாமரை.” என்றான் கர்ஜனையாக.
சொல்லும்போது தாமரைக்கு கண்ணீர் கன்னத்தை தொட்டிருக்க அதை துடைத்தவாறு எழுந்தவள் கட்டிலின் அந்தபுறம் போய் நின்றாள்.
“என்னை கண்டாலே உனக்கு பிடிக்காதுனு எனக்கு நல்லா தெரியும். இது விளையாட்டில்ல தாமரை.. கல்யாணம் வேணாம்னா அந்த பையனை பிடிக்கல, வேற பார்க்கலாம்னு சொல்லனும்.. அதை விட்டுட்டு கண்டதையும் உளறக்கூடாது.” என்றான் மிரட்டலாக.
கதவு திறந்திருக்க, இவர்கள் பேசியதை பார்த்திருந்த கதிரேசனுக்கு, இதற்கு மேல் மகள் என்ன சொல்வாள் என்ற கோபம் வரவே.. “அவ விருப்பத்தை சொல்லிட்டா, பிடிக்கலனா கிளம்பி போங்க. அதைவிட்டுட்டு உபதேசம் பண்ண வேண்டாம், என் பொண்ணுக்கு எடுத்து சொல்ல நானிருக்கேன்.” என்றார் கோபமாக.
கதிரேசன் பேச்சில் வெளியே வந்தவன்.. “அவதான் உளறிட்டிருக்கான்னா நீங்களும் ஏன் மாமா?” என்றான் வேதனையாக.
ஆமாம்.. தாமரையின் பேச்சில் மதியழகனிற்கு பெரும் வேதனைதான்.. ரஞ்சித் மகன் அபிஷேக்கை கொல்லாமல் இருந்திருந்தால், விரும்புகிறேன் என தாமரை பொய்யாய் சொல்லியிருந்தாலும் உடனே திருமணத்தைப் பற்றித்தான் யோசித்திருப்பான்.
ஆனால் தற்போது அப்படியில்லையே.. அந்த ரஞ்சித் என்ன செய்ய காத்திருக்கிறானோ? அவனை நேரில் காணும்போது தன் செயல் எப்படி இருக்குமோ என்ற நெருடல் இருக்க, திருமண வாழ்வில் நுழைய மொத்தமாய் வெறுத்தது மனம்.
இந்த நிலையில் விருப்பம் சொல்கிறாளே என வேதனையாக உணர்ந்தனுக்கு, கதிரேசனின் கோபம் இன்னும் வேதனையடையச் செய்தது.
கதிரேசன்.. “விருப்பம் சொல்லியும் ஏற்க முடியாத அளவுக்கு என்ன குறைஞ்சிட்டா என் மக?” என்றார் ஆற்றாமையோடு.
“அது அப்படியில்ல மாமா.” என மதியழகன் மறுக்க.. பழனியப்பன்.. “மாப்பிள்ளை சொல்றது சரிதான மதி? வயசு பிள்ள விருப்பம் சொல்லியிருக்கு, என் பேத்திகிட்ட என்ன குறையிருக்குனு இன்னும் யோசிக்கற?” என்றார் வேண்டுதலாக.
“குறை அவகிட்ட இல்ல தாத்தா.. என்கிட்ட இருக்கு, நீங்கள்லாம் நினைக்கிற அளவுக்கு நான் நல்லவன் இல்ல, கொலைகாரன். இந்த கையால ஒருத்தனை கொலை செய்திருக்கேன், சட்டத்து கையில எப்போ சிக்குவனோ தெரியாது. தாமரைக்கு நான் வேண்டாம் தாத்தா. என்னை விட நல்லவன் கிடைப்பான்.” என்றான் வேதனையோடு.
கதிரேசன்.. “நீ கொலைகாரனா? அதை நான் நம்பனும். இது எல்லாத்தையும் விட சூப்பர். நீ இப்படி இருப்பேனு நான் நினைக்கவேயில்ல மதி. என் பொண்ணை மறுக்கிறதுக்கு இந்தளவுக்கு இறங்குவியா?
நீ இவ்வளோ மெனக்கெட வேணாம் மதி. என் பொண்ணுக்கு என்ன தலையில எழுதியிருக்கோ அதுப்படி நடக்கட்டும்.” என்றார் மிகுந்த வேதனையோடு.
“அச்சோ மாமா.. நான் உண்மையைதான் சொல்றேன்.” என மதி ஆரம்பிக்க.. “என்னடா பெரிய உண்மையை.? கொலை பண்ண கிளம்பினவனைத்தான் அந்த இன்ஸ்பெக்டர் தடுத்திட்டாரே.?
