வீட்டிற்கு வந்தவன்.. ‘மதியம் சாப்பிட்டியா தாத்தா.?” என்றான்.
‘ஏன்யா.. காலேஜிம் லீவ்தான? காலைலயிருந்து எங்க போன?” என்றார்.
‘அத்தை வீட்டுக்குதான் போயிருந்தேன் தாத்தா.. சீக்கிரம் வந்திடலாம்னுதான் போனேன்.. உன் சின்ன பேத்திதான் என்னை வரவிடாம பண்ணிட்டா..” என்றான் பீடிகையாக.
இவ்வளவு நேரம் மகள் வீட்டில் இருக்கமாட்டானே? யாருக்காவது உடம்பு சுகமில்லையா எனப்பதறி.. ‘என்னைய்யா சொல்ற?” என்றார்.
‘பயப்படற அளவுக்கு ஒன்னுமில்ல தாத்தா. மஞ்சு பெரிய பொண்ணாய்ட்டா.” என முகம் மலர்ந்தவன்.. “மாமாவேற வீட்ல இல்லை.. அதான் அவர் வரவரைக்கும் அங்கையே இருந்துட்டு வந்தேன்..” என்றான்.
‘சந்தோசம்யா.. விசனப்பட்டுட்டே இருந்தேன், இப்போ நிம்மதியாகிடுச்சி.” என நிம்மதியானவர். “மஞ்சுகுட்டியை உனக்கு ரொம்ப பிடிக்கும்.. என்ன சீர் செய்ய போற?” என்றார் கவலையாக.
இதையேன் இவ்வளோ கவலையா கேட்குறார்? ஒருவேளை பணமில்லைன்னு நினைக்கிறாரோ என யோசித்தவன்.. ‘அவளுக்கு முன்னமே அஞ்சி பவுன்ல ஆரம் எடுத்து வச்சிருக்கேன் தாத்தா.. அதுக்கேத்த தோடு, பட்டுபுடவை மத்த சீரெல்லாம் இனிமேத்தான் வாங்கனும்.” என்றான் உற்சாகமாக.
ஓ.. இதான் உன் கவலையா என முகம் இறுகியவன்.. ‘அப்ப என்னால அவ்ளோதான் முடிஞ்சது.. அவளுக்காக பார்த்து என் மஞ்சுகுட்டிக்கும் அப்படியே பண்ணிடமுடியுமா?” என்றான் கடுப்பாக.
‘தாமரை பேச்செடுத்தாலே இவனுக்கு முனி புடிச்சிக்குமாட்டங்குது..” என்று தானும் கடுகடுத்தார்.
‘இப்ப என்ன? உன் பெரிய பேத்திக்கு இரண்டு பவுன் பாக்கியிருக்குங்கிறியா? கவலைப்படாத, அவளுக்கு கல்யாணம் வைக்கிறாங்களாம்.. அவ கல்யாணத்துக்கு இன்னும் மூனு பவுன் சேர்த்துப்போட்டு கணக்கை நேர் பண்ணிடறேன்..” என்றான் முறைப்பாக.
‘என்னைய்யா சொல்ற? அது எப்படி உன்னை கேக்காம அவங்க முடிவெடுக்கலாம்..” என்று அங்கலாய்த்தார் பெரியவர்.
எனக்கு பிடிக்காதுன்ற மாதிரிதான நடந்திருக்கேன்? அப்படியிருந்தும் மக வயித்து பேத்திதான் வரனுமா? என தாத்தாவை கனிவாய் பார்த்தவன்.. “என்னை எதுக்கு கேட்கனும்? அவங்க பொண்ணு என்னவோ பண்ணிட்டு போகட்டும் விடு தாத்தா..” என குரல் தளர்த்தியவன், “இரு டீ போட்டுட்டு வரேன்.” என கிச்சன் சென்றான்.
தினமும் மஞ்சுவிற்கு எதேனும் வாங்கிக் கொடுப்பவன் தாமரையை கண்டுகொள்ள மாட்டான். தாமரையும் அதனை எதிர்பார்ப்பதில்லை. அவளுக்கு இதெல்லாம் பழக்கம்தான் என்பதால் அவளும் கண்டுகொள்ளமாட்டாள்.
ஆனால் மதி வாங்கி வருவதை மஞ்சு ஆசையோடு தாமரைக்கு பகிர்வாள். தன்மையாகவே தாமரை அதனை மறுத்துவிடுவாள். மஞ்சு புலம்பக் கேட்கும் மதியும் இதை அறிவான்தான்.
