காலை வழக்கம்போல் எழுந்த மதியழகன், சமைத்து, குளித்து பழனியப்பனிற்கு டீ எடுத்து வந்தான். வாங்கியவர்.. “ஏன் மதி.. காமாட்சி மாமியா பேசினதுக்கு தாமரை என்ன பண்ணும்? அந்த புள்ளைகிட்ட இனி முகம் திருப்பாதய்யா.” என்றார் பழனியப்பன்.
“ஆமா.. அவகிட்ட முகம் திருப்பனும்னு எனக்கு வேண்டுதல்..” என முறைத்தவன்.. “இவ்வளோ நாள் இல்லாம இப்போ என்ன திடீர் ஞானோதையம்?” என்றான் சந்தேகமாக.
“நீ கூப்பிடலனுதான் நேத்து தாமரை வீட்டுக்குள்ள வரவே தயங்குச்சி, பழசை பிடிச்சிட்டு இருக்காம, மஞ்சுகிட்ட பேசுற அளவுக்கு இல்லனாலும் தாமரைகிட்டயும் தேவைக்காவது இரண்டு வார்த்தை பேசினினா, தயக்கமில்லாம என்னை பார்க்க வரும்.” என்றார்.
அவங்க ஆயா சொன்னாங்கனு என்னை மாமானு கூப்பிடறதையே நிறுத்திட்டா, ரோட்ல, காலேஜ்லனு எத்தனை எத்தனை பொண்ணுங்க ப்ரப்போஸ் பண்ணிருக்காங்க, ஆனா இந்த உம்மனாம்மூஞ்சி என்னை கண்டாலே உள்ள ஓடிடுவா, நான் வீட்டுக்கு போகும்போது உள்ள இருந்தாள்னா கிளம்புற வரைக்கும் வெளிலயே வரமாட்டா என நினைத்தவன்..
“அவகிட்ட எனக்கு என்ன தேவையிருக்க போவுது?” என முறைத்து, “எனக்கு காலேஜ்க்கு டைமாகுது. வழக்கம்போல கதவை திறந்து போட்டுட்டு தூங்கிடாத.” என்று கிளம்பினான்.
பத்தாம் வகுப்பு, பனிரண்டாம் வகுப்பு தேர்வுகள் முடிவடைந்ததால்தான் மதிக்கு சற்று ஓய்வு, இல்லையேல் காலை நான்கு மணிக்கு எழுவான், இரவு பத்து மணி வரை இடைவிடாது உழைப்புதான்.
அதிகாலையிலும், இரவு எட்டு மணிக்கு பின்பும் ஐந்து மாணவர்களுக்கு வீட்டிற்கே போய் பாடம் எடுப்பான். அதற்கான தொகை மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்து படிக்கும் மாணவர்களுக்கான கட்டணத்தைவிட மூன்று மடங்கு அதிகம்.
தந்தையை கொன்றவனை பழிவாங்க எவ்வளவு செலவாகுமோ என ஓய்வில்லாமல் பாடம் நடத்தி சம்பாதித்துக் கொண்டிகிறான்.
அதன் பொருட்டே வீட்டை கட்டி முடித்ததோடு சரி, இரண்டு பேர் அமரும் அளவிற்கு ஒரு சோபா, தாத்தாவின் பொழுது போக்கிற்காக பெரிதாய் ஒரு டி.வி, ஃபிரிட்ஜ்.. தவிர்த்து வேறெதுவும் புதிதாய் வாங்கவில்லை.
பெற்றோர் இருக்கும் பொழுது உபயோகித்த பொருள்களைதான் தற்போதுவரை உபயோகித்துக் கொண்டிருக்கிறான்.
மதிக்கும் தாத்தாவிற்கும் ஒரு மாதத்திற்கான செலவு ஐந்தாயிரத்திற்கும் குறைவுதான். ஆனால் மதியின் மொத்த வருமானம் என்பதாயிரம்.
