காமாட்சியும் கதிரேசனும் கிளம்பிய பின்னே, உண்மையில் பெண்ணை காப்பாற்றத்தான் போனாயா என விசாரித்து, அங்கு நடந்ததை கேட்டறிந்த பின்னே.. முன்புபோல் தன் மகன் மருமகள் படத்தை எடுத்து வந்து, இனி இப்படி வம்பிற்கு போகமாட்டேன் என சத்தியம் செய்ய சொல்லி மிரட்டினார் பழனியப்பன்.
“இலக்கற்ற வாழ்க்கை அர்த்தமற்ற வாழ்க்கை போல தாத்தா.. அப்படி வாழ்க்கைக்கு உடன்படுவதை விட மன்னிக்க முடியாத குற்றம் வேறெதுவும் இல்லை.” என தாய் தந்தையர் மீது சத்தியம் செய்ய மறுத்தான் மதியழகன்.
பிறகு கெஞ்சிப்பார்த்தார், உண்ணாவிரதம் இருப்பதாய் மிரட்டினார்.. ஆனால் மதியிடம் ஏதும் வேலைக்காக்காமல் போகவே, கோபித்தவராய் வெளியேறினார் பழனியப்பன்.
பழனியப்பனை சமாதானம் செய்ய தாமரை பின்னோடு வர, பேரன் பேத்திக்கு தனிமை கொடுக்க நினைத்து.. “நீயாவது அவனுக்கு எடுத்து சொல்லு தாமரை. நான் சித்த நேரம் படுக்கறேன்.” என தன்னிடத்திற்கு போக.. தாமரை மதியிடம் வந்தாள்.
தாமரை முகம் வாடியிருக்க.. “கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தா தாத்தா சரியாகிடுவார். ஃப்ரீயா விடு.” என்றன் இலகுவாக.
“பாவம் தாத்தா..” என்றவள், சிறு இடைவெளிக்கு பின்னே “நானும்தான்.” என்றாள் பாவமாக.
“எங்கம்மா இறப்பு எப்படினு தெரிஞ்சுமா இப்படி பேசுற தாமரை?” என்றான் அர்த்தமான பார்வையோடு.
“மாமா..” என தவித்த தாமரை கண்கள் கலங்கவே.. தன்னருகே அமர்த்திக்கொண்டு.. “அவனால பாதிக்கப்பட்டோம்னு நினைச்சி நினைச்சி நொந்து போறதை விட, நம் பாதிப்பை போல் வேறெவர்க்கும் நடந்திடக்கூடாதென நினைக்கிறதுதான் சிறப்பு.
நினைப்பை செயலாக்கினால் இன்னும் சிறப்பு. என்னை சிறப்பா வாழ வைப்பியா?” என்றான்.
தாமரை விழிவிரிக்க.. “கல்லூரியில் போதிப்பதை போல, இதுவும் ஒரு வகையான கற்றுக் கொடுத்தல்தான் தாமரை.. கல்லூரி பாடம் நடத்த அறிவிருந்தா போதும், ஆனால் இப்படி பாடம் கத்துக்கொடுக்க உடல்பலம், மனபலம்னு எல்லாமும் வேணும்.. உடல் பலம் என்னோடது, அதை நான் பார்த்துக்கிறேன்.. ஆனா மனபலம்.. அது நீதான் கொடுக்கனும்.” என்றான் யாசகமான பார்வையோடு..
“மாமா..” என தாமரை தடுமாற.. “கதவை சாத்திட்டு பக்கத்துல வந்து படு.” என நகர்ந்து படுத்தான்.
மனபலம் என்ற பெயரில் எங்கே தன் வாய்மொழியாலே இப்படியான செயல்களுக்கு சம்மதம் வாங்கிடுவானோ என்ற யோசனையோடு மதி சொன்னதை செய்த தாமரை.. “எனக்கு பாடம் எடுக்காம கொஞ்ச நேரம் தூங்குங்க.” என்றாள்.
“சரி பாடம் எடுக்கல.” என ஒப்புகொடுத்து.. “ஆனா என்மேல எப்போ விருப்பம் வந்ததுனு சொன்னாதான் தூங்குவேன்.” என்றான் குறும்போடு.
“ம்.. இன்னொரு காலையும் உடைச்சிட்டு வாங்க, அப்போ சொல்றேன்.” என்றாள் ஆற்றாமையோடு.
