மாமா மாமா என அத்தை வீட்டிற்கு போகும்போதெல்லாம் இடைவெளியில்லாமல் தொணதொணப்பவள்.. அவளின் பாட்டியின் மிரட்டலில் மொத்தமாய் மாறிட்டாளே.. சின்ன பெண், வீட்டில் பெரியவர்கள் சொல்வதைத்தானே கேட்டாகனும் என அப்பொழுது தாமரையை குறையாய் நினைக்கவில்லை மதியழகன்.
அவளின் சடங்கு முடிந்த அடுத்த மாதமே பைரவன் இறந்திட, மதி என்ற தந்தையின் குரலின்றி இனி எப்படி வாழ்வேன்? அன்னையை எப்படி தேற்றுவேன்? அறுபதில் இருக்கும் தாத்தாவை எப்படி ஆறுதல் படுத்துவேன்? என்ற வேதனையிலிருந்தான்.
தந்தை இறந்த ரணம் ஆறும் முன்னே அடுத்த பத்தாவது நாளில் அன்னையும் இறந்திட, அதுவும் தன் கண்முன்னே துடித்து இறந்ததில் மொத்தமாய் நிலையிழந்தான் மதியழகன்.
அன்னை இறப்பில் மதியழகன் அழுவதை தாளமுடியாமல் “அழாத மாமா.” என தாமரை ஆறுதல் படுத்த, எங்கே பேத்தி மதி பக்கம் சாய்ந்திடுவாளோ என, அழகம்மாளை அடக்கம் செய்த அடுத்த நாளே, “பெரியவங்க இருந்தாலாவது பரவால்ல, இனி தாமரையை அங்க கூட்டிட்டு போக வேண்டாம்.” என்றார் கதிரேசனின் அம்மா.
“நல்லது கெட்டதுக்கு கூட போகாம எப்படியிருக்க முடியும்?” என காமாட்சி பொறும.. “போறதுனா நீ போ, ஒரு மாசத்துக்குள்ள இரண்டு எழவு விழுந்த வீடு, வயசுப் புள்ளையை கூட்டிட்டு போயி காத்து கருப்பு அண்டுச்சினா அதுக்கு வைத்தியமேயில்ல.” என்றார் கதிரேசனின் அன்னை.
கதிரேசன்.. “ஏம்மா மனசாட்சியே இல்லாம பேசுற? சொந்த தாய்மாமன் வீடு, போக வர இல்லாம எப்படியிருக்க முடியும்? நாங்க போகும்போது கூட்டிட்டு போகப்போறோம், என்னவாகிடும்.?” என்றார் ஆற்றாமையோடு.
“அதெல்லாம் சொன்னா உனக்கு புரியாது.” என்க, “ஏன் புரியாது? புரியாம போக நானொன்ன சின்ன பையனா?” என்று கதிரேசன் திட்டவும்..
கதிரேசன் தந்தை.. “என்னடா அம்மாகிட்ட இந்த எகுறு எகுறற? என் பேத்திங்க நல்லதைத்தான் நாங்க யோசிப்போம், பெத்தவங்க இல்லாத வயசு பையன் இருக்க வீட்டக்கு சடங்கான புள்ளையை கூட்டிட்டு போக்ககூடாதுனா கூடாதுதான்.
என் பிள்ளை என் விருப்பம், எங்களை விட என் மச்சினன் குடும்பம்தான் பெருசுனு நினைச்சா எங்களை கொண்டுபோய் அநாதை ஆஸ்ரமத்துல சேர்த்திடு.” என போர்கொடி பிடித்தனர் இருவரும்.
சொன்னதை செய்யும் அப்பாவின் பிடிவாதத்தையும் வரட்டு கௌரவத்தையும் நன்கறிந்த கதிரேசனுக்கு அவர்களின் பேச்சை கேட்பதை தவிர வேறு வழியில்லாமல் போனது.
அன்னை தற்கொலை செய்து கொண்டதை போல், தனது ஒரே மகன், மருமகள் இறந்த வேதனையில் தானும் ஏதேனும் செய்துகொள்வாரோ என, தாத்தாவை தனியே விட்டு கல்லூரி செல்ல பயந்தான் மதியழகன்.
