பூப்பெய்தும் முன் பிறந்த நாள்களில் அன்னையோடு பல முறை வந்திருக்கிறாள் தாமரை. அப்பொழுது ஓட்டு வீட்டில்தான் இருந்தார்கள்.
மதியழகன் அறிவியல் துறையில் எம்.பீல் முடித்ததும்.. புகழ்பெற்ற தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலைக்கு சேர்ந்தான்.
வேலைக்கு சேர்ந்து ஒரு வருடம் ஆனதும் இரண்டு பெட்ரூம், ஹால் கிச்சன் என அவனின் பட்ஜட்டிற்கு வீட்டை கட்டியிருந்தான்.
‘மதி.. வீட்டுக்குள்ள இருந்தா வெளி ஜனங்களை பார்க்க முடியாம ஜெயில்ல அடைச்ச மாதிரி இருக்குய்யா. ஒருமாதிரி மூச்சடைக்கிற மாதிரி இருக்கு.. பழைய வீட்டை கொட்டாவா மாத்து.. நாலு சனங்களை பார்த்தாதான் பொழுது போகும்.” என்றார் பழனியப்பன்.
தன் தாத்தாவின் ஆசைப்படி முன்பு பெற்றோரோடு வசித்த இரண்டு ரூமை ஒன்றாக மாற்றி, வெளியே பாத்ரூமும் கட்டியிருந்தான்.
முன்பு வாடகைக்கு வீடெடுத்து டியூஷன் நடத்தி வந்தவன் தற்போது இவ்விடத்தையே டியூஷன் எடுக்கவும் பயன்படுத்திக்கொண்டான்.
தாமரை பனிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போதுதான் வீட்டை கட்டி முடித்தான். பால் காய்ச்சும் விழாவிற்கு தாமரை வரக்கூடாது என்பதற்காகவே அவளின் அரையாண்டு தேர்வின்போது பால் காய்சினான்.
இவ்ளோ அழகா வீட்டை கட்டிட்டு ஒரு கணபதி ஹோமம் பண்ணியிருக்கலாமில்ல மதி? என்று கதிரேசன் கேட்டதற்கு.. எங்கப்பாம்மா ஆத்மாவும், தாத்தாவோட ஆசியும் போதும் மாமா. அதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை..
அதோட காலேஜ் செமஸ்டர் போய்ட்டிருக்கு.. லீவ் போட முடியாது என்றுவிட்டான்.
தாமரையை வீட்டிற்கு அழைப்பதற்கு எந்த அளவிற்கு மதிக்கு விருப்பமில்லையோ.. அதே அளவிற்கு அவளில்லாமல் இப்படி பூஜைகள் வைக்கவும் மனமில்லை மதியழகனுக்கு.
புது வீடு கட்டிய பின்னே தாமரை முதன்முதலாக தன் வீட்டிற்கு வருகிறாள் என்ற நினைப்போடே, காலையில் தாத்தாவிற்கென அரைத்த சட்னி இருக்க, தோசை வார்த்துக்கொண்டிருந்தான். கதிரேசன் குடும்பத்துடன் காரிலிருந்து இறங்கினார்.
மகளின் வரவை எதிர்பார்த்தபடி பெரியவர் வீட்டிற்கு முன்னிருக்கும் டாப்பில்தான் அமர்ந்திருந்தார். ‘அப்பா..” என உள்ளார்ந்து அழைத்தபடி வந்த காமாட்சி.. தன் மகள்களை தந்தையிடம் ஆசீர்வாதம் வாங்கப் பணித்தார்.
தாமரையும் மஞ்சரியும் பெரியவர் பாதம் பணியவும்.. ‘நோய் நொடி இல்லாம எல்லா வளத்தோடவும் நூறாயிசுக்கு நல்லாயிருத்தா..” என்று ஆசீர்வதித்து..
‘இந்த சேலைதான் உன் அழகுமாமன் எடுத்து கொடுத்தானா? உனக்கு நல்லா இருக்கு சாமி..” என்று மஞ்சுவை கண்ணில் நிரப்பினார் பெருமையாக.
பிறகு தாமரையிடம்.. ‘நல்லாயிருக்கியாத்தா? எத்தனை வருசமாய்டுச்சி உன்னை பார்த்து..” என்று கண்கலங்கினார்.
‘நல்லாயிருக்கேன் தாத்தா.. என்று அவரோடே அமர்ந்துகொண்டாள் தாமரை.
“தாத்தா நான் மாமாவை பார்க்க போறேன்.” என உள்ளே வந்த மஞ்சரி.. ‘அழகுமாமா..” என மதியைத் தேட.. சமையலறையிலிருந்து வெளியே வந்த மதி.. ‘வாங்கத்தை.. வாங்கமாமா..” என்றான்.
