இங்கு பக்கத்தில்தான் இருப்பான் என கதிரேசன் மனம் சொல்ல, மதியழகனிற்கு அழைத்தார். மதி அழைப்பை ஏற்க.. “எங்க இருக்க மதி? வீட்டுக்கு வா.” என்றார்.
மதியும் கதிரேசன் வீட்டிற்கருகேயுள்ள டீ கடையில்தான் நின்றிருந்தான். தாமரை வேண்டாம் என்று சொன்னதை விட, தான் உள்ளே போனதும், அழகுமாமா என மலர்ந்த முகத்தோடு மஞ்சு ஆசையோடு தன்னருகே வந்ததும், அங்கு தாமரை கல்யாணம் வேணாம் என்றதால் மகளை சூர்யா கேள்வியால் துளைத்துக்கொண்டிருக்க,
அத்தனை பெரிய விசயத்தை தவிர்த்து தன்னை கண்டதும் சந்தோசத்தோடு வரவேற்ற காமாட்சியைப் பார்த்த பின்னேதானே இனி இங்கிருந்தால் தனக்குத்தான் அசிங்கம் என்று வெளியேறினான் சூர்யா.
அனைத்தும் நினைத்தபடி டீ குடித்துக் கொண்டிருந்தவனுக்கு கதிரேசன் அழைப்பார் எனத்தெரியும் ஆதலால் அருகிலிருந்த டீ கடையில் காத்திருந்தவன்.. “வரேன் மாமா.” என இணைப்பை துண்டித்து ஐந்து நிமிடத்தில் வீட்டிற்கு வந்தான்.
“அழகு மாமா.” என மஞ்சு ஆர்வத்தோடு மதியிடம் வர.. “எதுக்கு அப்படி பேசி என்னை வரவச்ச?” என முறைத்தான்.
இத்தனை கோபமாய் மஞ்சுவிடம் மதி பேசியதில்லை ஆதலால் பயந்தவள்.. “மாமா.” என குரலிறங்கினாள்.
“சொல்லு.. எதுக்கு பொய் சொன்ன?” என கோபத்தோடு முறைக்க.. “பொய் சொல்லல மாமா, தாமரை ரொம்ப டிஸ்டர்பா இருந்தா, இப்படி எதாவது சொதப்புவானு தெரியும், அதனாலதான் உங்களை வர சொன்னேன்.” என கண்கலங்க..
“இப்படியா என்கிட்ட சொன்ன?” என மீண்டும் முறைக்க, மதியின் கோபம் தாளமுடியாமல் மஞ்சு சத்தமாய் அழ ஆரம்பிக்க.. “சுப்.. வாய மூடு..” என அதட்டினான் கோபமாக.
தாமரையின் விசேஷத்திற்காக வந்திருப்பான் என நினைத்திருந்த காமாட்சிக்கு தற்போதுதான் மஞ்சு அழைத்ததால் வந்திருக்கிறான் எனப்புரிய.. “மஞ்சு என்ன சொன்னா மதி?” என்றார் தவிப்போடு.
“தாய்மாமன் இல்லாம விசேஷம் செய்தா என் பொண்ணை தப்பா நினைப்பாங்க, என் மகனிருந்தா தங்கச்சி மக விசேசதுக்கு போகாம இருப்பானா.? நம்மள்ல யாரும் இல்லனா என் பொண்ணு மனசு தவிக்காதா? நீ போகலனா பரவால்ல, என்னையாவது கொண்டுபோய் விடுனு அங்க தாத்தா காலைலயே புலம்ப ஆரம்பிச்சிட்டார்.
சம்மதம் தெரிவித்து, பின்னே வேண்டாம் என சொல்லியிருக்கிறாள் என்பதை சூர்யாவின் பேச்சிலும், தவறை ஒப்புகொண்டு தாமரை மன்னிப்பு கேட்டதையும்தான் பார்த்தானே? இதைப்பற்றி அறிய வேறொன்றும் இல்லையாதலால்.. “என்னை எதுக்கு மாமா வர சொன்னிங்க? காலேஜ்க்கு டைம் ஆச்சு..” என்றான்.
இத்தனை பிரச்சனை நடந்திருக்கிறது.. எவ்வளோ அவமானப்பட்டுருக்கேன்? இப்படி ஆகிடுச்சே, எதோ ஆறுதல் சொல்லுவான், விடுங்க நான் பார்த்துக்கிறேன்னு நம்பிக்கை கொடுப்பானு பார்த்தா, இவனுக்கு வேலைதான் முக்கியமா என கோபமாய் நினைத்து..
