தாமரையின் கண்ணீர் உணர்ந்து.. “தாமரை..” என புரட்டிப்போட்டான் தன்மீது.
தாமரை முகம் திருப்ப, கன்னம் பற்றி தன்புறம் முகத்தை திருப்பியவன்.. “என்ன?” என்றான் சிறு அதட்டலோடு.
“விடுங்க.” என்றாள் அவனிடமிருந்து விலக முடியாத இயலாமையோடு.
தாமரை எதற்கு அழுகிறாள் எனப் புரிந்தமையால்.. “அதெல்லாம் விட முடியாது.” என இன்னும் சேர்த்தணைத்து, “அழாத..” என்றான் கோபமில்லாமல்.
“எப்படி இப்படி கல் நெஞ்சமானிங்க?”
“ப்ச் பழசை பேசாதே, விடு.” என்றான் தன்மையாக.
“எப்படி விட முடியும்? என்னை பிடிச்சிருந்தும் கண்டவனையும் பார்க்க விட்டுருக்கிங்க.” என்றாள் கோபமாக.
“ப்ச் நான்தான் சொல்றேன்ல? பழசை பேசாதேன்னு..” என்றான் சிறு கண்டிப்போடு.
“அவன் என்னை எப்படி தொட்டான் தெரியுமா?” என்றவளை மேலே பேச விடாமல் ஆழ்ந்த முத்தம் பதித்தான். ஆனால் முத்தத்தில் மொத்தமும் காதல் இல்லை, கோபம் பாதி காதல் பாதியாய் கலந்திருந்தது அம்முத்தம்.
சில நொடிகளுக்குப் பிறகு தாமரை திணற, விடுவித்தவன்.. “பழசை பேசாதேன்னு சொல்றேன்ல?” என்றான் முறைப்பாக.
அவன் தொட்டதை தாளமுடியாமல்தான் கோபப்படுகிறான் எனப்புரிய.. “பேசலனா, அவன் தொட்டது இல்லனு ஆகிடுமா?” என்றாள் மதியழகனை பழிதீர்க்கும் பாவனையில்.
“உன் மனசுல யாரிக்கா? வந்தவனை பிடிச்சிருக்கா இல்லையானே புரிஞ்சிக்க முடியாதவளுக்கு, கல்யாணத்துக்கு என்ன அவசரம்? எதுக்கு சம்மதம் சொன்ன? நீ சம்மதம் சொல்லவும்தான அவன் தொட்டான்?” என்றான் அதீத கோபத்தோடு.
மதி சொல்வது சரியென பட்டபோதும்.. “எங்கப்பா கல்யாணம் செய்துக்க சொல்லும்போது நான் என்ன பண்ணட்டும்? அப்போ என் மனசுல நீங்க இல்ல, அதனால ஒத்துக்கிட்டேன், ஆனா அப்போவே உங்க மனசுல நான் இருந்திருக்கேன்.. நீங்க என்னை ஏன் கேக்கல?நீங்க கேட்டுருந்தா அந்த பிரச்சனை வந்திருக்குமா?”
“எப்படி கேப்பேன்? எப்படிடீ கேப்பேன்.?” என முறைத்து.. “முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்படக்கூடாதுனு உங்க பாட்டி சொன்னதை விட உங்கப்பாம்மா அமைதியா இருந்ததைதான் என்னால தாங்க முடியல, அதனாலதான் உங்க வீட்டுக்கு வரதை நிறுத்தினேன், அவங்க செத்தப்புறம் உங்க பாட்டி பேசினதுக்கு மன்னிப்பு கேட்டு உங்க பாதுக்காப்புக்காக உங்கப்பா வர சொன்னார்.
மன்னிப்பு கேட்டதுல அவர்மேல உள்ள கோபம் குறைஞ்சாலும், அவங்க சொன்ன சொல் என் மனசை விட்டு போகவேயில்ல, ஆனாலும் எதுக்காக வந்தேன் தெரியுமா? உனக்காகத்தான்.. உனக்காக மட்டும்தான் வந்தேன். ஆனா நீ.. என்னவோ உன்னை கற்பழிக்க வரவனைப்போல என்னை கண்டாலே..” என நிறுத்தியவன்..
