“சார்…” என்ற மாணவனின் அழைப்பில் தாமரை மீதிருந்த கவனம் கலைத்து பாடம் நடத்துவதில் கவனமானான்.
மதியம் விடுப்பெடுத்து வீட்டிற்கு வந்த மதி தாத்தாவின் சோர்ந்த முகம் கண்டு.. அதுக்குள்ள நியூஸ் வந்திருக்குமோ? பேத்தி கல்யாணம் நின்ன கவலைல நான் வந்ததை கூட கவனிக்கல பாரேன் என நினைத்தபடி உள்ளே போக எத்தனிக்க.. “இந்நேரமே வந்துட்ட? இனி போவ வேணாவா?” என்றார்.
“போகனும் தாத்தா. உன் பெரிய பேத்தி ஃபங்கஷன் என்னாச்சுனு யோசிச்சிட்டிருப்பனுதான் வந்தேன்.” என உள்ளே போனவன், காலையில் ஊறவைத்து சென்ற அரிசிக்கு உலையிட்டு, ஹாட் பாக்ஸை திறந்து பார்க்க, அப்படியே இருந்தது இட்லி.
“அந்த பூக்கார அக்காகிட்ட போன் செய்ய கேட்டு உன் பொண்ணுக்கு பேசிருப்பியே? இன்னைக்கு பேசலயா?” என்றபடி காலையில் இட்லி அவித்த பாத்திரத்தை தேய்க்கலானான்.
“இன்னைக்குனு பார்த்து அந்த புள்ள வரல மதி. காமாட்சிக்கு ஒரு போன் போட்டு கொடேன்.” என்றார் கெஞ்சலாக.
“அங்க யாரும் பேசுற நிலைல இல்ல, இரண்டொரு நாள்ல அத்தையே பேசுவாங்க, அப்போ பேசிக்கோ.” என்று வேலையில் கவனமாக.. “ஏன் மதி அப்படி சொல்ற? பேச முடியாத அளவுக்கு என்னாகிடுச்சி? ஏதும் பிரச்சனை ஆகிடுச்சா?” எனப் பதறினார்.
உண்மையை சொன்னா வருந்துவார் என.. “யாரோ பெரியவங்க இந்த இடம் சரிவராதுனு சொன்னதால, கடைசி நேரத்துல அத்தை இந்த கல்யாணம் வேணாம்னுட்டாங்க.” என்றான்.
பழனியப்பன் முகம் நிம்மதியை காட்ட, ஆச்சர்யப்பட்டவனாய்.. “நொய்யி நொய்யினு புலம்ப ஆரம்பிப்பனு பார்த்தா என்ன அமைதியாகிட்ட?” என்றான் இலகுவாக.
“தாமரைக்கு ராஜா மாதிரி மாப்பிள்ளை காத்திருக்கான் போல, அதான் இந்த இடம் தள்ளி போய்டுச்சி.” என்றார் நெகிழ்வாக.
அந்த உம்மனாம் மூஞ்சிக்கு ரா..ஜா வேற வேணுமா? என ராகமாய் நினைத்து, “ஓ.. ஹோ..” என அமர்த்தலாய் சொன்னவன் வீட்டை ஒழுங்கு படுத்தி, முகம் கழுவி வர, அதற்குள் சாதம் வெந்திட, அதை வடித்து.. “சரி சாப்பிட வா.” என எடுத்து வைத்து, சாப்பிட ஆரம்பித்தான் அவசரமாக.
பேத்தி திருமணம் நின்றது பெருத்த நிம்மதியை தர, தானும் சாப்பிடலானார். “பொறுமையாதான் சாப்பிடேன் மதி.” என அக்கறையாய் சொல்ல, “காலேஜ்க்கு டைம் ஆச்சு தாத்தா.” என அவசரமாய் சாப்பிட.. மதிக்கு அழைப்பு வந்தது.
“சொல்லுங்கம்மா.” என்றான். தாத்தா இருப்பதால் கவனமாக பேசினான்.
ரகுவரன்.. “அண்ணே.. அந்த ரஞ்சித் ஊருக்கு வந்திட்டு, அன்னைக்கு நைட்டே திரும்ப டெல்லிக்கு போயிருக்கானாம். இன்னும் நாலு நாள்ல வந்திடுவானாம்.” என்றான்.