பொண்ணு மனசுல என்ன இருக்குனு தெரியாம கல்யாணத்தை ஃபிக்ஸ் பண்ணிட்டு என்கிட்ட எகுறுறாங்க என மனதில் கடிந்தவன்.. “மஞ்சு சொல்லித்தான் வந்தேன்னாலும், பெரிய பிரச்சனையாகப்போகுது, எங்கப்பாம்மா அவமானப்படப்போறாங்கனு சொல்லவும், உங்களுக்காகத்தான் வந்தேன்.” என கோபமாய் கிளம்பவும்..
“சாரி மாமா..” என மஞ்சு மதியின் கைப்பிடிக்க, ஏதும் சொல்லாமல் மஞ்சுவிடமிருந்து தன் கையை பிரித்து வெளியேறினான்.
‘எந்த பாதிப்பும் இல்லாத எப்படி போய்ட்டான் பார்த்தியா ஆச்சி.? எல்லாம் இவனால வந்தது. என் ஃப்ரண்ட் இவனைப் பார்த்ததும் என்ன நினைச்சானோ? யார் இவன்னு என்கிட்ட விசாரிச்சான், மச்சினன் மகன்னு சொல்லவும், நாங்க வந்ததுலயிருந்து உம்முனு உக்கார்ந்திருந்த உன் சின்ன மகளுக்கு அவனை கண்டதும்தான் முகமே ஜொலிக்குது..
இங்க எவ்வளோ பிரச்சனை ஓடிட்டு இருக்கு? என் மகன் உன் பொண்ணுகிட்ட அவமானப்பட்டு நிக்கிறதை கண்டுக்காம உன் பொண்டாட்டி அவனை வரவேத்துட்டு இருக்காங்க, அவனுக்கு பொண்ணு கொடுக்க முடிவு செய்துட்டு என்னை எதுக்குடா வர சொன்னனு திட்டிட்டு போறான்.
நம்ம மனசுல இருக்கிறதை பத்து நிமிஷத்துல அவன் கண்டுபிடிச்சிட்டான், கூடவே இருக்க இவனுக்கு தெரியாதா? எல்லாமும் தெரிஞ்சும் தாமரையை வெளில கேக்குறாங்கனு சொல்லியும் எதுவும் கண்டுக்கலன்னா அப்போ தாமரையை பிடிக்கலனுதான அர்த்தம்?
இவனுக்கும் இருபத்தொன்பது வயசாகுதில்ல? என் பொண்ணை விட பெருசா அப்படி எந்த அழகியை கட்டறானு பார்க்கத்தான போறேன்?” என்று ஆற்றாமையோடு கத்திக்கொண்டிருந்தார் கதிரேசன்.
“எதை வச்சி சொல்ற? எங்கம்மா திட்டினதெலாம் அவனுக்கு ஒரு சாக்குதான்.. தாமரையை பிடிக்கும்னா இத்தனை வருசம் பேசாத இருக்க முடியாது ஆச்சி. பேசறதென்ன? தாமரை இருக்கிற பக்கம் திரும்பறது கூட இல்ல..” என்றார் ஆதங்கமாக.
“நானும் அப்படித்தாங்க நினைச்சிட்டிருந்தேன், ஆனா அவனுக்கு தாமரையை பிடிக்குமோனு இப்போ தோணுது. பிடிக்கலனா அந்த சின்ன வயசிலயே அவ சடங்குக்கு ஒரு லட்சரூபாயை தூக்கி கொடுத்திருப்பானா?” என்றார்.
‘என்ன சொல்ற ஆச்சி? தாமரை சடங்குக்கு ஒரு லட்சம் மதி கொடுத்தானா? அவன் அப்ப படிச்சிட்டுதான இருந்தான்.? அவனுக்கு ஏது அவ்வளோ பணம்.? இது உனக்கு எப்படி தெரியும்? நீ ஏன் என்கிட்ட இவ்ளோ நாளா சொல்லலை?” என்று கேள்விமேல் கேள்வி கேட்டார் கதிரேசன்.
தாமரையை பேரனுக்கு கேட்க மாமனாருக்கு விருப்பம் இருக்குமோ என்று அறிந்து கொள்ளும் ஆவலோடு.. ‘இத்தனை வருசம் கழிச்சி எதுக்காக இந்த பேச்சு வந்தது? இன்னும் என்னலாம் சொன்னார்?” என்றார் ஆர்வமாக.
‘இந்த மதியை என்னால புரிஞ்சிக்கவே முடியலைம்மா.. தாமரை பேச்செடுத்தாலே கடுகடுன்னு விழுவான். ஆனா அந்த சின்ன வயசிலயே நம்ம தாமரை சடங்குக்கு அவன்தான் பணம் கொடுத்து என் மகன் மானத்தை காப்பாத்தினான்.
இவ்வளோ பணம் ஏதுன்னு உங்கண்ணன் கேட்டதுக்கு பிள்ளைங்களுக்கு சொல்லி கொடுக்கிறது.. லீவ் நாள்ல பெயிண்ட் அடிக்க போய் சம்பாதிச்ச பணம்ப்பா, இந்த பணம் என்னோட நாலு வருசத்து உழைப்புன்னு சொன்னான்.