தள்ளிப் படுத்திருந்த தாமரையை தனதருகே இழுத்தான். தாமரை முகம் திருப்ப.. “நமக்கு கல்யாணம் ஆகி இன்னையோடே மூனுநாள்தாண்டி ஆகுது.. அதுக்குள்ள பழைய மோடுக்கு போய்ட்ட.” என்றான் கிண்டலாக.
“பழைய மோட் னா.?” என தாமரை புருவம் சுருக்க.. கல்யாணத்துக்கு முன்ன உர்ருனு இருப்பியே, அந்த மாதிரி.” என்றான் முகத்தை சுழித்துக்காட்டி.
“என் மூஞ்சே இப்படித்தான்.” என நொடிப்பாய் சொல்லி, “நான் கூட எதோ டீமோட போவிங்கனு நினைச்சேன், இப்படி தனியா போயிருக்கிங்க. எதாவதுனா நான் என்ன பண்ணுவேன்.” என்றவளின் கலங்கிய கண்களிலும், கன்னத்திலும் மதி முத்தமிட, பேச்சு நின்றது தாமரைக்கு.
“நீங்க இல்லாம நேத்து நைட் தூக்கமே வரல.” என்றாள் பெருகிய கண்ணீரோடு.
தாமரையின் கண் துடைத்து விட்டு, “சரி இப்போ தூங்கு.” என்றான் அக்கறையாக.
“இந்த காயத்தை பார்த்த பின்ன சுத்தமா தூக்கம் போச்சு.”
இப்படி செயல்களுக்கு போக வேண்டாம் என மறுப்பாளோ என.. “இப்போ என்ன சொல்ல வர தாமரை?” என மதியழகன் ஆழ்ந்து பார்க்க.. “இனி தனியா போகாதிங்க, ஒரு நாலஞ்சு பேரை உங்களோட சேர்த்துக்கோங்க, நீங்க கூப்பிட்டா காலேஜே உங்க பின்னாடி நிக்கும்.” என்றாள் கெஞ்சலாக.
தாமரையின் பேச்சு பெருத்த நிம்மதியளிக்க.. “அப்படி செய்தா படிக்கிற பசங்களை நானே வன்முறைக்கு தூண்டிவிட்ட மாதிரி ஆகிடும் தாமரை.. சில பசங்க இதையே அட்வான்ட்டேஜா எடுத்துக்கிட்டு தவறான வழியில போய்டுவாங்க.” என்றான் பொறுமையாக.
தாமரை அதிருப்தியாய் பார்க்க.. “ஆனாலும் நீ சொல்லி மறுப்பேனா? படிக்கிற பசங்கதான வேணாம்னேன்? படிச்சி வேலைலயிருக்க மெச்சூர்ட் பசங்கள்ல நல்லவங்களா பார்த்து நாலு பேரை சேர்த்துக்கிறேன்.” என்றான்.
“நிஜம்மா.?”
“நிஜம்மாதான்.. இப்படி செய்யாதே, அப்படியிப்படின்னு ஆர்பாட்டம் பண்ணாம இந்தளவுக்கு எனக்கு சப்போர்ட் பண்றதே பெரிய விசயம். உனக்காகவும், தாத்தாக்காகவும் இனி தனியா போகமாட்டேன். முடிந்தவரை கேர்ஃபுல்லாவும் இருப்பேன். சரியா?” என்றான்.
பிறகுதான் “ம்.” என்றாள் தெளிந்த முகத்தோடு.
தன்மீதான தவிப்பில் தன்னையறியாமல் தன்னோடு இழைந்திருக்கும் தாமரையை காதலோடு பார்த்தவன்.. “ம்.. அலைந்து திரிந்து தேன் குடிப்பது மட்டும் போதையல்ல, சில நேரங்களில் வண்டின் மீது மலர் படர்வதும் கூட எளிதில் கிடைக்காத போதைதான்.” என்றான் கிறக்கமாக கண்ணிமைத்து.
“இதென்ன போதை கீதைன்னுட்டு.?” என சிவந்த தாமரை.. “உங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு தவறான வழியில போகாம இப்படி முடிவெடுத்து பெருமையாத்தான் இருக்கு. ஆனா எதாவது தவறு நடந்துடுச்சினான்ற பயமும் இருக்கு.” என பேசியபடி மதியிடமிருந்து சற்று தள்ளிப் படுத்தாள்.