“கண்டாலே என்ன? என் குரலை கேட்டாலே உள்ள ஓடிடறது. இன்கேஸ் உள்ள இருந்தா நான் போறவரைக்கும் வெளில வரதில்ல, இதுல கல்யாணத்துக்கு வேற மண்டைய ஆட்டி வச்சிருக்க.. அப்போ நான் எப்படிடீ உன்னை கேப்பேன்?” என தன் மேலிருந்தவளை கோபத்தோடு அருகில் கிடத்தி எழுந்தமார்ந்தான் இறுகிய முகத்தோடு.
மார்புவரை மேலேத்தியிருந்த பாவாடையோடிருந்த தாமரைக்கு, தான் எந்த நிலையில் இருக்கிறோம் என்று அப்பொழுதுதான் உரைக்க.. கேட்க நினைத்த கேள்வியை முழுங்கி பாத்ரூமிற்குள் ஓடினாள் தாளமுடியாத நாணத்தோடு.
தாமரை ஓடிய தோரணையில் கோபம் குறைய, நேரம் பார்த்தான். ஆறு மணியாகியிருக்கவே, தாத்தாக்கு டீ கொடுக்கனுமென பக்கத்து அறைக்கு சென்றவன்.. அலங்கரித்திருந்த அவ்வறையைப் பார்த்து.. இதை வேற க்ளீன் பண்ணனுமா என சலித்தவாறு குளிக்கப் போனான்.
பத்து நிமிடத்தில் குளித்து தனதறைக்கு உடைமாற்ற டவலோடு வர, தாமரையை காணவில்லை. உடை மாற்றி கிச்சன் வரவே.. “இன்னும் போட வேண்டிய சண்டை நிறைய இருக்கு. டீ வச்சி குடிச்சிட்டு தெம்போட வரேன்..” என்று அவனின் முகம் பாராமல் ஃப்ரிட்ஜில் பாலைத் தேடிக்கொண்டிருக்க..
“டீத்தூள் சர்க்கரைல்லாம் எங்கயிருக்குனு முதல்ல கண்டுபிடி, நான் போய் பால் வாங்கி வரேன்.” என்று வெளியே வந்தான்.
“பால் வாங்கியாச்சு மதி.” என்று பழனியப்பன் சொல்ல, “நீ எதுக்கு தாத்தா போன? அங்க நிறைய தெருநாய்கள் சுத்திட்டிருக்கு..”
“நான் போகலய்யா, வாச தெளிக்க வர ராஜாத்திக்கிட்ட சொல்லி வாங்கி வர சொன்னேன்.”
“ப்ச் அவங்களை எதுக்கு அனுப்பின?”
“இவ்வளோ நாள் நீ வாங்கினது பிரச்சனையில்ல மதி, கல்யாணம் முடிஞ்சும் நீ வாங்க போனா கேளி பேசுவாங்க, தாமரைக்கும் கடைக்கு போய் பழக்கமிருக்காது, அதனாலதான் வாங்கி வர சொன்னேன், இப்போ என்ன? அதுக்கு வாங்கும்போது நமக்கும் வாங்க ஒரு சிரமமும் இல்லனு ராஜாத்தியே சொல்லிடுச்சி. நீ கோபப்படாம போய் டீ வை..”
இவன் உள்ளே போக, டிகாஷனில் பாலை ஊற்றி, பொங்கியதும் மூவருக்கும் ஊற்றி எடுத்து வந்தவள்.. கையிலிருந்த ட்ரேயை பார்த்தபடி, மதியருகே டீ யை நீட்ட, இத்தனை நேரம் மல்லுக்கு நின்றவளின் முகமெங்கும் அதிகாலை நடந்தேறிய தாம்பத்தியத்தின் தாக்கம் நிறைந்திருக்க, அவள் முகம் பார்த்து வாங்கியவனுக்கு சற்று முன் தோன்றிய கோபம் குறைந்து முகமெங்கும் ரகசியப்புன்னகை.
மதி டீயை வாங்கியதும் நொடியும் அவன் முன் நிற்காமல் பழனியப்பனிடம் வந்தமர்ந்தாள் தாமரை.
“டீ குடிச்சிட்டு உலர்த்துறேன் தாத்தா.” என டீ யை குடிக்க, காமாட்சியிடமிருந்து அழைப்பு வரவும், மொபைலை எடுத்து வந்த மதி.. “அழைச்சிட்டு போக வரதுக்குத்தான் கேட்பாங்க, மதியம் போல வர சொல்லு.” என நீட்டினான்.
