இன்னும் கதிரேசனின் முகம் தெளிவடையாமல் இருப்பதை பார்த்த மதியழகன்.. “தாமரையை பிடிச்சிதான் மாமா கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்.” என்றான்.
“நிஜமாவா மதி?” என்ற கதிரேசன் முகம் இன்னும் கலக்கத்திலேயே இருக்க, “தாமரையை எனக்கு பிடிக்குமா பிடிக்காதானு உங்களுக்கு தெரியாதா மாமா?” என்றான் உள்ளார்ந்து.
“மதி..” என்றவரின் முகம் ஒரு நிமிடம் பிரகாசமானாலும், சட்டென வாடியவராய்.. “அது சின்ன வயசுல பிடிக்கும்தான், இப்போவும் பிடிக்குமா?” என்றார்.
“பிடிக்கும் மாமா..” என்றான் இலகிய முகத்தோடு.
“தங்க சிலையாட்டம் இருக்கிற என் பேத்தியை பிடிக்கலனு சொல்ல முடியுமா? அவன்தான் பிடிச்சிருக்குனு சொல்லிட்டானே? திரும்ப எதுக்கு அதையே கேக்குறிங்க?
கல்யாணத்தை எப்போ வச்சிக்கலாம்னு அதை பத்தி யோசிங்க மாப்பிள்ளை.” என்றார் பழனியப்பன்.
“பேத்திதான் படிக்க பிடிக்கலனு சொல்லுதில்ல? சும்மா படி படினு எதுக்கு வற்புறுத்தனும்? மஞ்சு குட்டிக்கு உன்னை பார்க்காம இருக்க முடியாது, தாமரைதான் உனக்குனு முடிவான பின்ன, கல்யாணம் முடிக்காம நீ இங்க வந்து போய்ட்டு இருக்கிறது நல்லாயிருக்காது.” என மதியை முறைத்து..
“நீங்க குடும்ப ஜோசியர்கிட்ட பேசி நல்லநாள் பாருங்க மாப்பிள்ளை.” என கதிரேசனுக்கு ஆணையிட்டார் பழனியப்பன்.
மதி பிடித்தம் சொன்ன பின்னே நீண்ட நாள் தள்ளி போடுவது சரியல்ல என நினைத்து.. “சரிங்க மாமா, நாளைக்கே ஜோசியர்கிட்ட பேசிடறேன். இரண்டு மூனு மாசத்துக்குள்ள நல்ல முகூர்த்தமா பார்க்க சொல்றேன்.” என்றார் சந்தோசத்தோடு.
பழனியப்பன்.. “இரண்டு மூனு மாசமா?” என இழுத்து.. “அதெல்லாம் முடியாது. அடுத்த முகூர்த்தம் எப்போனு பாருங்க. அதுலயே முடிச்சிடலாம்.” என்றார்.
“அடுத்த முகூர்த்தத்துலயா?” என வியந்த கதிரேசன்.. “அதுக்குள்ள எல்லாம் அரேன்ஜ் பண்ண முடியாது மாமா” என்றார் தவிப்பாக.
கதிரேசனிடம்.. “நீங்க காட்டின பையனை பிடிக்காம என்னை கட்டிக்கிறேன்னு சொல்லியிருக்கா, அவளுக்கு கல்யாணம்னா என்ன தெரியுமானே தெரியல. இதுல எட்டு வருசமா இரண்டு பேரும் பேசிக்கிறதில்ல.
ஆனாலும் புரிஞ்சு சொன்னாளோ? புரியாம சொன்னாளோ? என்னை பிடிச்சிருக்குனு சொன்னவளை கண்டிப்பா இனி விடமாட்டேன், என் கல்யாணம் அவளோடதான்.
ஆனா கொஞ்சம் நாள் பொறுத்து பண்ணிக்கிறேன், இங்க வசதியான வாழ்க்கையை துறந்து, எங்க வீட்டுல என்னை சகிச்சிக்க அவளுக்கு டைம் கொடுக்கனும்.. அவ படிப்பு முடியட்டும் மாமா.” என்றான் பொறுமையாக.
“பேத்தியை கல்யாணம் செய்துக்கிறதால தாமரை படிக்கனுமா வேணாவானு நீயே முடிவு செய்வியா? அதெல்லாம் பேத்தி விருப்பம்தான். நாம எதுக்கு நசநசன்னுட்டு, தாமரையையே கேட்டுடலாம்.” என்று.. காமாட்சியிடம் தாமரையை அழைத்து வர பணித்தார்.
“அத்தை போனா மிரட்டி கூட்டிட்டு வருவாங்க, நானே கேட்குறேன்.” என எழுந்தான் மதி.
“நீ போனாலும் மிரட்டத்தான் செய்வ.” என பேரனை தடுத்து, “மஞ்சு குட்டி..” என உரக்க குரல் கொடுத்தார் பழனியப்பன்.