“மாமாகிட்ட பேசிட்டு வரேன் மதி.” என்றவர் பெரியவரின் நலம் விசாரித்து.. “உள்ள வாங்க மாமா, மஞ்சுவோட விசேஷ சாப்பாடு கொண்டு வந்திருக்கோம். எல்லாருமா உக்கார்ந்து சாப்பிடலாம்.” என்றார் கதிரேசன்.
காலை பதினொரு மணியாகியிருக்க.. “இம்புட்டு நேரம் சாப்பிடாம இருந்தா மதி கத்துவான் மாப்பிள்ளை, நான் அப்பவே சாப்பிட்டுட்டேன், நீங்க போய் சாப்பிடுங்க.” என்றார்.
“கொஞ்சம் போல சாப்பிடுங்கப்பா.” என காமாட்சி கேட்க, “இப்படி விசேஷ சாப்பாடெல்லாம் எனக்கு செமிக்கிறதில்ல கண்ணு, திங்காம இருந்திருந்தா கூட ஆகியிருக்கும், மூனு இட்டிலி திண்ணுட்டேன், மறுபடி சாப்பிட்டு வயித்துக்கு ஆகலைன்னா மதிக்குத்தான் சிரமம், இனி ராத்திரிக்குத்தான் சாப்பிடுவேன். கோவிச்சிக்காம மொதல்ல புள்ளைங்களுக்கு சாப்பிட கொடு. பழமிருந்தா எடுத்து வை, நேரங்கழிச்சி சாப்பிட்டுக்கிறேன்.” என்றார் தன்மையாகவே.
“எல்லாரும் வருவோம்னு தெரிஞ்சிருந்தா கொஞ்சம் முன்னாடியே வந்திருப்பேன்ப்பா, சட்டுனு எடுத்த முடிவுதான்.” என்றவர், சிறு தயக்கத்தோடு, “உள்ள வந்து மதியை விசேஷ சாப்பாடு சாப்பிட சொல்லுப்பா, நீ சொன்னாதான் கேட்பான்.” என்றார் சன்னக்குரலில்.
“நான் சொல்லி சாப்பிட்டுருவானா?” என நம்பிக்கையின்றி சொன்னவர்.. “மஞ்சுவை விட்டு சொல்ல சொல்லு, அந்த குட்டிக்குனா என்னன்னாலும் செய்வான். கூடவே நீயும் இரண்டொரு முறை சொல்லு.. சாப்பிடுவான்.” என்றார்.
இதற்கு மேல் கணவர் பசி தாளமாட்டார் என.. “சாப்பிட்டு வந்து தாத்தாகிட்ட பேசிக்கலாம், வா தாமரை.” என மகளை அழைக்க, “வீட்டுல பழம் சாப்பிட்டேன்ம்மா, எனக்கும் பசிக்கல, நீங்க போய் சாப்பிடுங்க, நான் தாத்தாவோட பேசிட்டிருக்கேன்.” என்றாள்.
தன் தந்தையை நீண்ட வருடங்களுக்கு பிறகு சந்திக்கிறாள், பேசியிருந்துதான் வரட்டுமே என.. “சரி பேசிட்டிரு..” என உள்ளே போனார்.
“உன்ன தோசை சாப்பிட வச்சி பார்க்கத்தான் அங்கயிருந்து எல்லாம் எடுத்துட்டு வந்தேனா?” என காமாட்சியும் பொறுமலாய் கேட்க, “என் பொண்ணுக்கு சீர் செய்ய உனக்கு எவ்வளோ உரிமையிருக்கோ.. அதே உரிமை உன்ன சாப்பிட சொல்லவும் எங்களுக்கிருக்கு. சாப்பிட வா மதி.” என்றார் கதிரேசனும்.
சோறு திங்க கேட்க உரிமையிருக்கும், பொண்ணை கட்டி கொடுக்க மட்டும் கேட்காம கொள்ளாம முடிவெடுப்பாங்க என மனதில் மருகியவன்.. மஞ்சரியின் எதிர்பார்ப்பு எண்ணி “எடுத்து வைங்கத்தை சாப்பிடறேன்.” என்றான் சிரிப்பின்றி.
மதியின் முகம் கண்டு, ‘உங்களுக்கு பிடிக்காததை எனக்காக கஷ்டப்பட்டு செய்யிறிங்களா மாமா?” என்றாள்.
‘என் மஞ்சு குட்டி கேட்டு எனக்கு பிடிக்காம போகுமா? பிடிச்சிதான் நான் சாப்பிடறேன்.. வா..”
‘அம்மா.. சீக்கிரம் எல்லாம் எடுத்து வைங்க..” என்று அவசரப்படுத்தினாள் சந்தோசத்தோடு.
