வாசலில் அமர்ந்திருந்த பழனியப்பனின் அழுகுரலில் உள்ளிருந்த கதிரேசன், காமாட்சி தாமரை அனைவரும் அவசரமாய் வெளியே வந்தனர்.
பேண்ட் போட்டு சென்ற மதியழகன், தற்போது லுங்கியோடும், சோர்ந்த முகத்தோடு வந்திருக்க.. “என்னாச்சுங்க?” என தாமரையோடு அனைவரும் மதியருகே அருகே வந்தனர் பதட்டத்தோடு.
சீருடையில் இருக்கும் மித்ரனைக் கண்டதும், போன இடத்தில் ஏதேனும் சட்ட சிக்கல் ஆகிவிட்டதோ என.. “என்னாச்சு மதி?” என்று பதறினார் கதிரேசன்.
“ஒன்னுமில்ல மாமா, கால்ல மட்டும் சின்ன அடி, ஒரு வாரத்துல சரியாகிடும்.” என தேற்ற.. “எங்க.?” என லுங்கியை மேலேற்றி கதிரேசன் ஆராய.. “இவ்வளோ பெரிய கட்டு இருக்கு?” என கண்கலங்கினாள் தாமரை.
“ப்ச் தாமரை.. இதென்ன சின்ன பிள்ளையாட்டம்.?” என அதட்டி, “முதல்ல உள்ள போலாம், ரோட்ல போற வரவங்கள்லாம் பார்ப்பாங்க..” என்றான்.
“ஒரு நிமிஷம் மதி..” என உள்ளே போன காமாட்சி, ஆரத்தியோடு வந்து, திருஷ்டி கழித்து உள்ளே வர பணிக்க, கதிரேசன் உதவியோடு உள்ளே வந்தவன்.. “சார் உக்காருங்க, நான் போய் எடுத்து வரேன்.” என தனதறைக்குள் செல்ல முயல.. “என்கிட்ட கொடுத்தாலும், அதோட இன்னொரு காப்பி கலையரசன்கிட்ட இருக்கும்ல? அப்போ உன்கிட்ட இருக்கிறதை மட்டும் வாங்கி நான் என்ன செய்ய.?” என மறுத்து..
பழனியப்பனிடம்.. “பெரியவரே.. உங்க பேரன் லட்சியம் அது இதுனுட்டிருக்கான், இந்த முறை எதோ அதிஷ்டவசமா உயிர் தப்பினது, அதைவிட முக்கியம் கொலை பழிலயிருந்து தப்பினது..
நேத்து ஒரு லட்சியப்பணிக்காக கிளம்பினாரில்ல? அந்த சம்பவத்துல ஒரு கொலை நடந்துருக்கு.” என்க.. பேரதிர்ச்சியானார்கள் அனைவரும்.
“சார்..” என மதியழகன் கெஞ்சல் பார்வையிட.. “திரும்பவும் சொல்றேன், எல்லா நேரமும் உனக்கு சாதகமாவே அமையாது..
எவனாவது பெரிய புள்ளிகளோட பசங்க சம்மதப்பட்டதுனா, கேசை அப்படியே டைவர்ட் பண்ணிடுவாங்க, பெரிய சிக்கல்ல மாட்டிக்குவ, என் கன்ட்ரோல்ல இருக்க ஸ்டேஷன் தான்னாலும், என்னால ஹெல்ப் பண்ண முடியாது.
மேலிடத்துல என்ன சொல்றாங்களோ அதைத்தான் செய்தாகனும். கேட்கலன்னா என்னை டிரான்ஸ்ஃபர் பண்ணிடுவாங்க.. புதுசா வரவன் அவங்களுக்கு சாதகமா இருப்பான், அப்புறம் உன் அப்பா நிலைதான் உனக்கும் வரும். கேர்ஃபுல்லா இரு.” என கடுமையாக எச்சரித்து கிளம்பினார் மித்ரன்.
அழகம்மாளின் இறப்புதான் அனைவருக்கும் தெரியும் தவிர, பைரவனின் இறப்பு எப்படி நடந்ததென பழனியப்பன் உட்பட யாருக்கும் தெரியாது ஆதலால்.. “இன்ஸ்பெக்டர் என்ன மதி இப்படி சொல்லிட்டு போறாரு? உன் அப்பா நிலைதான் உனக்கும்னு எதுக்கு சொன்னார்? அண்ணாக்கு என்னாச்சு? அவரும் ஆக்ஸிடண்ட்ல சாகலயா?” என பரிதவித்தார் காமாட்சி.
