மனம் உலைகலனாய் கொதிக்க, வீட்டிற்கு வந்தவன், தனதறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தான். கல்லூரியிலிருந்து வரும்போதே தாத்தா என்ற அழைப்போடு வரும் பேரனின் குரல் இன்று இல்லாமல் போகவும், பத்து நிமிடம்வரை பொறுத்தவர் அதற்கு மேல் தாளமுடியாமல்.. “மதி.. மதியய்யா..” என மதியின் அறைக்குள் போனார்.
சாகும் வரை அடித்திருக்கிறார்கள்.. எப்படி துடித்திருப்பார், அந்த கோலத்தில் கணவனைப் பார்த்த அன்னைக்கு எப்படியிருந்திருக்கும்? என்ற எண்ணத்திலிருந்து வெளிவர முடியாமல் தவித்திருந்தவன் பழனியப்பனை கண்டதும்.. “தாத்தா..” என்ற கமறலோடு அணைத்துக்கொள்ள பதறிப்போனார் பழனியப்பன்.
என்ன சொல்லுவான்? இத்தனை வருடம் கழித்து உங்க மகன் விபத்துல சாகல, திட்டம் போட்டு கொன்னுட்டாங்க என்றா? நடந்ததை சொன்னால் தாங்குவாரா? என மனதோடு புழுங்கியவனுக்கு கண்ணீர் வெளிக்கிளம்ப.. “மதி.. என்னய்யா அழுவுற?” எனப் பதறினார்.
“அ.. அப்பா நியாபகம் வந்துடுச்சி தாத்தா..” என்றவன் குரல் வெகு சிரமத்தோடு வெளிவந்தது.
“என்னய்யா சொல்ற? என் மகனேது கனாவுல வந்தானா? சொல்வாக்கேதும் சொன்னானா?” என்றார் தழுதழுப்பாக.
தாய் தந்தை இறந்து நான்கு வருடங்களாக அவர்களை நினைத்து பழனியப்பன் கண்ணீர் வடிக்காத நாளில்லை. தான் பேசும்போதெல்லாம் தனக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, தனியே போய் கண்ணீர் வடிக்கும் பேரனை நான்கு வருடங்களுக்கு பிறகுதான் உணர்ந்தார் பழனியப்பன்.
மகனைப் பற்றிய துக்கத்தை பகிர்ந்து பேரனின் நிம்மதியை கெடுக்கக்கூடாதென மதியிடம் அவர்களைப் பற்றி பேசுவதை குறைத்து, பேரனின் திருமணப் பேச்சை ஆரம்பிக்கலானார்.
நீண்ட நாள்களுக்குப் மகனைப்பற்றி பேரன் பேசியதும் பழனியப்பன் கண்ணீர் வடிக்கவே, வேறு வழியின்றி.. “கனவெல்லாம் காணல தாத்தா, அப்பா ஆக்ஸிடண்ட் ஆன இடத்துக்கு பக்கத்துல ஒரு வேலையா போயிருந்தேன், அப்பா இறந்திருந்த இடத்தை பார்த்தும் உயிர் போகும் நேரம் எப்படிலாம் துடிச்சிருப்பாரோ.? கடைசி நேரத்துல அம்மாகிட்ட, உன்கிட்ட, என்கிட்டலாம் எதாவது சொல்லனும் நினைச்சிருப்பாரோனு ஏதேதோ நினைப்பு வருது, தாங்க முடியல தாத்தா.” என்றான் பாதி பொய்யோடும், வேதனையோடும்.
பழனியப்பனைப் பொருத்தவரை மகன் மருமகள் இருவருமே விபத்தில் இறந்தவர்கள் ஆதலால் அவரும் இதை நினைக்காத நாளில்லை, இப்போதல்ல.. எப்போது நினைத்தாலும் மனம் ரணப்பட்டு போகும் பழனியப்பனுக்கு.