மலர்ந்த முகத்தோடு கதிரேசன் சாப்பிட அமர, காமாட்சி இலைகளை வைக்க.. அப்பொழுதுதான் தாமரை இன்னும் உள்ளேயே வரவில்லை என்பதை உணர்ந்தான் மதியழகன்.
“அம்மா தாமரை அப்பவே பசிக்குதுனா, நான் போய் கூட்டிட்டு வரேன், அவளுக்கும் எடுத்து வை.” என வெளியே வந்தவள்.. ‘ஏன் தாமரை இங்கையே உக்கார்ந்திட்ட? உள்ள வா சாப்பிடலாம். மாமா இன்னைக்கு நம்ம சாப்பாடு சாப்பிட சம்மதிச்சிருக்காங்க..” என்றாள் சந்தோசமாக.
‘எனக்கு பசியில்ல மஞ்சு, அப்புறம் சாப்பிடறேனு அம்மாகிட்ட சொல்லிட்டேன். நீ போ..”
உள்ளிருந்து தாமரை சொன்னதை கேட்டவன்.. “உங்க பொண்ணு உள்ள வராம அப்படியே கிளம்ப போறாளாத்தை?” என்றான் காமாட்சியிடம்.
தாமரை உள்ளே வராததற்கு தவறாக நினைக்கிறான் என.. “அப்படியில்ல மதி, அப்பாவோட பேசிட்டிருக்கேன்னா, இதோ கூப்பிடறேன்.” என கணவனுக்கு பரிமாறி, மகளை அழைக்க வெளியே போக,
“தாத்தாதான என்ன பார்க்க கேட்டார், நான் இவரோடவே இருக்கேன்.” என்றாள்.
“அச்சோ மெல்ல பேசுடி. மதி கேட்டு வைக்க போறான்..” எனக் கடிந்து, “உங்க ஆயா கூடத்தான் மதியை ரொம்ப அவமானப்படுத்தினாங்க, ஆனாலும் உங்கப்பா கேட்டதும் நம்ம பாதுகாப்புக்காக நம்ம வீட்டுக்கு வரான்தான? உனக்கென்ன இவ்வளோ வீம்பு? உள்ள வா. இல்ல மதி தப்பா நினைப்பான்.” என்றார்.
“அச்சோ.. இன்னைக்குத்தான் நம்ம வீட்டு சாப்பாட்டை சாப்பிடறேன்னான், நீ எதாவது இழுத்து விட்டுடாத தாமரை, காலத்துக்கும் அதையே நினைச்சி மருகுவான். தயவு செய்து உள்ள வாடி.” என்றார் தவிப்பாக.
“இன்னைக்குத்தான் நம்ம சாப்பாடு சாப்பிடறேன்னுருக்கார், என்னை கண்டாலே அவங்களுக்கு ஆகாது, முதல்ல அவங்க சாப்பிடட்டும், நான் அப்புறம் வரேன். நீ போ உள்ள..” என்றாள் சம்மதமாக.
அதற்கும் காமாட்சி எதோ சொல்ல வர, தாமரையிடம் தன் பேரன் விலகியிருப்பதால் உள்ளே போக முரண்டுகிறாள் என்றுணர்ந்த பழனியப்பன்.. “அதான் பேத்தி சொல்லுதில்ல, நீ போ காமாட்சி, சித்த பேசியிருந்துட்டு அனுப்பி வைக்கிறேன்.” என்றார்.
மதி என்ன நினைப்பானோ என வாடிய முகத்தோடு காமாட்சி உள்ளே வர.. தான் அழைக்காததால் உள்ளே வர மறுக்கிறாள் எனப்புரிந்த மதி வெளியே வந்தான்.
வீடு தேடி வந்த புள்ளையை இவனும்தான் ஒத்த வார்த்தை வான்னு சொன்னா என்னாகிடுவான்? என நினைத்த பழனியப்பன்.. “பாடம் நடத்துற வாத்தின்னாலும், சில நேரம் ஈக்கு போக்கு தெரியதில்ல தாமரை, ஆனா பாசக்காரன். அவன் கூப்பிடலனு தப்பா நினைக்காத. இது உன் தாய்மாமன் வீடு, உனக்கில்லாத உரிமையா?” என பெரியவர் தேற்ற.. தாமரை அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.
“சரி விடு, சித்த கழிச்சி போய்க்கலாம்.” என தாமரைக்காக பரிந்து பேசி.. ‘ஏன் தாமர, தலைக்கு ஒரு முழம் பூ வச்சிருக்கலாமில்ல? வயசுபுள்ள நாளுங்கிழமையுமா இப்படியா வெறும் தலையோட வெறுக்குனு இருப்ப?”
‘அம்மா வாங்கி வைக்க மறந்துட்டாங்க போல தாத்தா.. அதான் வைக்கில..” என்றாள்.