இனி எந்த தப்பும் செய்ய மாட்டேனு எனக்கு சத்தியம் செய்து, இரண்டு வருசம் கழிச்சி கல்யாணம் செய்துக்கிறேனு சொன்னதெல்லாம் பொய்யா?” என பழனியப்பனும் வாதிட, செய்வதறியாது மதியழகன் தலைமீது கைவைத்து அமர.. வெளியே வந்தாள் தாமரை.
“பேசினதெல்லாம் கேட்டியா? இந்த அவமானம் எனக்கு தேவையா? உனக்கு என்னடா குறை?” என கதிரேசன் கண்கலங்க.. தந்தையின் வேதனையை சகிக்க முடியாமல்.. “அப்பா..” என தந்தையருகே வந்தாள் தவிப்போடு.
எத்தனை பிரச்சனையை இழுத்து வச்சிருக்கா என மதியழகன் தாமரையை முறைக்க.. “பேத்தியை ஏண்டா முறைக்கிற?” என பழனியப்பன் கோபப்பட..
தாத்தாவின் கோபமெல்லாம் மதிக்கு கவலையில்லை, ஆனால் மகள் தானாய் விருப்பம் சொல்லியும் திருமணத்திற்கு நான் தடை போடுவதாய் நினைப்பதும், அதிலும் நான் தாமரையை பிடிக்காமல் மறுப்பது போலவும், தாமரையை கீழாக பார்ப்பதாகவும் கதிரேசன் தன்னை நினைப்பதும் மதிக்கு மிகுந்த வருத்ததை கொடுக்கவே அங்கே இருக்க முடியாமல்…
“எனக்கு காலேஜ்க்கு டைம் ஆச்சு, நீ இங்கையே இரு தாத்தா, சாயங்காலம் வந்து கூட்டிட்டு போறேன்.” என கிளம்பினான் கல்லூரிக்கு.
ஐந்து நிமிடம் பெருத்த அமைதி நிலவ.. “அவருக்கு விருப்பமில்லன்னா விடுங்கப்பா. நான் படிக்கிறேன்.” என்றாள் தெளிவான மனதோடு.
சற்று முன்தான் மதியழகன் எழுதிய டைரி நியாபகம் வர.. அதனாலே வெளியே வந்தாள் தாமரை.
“நீ ஒரு முயற்சியும் பண்ண வேணாம்டாம்மா, மதி உன்னை கட்டிக்குவான். இப்போ கொஞ்சம் குழப்பத்தில இருக்கான், அவன் ஒரு தப்பும் பண்ணலனு நான் அவனுக்கு புரிய வைக்கிறேன்.” என்றார் பழனியப்பன்.
“அவர் கொலை செய்திருப்பாருனெல்லாம் எனக்கும் நம்பிக்கையில்ல தாத்தா. ஆனா அவர் மனசுல வேறொருத்தி இருக்கும்போது என்னை கல்யாணம் செய்துக்கிறது கஷ்டம்தானே தாத்தா.?” என்றாள் வாடிய முகத்தோடு.
“இல்ல தாத்தா அவர் ஒரு பொண்ணை விரும்பறார். அதை யோசிக்காம இப்படி சொல்லிட்டேன், என்னை மன்னிச்சிடுங்க.” என தனதறைக்குள் தஞ்சம் புகுந்தாள்.
மதியம் போல் மதி பழனியப்பனிற்கு அழைத்து.. “சாப்பிட்டியா தாத்தா?” என்றான்.
தாமரை கல்லூரிக்கு வராததால் இன்னும் என்ன உளறி வைத்திருக்கிறாளோ என அறியவே தாத்தாவிற்கு அழைத்தான்.
“காமாட்சி சாப்பிட சொன்னுச்சி, எனக்கு பசிக்கல மதி.” என்று தாமரை சொன்னதையும் சொல்லி, “இந்த கிறுக்குபுள்ளைக்கு நிதானம்ன்றதே கிடையாது போல, முன்ன கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு நிச்சயத்தன்னைக்கு பையனை பிடிக்கலனுடுச்சி, இப்போ உன்னை பிடிக்கும்னு சொல்லிட்டு, கல்யாணம் வேணாம்னுது. ஏன்னு கேட்டா நீ யாரையோ விருமபுறியாம், அதை மறந்துட்டு அப்படி சொல்லிட்டேனு பிணாத்துது.” என்றார் இலகுவாக.