“சரிம்மா, நான் அப்புறம் பேசுறேன்.” என இணைப்பை துண்டித்து.. “நான் கிளம்பறேன் தாத்தா.” என கிளம்ப..
“பேத்திகளை கூட்டிட்டு காமாட்சியை ஒரு நாளைக்கு வர சொல்லு மதி.. படிக்கிற புள்ளைகிட்ட கல்யாணத்தை பத்தி பேசி அது மனசை கலைச்சிட்டாங்க, கல்யாணம் நின்னுடுச்சேனு காமாட்சியும் மாப்பிள்ளையும் வருத்தத்துல இருப்பாங்க, இரண்டு வார்த்தை ஆறுதல் சொல்லியனுப்புவோம்.. நம்மளை விட்டா அவங்களுக்கு யாரிருக்கா?” என்றார் அன்போடு.
“சரி தாத்தா.” என கிளம்பினான்.
தன் தந்தையை மட்டுமல்ல, பணத்திற்காக ரஞ்சித்தால் பாதிக்கப்பட்ட சில நபர்கள் பெயரை அன்று சந்தியா அன்னை சொல்ல, அவர்களில் இருவரை நேரில் சந்தித்து விசாரிக்க, என் மகனை நான் சொல்ற மாதிரிதான் கேட்கனும், இல்ல கொன்னுடுவேனு என் மகனை மிரட்டி, யாரோ செய்த தப்புக்கு என் மகனை கூட்டிட்டு போய்ட்டாங்க..
ஏழு வருச தண்டனைக்கு பின்ன வெளில வந்த என் மகன் அவமானம் தாங்காம தூக்கு போட்டு தற்கொலை பண்ணிகிட்டான், என ரஞ்சித்தால் மகனை பறிகொடுத்த வயதான அன்னையின் கண்ணீர், மதியழகனின் ரணத்தை அதிகப்படுத்தியது.
காவல் துறையிடம் மாட்டிக்கொள்ளாமல் பழிவாங்க வேண்டும் என நினைத்ததெல்லாம் போய், ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லை, ரஞ்சித்தை தன் கையாலே கொன்றாக வேண்டும் என்ற வெறியில் இருந்தான் மதியழகன்.
“நல்லா விசாரிச்சிட்டேண்ணா, அவன் பையனுக்கு பொண்ணு பார்க்குற விசயமா போயிருக்கானாம். உண்மையா பொய்யானு தெரியல.. ஆனா அவன் சொந்தகாரன் இப்படித்தான் சொன்னான்.
இன்னும் நாலு நாள்தானே? என நினைத்தவன்.. “சரி ரகு, தகவல் கிடைச்சதும் கால் பண்ணு.” என இணைப்பை துண்டித்து கல்லூரிக்கு வந்தவன் ரஞ்சித் நினைவிலேயே உழன்றிருந்தான்.
டெல்லிக்கு போயிருக்கானா? போகட்டும் போகட்டும், இதுதான் அவனின் கடைசி பயணம். என மருகிக்கொண்டிருந்தான்.
இதோ ஒரு மாதம் முடிந்துவிட்டது. இன்னும் ரஞ்சித்தை பார்க்க முடியாத கோபத்திலிருந்தவன், பேசாம அவங்க குடும்பத்துல யாரையாவது கடத்தி இவனை வர வைக்கலாமா என யோசித்திருந்தான்.
மேலும் இரண்டு நாள் கழிந்திருக்க.. மதிக்கு அழைத்தார் காமாட்சி. “ம் சொல்லுங்கத்தை.” என்றான்.
“வீட்டுக்கு வந்தே ஒரு மாசத்துக்கு மேல ஆகுது, ஃபோனும் பண்றதில்ல, நான் ஃபோன் செய்தாலும் எடுக்கமாட்டுக்கிற. என் அப்பாகிட்ட கூட பேச முடியமாட்டுக்குது.” என குறைபட்டார்.