“அச்சோ அப்படியில்லத்தை.. அப்பா இல்லாம அம்மா எவ்வளோ கஷ்டப்பட்டாங்க? அதை மீன்பண்ணி சொல்லிட்டு போறார்.” என சமாளித்தான் மதியழகன்.
மதி சொல்வதில் சமாதானமடைய முடியாமல் காமாட்சி தவிக்க.. “காமாட்சி.. போய் எதாவது ஜுஸ் போட்டு எடுத்து வா.” என அதட்டி அனுப்பி..
“மதி முதல்ல குளிக்கட்டும், போய் தேவையானதை எடுத்து வை தாமரை.” என மகளிடம் சொல்ல, தாமரை அறைக்கு போகவும்.. “காயம் ரொம்ப ஆழமா மதி.?” என்றார் கவலையாக.
“ஆமாம் மாமா, இரண்டு இஞ்ச் அளவுக்கு கத்தி இறங்கிடுச்சி. காலேஜ்க்கு வேற இன்னும் பத்து பதினைஞ்சு நாளைக்கு போக முடியாது போல.” என்றான் வருத்தத்தோடு.
“ப்ச்.. மாமா, அதான் படலயில்ல? விடுங்க. இனி கேர்ஃபுல்லா இருக்கேன்.” என்றான் இலகுவாக.
கதிரேசன்.. “மதி.. இன்ஸ்பெக்டர் சொல்றது ரொம்ப சரி. பணம் படைச்சவனுக்கு சட்டமெல்லாம் ஒரு மேட்டரே இல்ல. நல்லது செய்யப்போய், உன் வாழ்க்கையை தொலைச்சிடாத.” என்றார் மிகுந்த அக்கறையோடும் கெஞ்சலோடும்.
“மதி.. இன்ஸ்பெக்டர் சொல்றதை பார்த்தா, என் மச்சான் சாவுலயும் எதோ மர்மம் இருக்கும் போலயே.” என்றார் ரகசியமாக.
சற்று தள்ளி நின்றிருந்த பழனியப்பனை பார்த்தவன்.. “ஆமாம் மாமா, ஆனா அது யாருக்கும் தெரிய வேணாம், அந்த வேதனை என்னோட போகட்டும்.” என்றான் வேதனையோடு.
காமாட்சி ஜுஸ் கொடுக்க, வாங்கி பருகாமல் வைத்திருந்தான் தந்தையின் நினைவோடு.
“சரி ஜூஸ் குடி மதி.” என தேற்றி, குடித்ததும் மதியறைக்கு அழைத்து சென்று, பாத்ரூமினுள் விட்டு, “மதி ரொம்ப டையர்டா இருக்கான், எதுவானாலும் நாளைக்கு பேசிக்கலாம். இப்போ குளிக்க ஹெல்ப் பண்ணுடா.” என கண்ணிர் வடித்துக்கொண்டிருந்த மகளிடம் உபதேசித்து வெளியேறினார் கதிரேசன்.
கண்ணைத் துடைத்த தாமரை.. “வாங்க, இந்த ஸ்டூல்ல உக்காருங்க.” என்றாள்.
“எனக்கு குளிக்க வேணாம் தாமரை. டவல் பாத் போதும்.. அந்த பக்கட் தண்ணியை பக்கத்துல எடுத்து வச்சிட்டு, நீ போ. நான் பார்த்துக்கிறேன்.” என ஸ்டூலில் அமர்ந்தான்.
“இல்ல நான் ஹெல்ப் பண்றேன்.” என்க.. “ஹே.. காயம் கால்லதான், கை நல்லாத்தான் இருக்கு. போ.” என்றான் சிரிப்போடு.
“பரவால்ல நான் துடைச்சி விடுறேன்.” என்க.. “தாமரை ப்ளீஸ்.. போ நான் பார்த்துக்கிறேன்.” என்றான் பாவமாக.
பாத்ரூம் போவானா இருக்கும் என நினைத்து.. “சரி ரூம்ல இருக்கேன், எதாவது வேணும்னா கூப்பிடுங்க.” என வெளியேறினாள்.
பதினைந்து நிமிடத்தில் தன் வேலை முடித்து, சுவற்றைப் பிடித்தபடி மதி வரவும்.. “மாமா பாத்து.. ஸ்ட்ரெயின் பண்ணாதிங்க.” என பதறி மதியை தாங்க வந்தாள்.