பெற்றோர் இருந்தபோது சந்தோசத்திற்கு பஞ்சமேயில்லை, பணம் மட்டுமே பிரச்சனை, தற்போது பணத்திற்கு கவலையில்லை, ஆனால் மற்ற எதுவும் இல்லாததுபோல் பலநேரங்களில் உணர்வான்.
பழிவாங்கும் உணர்வு வேண்டாம் என அன்னை சொல்லியிருக்க, கொலைகாரனை எப்படி கண்டு பிடிப்பது? கண்டுபிடித்தாலும் காவல் துறைக்கு தெரியாமல் எப்படி பழிவாங்குவது என்ற வழியைதான் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறான்.
இதற்கிடையில் தாமரையின் திருமணப்பேச்சு மனதை பெரிதாய் சலனப்படுத்தியிருந்தது. இதோ கல்லூரிக்கு வந்துவிட்டான்.
மதியிருக்கும் தைரியத்தில் கதிரேசன் மகளை இக்கல்லூரியில் சேர்க்க, அவளறியும்படி ஒருநாளும் கண்டுகொண்டதில்லை மதியழகன். மதியும் தாமரையும் சொந்தம் என்றே கல்லூரியில் யாருக்கும் தெரியாது.
என்றுமில்லாமல் இன்று மனம் தாமரையை வெளிப்படையாக தேட, அவள் வரும் நேரத்தை கணக்கிட்டு தனது ஓய்வறைக்கு வெளியே நின்றபடி தாமரையின் வருகைக்காக காத்திருந்தான்.
வழக்கமாய் ஒன்பது மணிக்கெல்லாம் கல்லூரிக்கு வந்து, வகுப்பிற்கு வெளியே சற்றுநேரம் தோழிகளோடு பேசுவாள், நேற்று தன் வீட்டிற்கு வந்ததன் தாக்கம் ஏதேனும் முகத்தில் தென்படுகிறதா என்று பார்க்கத்தான் மதியழகன் காத்திருந்தான். ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக தாமரை தாமதமாக வர, அவசரமாய் வகுப்பிற்குள் புகுந்துகொண்டாள்.
ப்ச்.. உள்ள போய்ட்டாளா? என சலிப்பாய் உணர்ந்தபோதும், ம்க்கூம் இல்லன்னாலும் அவகிட்ட போய் என்ன பேசுறது? திரும்பியும் பார்க்காதவளிடம் என்னை திருமணம் செய்துக்கோ என்றா சொல்ல முடியும்? அப்படியே சொன்னாலும் சம்மதிக்கவா போறா? என மனம் அலைக்கடிக்க, கண் மூடி தன்னை சமன் செய்து பொறுப்பான ஆசானாக உருவெடுத்து தனக்கான வகுப்பிற்கு சென்றான்.
மாலை வீட்டிற்கு வரும் வழியில்.. சந்தியா நின்றிருக்க, தனக்காத்தான் நிற்கிறாள் என தொலைவில் வரும்போதே கண்டுகொண்டவன்.. இவ வேற, எவ்வளோ சொன்னாலும் புரிஞ்சிக்காம படுத்தறா என நினைத்தபடி பைக்கை செலுத்த, இரு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்லும் அப்பாதையின் நடுவே நின்று வழிமறைத்தாள் சந்தியா.
கடந்த ஆறு மாதங்களாக மதியழகனின் காதலைப் பெற அவனின் பல கடுஞ்சொற்களையும் தாண்டி விடாமல் பின் தொடர்பவள். வழிமறைப்பாள் என சற்றும் எதிர்பாராதவன் கோபத்தோடு பைக்கை நிறுத்த.. “என் வீட்டுல மாப்பிள்ளை பார்க்குறாங்க மதி, ப்ளீஸ் என்னை புரிஞ்சிக்கோங்களேன்.” என்றாள் கெஞ்சலாக.
ஐ.டி கம்பெனியில் வேலை செய்யும் சந்தியா இரவு பத்து மணிக்கு தனியே வர, அவளை சீண்டினர் சிலர். டியூஷன் முடித்து அந்த நேரம் அவ்வழி வந்த மதிதான் இவளை காப்பாற்றினான்.