மஞ்சு வெளியே வர.. “அக்காவை கூட்டிட்டு வாடா.” என்றார் புன்னகையோடு.
எப்படியும் தாமரை படிக்க விருப்பம் தெரிவிக்கமாட்டாள் என்ற நம்பிக்கையோடு, பழனியப்பன்.. “ஆகட்டும் ஆகட்டும்.” என்றார் மிதப்பாக.
“ஆமாவா மாமா.?” என மஞ்சு கண்சிமிட்டி சிரிக்க.. “வாலு.. போய் கூட்டிட்டு வா.” என்றான் கோபம் குறைந்தவனாய்.
சந்தோசத்தோடு தாமரை அறைக்குள் சென்று.. “மாமா கூப்பிடுறாங்க, வா தாமரை.” என்றாள்.
“எதுக்கு.?” என உள்ளுக்குள் மிரண்டாள் தாமரை.
“அம்மா முறுக்கு சுடுறாங்க, மாமா உன்ன பொண்ணு பார்ப்பாங்க போல, அப்போ நீதான எல்லாருக்கும் கொடுக்கனும்? வா.. வா..” என உற்சாகத்தோடு கைப்பிடித்து இழுத்து வந்தாள்.
மஞ்சரியிடம் அகப்பட்டதை போல நின்றிருக்கும் தாமரையை ஊன்றி பார்த்தான் மதியழகன். தாமரை மதியை பார்க்கவில்லையென்றாலும், மதியை பார்த்திருந்த பழனியப்பன்.. “எதுக்குடா முறைக்கிற?” என அதட்டி.. தாமரையிடம்.. “இப்படி வந்து உக்காருடாம்மா.” என்றார் கரிசனையாக.
டைரியை பார்த்த பின்னே யாரையோ விரும்புகிறான் என நம்பியிருந்த நினைப்பையும், காலை தந்தையிடம் உங்க பொண்ணு நினைப்பதை போல யாருமில்லை என எடுத்துரைக்கவும்.. மதி சொன்னது உண்மையாகத்தான் இருக்கும். இல்லையேல் தன் விருப்பம் சொன்னதும் தன்னை மணக்க சம்மதித்திருக்கமாட்டான் என முழுதாய் நம்பிய மனம் முழுதாய் அவன் புறம் சாய்ந்தது.
இனி அனைத்தையும் சந்தித்துதானே ஆகனும் என முரண்டாமல் வந்தவள் பழனியப்பன் அருகே நிற்க, “இப்படி உக்காரு தாமர.” என்றதும் அவர் அருகே அமர்ந்தாள்.
மதியழகன் அருகே அமர்ந்த மஞ்சரி.. “தாத்தாதான் உன்கட்சி ஆகிட்டாரில்ல? அதனால நான் மாமாகட்சி. மாமாக்கு என்னெல்லாம் கொடுப்பியோ அதெல்லாம் எனக்கும் தரனும்.” என தாமரையிடம் சிரிப்போடு கட்டளையிட்டாள் மஞ்சரி.
மஞ்சரி எதோ பெரிய நகைச்சுவை சொன்னதைபோல பலமாய் சிரித்த பழனியப்பன்.. “ஆகட்டும்டா ஆகட்டும்டா. நீ எப்போவும் உன் மாமா கட்சிதானே?” என சந்தோசித்து..
தாமரையிடம்.. “இங்க பாருடாம்மா, நானொன்னு கேட்பேன், நீ யாருக்கும் பயந்துக்காம பதில் சொல்லனும். சரியா?” என்க.. சம்மதமாய் தலையசைத்தாள் தாமரை.
இப்போ சம்மதம் சொல்லிட்டு அப்புறம் மறுக்குறது மன்னிப்பு கேக்குறதெல்லாம் செய்யக்கூடாதென காலையில் மதி சொன்னதை சிந்தித்தவள், தற்போது படிக்கிறோம் என்றால் கோபப்படுவான் என நினைத்து.. “இல்ல தாத்தா.” என்றதுதான்..
“படிக்காம என்ன பண்ண போற?” என முறைத்தான் மதியழகன்.
“என்னடா பள்ளிகூடத்து பிள்ளைகளை முறைக்கிற மாதிரியே முறைக்கிற? தாமர உனக்கு பொண்டாட்டி ஆகப்போகுது. அதை மனசுல வை.” என மதியை மிரட்டி..
“தாமர என்ன சொல்லுதோ அதுதான் முடிவுனுதானே பேசினோம்? இப்போ தாமரை முடிவை சொல்லிடுச்சி, இனி யாரும் அதை வற்புறுத்தக் கூடாது.” என கட்டளையிட்டு..