மொத்த பாரத்தையும் அடிபடாத காலில் தேக்கி.. ஒரு கையால் தாமரை இடுப்பை வளைத்து.. “பார்டா.. தாங்கிடுவியா என்னை?” என இணைத்தான் தன்னோடு.
கண்ணீர் மழுக்கென வெளியேற… உடல் வலியில் இருப்பனுக்கு முதலில் ஓய்வுதான் முக்கியமென அமைதியாய் கட்டிலருகே வந்து, “உக்காருங்க.” என டிசர்ட் எடுத்து மாட்டிவிடப் போக, அப்பொழுதுதான் பார்த்தாள் முதுகிலிருந்த அடித்தடத்தை.
மதியின் நிறத்திற்கு உப்பிச் சிவந்திருந்த இடம், அடியின் தன்மையை அப்பட்டமாய் வெளிப்படுத்த.. “மாமா.. கட்டி வச்சு அடிச்சமாதிரி.. என்ன இப்படி..” என திணறியவளுக்கு பேச்சு வரவில்லை.
மதியழகனிற்கு முதுகில் வலியிருக்கிறதுதான், ஆனால் அடிபட்ட இடம் தெரியும் அளவிற்கு இருக்கும் என நினைக்கவில்லை ஆதலால்.. “ஏது? என்னை கட்டி வச்சி அடிச்சாங்களா? நல்லாயிருக்கு உன் கற்பனை.” என்றான் இலகுவாக.
ஓ.. தடிச்சிருக்கா? அதான் இன்னும் வலி போகல என நினைத்தவன்.. “இவ்வளோ ரிஸ்க் எடுக்கவும்தான் ஒன்பது வயசு சின்ன பொண்ணை காப்பாத்த முடிஞ்சது. உடம்புதான் வலிக்குதே தவிர, மனசுக்கு ரொம்ப இதமாயிருக்கு தாமரை.” என்றான் நிறைந்த மனதோடு.
இன்ஸ்பெக்டர் சொன்னது போல, வேறெதுவும் ஆபத்தாகியிருந்தால் என நினைக்க, பயத்தை பூசியது தாமரை முகம். “ம்.. என் தாமரை எனக்காக இப்படிலாம் கலங்குவான்னா, இன்னும் கூட அடி வாங்கலாம்.” என கண்ணிமைத்து இலகுவாக்க முயன்றான்.
சிறு பெண்ணை காப்பாத்தியிருக்கிறான். என்ன சொல்வாள்? எப்படி மறுப்பாள்? தினம் தினம் நாளிதழ்களில் பாலியல் வன்முறைகளை படிக்கும்போதும், தொலைக்காட்சி செய்திகளில் பார்க்கும் பொழுதும் குற்றவாளியின் குடும்பத்தார் முன்னிலையிலேயே குற்றமிழைத்தவனை நிற்க வச்சி சுடனுமென ஆத்திரமாக நினைப்பவள்.
தான் நினைப்பதற்கு மேலாக, தவறு நடக்கும் முன் அகப்பட்ட பெண்ணை காப்பாத்தியிருக்கிறான் கணவன். நியாயமாக பார்த்தால் பெருமைப் படவேண்டிய விசயம்தான். ஆனாலும் உயிருக்கு ஆபத்தாகியிருந்தால் என்ற பயம் வர, சுயநலமாகத்தான் யோசிக்கத் தோன்றியது.
இனியொருமுறை இப்படி செயல்கள் வேணாம் என மறுக்கவும் முடியாமல், ஆசைக்கணவனின் உயர்ந்த எண்ணத்திற்கு சம்மதிக்கவும் முடியாமல் தவித்தாள் தாமரை.
“ஹேய்.. என்ன அமைதியாகிட்ட?” என்க.. டீ சர்ட் அணிய கொடுத்து.. “இருங்க, எதாவது சாப்பிட எடுத்து வரேன்.” என வெளியேறினாள்.
“எனக்கென்னவோ என் மருமக சாவுக்கு காரணமானவனை பழிவாங்கப்போய்தான் இப்படி இழுத்துட்டு வந்திருக்கானோனு பயமா இருக்கு மாப்பிள்ள.” என கண்ணீர் விட்டார் பழனியப்பன்.
இப்படியும் இருக்குமோ என நினைத்த கதிரேசன். “ச்சே.. ச்சே.. அப்படிலாம் இருக்காது மாமா. மதி யாரையோ காப்பத்ததான் போயிருக்கான், அந்த இன்ஸ்பெக்டர் கூட அப்படித்தான சொன்னார்?” என்றார் தன் பதட்டம் மறைத்து.