தாமரை அவள் நினைப்பதை போல கருப்பு கிடையாது. மாநிறத்திற்கும் சற்று மேலே மஞ்சள் நிறத்தழகி. மதி தாமரையின் சடங்கின்போது.. ‘ஏய் கருவாச்சி.. என்ன ஒரே வாரத்தில இப்படி அழகாய்ட்ட?” என்று விளையாட்டாய் கேட்டதுதான்..
அதன் பின்னர்தான் தாமரைக்கு தாம் கலரில்லை என்ற தாழ்வு மனப்பான்மை வந்தது. தன் அம்மாவிடமும் நான் மட்டும் ஏன் கருப்பா இருக்கேன் என அவ்வப்போது கேட்டுக்கொண்டே இருப்பாள். முக்கியமாக மதி வந்துபோகும் ஒரு வாரத்திற்குள் கண்டிப்பாக கேட்பாள்.
அத்தனை நிறமுடையவன் மதியழகன். நெடுநெடு உயரம், சிறு வயதிலிருந்தே உழைத்ததன் விளைவாக உடற்பயிற்சி இல்லாமலே செதுக்கிய உடல்வாகு. போதாதற்கு, இந்த மீசை தேவர்மகன் கமல் அங்கிளை விட உங்களுக்குதான் மாமா கம்பீரமாவும் அழகாவும் இருக்கு.. ஐபுரோ எவ்வளோ லென்த்தியா இருக்கு? உங்க கை கால்கள்ல இருக்க சுருள்முடி, எல்லாத்தையும் விட உங்க தாடையில விழற குழி.. சான்ஸே இல்ல அழகுமாமா.. என மஞ்சு ரசிப்பதிலேயே தாமரை மேலும் தன்னை கீழாக உணர்வாள்.
ஆனால் தாமரையோடு சேர்த்து வேறு யாருக்கும் தெரியாது மதியழகனின் உலகழகி தாமரைதான் என்று.
அடுத்தநாள் காலை தாத்தாவிற்கு தேவையானதை செய்து முடித்தவன்.. ‘தாத்தா இன்னைக்கு மஞ்சுக்கு பட்டுசாரி எடுக்கப்போறேன்.. நிறைய வேலையிருக்கு.. வர சாயங்காலம் ஆகிடும்.. மதியத்துக்கு சாப்பிடாமையே தூங்கிடாத, தயிர் போட்டு வச்சிருக்கேன் சாப்பிடு.. நான் கிளம்பறேன்..” என்று கிளம்பினான்.
ஒரு மணிநேர அலசலுக்குப் பிறகு, பட்டுசாரியை தேர்வு செய்தவன்.. அதை டைய்லரிடம் போய் கொடுக்க.. ‘அளவு பிளொஸ் எங்கங்க?” என்று டெய்லர் கேட்க, ஆமாமில்ல.. அளவு பிளொஸ் வேணுமே என.. ‘இந்த சாரி இங்கையே இருக்கட்டும்.. அரை மணிநேரத்துல அளவு ப்ளொஸோட வரேன்..” என்று தாமரையின் வீட்டிற்கு வந்தான்.
தாமரை ஹாலில் அமர்ந்து டி.வி. பார்த்துக்கொண்டிருந்தாள். வாயிலில் நின்றபடி சற்றுநேரம் அவளையே பார்த்திருந்து.. ‘மஞ்சுகுட்டி..” என்று குரல் கொடுத்தபடி உள்ளே வந்தான் மதியழகன்.
இவனின் குரல் கேட்டதும் தாமரை எழுந்து அவளின் ரூமிற்கு செல்ல எத்தனிக்க.. ‘அழகுமாமா.. இங்க வாங்க, நான் வீடியோ கேம் விளையாண்டுட்டிருக்கேன்.” என்றாள் உள்ளிருந்தபடியே.
‘விளையாடு மஞ்சு, வரேன்..” என்க.. உள்ளே போக முயல..
‘அத்தை மாமாவையும் காணோம்.. மஞ்சுவும் அந்த ரூம்விட்டு வேற எங்கையும் போகக்கூடாதுனு அத்தை சொல்லிருக்காங்க, நீ உள்ள போனா நான் கேட்க வேண்டியதை யார்க்கிட்ட கேட்க?” என்று கடுகடுக்க, சட்டென நின்றாள்.
‘தண்ணி கொண்டு வா..” என்றான்.
தண்ணீர் கொண்டு வந்த தாமரை, எப்படியும் தன்னிடத்தில் வாங்க மாட்டான், நேற்று போல வைக்கலாம் என டேபிளில் வைத்து சிலையாய் நின்றாள்.