‘அம்மா வாங்கி வைக்கலன்னா என்ன? சீருக்கு வைக்கிறதுக்குன்னு மதி நிறைய பூ வாங்கிட்டு வந்திருந்தானே?” என்றார்.
‘அவர் மஞ்சுக்கு வாங்கிட்டு வந்தார் தாத்தா.. நான் எப்படி அதை வைக்க முடியும்?”
‘அந்த பூவை நீ வைக்கக் கூடாதுன்னு சொன்னேனா?” என்றான் கோபமாக.
இவன் வரவை எதிர்பாராத தாமரை அமைதியாக தலைகுனிந்தாள். ’எங்க ரெண்டு பேருக்கும் ஊடால நீ எதுக்குடா வர? பூவை வைக்க வேணாம்னு சொல்லலைன்னாலும்.. வச்சிக்கோன்னு சொன்னியா?” என்றார் தாமரைக்காக.
இவகிட்ட சொல்லிட்டாலும் என முறைத்தவன்.. ‘இது தூங்கற நேரம்தான உனக்கு? பேசாம தூங்குங்க..” என்று பெரியவரிடமும் கத்திவிட்டு.. ‘இன்னைக்கு என் பேத்திங்க ரெண்டு பேரும் வராங்கனு தாத்தா போறவங்க வரவங்ககிட்டலாம் சொல்லிட்டிருந்தார்.
நீ பாட்டுக்கு வெளில உக்கார்ந்திருந்தா பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க? உள்ள வா..” என்றான்.
“தாத்தாவோட பேசிட்டிருக்கிறதுக்கு யார் என்ன நினைக்க போறாங்க?” என முனகியவளுக்கு சட்டென கண்ணீர் வெளிக்கிளம்ப தலை குனிந்தாள்.
அவளின் கண்ணீரைப் பார்த்ததும்.. ‘உங்க வீட்டு சாப்பாட்டை சாப்பிடட்டுமா? வேணாமா?” என்றான் சற்று கோபம் குறைத்து.
பேரன் பேத்தியிடம் தன்மையாய் பேசியதில் பெரு மகிழ்ச்சியடைந்த பெரியவர்.. “மதிதான் இவ்வளோ சொல்றானே? போய் சாப்பிடு தாமரை. நாம அப்புறம் பேசிக்கலாம்.” என்கவும், வேறு வழியின்றி எழுந்தாள்.
நான்கடி நடந்தாலே வீட்டுக்குள் நுழையும் தூரத்திற்கு.. இரண்டு நிமிடமாய் நடை பயின்று பெருத்த சங்கடத்தோடு வீட்டினுள் நுழைந்தாள் தாமரை.
மதியின் வீட்டில் டைனிங் டேபிளெல்லாம் இல்லை. அனைவரும் ஹாலில் கீழேதான் அமர்ந்திருந்தனர். பொம்மையாய் காமாட்சியருகே உக்கார்ந்தாள்.
மதியழகன் மஞ்சு அருகே அமர, முதன் முதலாய் அனைவரும் ஒன்றிணைந்து சாப்பிடும் சந்தோசத்தில் மஞ்சு மதியிடம் தொணதொணத்துக் கொண்டிருக்க, மஞ்சுவிடம் பேசிக்கொண்டிருந்தாலும்.. இலையைத் தவிரித்து வேறெங்கும் பார்க்காமல், பேரவஸ்த்தையோடு அமர்ந்திருக்கும் தாமரையையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தான்.
சம்மதமாய் தலையசைத்தான். தாத்தா.. “சமயம் கிடைக்கும்போதெல்லாம் பேத்திங்களை கூட்டிட்டு வா காமாட்சி.” என்ற கோரிக்கையோடு வழியனுப்பி வைத்தார் பழனியப்பன்.
விபரமறிந்து தாமரை ஆசையோடும் பாசத்தோடும் இன்று பேசிய பேச்சுகள் பழனியப்பன் மனதை பெரிதாய் ஈர்த்திருக்க, இவன் பாரா முகத்தால்தான் மகள் வெளியே மாப்பிள்ளை பார்த்திருக்கிறாள் என்றும், மதிக்கு கேட்டால் நிச்சயம் மகளும் மருமகனும் மறுக்கமாட்டார்கள்.
தாமரையும் எடுத்துரைத்தாள் புரிந்து கொண்டு மதியோடான திருமணத்திற்கு சம்மதிப்பாள் என்ற நம்பிக்கை வர, எப்படியாவது பேரனிடம் தாமரையைப் பற்றி பேசி திருமணத்திற்கு சம்மதிக்கவைக்க வேண்டும் என இரவெல்லாம் யோசித்திருந்தார் பழனியப்பன்.