“ஒரே ஒரு முறை நான் டியூசன்ல இருக்கப்போ போன் செய்திங்க, அதான் எடுக்க முடியல, ஏன் திரும்ப கூப்பிட வேண்டியததான? காரெடுத்தா கால் மணிநேரத்துல வீட்டுக்கு வந்திடலாம், அப்பாவை பார்க்கனும்னா வர வேண்டியதுதான? யார் வேணாம்னா?” என்றான்.
“சரி கத்தாத..” என நொடித்தவர்.. “மஞ்சுக்கு நாலு நாளா காய்ச்சல், ஹாஸ்பிட்டலுக்கு கூப்பிட்டா வரமாட்டுக்கிறா.. நேரமிருந்தா வந்த என்னனு பாரு.” என இணைப்பை துண்டித்தார்.
“நாலு நாளா காய்ச்சலா?” எனப் பதறி மஞ்சுவிற்கு அழைத்தான்.
“அழகு மாமா..” என்றவளின் குரல் அழுகையோடு வெளிவர.. “எதுக்கு அழற மஞ்சு? நீ என்ன சின்ன பொண்ணா? காய்ச்சல் வந்தா ஹாஸ்பிட்டலுக்கு போக மாட்டியா?” என திட்ட..
மதியின் கேள்வியெல்லாம் விடுத்து.. “உங்களை பார்த்தே ஒரு மாசத்துக்கு மேல ஆகுது.” என ஏக்கத்தோட அழ.. ப்ச்.. இந்த ரஞ்சித் டென்ஷன்ல இவளை பார்க்காம விட்டுட்டோம்.. என வருந்தியவன்.. “கொஞ்சம் வேலை இருந்தது மஞ்சு. அப்பாவோட ஹாஸ்பிட்டல் போ, நான் மதியம் வரேன்.” என்றான் கனிவாக.
மஞ்சு அமைதி காக்க.. “சரி நானே வரேன், ரெடியாகு.” என கிளம்பினான்.
மதியழகனை கண்டதும் தேம்பி தேம்பி அழுதாள் மஞ்சு. “ஏய் மஞ்சு எதுக்கு இப்படி அழற? காய்ச்சல் அதிகமாகிடும்.” என கண்டிக்க, “அன்னைக்கு நான் பொய் சொல்லல மாமா.. இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிச்சிருக்க கூடாதுனு தாமரை ரொம்ப அழுதா, எதோ சொதப்ப போறானு தெரியவும்தான் உங்களை வர சொன்னேன்.” என வெம்பினாள்.
“சரி சரி அழாத.” என மதி அமைதி படுத்த, “பொய் சொல்லிட்டேனு நினைச்சி நீங்க என்னை பார்க்க வரவேயில்ல. என்மேல கோபமா இருக்கிங்க..” என மீண்டும் தேம்ப..
“நீ பொய் சொல்லலைனு அன்னைக்கே புரிஞ்சிக்கிட்டேன் மஞ்சு.. வேற ஒரு வேலைல பிஸியா இருந்ததால வர முடியல..” என்றான் சமாதானமாக.
“நேத்து கூட்டிட்டு போனேன் மதி, உன்னை பார்க்காத ஏக்கத்துல காய்ச்சல் சரியாகாதுனுதான் வர சொன்னேன், உன் மஞ்சுவோட கொஞ்ச நேரம் இருந்தினா காய்ச்சல் போய்டும்.” என்றார் காமாட்சி.
தாமரையின் இறுதி பரிச்சை முடிந்திருக்க வீட்டில்தான் இருந்தாள். தனக்கு சீர் செய்ய பணம் கொடுத்திருக்கிறான் என்றறிந்த பின்னே, தன் பாட்டி திட்டியதாலும், கருவாச்சி என்று சொன்னதால் தான் பேசுவதை நிறுத்தியதற்காகவும்தான் தன்னை அவாய்ட் செய்திருக்கிறான்..
மதியைப் பற்றிய யோசனைகள் ஒரு மாதமாய் வலம் வந்திருக்க, தற்போது மதியின் குரல் கேட்கவும், சிறு வயதில் அவனோடு பழகிய, பேசிய, விளையாடிய நிகழ்வுகள் நினைவில் வர வெளியே செல்ல மனம் உந்தியது.
ஆகினும் தன்னை கண்டால் முகம் திருப்புவான்.. அவன் முன் ஏன் அவமானப்பட்டு நிற்க வேண்டும்? என்ற ரோசத்தோடு தனதறையிலேயே இருந்தாள்.