“அன்னைக்கு உன்னை ஏண்டா காப்பாத்தினோம்னு இன்னைக்கு வருத்தப்படறேன்.” என தலையில் அடித்துக்கொண்டவன்.. “இதப்பாரு, எனக்கு ஆல்ரெடி லவர் இருக்கா, கிட்டதட்ட பத்து வருசத்துக்கும் மேல லவ் பண்றேன், அவளைத்தவிர யாரையும் நான் கல்யாணம் செய்துக்கப்போறதில்ல, பொறுமையா சொன்னா புரிஞ்சிக்கமாட்டியா நீ.?” என மிரட்டி..
“ஒழுங்கா உங்கம்மாப்பா பேச்சுகேட்டு கல்யாணம் செய்துக்கிற வழியைப்பாரு, இப்படி பிகேவ் பண்ணி என்னை தேவையில்லாம உங்க வீட்டுக்கு வர வைச்சிடாத.” என எச்சரித்து பைக்கை முறுக்க, தற்போது மறைந்திருந்த சந்தியாவின் அன்னை முன்னே வந்தார்.
“அப்போ ஒடுக்கு முகத்தோட ஒல்லியா பார்த்தது, இப்போ மீசையெல்லாம் வளர்ந்து நிறைய வித்யாசம், அதான் சடார்னு கண்டுபிடிக்க முடியல, ஆனாலும் இந்த முகம் என் வாழ்நாள்வரை மறக்காத முகம்.” என்று..
“சந்தியா, நீ போய் கார்ல உக்காரு, நான் பத்து நிமிஷத்துல வரேன்.” என்றார் மகளிடம்.
“ஓ.. இவ உங்க பொண்ணா, அதான் என் அப்பாம்மா பேர் வரைக்கும் விசாரிச்சி வச்சிருக்கிங்களா?” என கடுப்பாய் கிளம்பப்பார்க்க, “இல்ல தம்பி, உங்கப்பாவை உயிரோட இருக்கும்போதே எனக்கு தெரியும்.” என்று மதியை போகவிடாமல் தடுத்து, போ.. என்பதாய் மகளை பார்த்தார்.
இவரைப் பற்றி இத்தனை சொல்கிறார் என்றால் தீர விசாரித்திருக்கிறார், எனில் தனக்கு தெரிந்த அதிகாரிகளிடம் சொல்லி மிரட்டுவாரோ என அஞ்சியவளாய்.. “அம்மா அவர் மேல எந்த தப்பும் இல்ல,” என தவித்தாள்.
இந்த தம்பி இல்லைன்னா உன் வாழ்க்கை நாசமாகியிருக்கும், இவருக்கு நன்றிகடன் பட்டிருக்கேன், அதுக்கு ப்ராயச்சித்தமா இவங்கப்பா பத்தி சொல்லிட்டு வந்திடறேன். நீ போ.” என்றார்.
“எங்கப்பா பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?” என்றான் ஆவலாக.
சந்தியா நின்றேயிருக்க, “உங்க நம்பர் கொடுங்க, நான் கால் பண்றேன்.” என்றான்.
“வேணாம் தம்பி, இது ஃபோன்ல பேசவேண்டிய விசயம் இல்ல, பேசினா என் உயிருக்கே ஆபத்தாகிடும். நாளைக்கு இதே நேரம் இங்க வரேன், அப்போ பேசலாம்.” என கிளம்பப்பார்க்க..
“நில்லுங்க.” என அவசரமாய் சொன்னவன், “எங்கப்பா எப்படி செத்தார்னு தெரியாம தவிச்சிட்டிருக்கேன், உங்களுக்கு எதோ தெரியும்போல, தயவு செய்து சொல்லிட்டு போங்க.” என கைகூப்பி வணங்கினான் வேண்டுதலாக.