கொஞ்ச நாளைக்கு பகல் டைம்ல மட்டும் தாத்தாவோட வந்து இருங்கத்தை, நான் காலேஜ்ல இருந்து வந்ததும் உங்களை கூட்டிட்டு போய் விட்டுடறேன் என உதவி கேட்டான் காமாட்சியிடம்.
மதியழகன் கேட்டதற்கு கதிரேசன் ஒத்துக்கொள்ள, அடுத்த நாள் காலை தாமரை, மஞ்சுவை பள்ளிக்கு அனுப்பி வைத்ததும் தந்தை வீட்டிற்கு வந்தார் காமாட்சி.
என்ன முயற்சித்தும் காமாட்சியால் பழனிப்பனை தேற்ற முடியவில்லை. ஒருவேளை உணவு கூட உண்ணாமல் வெறும் தண்ணீர், டீ மட்டுமே, அதுவும் மிகுந்த களைப்பானால் மட்டுமே டீ என இருப்பவரை தேற்றும் வழியறியாமல் தவித்துப்போனார் காமாட்சி.
அன்று மாலை தந்தை சாப்பிடாததை மதியிடம் சொல்ல, எனக்கிருக்க ஒரே ஆள் நீ மட்டும்தான் தாத்தா.” என மதி கண்கலங்க.. பேரனின் யாசக பேச்சில் கரைந்து கஞ்சி குடித்து உண்ணாவிரதத்தை முடித்தார் பழனியப்பன்.
அப்பொழுதுதான் சமையலறை சென்று பார்க்க, சமைக்கத் தெரியாமல் அனைத்து மசாலாவையும் போட்டு, எதோ செய்திருந்ததை கவனித்து, இருவரையும் தன் வீட்டிற்கு அழைத்து செல்ல கணவனிடம் வேண்ட, வழக்கம்போல் மாமனார் மாமியார் அதற்கு ஒப்புகொள்ளவில்லை.
இத்தனை மறுப்பிற்கு பிறகு, அவர்களை வர வைத்தாலும் தான் இல்லாத நேரம் தன் அன்னை மாமனாரை மனம் நோக செய்வார் என, சரி அவங்களை வர வைக்க வேண்டாம், தினமும் சாப்பாடு கொடுத்தனுப்பு ஆச்சி என்றார்.
கணவன் சொல்படி ஒரு வாரம் சாப்பாடு எடுத்துச்சென்றார் காமாட்சி. அடுத்த நாள், பதினாறாம் நாள் காரியத்திற்கு சொல்ல மதியழகன் வர, அதான் தினமும் சாப்பாடு வருதே.. உங்கப்பாம்மா இருக்கும்போது கூட இப்படி சாப்பாடு சாப்பிட்டிருக்கமாட்டதான? என்றார் தாமரையின் தாத்தா.
ஏதும் பேசாமல் அத்தை மாமாவிடம் காரியத்திற்கு வர சொன்னவன், இனி இங்கிருந்து சாப்பாடு எடுத்து வரக் கூடாதென்பதையும் சொல்லிச்சென்றான்.
சாப்பாடு வேண்டாம் என்று சொன்ன த்வணி, காமாட்சி மற்றும் கதிரேசன் இருவரும் முதல் முதலாய் மதியழகனுக்கு பயந்த தருணமாகிப்போனது.
காரியம் முடிந்து, நான்கு நாள் கழித்து, மஞ்சு ரொம்ப அழறா மதி, காய்ச்சலே வந்துடுச்சி, இன்னைக்கு காலேஜ் லீவ்தான? வீட்டுக்கு வந்துட்டு போ.” என்று காமாட்சி சொல்லவும் வீட்டிற்கு வந்தான்.
வந்தவன் இரண்டு மணிநேரம் மஞ்சுவோடு இருந்து கிளம்பப்பார்க்கவும், மதியை விட்டு கீழிறங்க மறுத்து அழத்துவங்கினாள் மஞ்சு.
அன்று மஞ்சு அழுத அழுகையில் குழந்தைக்கு தன் மீதுள்ள பாசத்தை முழுதாய் உணர்ந்த மதியழகன், மஞ்சுவிற்கு சரியாகும் வரை பகலில் இங்கேயே இருக்கலாம் என்றெண்ணி அடுத்த நாள் காலையிலும் வர, “செய்த சீருக்கு திண்ணே தீர்த்துடுவாங்க போல..” என்றார் கதிரேசனின் அன்னை.