இது வேறையா என சலிப்பாய் நினைத்தவன்.. “சாப்பிடு தாத்தா, சாயங்காலம் வரேன், இன்னொரு முறை தாமரைகிட்ட பேசிட்டு சொல்றேன்..” என்று இணைப்பை துண்டித்தான்.
மாலை நாலரை மணிபோல் தாமரையின் வீட்டிற்கு கிளம்பினான். மஞ்சு பள்ளியிலிருந்து ஆறு மணிக்கு வருவாள் என்பதால் அவள் வரும் முன் தாமரையிடம் பேசிட வேண்டுமென யோசனையோடே வீட்டை வந்தடைந்தான்.
என்ன சொல்வேனோ என அனைவரும் மதியை ஆர்வமாய் பார்க்க, அந்த சூழல் மதிக்கு மேலும் சங்கடத்தை உண்டாக்கியது.
“மாமா.. நான் தாமரைகிட்ட கொஞ்சம் தனியா பேசனும்.” என்றான்.
இன்றெல்லாம் யோசித்தும் கூட மகளை மணக்க விருப்பமென சொல்லாமல் ஆலோசிக்க நினைக்கிறான், தாமரை சொன்னது போல வேறு யாரையாவது விரும்புகிறானா? அதை சொல்லி மகளை கன்வின்ஸ் செய்வானா? அதற்குதான் தாமரையிடம் பேச நினைக்கிறானா? என பலதும் ஓட அமைதியாகவே இருந்தார் கதிரேசன்.
“மாமா..” என மதியழகன் மீண்டும் தன் விருப்பத்தை சொல்ல.. “அழகுமாமா..” என்ற உற்சாக குரலோடு உள்ளே வந்தாள் மஞ்சரி.
“ஸ்பெஷல் க்ளாஸ் இல்லையா மஞ்சு?” என்றான்.
“இருக்கு மாமா.. இங்லீஸ்தான். அது அட்டன்பண்ணலனாலும் மேனேஜ் பண்ணிடலாம், ஆனா என் வருங்கால அத்தை போட்டோ பார்க்காம இதுக்கு மேல இருக்க முடியாதுனு, தலைவலினு பொய் சொல்லி க்ளாசை கட்டடிச்சிட்டு வந்துட்டேன்.” என்றாள் மலர்ச்சியோடு.
“அவளே உன்னை தொல்லை பண்ண வேணாம்னுட்டா, இனி என்ன பேசப்போற? என் பொண்ணை நானே சமாதனப்படுத்திக்கிறேன். தொந்தரவுக்கு மன்னிச்சிடு மதி.” என்றார் கமறிய குரலில்.
“ப்ச் என்ன மாமா உளறுறிங்க?” என அதட்டி, கோபமாய் தாமரையறைக்கு சென்றான்.
இம்முறை கதவு தாழிடப்பட்டிருக்க.. “கதவை திற தாமரை.” என உரக்க சொல்லி கதவை தட்டினான்.
கதவை திறந்தவள்.. “நீங்க வேற பொண்ணை விரும்பறதை மறந்து தெரியாம சொல்லிட்டேன், சாரி.. இனி உங்களை தொல்லை பண்ண மாட்டேன்.” என கதவை சாத்த முயல..
தடுத்தவன்.. “எதையுமே சரியா புரிஞ்சிக்கமாட்டியா?” என அதட்டி.. “நான் யாரையும் விரும்பல. ஆனா நீ சொல்றது உண்மையா? என்னை பிடிக்குமா உனக்கு? உன்னை நம்பி கல்யாண ஏற்பாடை ஆரம்பிக்கலாமா?” என்றான் விசாரணையாக.
“இல்ல வேணாம்.. எங்கப்பாக்காக பார்க்காதிங்க.” என்க.. “அப்படியே அரைஞ்சேனு வை..” என கோபத்தோடு மிரட்ட.. தாமரை மிரண்டு விழிக்க.. “அன்னைக்கு வீட்டுக்கு வந்தப்போ என் டைரியை படிச்சி பார்த்தியா?” என்றான் முறைப்பாக.
ஆமாம் என்பதாய் தலையசைத்த தாமரைக்கு கண்ணீர் வெளிக்கிளம்பியது. இவர்களின் சத்தத்தில் உள்ளே வந்த மஞ்சுவிற்கு அனைத்தும் புரிந்தது.
“அழகுமாமா.. இங்க வாங்க.” என மதியின் கைப்பிடித்து தனதறைக்கு அழைத்து வந்தவள்.. அன்று தாத்தாவை பார்த்துக்கொள்வதாய் தாமரை சொன்னதை விளக்கி.. உங்களை நினைச்சிதான் அந்த சூர்யாவை வேணாம் சொல்லிட்டா போல, தாமரை ரொம்ப நல்லவ மாமா.. நீங்க அவளையே கட்டிக்கோங்களே.” என அக்காவிற்காக பேசினாள் பாவமாக.
