“இப்ப எதுக்கு அவளை இங்க அழைச்சிட்டு வர சொன்ன தாத்தா?” என்றான் கோபமாக.
“என் பேத்தியை பார்க்க உன்கிட்ட கெஞ்சனுமோ?” என தாத்தாவும் எகிற.. “நீயும் தாத்தாதான்ற நினைப்பு கூட அவளுக்கில்ல. அவளை பொருத்தவரை உன் மருமகனோட அப்பாதான் தாத்தா.
அந்த உம்மனாம் மூஞ்சிக்காக என்கிட்ட மல்லுக்கு நிக்கிற, அவளுக்கு உன்மேல பாசமிருந்தா இன்னும் உன்னை கையில பிடிக்க முடியாது.” என நொடித்தபடி தான் வாங்கி வந்த பொருள்களை காட்டி, “மாலையும் பூவும் மட்டும் நாளைக்கு காலைல வந்திடும். வேற எதாவது வாங்கனுமா பார்த்து சொல்லு தாத்தா.” என்றான்.
மகன் இருந்திருந்தால் எத்தனை சந்தோசமாய் தங்கை மகளுக்கு சீர் செய்திருப்பான் என்றும், சொக்கத் தங்கமா என் பேரன் இருக்கையில தாமரையை யாரை கேட்டு வெளியே கொடுக்கிறிங்க என வாய் வரை வந்தது வார்த்தை.
ஆனால் மதிக்கு தாமரையை பிடிக்காதே.. இவன் சம்மதமில்லாமல் தான் பெண் கேட்டு, மகளும் மருமகனும் கொடுக்க சம்மதித்த பின்னே இவன் வேண்டாம் என்றுவிட்டால் தற்போதிருக்கும் உறவும் இல்லாமல் போய்விடுமே என்ற ஆற்றாமையு கண்ணீராய் வெளிக்கிளம்பியது.
“தாத்தா.. எந்த லோகத்துல இருக்க? எல்லாம் சரியா இருக்கானு கேட்டேனே.” என்றான் உயர்ந்த குரலில்.
“ஆங்.. எல்லாம் நிறக்க இருக்குய்யா.” என தழுதழுக்க.. “அதுக்கெதுக்கு அழற?” என கடுகடுத்தான்.
தாமரை நினைவில் மதியோடு மல்லுகட்டாமல் பெரியவர் அமைதியாக, பிறகுதான் நியாபகம் வந்தவனாய், “என்ன நிறக்க இருக்கு? அவ விசேசத்துல பழம், தேங்காய்னு ஏழெட்டு தட்டு அம்மா எடுத்துட்டு போனுச்சி, சீப்பு, சோப்பு, கண்மைல்லாம் வாங்கனும். உன்னை கேட்டேன் பாரு.” என முறைத்து “நான் போய் வாங்கிட்டு வந்திடறேன்.” என நகை, புடவையை பத்திரப்படுத்தி கிளம்பினான்.
அடுத்த நாள் அதிகாலையிலேயே ஐயர் வந்திட.. மஞ்சுவை உக்காரவைத்து நிறைய சாங்கியங்கள் செய்தார்கள்.
எட்டு வருடங்களாக தாமரையை தவிர்த்தவன் கண்கள் இன்று தாமரையிடம் நிலைகுத்தியது. முயன்று பார்வையை மஞ்சுவிடம் திருப்பியன் இவளை யாரு இந்த சாரியை கட்ட சொன்னது? இவளுக்கா சடங்கு?” என கடிந்தபடி அமர்ந்திருந்தான்.
தாமரை அவளின் சடங்கிற்கு எடுத்த சாரியை கட்டியிருந்தாள். தன் அண்ணன் நினைவாக காமாட்சிதான் கட்டப் பணித்தார்.
தாமரையின் சடங்கிற்கும் மதியழகன்தான் பணம் கொடுத்தான் என காமாட்சிக்கு தெரியாது. எங்கு கடன் வாங்கினார்களோ? எப்படி அடைப்பார்கள் என்ற கவலையில் எப்படி இவ்வளவு பணம் வந்ததென அப்பொழுதே அண்ணனிடம் கேட்டார்தான், ஆனால் மகன் சொல்ல வேண்டாம் என்றிருந்ததால் சொல்ல மறுத்த பைரவன், அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம், முதல்ல மருமக சடங்கை கவனி என்றிருந்தார்.