“அச்சோ தம்பி.” என தவித்தவர்.. தானும் கையெடுத்து வணங்கி, “என் நாத்தனார் பையனைதான் சந்தியாக்கு பேசியிருக்கோம், நான் பார்த்து வளர்ந்தவன், ரொம்ப நல்லபையன், சந்தியா ஒத்துக்குவானு நம்பி பேசி முடிச்சிட்டோம், யாரைகேட்டு பேசுனிங்க? அவனை கட்டிக்க முடியாது, நான் வேற ஒருத்தரை லவ் பண்றேனு எங்க தலையில இடியை இறக்கினா, யாரா இருக்கும்? பையன்கிட்ட பேசிப்பார்ப்போம்னுதான் இன்னைக்கு என் மகளை ஃபாலோ செய்தேன்,
இங்க வந்தாதான் தெரியுது, என் மகள் விரும்புறவன் நீங்கனும், உங்க மேல ஒரு தப்பும் இல்லனும்.”
“பச்.. எங்கப்பா பத்தி என்ன தெரியும்னு சொல்லுங்க.” என்றான். கேட்கும்போதே மதியின் கண்கள் கலங்கியது.
“இது பெரிய இடத்து விசயம், நாம நாளைக்கு பேசலாம்.” என மீண்டும் மறுக்க, “உன்னை கெஞ்சி கேட்குறேன், தயவு செய்து போயேன்.” என்றான் சந்தியாவிடம்.
சந்தியா அவளின் காருக்கு போக, “கல் குவாரிக்கு வேலைக்கு போனப்போ, அங்க ஓனர் பசங்க ஒரு பொண்ணை கெடுத்துருக்காங்க, அதை உங்கப்பா பார்த்துட்டார். பெரிய இடம்னு தெரியாம அந்த பொண்ணை காப்பாத்த போயிருக்கார்.
பசங்களை அடிச்சிட்டு, பொண்ணை பார்க்குறப்போ அந்த பொண்ணு இறந்து போயிருக்கு, பத்து நிமிஷத்துல ஸ்டேஷன்க்கு விசயம் போய், அங்க வந்த போலீஸ் சந்தேகத்தின் பேர்லனு பொய் சொல்லி உங்கப்பாவை கூட்டிட்டு வந்துட்டாங்க.
பழியை உங்கப்பாவை ஏத்துக்க சொல்லி மிரட்டினாங்க, உங்கப்பா ஒத்துக்கமாட்டேன்னு சொன்னது பத்தாம, அந்த பொண்ணை கெடுத்தவனுங்களைப் பத்தி கம்ப்ளைன் கொடுப்பேனு சொல்லியிருக்கார்.
“விசாரணைன்ற பேர்ல..” என கண்கலங்கியவர்.. “ஸ்டேஷன்ல வச்சி அடிச்சாங்க. விடிய விடிய அடிச்சாங்க, அப்போவும் உங்கப்பா ஒத்துக்கல, உன் பொண்டாட்டியை இங்க அழைசிட்டு வந்து இப்போ உன்னை வச்சிருக்கிறதை போல ஒட்டு துணியில்லாம கட்டி வச்சி அடிச்சா நாங்க சொல்றதை கேட்பயில்லனு மிரட்டி, லேடி கான்ஸ்டபிள்கிட்ட உங்கம்மாவை கூட்டிட்டு வர சொல்லி அனுப்பிவிட்டாங்க.
அந்த லேடி காண்ஸ்டபிள் நான்தான். அதிகாரிங்க சொல்றதை கேட்கிறதை கேட்டே ஆகனும். உங்கம்மாவை இங்க கூட்டிட்டு வந்தா என்ன நடக்கும்னு தெரிஞ்சும் வேற வழியில்லாம கூட்டிட்டு வந்தேன், போலீஸ்டேஷன் வந்தப்புறம்தான் உங்கம்மாவுக்கு உங்கப்பா அங்க இருந்தே தெரியும்.
உங்கம்மாவை கூட்டிட்டு வர நேரம் நல்ல வேளையா ஒரு அவசர கேஸ்க்காக இன்ஸ்பெக்டர் கோர்ட்டுக்கு போயிருந்தார். இந்த மாதிரி பொய் கேஸை விசாரிக்கும் போதெல்லாம் கேமராவை ஆஃப் பண்ணி வச்சிடுவாங்க, அதை சாதகமாக்கிக்கிட்டோம்.