“யார் சாவுக்கு யார் காரணம் தாத்தா? என்ன சொல்றிங்க? எனக்கு புரியல.” என்றாள் தாமரை.
“அது.. அது வந்து தாமர..” என பழனிப்பன் தடுமாற.. “உன் தாத்தாவே மதி இப்படி வந்திருக்கானேனு டென்ஷன்ல இருக்கார்.. நீ வேற ஏன் துருவி துருவி கேள்வி கேக்குற? போய் மதியை கவனி.” என அதட்டினார் கதிரேசன்.
“ம்மா.. உண்மையாவா?” என பேரதிர்வோடு கேட்டவள்.. உடனே மதியறைக்கு செல்ல முயல.. “தாமர.. அம்மா சொல்றது அத்தனையும் உண்மை. ஆனா இந்த விசயத்தை பத்தி மதிகிட்ட இப்போ எதுவும் கேட்காத. முதல்ல அவன் உடம்பு நல்லாகட்டும்.” என கண்டித்தார் கதிரேசன்.
“ஏன்ப்பா என்கிட்ட சொல்லலை?” என்றாள் வேதனையாக.
“எனக்கே உன் கல்யாணத்துக்கு பத்து நாள் முன்னதான் தெரியும்.” என்க.. இங்கு பேசுவது மதிக்கு கேட்கவே.. தன் மாமாவை அழைத்தான் சத்தமாக.
கதிரேசன் உள்ளே வர.. “இப்போதான் என் மனநிலையை மாத்தியிருக்கேன், பழசை பேசி என்னை ரணமாக்காதிங்க மாமா. இனி எப்பவும் என் அம்மா பத்தின இறப்பை பத்தி பேசக்கூடாது.” என்றான் கட்டளையாக.
“சரி மதி.” என கதிரேசன் ஆமோதிக்க.. “பழனியப்பன் உள்ளே வந்தார். “சாப்பிட்டியா தாத்தா?” என்றான்.
பழனியப்பன் கேள்விக்கு பதிலளிக்காமல்.. “எனக்கெதாவது ஒன்னுனா உன்னால தாங்க முடியாதுனு எனக்கு தெரியாதா தாத்தா.? உனக்காகவே என்னை நான் பார்த்துக்குவேன் தாத்தா.” என்றான் ஆறுதலாக.
“எனக்கென்னடா? வயசானகட்டை. இனி செத்தாலும் கவலையில்ல, உன்னை நம்பி தாமரை இருக்கு.. அதை மனசுல வை..” என்றார் கோபமாக.
“நான் கிளம்பும் போது மறுப்பே சொல்லாம அனுப்பி வச்ச வீர மங்கை தாத்தா என் பொண்டாட்டி. அதனாலதான் வெற்றியோட திரும்பி வந்திருக்கேன்.” என்றான் மெச்சுதலாக.
“வீரமெல்லாம் நீ நல்லாயிருக்கும் வரை மட்டும்தான். உன் வீர மங்கைக்கு நீ இல்லாம நேத்தெல்லாம் சோறே தொண்டைக்குள்ள இறங்கல. எப்போ வருவியோனு விடிய விடிய முழிச்சிட்டேயிருந்து, விடியகாலம்தான் கண்ணசந்துச்சி..” என கோபமாய் எடுத்துரைத்து..
“கல்யாணமாகி இரண்டு நாள்தான் ஆகுது. இன்னும் பந்தல் கூட பிரிக்கல, அதுக்குள்ள காலை உடைச்சிட்டு வந்திருக்க..” என்றார் வேதனையாக.
“ப்ச் தாத்தா.. இந்த காயம் பத்து நாள்ல சரியாகிடும். அவளே பயந்துட்டிருக்கா. நீ வேற..” என்றான் சோர்வாக.
“எதாவது சாப்பிடுறிங்களா?” என்றாள் தாமரை.
“காலைல டிபன் சாப்பிட்டுதான் வந்தோம்.” என மதி மறுக்க.. “அப்போ ரெஸ்ட் எடுங்க.” என்று தாமரை சொல்ல, “நீயும் நைட்டெல்லாம் தூங்கல, கொஞ்ச நேரம் படு தாமரை. மஞ்சு ஸ்கூல்விட்டு வரவும் கூட்டிட்டு வரேன்.” என வெளியேறினர் கதிரேசனும் காமாட்சியும்.