தாமரை சடங்கு முடிந்த பதினைந்தாவது நாளிலிருந்து பைரவனின் நாட்கள் மிக மோசமானது. மகனின் படிப்பு கெடும் என தனக்குள்ளே தன் வேதனையை மறைத்து தீராத துயரத்தை மதிக்கு விட்டு சென்றிருந்தார்.
தாமரையின் சடங்கு முடிந்து ஒரு மாதம்கூட முடிந்திருக்காத நிலையில் பைரவன் இறந்தார், கணவன் இறந்த பத்தாம் நாளே மதியின் அன்னை அழகம்மாளும் உயிர் துறந்தார். ஆமாம் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டார்.. அந்த நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்.
உயிரை மாய்த்துக்கொள்வதற்கு இரண்டு நாள் முன்பாக, எல்லோரும் நினைப்பதுபோல் உன் அப்பா விபத்துல சாகல.. என்றும் எப்படி இறந்தார் என்றும், நிச்சயமாக பழி வாங்கும் உணர்வு கூடாது, நல்லா படிச்சி நம்மளை மாதிரி ஏழைங்களுக்கு உதவியா இருக்கனும், வீடு கட்டி பொண்டாட்டி புள்ளையோட சந்தோசமா வாழனும், தாத்தாவை நல்லா பார்த்துக்கனும், அப்போதான் உங்கப்பா ஆத்மா சாந்தியடையும்.
அதைவிட்டுட்டு பழி வாங்குறேனு கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போய்ட்டா நாங்க பட்ட கஷ்டமெல்லாம் வீணாபோய்டும்.. உன்னை இங்கிலீசு பள்ளிகூடத்துல படிக்க வைக்க உங்கப்பா பட்ட கஷ்டத்தை நினைச்சிப்பாரு என வேதனையோடு எடுத்துரைத்தார்.
எப்படி இறந்தார் என சொன்னாரே தவிர, யாரால் எங்கு என மதியழகன் எத்தனை கெஞ்சி கேட்டும் மகனின் எதிர்கால நலன் கருதி மறைத்துவிட்டார் அழகம்மாள். தன் அன்னையும் இறந்திடுவார் என அப்போது தெரியாது மதிக்கு.
அன்னையின் நிம்மதிக்காக தற்சமயம் தந்தையின் இறப்பை விசாரிக்க வேண்டாம் என நினைத்தவனுக்கு அடுத்து வந்த பத்தாம் நாள் தன் கண்முன்னே அழகம்மாள் உயிர் துறந்ததில் மூர்ச்சையாகினான்.
அந்த துயரத்தோடு காமாட்சியின் மாமியாரால் மனக்கசப்பு வந்திட இரு குடும்பமும் பேசிக்கொள்வதில்லை. தாமரையின் நினைவு பின்னுக்கு தள்ளப்பட்டது.
தாய் தந்தையர் இறப்பிற்கு காரணமானவர்களை கண்டுபிடித்தாலும் அன்னை சொன்னது போல கொலை செய்து ஜெயிலுக்குப் போய் தாத்தாவை அனாதையாக்கிவிடக் கூடாது. தன்னை நம்பிதான் தாத்தா இருக்கிறார்.
தவிர தான் ஜெயிலுக்கு போனால் தந்தை எப்படி இறந்தார் என்று தாத்தாவிற்கு தெரிந்திடும், அப்படி மட்டும் நடந்தால் அவ்வேதனையிலேயே பெரியவர் உயர் பிரிந்திடும்..
வீட்டின் மிச்ச ஜீவன். பொக்கிஷமாய் அவரை பாதுகாக்கவேண்டும். அதற்கு தாத்தாவின் இறுதி நாள்வரை அவரோடு நானிருக்கவேண்டும். ஒரு பாவமுமறியா தந்தையின் இறப்புக்கு காரணமானவர்களையும் பழிவாங்கியே தீரனும்.. எப்படி? யார்? என்ற யோசனையிலேயே இறுகிப்போனான் மதியழகன்.