அவர்கள் சொன்னதை விட, அதற்கு காமாட்சியும் கதிரேசனும் எதுவும் சொல்லாமல் இருந்ததுதான் பெரிய அவமானமாகத் தோன்றியது மதிக்கு. அன்றோடு வீட்டிற்கு வருவதையே நிறுத்திவிட்டான்.
எனினும் பெரியவர்கள் பேசுவதற்கு குழந்தை என்ன செய்வாள் என, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பள்ளிக்கு வரும் நேரம், அல்லது பள்ளியிலிருந்து வீட்டிற்கு போகும் நேரத்தில் சாக்லேட்டோடு பள்ளிவாசலில் காத்திருப்பான் மதி.
மஞ்சுவிற்கு சாக்லேட் கொடுத்து, தாமரைக்கும் கொடுக்க, “என் பாட்டி உங்ககிட்ட பேசக்கூடாது சொல்லிருக்காங்க, எனக்கு வேணாம்.” என்று மாமா என்ற வார்த்தை தவிர்த்து சொல்லிச் சென்றாள்.
அதற்கு பின் ஒன்றரை வருடம் கழித்து தாமரையின் பாட்டி இறந்திட, நல்லதுக்கு போகலன்னாலும் துக்கதுக்கு போகாம இருக்கக்கூடாது மதி, செத்தவங்களுக்காக இல்லனாலும் மாப்பிள்ளைக்காக பார்க்கனும் என்று பழனியப்பன் சொல்ல, கதிரேசனின் அம்மா இறப்பிற்கு தன் தாத்தாவோடு போனான்.
ஒன்றரை வருடத்திற்கு முன், பேசலனா போடி என்றுதான் நினைத்தான். ரோசமாக தாமரையை பார்ப்பதையும் கூட தவிர்த்தான். ஆனால் இன்று நீண்ட நாள்கள் கழித்து தாமரையின் முகம் பார்த்தவன், அவளிள் புறக்கணிப்பை புறக்கணித்து அவளிடம் பேச மனம் உந்த.. பாட்டி இறப்பை தாளாமல் அழுது கொண்டிருந்தவளிடம்.. “அழாத தாமரை.” என்றான் ஆறுதலாக.
பதில் பேசவில்லை தாமரை. அவமானமாய் உணர்ந்த போதும், பாட்டி இறந்த துக்கத்தில் இருக்கிறாள் என தேற்றிக்கொண்டான் தன்னை.
அடுத்த ஆறாவது மாதத்தில் தாமரையின் தாத்தாவும் இறந்தார், அதற்கு வந்த போது, கண்ணீர் வடித்துக்கொண்டிருந்த அத்தை மாமாவிற்கு சற்று உயர்ந்த குரலிலேயே ஆறுதல் சொல்லி தாமரைக்கு தன் இருப்பை உணர்த்தினான் மதி. அப்பொழுதும் நிமரவில்லை தாமரை.
போடி.. என ரோசத்தோடு பொறுமியவன், அதன்பின் இனி இவளிடம் பேசவேக்கூடாதென முடிவெடுத்தான். முடிவெடுத்ததை போல்தான் எட்டு வருடமாக இருக்கிறான்.
கதிரேசன் வெளியூர் செல்லும்போதெல்லாம் பாதுகாப்பிற்காக வரும் மதியழகன், உறவுக்காரன் என்றில்லையானாலும் நமக்காகத்தானே வருகிறான் என்றாவது பார்ப்பாளா என்று மஞ்சுவோடு பேசினாலும் தாமரையையும் அவளறியாமல் கவனிப்பான்.
கருவாச்சி என்று மதி விளையாட்டாய் சொன்னதையே கருத்தில் வைத்திருக்கும் தாமரை, அவன் நினைப்பது போல இன்றுவரை ஒருநாளும் பார்த்ததில்லை.