“என்னம்மா?” என கேட்க, “அப்பா ஏழு மணிக்கு அழைக்க வரோம், நீங்களும் ரெடியா இருங்க, நானெதுக்கு அப்படியிப்படினு சொல்லிடாதிங்க.” என்றார்.
“வரேன் காமாட்சி.” என்று மதியிடம் விசயத்தை சொல்ல, “தாத்தா, பத்து மணிக்கு மேல வர சொல்லுங்க.இல்ல நாமளே கூட போய்க்கலாம்.” என்றான்.
“இந்தா நீயே பேசிக்க.” என கொடுக்க, “அத்தை.” எனுமபோதே.. “மஞ்சு ஸ்கூல் போறதுக்குள்ள உங்களை அழைச்சிட்டு வரனும்னு அடம் பண்றா.. உன்னையும் தமரையையும் பார்த்துட்டுதான் ஸ்கூல் போவாளாம்.”
மறுபேச்சின்றி “சரி.” என ஒப்புக்கொண்டான்.
“தாமரைகிட்ட கொடு மதி.” என்று, தாமரையை சாரி கட்ட பணித்து இணைப்பை துண்டித்தார்.
“நான் சொன்னா கேப்பியா?” என பழனியப்பன் சிரிக்க, “மஞ்சு ஸ்கூல் போறதுக்குள்ள அவ அக்காவை பார்க்கனுமாம், அதுக்காகதான் ஓ.கே சொன்னேன்.” என்றவன், “எவ்வளோ நேரம் டீ குடிப்ப? உள்ள போய் முடியை காயவச்சி தலை பிண்ணு.. அத்தை வந்திடுவாங்க.” என்றான் அதட்டலாக.
தாமரை எழுந்து உள்ளே போக, “போய் குளி தாத்தா, அத்தை ஏழு மணிக்கு வராங்களாம்.” என்று உள்ளே போனான்.
தாமரை கிச்சனில் பாத்திரத்தை உருட்ட, “உன்ன ரெடியாகத்தான சொன்னேன்? இங்க என்ன உருட்டிட்டு இருக்க?” என பின்னிருந்து அணைக்க, “விடுங்க.” என திமிறினாள்.
“இப்படி அழுதிட்டிருந்தா அத்தைமாமா கஷ்டப்படுவாங்க, நம்ம பிரச்சனையை ஈவ்னிங் இங்க வந்ததுக்கப்புறம் கன்டினியூவ் பண்ணிக்கலாம். இப்போ போய் நல்ல பிள்ளையா ரெடியாகு.” என கைப்பிடித்து இழுக்க, “இதை கழுவி வச்சிட்டு போறேன்.” என தாமரை என்னவோ மிகுந்த பலம் கொண்டுதான் தேய்த்தாள். ஆனா பாத்திரத்திலுள்ள டிகாஷன் கரைதான் போவேனா என்றது.
“டம்ளர் மட்டும் கழுவிட்டு, அந்த பாத்திரத்துல தண்ணி நிரப்பிட்டு போ, ஊறினதுக்கப்புறம் தேய்ச்சா ஈஸியா போய்டும்.” என்க, அவ்வாறே செய்து அறைக்குள் போனாள்.
மதியும் பின்னோடே வர, “தனது பேகிலிருந்து ஒரு சாரியை எடுத்தவள், பக்கத்து அறைக்கு போக எத்தனிக்க.. “இங்கையே மாத்து.” என்றான்.
முறைக்க முயன்று தோற்றவள் ஏதும் சொல்லாமல் பக்கத்து அறைக்கு போக, அங்கே அறையின் அலங்காரம் கண்டதும் கலங்கினாள் நின்றாள்.
“உங்களுக்கு என்னை பிடிச்சிருந்தும் ஏன் என்கிட்ட சொல்லலைன்றதுதான் பிரச்சனை. நான் பிடிச்சிருக்குனு சொன்னதும் கல்யாணத்துக்கு சம்மதிச்சிங்க, அதுலயிருந்து பின்வாங்கக்கூடானு மிரட்டினிங்க, நலங்கு வைக்கும்போது உரிமையா தொட்டு பேசுனிங்க, தாலி கட்டின உடனே அத்தனை பேர் முன்னாடியும் நெற்றியோடு நெற்றி முட்டி என் கன்னத்தை தாங்கி பிடிச்சி அவ்வளோ நிறைவா பார்த்திங்க..”