இரண்டு வருடங்களுக்கு பிறகு கதிரேசன் வேண்டுகோளுக்கிணங்கவும், மஞ்சுவின் பாசத்திற்கு கட்டுபட்டும் தன் அத்தை வீட்டிற்கு மதி போய்வர இருந்தான்.
இன்றுவரை தாமரைக்கு சீர் செய்ய மதிதான் பணம் கொடுத்தான் என மகளிடம் கூட சொன்னதில்லை பெரியவர். சொல்லக்கூடாதென்றில்லை, ஒற்றை மகனையும் மருமகளையும் பறிகொடுத்த துக்கத்தில் பேரன் பெருமைகளை சொல்லும் நிலையிலில்லை.
மகன் மருமகள் இறந்த துயரத்திற்கு நிகராக மதியின் கடின உழைப்பும், சிரிக்க மறந்த இறுகிய முகமும் பெரியவரை பெரும் வேதனையில் ஆழ்த்தியது.
வீடு கட்டியாச்சு.. நிறைய பணம் சம்பாதிக்கிற, என் உசிர் இருக்கும்போதே உன் கல்யாணத்தை பார்த்துடறேன் என, கடந்த இரண்டு வருடமாக கெஞ்சி, மிரட்டி, உண்ணாவிரதம் என பல முயற்சிகளை எடுத்துவிட்டார் பெரியவர். மதியிடம் எதுவும் வேலைக்காகவில்லை.
இயற்கை மரணமென்றாலே தாய் தந்தையர் இழப்பை தாளமுடியாது, சதியால் என்றால் எவரால்தான் தாங்க முடியும்.? மதியின் சிந்தனையெல்லாம் தந்தையின் மரணத்திலேயே நிலைத்திருந்தது.
துப்பு துலங்காதிருந்த தந்தையின் இறப்பிற்கு விடா முயற்சியாக இவன் எடுத்த சிரத்தையால் மூன்று வருடத்திற்கு முன்பாக, காரணமானவர்கள் யாரென்பது தெரிந்திருக்க, பேரதிர்ச்சியடைந்த மதியழகன் திருமணம் என்ற ஒன்றை மறந்தேபோயிருந்தான்.
தற்போது கிளம்பியிருக்கும் தாமரையின் திருமணப் பேச்சு ஆழ்மனதை புரட்டிப் போட்டிருக்க, அதையறியாமல் அவளின் திருமணம் என்னை பாதிக்கவில்லை, பாதிக்காது என தனக்குள் சொல்லிக்கொண்டிருக்கிறான்.
*** *** *** ****
அடுத்த நாள் காலை எட்டு மணிக்கு.. “தாத்தா, பூவும் மாலையும் வந்திடுச்சி, அதுக்காகத்தான் வெய்ட் பண்ணிட்டிருந்தேன். ஹாட் பாக்சுல இட்லி இருக்கு, கிண்ணத்துல காரசட்னி வச்சிருக்கேன். சாப்பிடாம இருந்திடாத. நான் கிளம்பறேன்.” என நான்கு பெரிய பைகளோடு காமாட்சி வீட்டிற்கு கிளம்பினான்.
மதியைக் கண்டதும்.. “அழகு மாமா..” என ஆர்பரித்தாள் மஞ்சரி.
“வா மதி.. ஐயர் வந்து அரை மணிநேரமாச்சு, உனக்காகத்தான் காத்திருக்கோம்.” என்று கதிரேசன் வரவேற்க, “பூ வர லேட்டாகிடுச்சி மாமா..” என இன்முகத்தோடே பதிலளித்து… ‘மஞ்சுகுட்டி.. உனக்கு ஒரு ஸ்பெசல் கிஃப்ட் இருக்கு..” என்றான் குறும்பாக.
பையிலிருந்து.. ‘டொன்டொடைய்ங்..” என்று ஜவுரி முடியை மதியழகன் எடுக்க..