தாமரையிடம் நகர்ந்து படுக்க முற்பட்டவன் வேண்டுமென்றே அதீத வலியிருப்பதை போல் முகத்தை சுருக்கினான். அடுத்த நிமிடம் தாமரையாக அவனிடம் நெருங்கினாள். மகிழ்ந்தவன்.. “ஒரு தவறும் நடக்காது.” என தேற்றினான் புன்னகையோடு.
மதியின் ஓய்விற்காக.. “சிரிச்சது போதும், கொஞ்ச நேரம் தூங்குங்க, எனக்கும் தூக்கம் வருது.” என கண்மூடினாள் தாமரை.
“டையர்டாதான் இருக்கு.. ஆனா தூக்கம் வரமாட்டுக்குது.. உன் காதலைத்தான் சொல்ல மாட்டுக்கிற, என் காதலை சொல்றேன்.. கேக்குறியா?” என்றான் உல்லாச மனநிலையில்.
தாமரை பதிலின்றி இருக்க.. “எட்டு வருசம் உன்னையே நினைச்சிட்டிருந்தாலும் நீ கிடைப்பன்ற நம்பிக்கையில்லாம் கொஞ்சம் கூட இல்ல. உன் வாழ்க்கை அவ்வளோதானு நினைச்சிருந்த நேரம், திடீர்னு என்னை பிடிச்சிருக்கிறதா சொல்லவும் சொக்கிப்போய்ட்டேன்.” என்றான் மயக்கத்தோடு.
“இதையே எத்தனை முறை கேக்குறது? சலிப்பா இருக்கு. பேசாம தூங்குங்க.” என்றாள் கண்மூடிய நிலையிலேயே.
“அப்போ வேற பேசறேன்.” என்றவன்.. தாமரையை தன் தலைக்கு நிகராக மேலேற்றி.. “உன் சிரசிலிருந்து பாதம் வரை உன்னுடலில் படிப்படியாய் என் சிரம் தாழ்ந்தபோதுதான், வாழ்வின் முழு சொர்கம் கண்டேன்.” என கிசுகிசுக்க.. “அச்சோ மாமா. உளறாம தூங்குங்க.” என இறுக்கி கண்மூடினாள் தாமரை.
சிரித்தவன்.. “இனி அந்த சொர்கம் கிடைக்க எத்தனை நாளாகுமோ? அதுவரை கொஞ்சம் கருணையோட இப்படி படு.” என தாமரை கையை எடுத்து தன்மீது போட்டுக்கொண்டான் மன நிறைவோடு.
** ** ** ** **
மாலை நான்கு மணிபோல் தாமரை எழ.. ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான் மதியழகன். “அச்சோ தாத்தாக்கு சாப்பிடக் கொடுக்கலையே.” என்ற பதட்டத்தோடு அவசரமாய் வெளியே வந்தாள்.
தாமரை பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த மதியின் மனம் மேலும் மேலும் மயங்கியது தாமரையிடம்.
** ** ** ** **
மாலை பள்ளி முடித்து பெற்றோரோடு வந்த மஞ்சு, மதியின் காயம் பார்த்து அழ ஆரம்பிக்க.. பழனியப்பன், கதிரேசன் என யார் சமாதானம் செய்தும் அவளின் அழுகையை நிறுத்த முடியாமல் போக, “ப்ளீஸ் மஞ்சு, அழாதேடா.” என மன்றாடி கெஞ்சிக்கொண்டிருந்தான் மதியழகன்.
கல்லூரியில் இவனின் மதிப்பென்ன? தற்போது தங்கையை சமாதானப்படுத்த கெஞ்சுவதென்ன? என பெருமையோடு பார்த்திருந்த தாமரை.. “பத்தல.. பத்தல.. இன்னும் கெஞ்ச வை மஞ்சு.” என்றாள் சிரிப்போடு.
“அடியேய்.. மஞ்சுகுட்டியை சமாதானப்படுத்தாம, இன்னும் அழ வைக்கிற..?” என மதி தாமரையை முறைக்க.. “மாமாக்கு அடிபட்டுருக்கு.. உனக்கு என்ன சிரிப்பு.?” என மஞ்சுவும் முறைக்க.. மஞ்சுவின் அழுகை நின்ற நிம்மதியோடு.. “அதானே நல்லா கேளு மஞ்சு.” என்றான் புன்னகையோடு.