கதிரேசனிடம்.. “தாமரை அது விருப்பத்தை சொல்லிடுச்சி, இனியும் அதையும் இதையும் கேட்டு புள்ளையை சங்கடப்படுத்தாம கல்யாணத்துக்கான ஏற்பாட்டை பாருங்க.” என்றார்.
கல்யாணத்துக்கு சம்மதிச்சான்தானே? இப்போ எதுக்கு கோபப்படுறான்? ஒருவேளை கல்யாணம் முடிஞ்ச பின்ன படிப்பை தொடர சொல்லலாம்னு இருக்கானோ? என தவிப்போடு மதியின் முகம் பார்க்க.. தாமரையைதான் முறைத்துக்கொண்டிருந்தான்.
அவனின் முறைப்பில் கலக்கம் உண்டாக.. “தாத்தா.. அவங்க விருப்பம் எதுவோ அதுமாதிரியே..” எனும்போதே.. “அவன் விருப்பம்னு தனியால்லாம் எதுவுமில்ல, படிக்க விருப்பமில்லனுட்டல்ல? அதோட விடுடா.” என அவசரமாய் இடைமறித்தார் பழனியப்பன்.
படிப்பு முடிந்த பின்னே திருமணம் என பேசியிருப்பான் என்றெல்லாம் தாமரை நினைக்கவில்லை, திருமணத்திற்கு பிறகு படிப்பை தொடரவேண்டும் என நினைக்கிறான் என்றே நினைத்தாள்.
அவளுக்காக படிக்கவேண்டுமென தோன்றவில்லையென்றாலும், மதிக்கு படிப்பு பிடிக்குமென படிக்க நினைத்தாள்தான். ஆனால் திருமணம் முடிந்த பின்னே, அவனும் நானும் ஒரே கல்லூரியில் என்பதை நினைத்தே பார்க்க முடியவில்லை.
ம்.. மதியழகனின் அறிவையும் அழகையும் பாராட்டாத மாணவிகளே இல்லை என்பதை தாமரை அறிவாள்.
யாரையும் காதலிக்காத கல்லூரியின் காதல் மன்னனை தான் கரம் பிடித்துள்ளேன் என தெரிய வந்தால் படிப்பு முடியும் வரை தோழிகளுக்கு பதில் சொல்லி மாளாது என்பதாலே படிக்க விருப்பமில்லை என்றாள்.
தாமரையை பிடிக்கும் என்று மதியழகன் சொன்ன பின்னே, மகள் படிப்பை தொடராதது கதிரேசனுக்கு பெரிய குறையாக தோன்றவில்லை ஆதலால், முழுமனதோடு திருமணத்தைப் பற்றி யோசித்து.. “சரிங்க மாமா.. நாளைக்கே ஜோசியரை போய் பார்க்கிறேன்.” என்றார் பழனியப்பனிடம்.
“தாமர… இங்க வா.” என காமாட்சி கிச்சனிலிருந்து அழைக்க.. தாமரை தாத்தாவின் முகம் பார்க்க.. “உன்கிட்ட கேக்கவேண்டியதை கேட்டாச்சுடாம்மா, போய் என்னனு பாரு.” என்றார்.
தாமரை கிச்சன் செல்லவும்.. “இதைப்போய் எல்லாருக்கும் கொடு..” என பெரிய ட்ரேயை காண்பித்தார்.
பெரிய ட்ரேயில் உள்ள சிறு தட்டுகளில் ஒன்றை எடுத்து கதிரேசனிடம் நீட்ட.. “தாத்தாக்கும் மதிக்கும் முதல்ல குடுடா.” என்றார் கதிரேசன்.
பழனியப்பனுக்கு கொடுத்தவள், மற்றொரு தட்டை எடுத்து மதியிடம் நீட்ட, தாத்தாவும் மாமாவும் அருகிலிருக்க, குறிப்பாக மஞ்சு தன்னையே பார்த்திருக்க, எதுவும் சொல்லாமல் வாங்கிக்கொண்டான்.
அடுத்து பஜ்ஜி எடுத்து வந்த காமாட்சி மகளிடம் கொடுத்து அனைவருக்கும் கொடுக்க பணிக்க, “அத்தை, இதெல்லாம் தாத்தாக்கு ஒத்துக்காது.” என்றான் மதியழகன்.
காமாட்சி முகம் வாட, “மதி சொல்றது சரிதான் காமாட்சி, நைட்ல நெஞ்சு கரிச்சிட்டு தொந்தரவு கொடுத்திடும். டீ மட்டும் போடு.” என்றார் பழனியப்பன்.
காமாட்சி டீ போட்டு மகளிடம் கொடுத்தனுப்ப, அனைவருக்கும் கொடுத்த பின்னே, மதியின் முகம் பார்க்க துடிக்கும் ஆவலை அடக்கும் வழியறியாமல் தாமரை தனதறைக்கு செல்ல முயல..