ஆனாலும் பேரனைத் தேற்ற.. “விடுய்யா, விடுய்யா.. இப்படித்தான் போகனும்னு விதியிருந்தா அதை மாத்த யாரால முடியும்?” என கண்ணீரோடே பேரனைத் தேற்றி, “முகமெல்லாம் கோவப்பழமா சிவந்து கிடக்கு பாரு.. இன்னும் சித்த நேரத்துல பாடம் படிக்க புள்ளைங்க வந்திடுவாங்க, அவங்க முன்ன இப்படி இருக்க கூடாது, போய் மூஞ்சி கழுவிட்டு துணி மாத்திட்டு வா, நான் காபி கலக்குறேன்.” என கிச்சனுக்கு போனார்.
“விதி வந்து செத்திருந்தா யாராலதான் என்ன செய்ய முடியும் தாத்தா? ஆனா எங்கப்பா விசயத்துல காவல் காக்க வேண்டியவங்களே தப்புக்கு துணை போயிருக்காங்களே? அக்கரமத்தின் உச்சகட்டமா ஒரு அப்பாவியை அடிச்சே கொன்னுருக்காங்களே? அவங்களை என்ன பண்ணலாம் தாத்தா?” என பல்லை நெறித்தபடி சுவற்றில் குத்தினான் ஆத்திரமாக.
“செய்யனும்.. எதாவது செய்யனும்..” என முனகினான் வன்மத்தோடு.
இங்கே பெரியவர்.. “தாமர பேச்செடுக்கலாம்னு பார்த்தா அப்பன் ஆத்தாவ நினைச்சி இப்படி கலங்குறானே.. ஒரு பத்து இருபது நாள் ஆறப்போடுவோம். பின்ன பேசலாம் என நினைத்தபடி காபி கலந்து வந்து பார்க்க, மதி இன்னும் வெளிவரவில்லை.
பேரனின் அறைக்கு சென்றவர்.. “மதி.. இன்னும் மூஞ்சி கழுவலயா? சரி அப்புறம் கழுவிக்கலாம், காபியை குடி..” என வாஞ்சையோடு நீட்ட, தாத்தா முன் இப்படி இருந்தால் மனதளவில் உடைந்து போவார் என மறுக்காமல் வாங்கிக் கொண்டான்.
பொதுத் தேர்வுகள் முடிந்திருக்க, அடுத்த வருடம் பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள் மட்டும்தான் டியூசனுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதால், அன்று டியூசனுக்கு விடுப்பளித்து, “கொஞ்ச நேரம் கோவில் பக்கம் போய்ட்டு வரேன் தாத்தா. பசங்க வந்தா இன்னைக்கு டியூசன் இல்லனு சொல்லிடு.” என கிளம்பினான்.
இருபது நிமிட பைக் பயணத்திற்கு பிறகு ஒரு பார்க்கினுள் நுழைந்தான். அந்த ரஞ்சித்குமாரின் முகம் தெரியாது, விலாசம் தெரியாது, போடியில் இருக்கிறான் என்ற செய்தியை மட்டும் வைத்து எப்படி கண்டுபிடிப்பதென்ற யோசனையில் ஆழ்ந்திருந்தான் பத்து நிமிடம் வரை.
பின்னே அங்கிருந்து அகன்றவன், சந்தியாவின் வீட்டிற்கு சென்றான். சந்தியாவை காப்பாத்திய பின்னே அவள் மிகவும் பயந்திருக்க, அன்று மதியழகன்தான் அவளின் வீட்டிற்கு அழைத்துச் சென்றான் என்பதால் அவளின் வீடு தெரியும்.
அழைப்பு மணியை அழுத்த, இரண்டு நிமிடத்தில் கதவு திறக்கப்பட்டது. “தம்பி.. என்ன வீட்டுக்கே வந்துட்டிங்க?” எனப்பதறினார் சந்தியாவின் அன்னை.
“தவறா நினைக்காதிங்க.. கொஞ்சம் கேட்கிட்ட வாங்க.” என கேட்டருகே போய் நின்றான்.
சந்தியாவின் அன்னை மதியருகே வர.. “அந்த ரஞ்சித் முகம் கூட எனக்கு தெரியாது. அன்னைக்கு உங்களோட வேலை செய்தவங்களோட மத்த ஸ்டாஃ பேரு, அட்ரஸ், போன் நம்பர், இப்படி எதாவது இருந்தா கொடுக்கிறிங்களா?