அவள் சங்கடமாய் நின்றிருப்பது மதிக்கு நன்றாக தெரிந்துதான் இருந்தது. ஆனால் இவள் சம்மதிக்காமலா திருமணத்திற்கு யோசித்திருப்பார்கள்? என்று கோபம் வர.. அப்படி என்ன கல்யாணத்துக்கு அவசரம் என ஓங்கி அரைய பரபரத்த கையை பேண்ட்டிற்குள் விட்டு.. ‘அத்தை எங்க?” என்றான்.
‘அம்மாவும் அப்பாவும் ஏதோ திங்க்ஸ் வாங்கனும்னு வெளில போயிருக்காங்க..” என்று தலைகுனிந்தபடி பொம்மை பேசுவது போல் சொன்னாள்.
சற்று நேரம் விடாமல் தாமரையையே பார்த்திருந்தவன்.. ‘உன் விசேசத்தில போட்டிருந்த பிளொசை போய் எடுத்திட்டு வா..”
பிளொசை கொடுத்தால் போய்விடுவான் என்று நினைத்த தாமரை அவசர அவசரமாக அதை தேடி எடுத்து மதியிடம் வந்தவள் அவனருகிலிருந்த டேபிளில் வைத்து தலை குனிந்த நிலையிலேயே நின்றிருந்தாள்.
“உக்காரு.. எவ்வளோ நேரம் நிற்ப? அத்தை மாமா வரவரைக்கும் இங்கதான் இருக்கப்போறேன்.” என்றான்.
உக்கார்ந்தவள் டி.வி. பார்க்க ஆரம்பிக்கவும்.. புருவங்கள் இடுங்கியிருக்க, அகன்ற விழிகள் சதிராடிக்கொண்டிருக்க, முகத்திலுள்ள பூனை முடிகள் சிலிர்த்திருக்க, தன் நீண்ட பின்னலை மடியில் வைத்து சுருட்டிக்கொண்டிருந்தாள் நிலையில்லாமல்.
அவர்களிடம்.. ‘இதை வாங்கத்தான் வந்தேன்.. நான் கிளம்பறேன்..” என்று கிளம்பினான்.
‘என்ன வாங்கிட்டு போறான் தாமரை?” என்றார் காமாட்சி.
‘என்னோட ஃபங்சன்ல போட்டிருந்த பிளொஸ்மா..”
“மதி உன்கிட்ட பேசினானா?” என காமாட்சி ஆச்சர்யமாய் கேட்க.. “ம்.. தண்ணியும், ப்ளொசும் கேட்டாங்க.” என்றவளுக்கு ஏனோ கண்கள் கலங்க, ரூமிற்குள் சென்றாள்.
‘ஆச்சி.. நாளைக்கு உங்கப்பாக்கு நேர்ல போய் முறைப்படி சொல்லிட்டு வந்திடலாம்..” என்றார் கதிரேசன். சந்தோசமாய் சம்மதித்தார் காமாட்சி.
தேங்காய் பழத்தட்டோடு மாமனார் வீடு வந்த கதிரேசன்.. “நல்லாயிருக்கிங்களா மாமா?” என நலம் விசாரித்து, இளைய மகள் பூப்பெய்தியதை சொல்லி தாம்பூலத் தட்டை நீட்டினார்.
‘வாங்க மாப்ள.. மதியிருக்கும்போது எனக்கென்ன குறை வந்திடும்.? நல்லாயிருக்கேன்.. என் பேத்திங்க எப்படியிருக்காங்க?” என விசாரித்தபடி பழத்தட்டை வாங்கினார்.
‘நல்லாயிருக்காங்கப்பா..” என்ற காமாட்சிக்கு தாமரையின் விசேசத்தில் தன் அண்ணன் செய்த சீர் வரிசை நினைவு வர கண்ணீர் வடித்தார்.
‘ஏன்மா.. அழற?” எனப் பதறினார் பெரியவர்.
‘அண்ணன் நியாபகம் வந்திடுச்சிப்பா.. காசு பணமே இல்லன்னாலும்.. எப்படித்தான் அவ்ளோ சீரை தாமரைக்கு பண்ணினாங்கன்னே தெரியலை.. மஞ்சுக்குதான் அந்த கொடுப்பினை இல்லாம போய்டுச்சி..” என்று சற்று சத்தமாகவே காமாட்சி அழவும்..
நகை கடைக்கு சென்றவன் வரும்பொழுது டெய்லரிடம் தைக்க கொடுத்திருந்த பட்டு சாரியை வாங்கிக்கொண்டு வீடு வந்த மதியழகன்.. “எங்கப்பா இல்லன்னா என்ன? நான் உயிரோடத்தான இருக்கேன்.?” என்றான் கோபமாக.