‘போங்க.. நீங்கதான என் முடியை மாசமாசம் பார்லருக்கு கூட்டிட்டுபோய் வெட்டி விடறிங்க? வெட்டிவிடாம இருந்திருந்தா எனக்கும் தாமரை மாதிரியே நீளமா முடி வளர்ந்திருக்கும்..” என கோபித்தாள்.
‘உனக்கு இதுதாண்டா முயல்குட்டி மாதிரி அழகா இருக்கு.. இருந்தாலும் உனக்கு முடி வளர்க்கனும்னு இருந்தா இனிமே வெட்ட வேண்டாம்..” என்றான் சமாதானமாக.
‘என் மாமாக்கு முயல்குட்டிதான் பிடிச்சிருக்குன்னா நான் முயல்குட்டி மாதிரியே இருந்துக்கிறேன்.. உங்களுக்காக இன்னைக்கு மட்டும் இதை கொடுங்க.. ஒட்ட வச்சிக்கிறேன்..” என வாங்கினாள் இன்முகத்தோடு.
“அத்தை..” என தான் வாங்கி வந்த பொருள்களை மதியழகன் காமாட்சியிடம் ஒப்படைக்க, மஞ்சுவிற்காக புடவை மற்றும் நகைகளை ஒரு தட்டில் எடுத்து வைத்து, தோழிகளோடு நின்றிருந்த தாமரையிடம் சென்ற காமாட்சி, ‘தாமரை நீ போய் மஞ்சுக்கு சாரிகட்டி அலங்காரம் பண்ணி கூட்டிட்டு வா..” என அனுப்பி வைத்தார்.
ஒருமணிநேரம் கழித்து பட்டுப்புடவையில் அழகுப் பதுமையாய் மஞ்சு வெளியே வர.. பெருமையாய் பார்த்த மதி.. ‘என் முயல்குட்டி எப்படி வளர்ந்த மான் குட்டியானுச்சி?” என கொஞ்சி நெற்றியில் முத்தமிட்டான்.
‘இந்த தாமரை பூதான் முயல்குட்டியை மான்குட்டியா மாத்திடுச்சி..” என்று தன் அறையருகே நின்றிருந்த தாமரையை காண்பித்தாள் மஞ்சரி.
கதிரேசன் சொன்னதால் தாமரையும் பட்டுப்புடவை அணிந்திருந்தாள். அவளிற்கென இதுவரை புடவை எடுக்காததால் அவளின் சடங்கிற்காக வாங்கிய நீலநிற பட்டையே அணிந்திருந்தாள்.
ஜாக்கட்டை மஞ்சுவிற்காக வாங்கிச் சென்றிருந்த மதி, தற்போதுதான் மஞ்சுவின் சேரியோடு அதனையும் கொண்டு வந்திருந்தான். தற்போதைய அளவிற்கேற்ப அதனை தையல் பிரித்து அணிந்திருந்தாள் தாமரை.
புடவையில் உயரமும் சற்று கூடுதலாய் தெரிய, இடை தாண்டிய தன் நீண்ட பின்னலை முன்னே போட்டு வழக்கம்போல் நெருடிக்கொண்டிருந்தாள்.
டாலர் செயின், நெக்லஸ், ஜிமிக்கி, கல்பதித்த வளையல் என்று தேவதையாய் காட்சியளித்த தாமரையைவிட்டு அகல மறுத்தது மதியழகனின் கண்கள்.
விருந்தினர்கள் முப்பது பேர்வரை கூடியிருக்க, அவர்களின் சலசலப்பில் கவனம் திரும்பியவன், தனித்திருந்த சேரில் அமர்ந்தான்.
அதன்பிறகு பூஜை, நலங்கு, என அனைத்தும் மதியழகனை முன்னிருத்தியே நடக்க, இரண்டு மணிநேரம் மஞ்சுவோடு கழிந்தது.
விருந்திற்கான நேரம் வர, வந்தவர்கள் சாப்பிடவேண்டி ஒரு மணிநேரம் வரை பசிதாங்கிய கதிரேசனால் அதற்குமேல் தாளமுடியாமல் போக..‘ஆச்சி பசிக்குது..” என்றார்.