ஆனா அந்த புள்ளைகிட்ட பேசக்கூடமாட்டுகிறான்.. இவன் சம்மதம் இல்லாம என்னால என்ன பண்ண முடியும்? தங்க சிலையா என் பேத்தி இருக்கா.. அவளை ஊர் பேர் தெரியாதவங்களுக்கு விட்டு கொடுத்துட்டு உக்காந்திட்டிருக்கேனேன்னு அழுதார்..” என தந்தை சொன்னதை வருத்தத்தோடு விளக்கினார் காமாட்சி.
கதிரேசனுக்கு அழைப்பு வர, “சூர்யாதான் கால் பண்றான்.” என மனைவியிடம் புலம்பியவாறு அழைப்பை ஏற்கவும்.. “நாங்க கிளம்பும்போது ஒருத்தன் வந்தானே அவன் தாமரைக்கு முறைப்பையனா?” என்றான் நேரடியாக.
“ஆமாம்ப்பா.” என கதிரேசன் குரலிறங்க.. “ஓஹ்.. அதான் ஆன்ட்டி தாமரை என்னை வேணாம்னு சொன்னப்போ மகளுக்கு புத்தி சொல்றதை விட்டுட்டு அவனை வரவேற்க போனாங்களா?” என கோபத்தோடு கேட்டு, “அவனை மாப்பிள்ளையா நினைச்சிட்டு எதுக்கு எங்களுக்கு கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுனிங்க? அப்பா உங்களை எவ்வளோ நம்பினார் தெரியுங்களா?” என பத்து நிமிடம் வரை கத்தி இணைப்பை துண்டித்தான் சூர்யா.
சூர்யா சொல்வது போல, நண்பனின் குடும்பம் அவமானப்பட்டு வெளியேறியதை விடுத்து, நானும் மதியோடான திருமணத்தைப் பற்றி யோசித்திருக்கோமே, நானே அரைமனதோடுதான் நண்பன் குடும்பத்தை வரவழைத்தேனா? இது எத்தனை பெரிய தவறு? இனி அவன் முகத்தில் எப்படி விழிப்பேன்? என வேதனையோடு நினைத்திருந்தார் கதிரேசன்.
ஒரு மணிநேரம் கழித்து.. ‘தாமரை.. வெளிய வா சாப்பிடலாம்..” என காமாட்சி அழைக்கவும்..‘எனக்கு பசிக்கலைம்மா..” என்றாள் கதவை திறக்காமல்.
‘உள்ளையே அடைஞ்சி கிடந்தா நடந்தது இல்லனு ஆகிடாது.. வெளிய வா தாமரை..” என கதிரேசன் அழைக்க.. தந்தையின் அழைப்பை மறுப்பை மறுக்க முடியாமல் வெளியில் வந்தாள்.
“சாப்பிடலாம் வா தாமரை.” என்றார் கோபமில்லாமல்.
தான் செய்த முட்டள்தனத்திற்கு என்ன சொல்வாரோ என அதீத பயத்தோடு வெளியே வந்த தாமரைக்கு தந்தையின் கோபமற்ற பேச்சு ஆச்சர்யத்தையும் நிம்மதியையும் கொடுக்க… “சாரிப்பா.. நான் நேத்தே சொல்லியிருக்கனும்.” என கண்கலங்கினாள் குற்றவுணர்வோடு.
“சரி.. சரி.. அழாத.” என தேற்றி.. “எந்த விசயமானாலும் இனி யோசிக்காம முடிவெடுக்க கூடாது. சரியா?” என்றார் கண்டிப்போடு.
“ம்.” என்றாள் நிம்மதியாக.
“ஆச்சி.. எல்லாருக்கும் டிபன் எடுத்து வா.” என்க, காமாட்சி எடுத்து வரவும் அனைவரும் உண்டனர்.
பிறகு கதிரேசன் கிளம்பவும், தாமரை விசேஷத்திற்கு மதி செய்ததாக கணவனிடம் காமாட்சி சொன்ன அனைத்து விசயத்தையும் மஞ்சு தாமரையிடம் பெருமையோடு சொல்ல.. மஞ்சு சொல்வதை நம்பாமல் அன்னையிடம் விசாரித்தாள் தாமரை.
“ஆமாம் தாமரை, மஞ்சு சொன்னதெல்லாம் உண்மைதான்.. இப்போ கூட எங்களுக்கு எதோ பிரச்சனைனு மஞ்சு சொல்லவும் பதறிட்டு வந்துட்டான், என் அண்ணன் இருந்திருந்தா எனக்காக எவ்வளோ பார்ப்பாரோ அதைவிட அதிகமாவே மதி நமக்காக பார்க்குறான்.” என அண்ணன் மகன் பெருமை பேசினார் நெகிழ்வோடு.