மஞ்சுவின் அறையிலேயே அமர்ந்தவனுக்கு பலத்த யோசனை. தன் வாழ்க்கை என்னாகுமோ என்றே அறியாத நிலையில் திருமணம் வேறா என்று தடுமாறினான் மதி.
அதிலும் மனதிற்கு பிடித்தவளை கரம்பிடித்து அவள் வாழ்வை நரகமாக்கி ஜெயிலுக்கு போவதை நினைத்தே பார்க்க முடியவில்லை.
கொலை செய்தேன் என்றால் நம்ப மறுத்து, தாமரையை நான் புறக்கணிக்கிறேன் என மொத்த குடும்பமும் நினைப்பதையும் தாள முடியவில்லை. அதோடு மஞ்சுவும் அக்காவிற்காக கேட்டுவிட்டாள்.
இனியும் மறுத்தால் தாமரையின் ஒவ்வொரு செயலுக்கும் தானே காரணமாவேன், மஞ்சுவை காண வரும்போதெல்லாம் அத்தை மாமா முகத்தில் எப்படி விழிப்பது? கூடவே அனைவர் மனதிலும் ஆறாத வடுவாகிடும் என்றும் யோசிக்கலானான்.
மஞ்சு.. “அழகுமாமா.. தாமரை ரொம்ப நல்ல பொண்ணு.. உங்களுக்கு தெரியும்தானே.?” என்றாள் சன்னக்குரலில் கெஞ்சலாக.
அதில் தாமரை மீதான காதல் வெளிவர.. “ஹம்.. போயும் போயும் இந்த உம்மனாம்மூஞ்சிதான் எனக்குனு இருக்கும்போது அதை மாத்த யாரால முடியும்?” என்றான் இலகுவாக.
“ஹய்யா அழகுமாமா சம்மதிச்சிட்டாங்க..” என உற்சாகத்தோடு மாமனை கட்டிக்கொண்டவள்.. சட்டென விலக்கி.. “எங்கக்கா ஒன்னும் உம்மன்னாம்மூஞ்சி இல்ல.. தாமரை சிரிச்சா செம அழகா இருப்பா.” என்றாள் ரோசமாக.
“பார்டா.. மாமனை விட உங்கக்கா முக்கியமா போய்ட்டாளா?” என பொய்யான கோபத்தோடு கேட்டவன்.. “அவ சிரிச்சி நான் பார்த்ததில்லயில்ல? அதான் அப்படி சொன்னேன். நீ இங்கையே இரு.” என கட்டளையிட்டு தாமரையறை வாசலில் நின்றவன்..
“இப்போ சரினு அப்புறம் வேணாம்ன்றது, மன்னிப்பு கேக்குறதெல்லாம் செய்தேனு வை.. தொலைச்சிடுவேன்.” என மிரட்டி.. ஹாலுக்கு வந்தான்.
“ஆமாம் மாமா. தாமரையை கட்டிக்க எனக்கு சம்மதம். ஆனா உங்க பொண்ணு நான் வேற யாரையோ லவ் பண்றதா நினைச்சிட்டு என்னை வேணாம்னு சொல்றா. அப்படி யாரும் என் மனசுல இல்ல.
பேரனின் பேச்சில் பெரு மகிழ்ச்சியடைந்த பழனியப்பன்.. இன்னைக்கு இப்படி பேசிட்டு, நாளைக்கு மாத்தி பேசினா என்ன செய்வதென யோசித்து.. “அதெல்லாம் கிளம்ப முடியாது. உக்காரு.. பேத்தி கையால டீ குடிச்சிட்டு போலாம். அப்படியே பொண்ணு பார்க்குற சாங்கியம் முடிஞ்ச மாதிரி இருக்கும்.” என சௌகர்யமாய் அமர்ந்தார்.
மதியழகன் பொய்யாய் முறைக்க.. “ஆமாம் அப்பா சொல்றது சரிதான். உக்காரு மதி. இங்க தண்ணி தவிர்த்து எதையும் சாப்பிட்டதில்ல, இனியும் அப்படி இருக்க முடியாது. முறுக்கு, பஜ்ஜி, டீ எதாவது சாப்பிட்டு நீ சொல்றது உண்மைதானு நிரூபி.” என உரிமையோடு சொல்லி சமையலறை புகுந்தார் காமாட்சி.