தற்போது தாமரையின் திருமணப் பேச்சு, நடந்தவையணைத்தையும் வலம்வர வைத்தது. பாழாய் போன காதல் படுத்தும்பாடு, இன்று வரை தன்னை புறக்கணிக்கிறாள் என தெரிந்தபோதும் அவளை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
இனியும் விலகி நின்றால் நிலைமை கை மீறிப் போய்விடுமோ என அஞ்சியே, சாப்பாடு விசயத்தில் பட்ட அவமானம் மறந்து, மஞ்சுவின் விசேஷ சாப்பாட்டை சாப்பிட்டான்.
கெஞ்சினாள் அவமதிப்பாள், இல்லை பிடிவாதத்தில் உள்ளே வரமாட்டாள் என்றுதான் அன்று மிரட்டலாக பேசினான்.
எப்படி பேசினாலும் அவள் தன்னை நினைப்பதென்ன? யோசிக்க கூட இல்லையென்பது அவளின் திருமண சம்மதத்தில் புரிய மனம் ரணமாய் வலித்தது மதியழகனிற்கு.
வேதனைதான் என்றாலும், தனக்கு பிடித்தால் போதுமா? தன்னை பிடிக்காதவளை எப்படி திருமணத்திற்கு கேட்பது? கேட்டாலும் தன்னோடான திருமணத்திற்கு சம்மதிப்பாள் என்ற நம்பிக்கையும் இல்லாமல் போக.. தன்னை பிடிக்காதவளோடு வாழ்வதை விட, தந்தையை கொன்றவனை பழிவாங்குவதே முக்கியம் என உறுதிகொண்டான்.
** *** *** **** ****
சூர்யா குடும்பத்தினர் பெண் பார்த்து சென்ற அடுத்த நாள் மாலை.. மாப்பிள்ளை பிடித்திருக்கிறதா என கதிரேசன் கேட்க, தான் என்ன சொல்வேனோ என்ற ஆர்வத்தோடு கேட்கும் தந்தையை ஏமாற்றாமல் பிடித்திருக்கிறது, ஆனால் என் டிகிரி முடிஞ்ச பின்னதான் கல்யாணம் வைக்கனும்.” என்றாள்.
கதிரேசன் சூர்யபிரகாசின் வீட்டிற்கு கால்செய்து.. தாமரையின் சம்மதத்தை சொல்லி தன் சம்மதத்தையும் சொன்னார். சூர்யாவின் வீட்டில் அனைவரும் மிகுந்த சந்தோசமடைந்து, அடுத்த வெள்ளியே உறுதி செய்துக்கலாம் என்றனர்.
இரண்டு நாள் கழித்து.. ‘தாமரை சூர்யா கால் செய்து உன் மொபைல் நம்பர் கேட்டார் கொடுத்திருக்கேன்..” என்றார் கதிரேசன்.
‘எதுக்குப்பா என் நம்பரை கொடுத்திங்க? என்று பதறினாள் தாமரை.
‘ஏன்மா? இந்த காலத்தில எல்லாரும் பொண்ணு பார்க்க வரும்போதே தனியா பேசனும்னு சொல்றாங்க.. அன்னைக்கு நீ ஏதும் பேசலல்ல? அவரை பிடிச்சிருக்கானு உன்கிட்ட கேட்கனும்ன்றார், எப்படி நம்பர் கொடுக்காம இருக்கிறது?” என்று எடுத்துரைத்து வெளியேறினார்.
அடுத்த பத்தாவது நிமிடம், தாமரையின் மொபைலுக்கு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வரவும்.. பயத்துடன்தான் ஆன் செய்தாள்.
‘ஹலோ இது தாமரைதான?” என்றான் சூர்யபிரகாஷ்.
‘ம்ம்..”
‘நான் சூர்யபிரகாஷ்.. என் விருப்பத்தை அன்னைக்கே சொல்லிட்டேன், உனக்கு என்னை பிடிச்சிருக்கா?” என்றான் ஆவலோடு.
தாமரை அமைதியாக இருக்க, “அங்கிள்கிட்ட நம்ம கல்யாணத்துக்கு சம்மதம்னு சொன்னியாம், அதை கன்ஃபார்ம் பண்ணத்தான் கால் செய்தேன்.” என்க.. தாமரை மௌனம் காக்க.. “எதாவது சொல்லு தாமரை. நீ சொன்னாதான் மத்ததை யோசிக்க முடியும்.”