என அதற்கு மேல் சொல்ல முடியாமல் உதடு துடிக்க நின்றாள் ஆற்றாமையோடு. “ம்.. இன்னும் நிறைய இருக்கும்போலவே.. அதையும் சொல்லேன்.” என்றான் ரசனையாக.
மெட்டி போடும்போது தன் பாதத்தை வரம்போல் கையிலேந்தியது, மணவறை சுற்றி வரும்போது உரிமையாய் பிணைப்பாய் தன் கரம் கோர்த்து வலம் வந்தது, உணவுண்ணும்போது தனக்கு ஊட்டி, அதில் பாதியை ரசனையாய் கண்ணிமைத்தவாறு விரும்பி உண்டது என அனைத்தும் நினைத்தவளுக்கு மீண்டும் கண்ணிர் பெருகவே, “நான் கல்யாணத்துக்கு கேக்கலன்னா எக்கேடோ கெட்டு போகட்டும்னு விட்டுருப்பிங்கதான?” என்றாள் கோபமாக.
“ஏய்.. தாமர..” என தவிப்போடு அருகில் நெருங்கி.. “சும்மா சப்பானி கணக்கா பேசினதையே திரும்ப திரும்ப பேசிட்டிருப்பியா?” என மிரட்ட..
“தாமரை..” என்ற காமாட்சியின் குரல் கேட்கவும்.. “அத்தை வந்துட்டாங்க, நீ அந்த ரூம்ல போய் டிரஸ் சேன்ஜ் பண்ணு..நான் இந்த ரூமை க்ளீன் பண்ணிடறேன். என்னை கேட்டா குளிச்சிட்டிருக்கேன்னு சொல்லு.” என்று தாமரையை அவசரமாய் வெளியே போக சொல்ல..
அதற்குள் காமாட்சி உள்ளே வந்தார். “வாங்கத்தை.” என்றவன் ஈவ்னிங் செய்துக்கலாமென அவ்வறையை சாற்றவே, கலைந்து கிடைக்கும் அறையை தான் காணக்கூடாது என்பதால் மதி அவசரமாய் கதவடைக்கிறான் என்றும்..
அழுத முகத்தை அன்னை கண்டால் கேள்விகளால் துளைத்தெடுப்பார் என தடுமாற்றத்தோடு தலைகுனிந்தபடி பக்கத்து அறைக்கு சென்ற மகளை பார்த்து.. நேற்றிரவு சந்தோசத்தால் தன் முகம் காண நாணி செல்கிறாள் என்றும் நினைத்த காமாட்சிக்கு பெருத்த நிம்மதியானது.
“டீ குடிச்சியா மதி.. இல்ல நான் வைக்கவா?” என்றார் இன்முகத்தோடு.
“இப்போதான்த்தை குடிச்சோம்.” என்க.. “விளக்கேத்தாம டீ யை வச்சியா? நேத்து எத்தனை முறை சொன்னேன்?” என அறையருகே நின்று மகளை கடிய.. தாமரையிடமிருந்து பதிலில்லை.
மகள் வந்ததும்.. “வீட்டையாவது நீ க்ளீன் செய்தியா? இல்ல மதி செய்தானா?” என முனுமுனுக்க..
“சும்மா திட்டிட்டே இருந்தின்னா வீட்டுக்கு வரமாட்டேன்.” என தாமரை முறைக்க, “அப்போ அதையும் மதிதான் செய்தானா?” என காமாட்சியும் முறைக்க..
“திடீர்னு எல்லாம் செய்ய சொன்னா எப்படி முடியும்? நம்ம வீட்டுலயே வேலைக்காரங்கதான் செய்யிறாங்க.
இந்த வேலையெல்லாம் சின்ன வயசுலயிருந்து பழக்கியிருக்கனும். தப்பு உன்மேலதான். ஆனாலும் இப்போ செய்யலன்னாலும் போக போக பழகிப்பேன். என்னை சும்மா சும்மா திட்டிட்டே இருக்காதம்மா.” என்றாள்.