மதி வந்தால் தாமரை உள்ளே போவதை அன்று மதியழகன் குறையாய் சொன்னது நினைவு வர.. “தாமரை.. வெளில வா, மஞ்சுக்கு கொஞ்சம் சுடு தண்ணி எடுத்து வா. மஞ்சுக்கு மாத்திரை கொடுக்கனும்.” என்றார் காமாட்சி.
இத்தனை மஞ்சு சொல்வதிலேயே, அன்று நான் குறைபட்டதற்குத்தான் அழைக்கிறார்கள் எனப்புரிய காமாட்சியை முறைத்தான்.
அவர் இவனை பார்த்தால்தானே? தாமரை வெளியே வந்ததும்.. “அங்க தனியா ஒரு குண்டான்ல வச்சிருக்கேன், எடுத்துட்டு வா.” என்க.. தாமரை தண்ணீர் எடுத்து வர வாங்கியவர்.. “இங்கையே உக்காரு, சும்மா சும்மா உன்னை கூப்பிட்டுட்டு இருக்க முடியாது, என்னாலயும் சும்மா சும்மா எழுந்துக்க முடியல.” என்றார்.
ப்பா.. எத்தனை சும்மா? எதுக்கு இப்படி உளறிட்டிருக்காங்க? என நினைத்தவன்.. இங்க உக்கார்ந்தா மட்டும் என்னை பார்க்கவா போறா என தாமரையை பார்க்க..
நம்ம மதியழகன் சார்கிட்ட உண்மையாவே மதியும் அழகும் கொட்டிக் கிடக்குது, காலேஜ் மாதிரி இல்லாம ஸ்கூல் பசங்களுக்கு மாதிரி எத்தனை முறை டௌட் கேட்டாலும் சொல்லி கொடுப்பாராம்.
இப்படி ஒரு சார்.. சயின்ஸ் டிப்பார்ட்மண்ட்ல இருப்பார்னு தெரிஞ்சிருந்தா நானும் சயின்ஸ் மேஜர் எடுத்திருப்பேன்.. தெரியாம மேத்ஸ் எடுத்துட்டேன்.. என தனது கல்லூரி தோழிகள் இவளிடமே கூறி கேட்டிருக்கிறாள்.
தன்னை காணாமல் தவித்த மஞ்சுவின் ஏக்கத்திலும், வழக்கத்தில் இல்லாமல் தானிருக்கும்போது தாமரையை வெளியே வர அழைத்த அத்தையின் சிறுபிள்ளை தனத்திலும் மதியின் முகம் இலகுவாக இருந்தது.
தோழிகள் கூறியது நினைவு வந்த தாமரை மதியைதான் பார்த்திருந்தாள். மதியழகன் பார்க்கவும் சட்டென பார்வையை விலக்கி அங்கிருக்க முடியாமல் தனதறைக்குள் போனாள். கிட்டதட்ட ஓடினாள்.
மஞ்ச கலர் தாமரை சிவப்பு கலரா மாறுற அளவுக்கு இப்போ என்ன நடந்தது? என அதிசயித்தவன்.. ‘அத்தை.. தாமரை கல்யாணம் ஏன் நின்னுடுச்சின்னு தாத்தா என்னை நச்சரிக்கிறார்.
இவ பண்ணின கலாட்டாவெல்லாம் அவர்கிட்ட சொல்லலை.. ஜாதகம் சரிவரலைன்னு சமாளிச்சேன். மஞ்சுவையும் அவளையும் கூட்டிட்டு உங்களை ஒருமுறை வர சொன்னார். டைம் இருக்கும்போது வீட்டுக்கு வாங்க..” என்றான்.
மதியின் இயல்பான பேச்சு காமாட்சிக்கு சந்தோசத்தை கொடுக்க.. “மஞ்சுக்கு காய்ச்சல் சரியாகவும் கண்டிப்பா வரேம் மதி.” என்றார்.
“ரெஸ்ட் எடு மஞ்சு, கொஞ்சம் வேலையிருக்கு. நாளைக்கு வரேன்.” என்று மஞ்சுவின் கேசம் கோதி கிளம்பினான்.