எங்கண்ணன் இருந்திருந்தா தாமரையை வேறொருவனுக்கு விட்டு கொடுப்பாரா என மனதினுள் அங்கலாய்த்து, ‘எங்கண்ணனை நினைச்சி அழுதா உனக்கேண்டா கோபம் வருது? நீ செய்ய வேண்டிய கடமையைத்தான் செய்வ? எங்கண்ணன்கிட்ட இருந்து எனக்கு கிடைக்க வேண்டிய சலுகையெல்லாம் உன்கிட்ட கிடைச்சிடுமா?” என்று காமாட்சியும் கத்தினார்.
‘உங்கப்பாகிட்டயும் என்கிட்டயும் நீங்க கேட்டு என்ன இல்லாம போச்சு? இப்படி புலம்பினா எங்கப்பா ஆத்மா சாந்தி அடையுமா?” என்று மதியும் கோபமாய் ஆரம்பிக்க.. ‘யய்யா கோபப்படாதய்யா.. விசேசத்துக்கு சொல்ல வந்தவங்ககிட்ட சண்டை வேண்டாம்..
அப்பமூட்டுக்கு வந்த பிறந்த பொண்ணுங்க மனசு சங்கடப்பட்டு போகக்கூடாதுய்யா..” என்று தாத்தா சொல்லவும்.. “ஆமாம்.. நான்தான் இவங்களை சங்கடப்படுத்துறேன்.” என தாத்தாவை முறைத்தவாறு கையிலிருந்த பைகளை சோபாவில் போட்டு, சமையலறைக்கு போய் பத்து நிமிடத்தில் காபியோடும் இறுகிய முகத்தோடும் வெளியே வர..
மஞ்சுக்காக தான் வாங்கி வந்த பொருள்களை வியப்போடு பார்த்திருந்தார் காமாட்சி. ஆரத்திற்கேற்ப நெக்லஸ் கம்மல் வாங்க வேண்டியதால் அதனையும் கடைக்கு எடுத்துச் சென்றிருந்தான். மஞ்சுவிற்கான அனைத்தும் அங்கேயிருக்க.. காமாட்சி.. “நகையே பத்து பவுன் பக்கம் வருமாட்டங்குது, இவ்வளோ விலையில பட்டு சாரி வேறையா? எதுக்கு மதி இவ்வளோ செய்யிற?” என்றார் குற்றவுணர்வோடு.
“என் மஞ்சுன்ற உரிமையில வாங்கினேன். அது அப்படியில்ல உங்க சின்ன பொண்ணுன்னு நினைச்சா சொல்லுங்க, இனி அந்த வீட்டு பக்கமே வராம விட்டுடறேன்.” என்றான் காட்டமாக.
“நான் என்னடா பண்ணினேன்? எதுக்கெடுத்தாலும் இப்படி எகுறுற?” என காமாட்சி கண்கலங்க.. என் அண்ணன் மகன் முடவனில்லனு அன்னைக்கு உன் மாமியார்கிட்ட சொல்ல வக்கில்ல, இப்போதான் சின்ன பிள்ளையாட்டம் அழுதுட்டு என மனதில் மருகி, “காபி குடிங்க ஆறிடும்.” என அப்பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்து காபியை நீட்டினான்.
மறுப்பின்றி வாங்கி குடித்த காமாட்சி.. ‘அப்பா.. கொஞ்சம் கஷ்டப்பட்டு நாளைக்கு வாங்கப்பா.. உங்க மாப்பிள்ளையை காரெடுத்துட்டு வர சொல்றேன்..” என்றார் கெஞ்சலாக.
‘இல்லம்மா எனக்கு இப்பல்லாம் சரியா கண்ணே தெரியறதில்ல.. அவ்வளோ தூரம் வந்தா உடம்பு அலண்டு போய்டும், அப்புறம் மதிக்குத்தான் கஷ்டம்.. விசேசம் முடிஞ்சதும் மதி வாங்கி கொடுத்த சேலையை கட்டி என் பேத்தியை அனுப்பிவைம்மா.. நான் பார்க்கனும்.
அப்படியே தாமரையையும் ஒரு நாளைக்கு கூட்டிட்டு வாங்க.. என் பெரிய பேத்தியை பார்த்தே பத்து வருசத்துக்கு பக்கமா ஆயிருக்கும்.. கண்ணுக்குள்ள இருக்கிற மாதிரியேயிருக்கு..” என்றார்.
‘சரிங்கப்பா..” என்று மதியையும் அழைத்து, இருவரும் கிளம்பினர்.