அப்படி எதுவும் இல்லனா அந்த ரஞ்சித்தோட நெருங்கின பழக்கம் இருக்கவங்க யாராவது தெரிஞ்சாலோ, இல்ல யாரை கப்பாத்த எங்கப்பாவை பழி கொடுத்தாங்கனு தெரிஞ்சாலும் தயவு செய்து சொல்லுங்க, எனக்கு அவனைப் பார்க்கனும்.” என்றான் தாழ்மையோடு.
“தம்பி, எனக்கு பிரச்சனையை இழுத்து விட்ருவிங்க போல, உங்கப்பா இறப்பு தாங்க முடியாதுதான், அதை நோண்டப்போய் உங்க வாழ்க்கையை தொலைச்சிடாதிங்க, எனக்கு தெரிஞ்சவங்கள்ல கூட யார் நல்லவங்க? யார் கெட்டவங்கனு என்னாலயே சொல்ல முடியாது. அதனாலதான் நானே ரிசைன் பண்ணினேன்.” என்றார் மறுப்பாக.
“உங்களை எங்கயும் எப்பவும் காட்டி கொடுக்க மாட்டேன், இந்த விசயத்துல உங்களை விட்டா எனக்கு வேற ஆள் இல்ல, ஒன்னா வேலை செய்திருக்கிங்க, உங்களோட மேலதிகாரிப் பத்தி கண்டிப்பா உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.
அவர் பலம் தெரிஞ்சிதான் வேலையை ரிசைன் பண்ணிருப்பிங்க. திரும்பவும் சொல்றேன், சத்தியமா உங்களை எங்கயும் சொல்ல மாட்டேன், ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க.” என்றான் யாசகமாக.
“அச்சோ.. என்ன தம்பி நீங்க.” என தவிக்க.. “மறுத்திடாதிங்க ப்ளீஸ்..” என வணங்கி கெஞ்சினான் மதியழகன்.
“இண்டிபெண்டன்ஸ் டேக்கு ஸ்டேஷன்ல கொடியேத்தின போட்டோ இருக்கு, அதுல அவர் இருக்கார். உங்க நம்பரை கொடுங்க, அனுப்பறேன்.” என்க தனது எண்ணை கொடுத்தான்.
பிறகு ரஞ்சித்குமாரின் விலாசத்தையும் சொல்லி, என் தலையை உருள வச்சிடாதிங்க தம்பி, மன நிம்மதிக்காகத்தான் வேலையை ரிசைன் செய்தேன், அதை இல்லாம பண்ணிடாதிங்க.” என்ற வேண்டுதலோடு ரஞ்சித்குமாரின் புகைப்படத்தை அனுப்பி வைத்தார்.
“தாங்க்யூ ஸோ மச் மேடம்.” என மனதாற சொன்னவன்.. “இன்னைக்கப்புறம் திரும்ப உங்களை எப்பவும் டிஸ்ட்ர்ப் பண்ண மாட்டேன். அந்த ரஞ்சித்தால பாதிச்சவங்க, இல்ல அவனுக்கு லஞ்சம் கொடுத்து தன் காரியத்தை சாதிச்சிக்கிட்டவங்கனு என்ன தெரியுமோ எல்லாமும் சொல்லுங்க.” என கேட்க, சந்தியா அவருக்கு தெரிந்ததை சொல்ல, அனைத்தும் கேட்டறிந்து நன்றியோடு விடைபெற்றான்.
இங்கிருந்து போடிநாயகன்பட்டி சென்றுவர நான்கு மணிநேரமாகிடும், நாளைக்கு லீவ் போட்டுட்டு காலைலயே கிளம்பிடலாம் என்ற முடிவோடு வீட்டிற்கு பயணித்தான்.
இரவு தாத்தாவிற்கு சாப்பிட கொடுக்கும் போதே, நாளை கல்லூரி மாணவர்களோடு வெளியில் செல்ல வேண்டும் என்ற தகவலையும் கொடுத்து தனதறைக்கு வந்தான்.