அங்கயிருக்க இன்னொரு காண்ஸ்டபிளும் ரொம்ப நல்ல மாதிரி, அவர் உதவியோட உங்கப்பாவை உங்கம்மாக்கு காட்டி, ஊரைவிட்டு எங்கையாவது போய் பொழைச்சிக்க சொல்லலாம்னு அழைச்சிட்டு போனேன், அங்க போனா உங்கப்பா இறந்து போயிருந்தார்.
உங்க புருசன் பொணத்தை என்ன பண்ணுவாங்கனு எனக்கும் தெரியாது, அவங்களா தரவரைக்கும் மூச் விட்டுடாதிங்க, இல்ல உங்களையும் கொன்னுடுவாங்க, உங்க பையனுக்கும் ஆபத்து, நாங்க வந்து போனதையோ, நீங்க ஸ்டேஷன் வந்ததையோ யார்கிட்டயும் சொல்லிடாதிங்க, சொன்னா உங்களுக்கு உதவி செய்த என்னையும் சும்மா விடமாட்டாங்கனு நிலைமையை எடுத்து சொல்லிட்டு வந்துட்டேன்.
இன்ஸ்பெக்டர்கிட்ட, உங்கம்மா வீட்டுல இல்ல, வேலைக்கு போயிருக்கிறதா அவங்க மாமனார் சொன்னாருனு சொல்லிட்டேன்.
அடுத்த நாளே ஆக்ஸிடண்ட்ல இறந்த மாதிரி செட் பண்ணிட்டாங்க, போஸ்ட்மாடம் செய்த பாடின்றதால யாரும் உடம்பை பார்க்கல, உடல் தகனம் செய்யிறவரை கண்ஸ்டபிளை வச்சி கண்காணிச்சாங்க.
சொந்த பந்தம்லாம் போனதுக்கப்புறம், உங்க புருசன் ஒரு கொலையை பண்ணிட்டு செத்துபோயிட்டார், தேவைப்பட்டா உங்களை விசாரிக்க வருவோம்னு சொல்லியிருக்காங்க, அது வரைக்கும்தான் எனக்கு தெரியும், உங்கம்மா எப்படி செத்தாங்கனு எனக்கு தெரியாது.
பத்து நாள் கழிச்சி, அந்த பைரவனோட அம்மா ஆக்ஸிடண்ட்ல செத்துடாளாம்னு ஸ்டேஷன்ல பேசினதை வச்சித்தான் உங்கம்மாவும் செத்துட்டாங்கனு எனக்கு தெரிய வந்தது.
மனசு கேட்காம உங்கம்மா இறப்புக்கு வந்திருந்தேன், அப்போதான் உன்னைப் பார்த்தேன். நீ அழுத அழுகை என்னை ரொம்ப பாதிச்சது. உங்கப்பா இறப்புல எனக்கும் பங்கிருக்க மாதிரி ரொம்ப ஃபீலாகிடுச்சி, இப்படிபட்ட வேலையே வேணாம்னு அந்த மாசமே வேலையை ரிசைன் பண்ணிட்டேன்.” என வேதனையோடு சொல்லி..
“என் பொண்ணை காப்பாத்தியிருக்கிங்க, அதுக்கு கைமாறாதான் இந்த விசயத்தை சொல்றேன். என்னை மாட்டி விட்டுடாதிங்க தம்பி.” என வணங்கினார்.
மதியழகன்.. “அந்த இன்ஸ்பெக்டர் பேரென்ன? இப்போ எங்க இருக்கார்?” என்றான் முகம் இறுக.
“அவர் பேரு ரஞ்ஜித்குமார். இப்போ ரிட்டையர்ட் ஆகிட்டார், மதுரைதான் சொந்த ஊர். சொந்த கிராமமான போடிநாயகன்பட்டியில செட்டிலாகிட்டார்ன்ற வரைக்கும் தெரியும். அட்ரஸ்லாம் தெரியாது.” என்றார்.