முடிந்தவரை இவர்கள் சாப்பிடும் நேரம் மதி எப்பொழுதும் வர மாட்டான்.. மற்ற நாளென்றால் பரவாயில்லை, இன்று மஞ்சுவின் விசேசம்.
ஆனால் மதியை சாப்பிட சொல்லும் தைரியமும் இல்லை. மதியை தவிர்த்து சாப்பிடவும் காமாட்சிக்கு மனமில்லை என்பதால் சங்கடமாய் கணவனை பார்த்தார்.
“சீர் செய்ய உரிமையிருக்கிறவனுக்கு சாப்பிட உரிமையிருக்காதா? இன்னைக்கு கூட சாப்பிடலனா எப்படி? நீ வா, நாம இரண்டுபேரும் சொல்லலாம்.” என மதியருகே வந்தனர்.
இதனை கண்டுகொண்ட மதியழகன்.. ‘அத்தை.. தாத்தா மஞ்சுவை அலங்காரத்தோட கூட்டிட்டு வரசொன்னார்.. நான் அவளை கூட்டிட்டு போறேன்..” என்றான்.
‘அழகுமாமா.. இந்த சாரியை கட்டிட்டு எப்படி பைக்ல உக்காருறது? சாரியும் வெய்ட்டா இருக்கு.. ஜடையும் வெய்ட்டா இருக்கு. தாமரைவேற இவ்ளோ பூ வச்சிவிட்டுட்டா..” என்று மஞ்சு முகத்தை சுருக்கினாள்.
‘டாக்சியில போலாம் மஞ்சு.. புக் பண்றேன்.” என்றான்.
“சாப்பிட்டு போலாம் மதி. இன்னைக்கு கூட சாப்பிடாம என்னை கஷ்ட்டப்படுத்தாத.” என்றார் வேண்டுதலாக.
தாமரையின் பாட்டி பேசியதை விட அவளின் திருமணப்பேச்சு மனதை வெகுவாய் காயப்படுத்தியிருக்க, “இதுல கஷ்ட்டப்பட என்னயிருக்கு மாமா? உங்களுக்கு சரின்னு படறதை நீங்க பண்றிங்க, எனக்கு சரின்னு படறதை நான் செய்யிறேன்..” என்றான் தன்மையாகவே.
பழையதை நினைத்துதான் வருந்துகிறானென “அவங்க பேசினதுக்கு நாங்க என்ன செய்வோம் மதி? எனக்காகவும், உன் மாமாக்காகவும் பார்க்கக்கூடாதா?” என கண்கலங்கினார் காமாட்சி.
“அத்தை.. எதுக்கு இப்போ அழறிங்க?” என கடுகடுத்தாலும், மதியும் காயப்படுகிறான் என்றறிந்த கதிரேசன், மேற்கொண்டு இவ்விசயத்தை பேச விரும்பாமலும், தன் மாமனார் சொன்னாலாவது சாப்பிடுவானா என்ற எதிர்பார்ப்போடு.. “சரி இங்க சாப்பிட வேணாம். நமக்கும், உங்கப்பாக்கும் சேர்த்து சாப்பாட்டை பேக் பண்ணு ஆச்சி, எல்லாரும் அங்க போய் சாப்பிடலாம்..
மாமா தாமரையைப் பார்த்து ரொம்ப நாளாய்டுச்சின்னார். இன்னைக்கு போனா அவரும் மஞ்சு விசேஷ சாப்பாடு சாப்பிட வைக்கலாம். தாமரையையும் பார்த்தமாதிரி ஆகிடும்..” என்றார் கதிரேசன்.
மஞ்சுவை வேறு அழைத்தாயிற்று, இனி எப்படி மறுப்பதென்றும்.. தன் மாமனாரை பார்க்க வருபவரை எப்படி மறுக்க என்றும்.. ‘அப்போ அப்பாவோட கார்லயே வந்திடு மஞ்சு. நான் பைக்ல முன்னாடி போறேன்..” என கிளம்பினான்.