தந்தை இறந்த விதம் தாளமுடியாத வேதனை என்றால் அவ்வேதனைக்கு சற்றும் குறையாதது அன்னையின் இழப்பு. தந்தை இறந்த பின்னே, கணவன் இழப்பை நினைத்து அழுததை விட, பழிவாங்கும் உணர்வு கூடாதென அன்னை தனக்கு உபதேசித்ததுதான் அதிகம்.
தன்னோடு வரும்போது தன் கண்முன்னேதான் லாரியில் மோதி உயரைத் துறந்தார். அது விபத்தல்ல, தற்கொலை முயற்சிக்கான வெற்றி என அப்பொழுதே உணர்ந்திருந்தான் மதியழகன்.
தந்தை இல்லா உலகில் வாழமுடியாமல் தற்கொலை செய்துகொண்டார் என அப்பொழுது நினைத்தான். ஆனால் தற்போது, அந்த ரஞ்சித் ஏது தற்கொலைக்கு தூண்டியிருப்பானா? அல்லது அவனின் மிரட்டலுக்கு பயந்து தானாகவே தன்னை முடித்துக்கொண்டாரா என்ற சந்தேகம் வந்தது.
ஏதேனும் துப்பு கிடைக்குமா என அன்னை சாகும் முன் தனக்கு உபதேசித்த வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் யோசித்திருந்தான்.
தாய் தந்தை நினைவில் அன்றிரவு பசியும் எடுக்கவில்லை, நள்ளிரவு வரை தூக்கமும் வரவில்லை மதிக்கு. அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்த மதியழகன், குளித்து தயாராகி டீ குடித்து, தூங்கிக்கொண்டிருந்த பழனியப்பனை எழுப்பி, “ஃப்ளாஸ்க்குல டீ இருக்கு, குடிச்சிக்கோ தாத்தா. காலைக்கும், மதியத்துக்கும் ஹோட்டல்லயிருந்து சாப்பாடு கொடுக்க வருவாங்க, வாங்கி சாப்பிடுங்க சரியா?” என்றான்.
“எப்போ வருவ மதி?”
“நைட் ஆகிடும் தாத்தா.”
“சாப்பாடு நான் பார்த்துக்கிறேன், கடையில எங்கயும் சொல்லாத. பார்த்து பத்திரமா போய் வா.” என்றார்.
“ம்.. அப்படித்தான் சொல்லுவ, ஆனா நான் வர வரைக்கும் சாப்பிடாம இருப்ப. நேத்து நைட்டே தெருமுனையில இருக்க கணபதி ஹோட்டல்ல சொல்லிட்டேன். கடைப்பையன் வந்து கொடுப்பான், வாங்கி சாப்பிடு.” என கட்டளையிட்டு கிளம்பினான்.
மூன்றரை மணிநேரத்திற்கு பிறகு போடிநாயக்கன்பட்டியை அடைந்தவன்.. அங்கிருந்த டீ கடையில் டீ சொல்லி, சொந்த ஊரில் ரஞ்சித்தின் ஆதிக்கம் அறிய டீ அருந்த வருபவர்கள் பேசுவதை கேட்டிருந்தான். பெரிதாய் ஏதும் விசயம் கிடைக்காமல் போகவே டீ கடைக்காரரிடம் ரஞ்சித்தின் விலாசம் சொல்லி எவ்வழி போக வேண்டுமென அறிந்து கிளம்பினான்.
அங்கே சென்றால் வீடு பூட்டியிருக்க, பக்கத்தில் விசாரித்தான். குடும்பத்தோடு டூர் சென்றிருப்பதாகவும், வருவதற்கு ஒரு மாதத்திற்கு மேலாகும் என்ற தகவல் கிடைக்க சலிப்பாய் உணர்ந்தாலும், அவனின் குடும்ப உறுப்பினர்கள் பற்றி விபரமறிந்து இரண்டு மணி நேர அலைச்சலுக்கு பிறகு ரஞ்சித்குமாரின் நம்பரை வாங்கிக்கொண்டு மதுரை கிளம்பினான் மதியழகன்.