இவர்கள் சத்தத்தில் கீழே பாயில் உறங்கிக்கொண்டிருந்த அபிஷேக் விழித்திட, தந்தை நிலை பார்த்தவன் பேரதிர்ச்சியோடு.. “யார்டா நீ. நாங்க யாருனு தெரியாம கையை வைக்கிற. ஒழுங்கா எங்கப்பாவை விட்டுடு.” என மிரட்ட..
“டேய்.. அடங்குடா. எழுந்து உக்காரவே உனக்கொரு ஆள் துணை வேணும், நீ என்னை மிரட்டுறியா?” என அசால்ட்டாய் அதட்டி அவனருகில் அமர்ந்தான் மதியழகன்.
மகனை ஏதேனும் செய்திடுவானோ என.. “டேய்.” என அதட்டியபடி ரஞ்சித் எழ முற்பட, “எழுந்தா இந்த பிராந்தியை உன் மகன் வாயில ஊத்திவிடுவேன்.” என பாட்டிலை எடுக்க.. “வேணாம்..” என பயந்தடங்கினான் ரஞ்சித்.
“ம்.. குட்.” என மெச்சியவன்.. “எல்லாரும் சாப்பிட போயிருக்காங்க, இங்க கேமரா இல்ல, சரக்கடிச்சா உன் மகன் செத்துவான்னு இத்தனையும் தெரிஞ்சிதான் வந்திருக்கேன்..
உன் மகன் உயிர் எனக்கு தேவையில்ல, உன் உயிர் கூட இப்போதைக்கு தேவையில்ல, எங்கம்மா ஏன் செத்தாங்கனு சொல்லு, நான் கிளம்பிடறேன்.” என்றான்.
ரஞ்சித்..“யார்டா உங்கம்மா.?” என பல்லை நெறிக்க..
“ஓ.. உனக்கு கோபம் வேற வருதா?” என மதியழகன் மது பாட்டிலின் முடியை திறக்க.. “டேய் பாட்டிலை மூடுடா.. ஸ்மெல் பண்ணினாலே அவனுக்கு டேஜ்சர். கொன்னுடுவேன்டா உன்ன..” என்றான் மிரட்டலாகவே.
“ஓ.. ஹோ.. என்னை கொன்னுடுவியா?” என மதியழகன் மது பாட்டிலை அபிஷேக்கருகே கொண்டு செல்ல.. “யார் உங்கம்மா?” என்றான் குரலிறங்கியவனாய்.
“ம்.. இந்த ஸ்லாங்க அப்படியே மெயிண்டன் பண்ணிக்கோ.” என எச்சரித்து.. “அந்த பெஞ்சை விட்டு எழ முயற்சி செய்த.. உன் மகனை உயிரோட பார்க்க முடியாது.” என அழுத்தமாய் சொல்லி.. “உன்னால பாதிக்கப்பட்டவங்க ஏகப்பட்ட பேர் இருப்பாங்க போல.” என பல்லை நெறித்து..
“என் அம்மா பேர் அழகம்மா.. அப்பா பைரவன்.” என்றதும் ரஞ்சித்திற்கு பக்கென்றது. அவனின் முக மாற்றேமே தன் பெற்றோரை நினைவிருக்கிறது என்பதை உறுதி செய்ய.. “என்னையும் அப்போவே முடிச்சிருந்தா இப்படி பிரச்சனை வந்திருக்காது. இப்பபாரு வகையா மாட்டிக்கிட்ட.” என அழுத்தமாய் சொல்லி.. “ம்.. சொல்லு.. எங்கம்மா எதுக்காக லாரில மோதி உயிரை விட்டாங்க?” என்றான்.
“என்ன? உங்கம்மா இறந்துட்டாங்களா?” என தெரியாதவன் போல் மழுப்ப பார்க்க.. “ஓ..” என நம்பாத்தன்மையோடு புருவம் உயர்த்தியவன்.. “எங்கம்மா ஏன் செத்தாங்கனு உனக்கு தெரியலங்கும்போது உன் மகன் உயிரோட இருக்க கூடாதே..” என அபிஷேக் வயிற்றின் மீது சிறிது மதுவை ஊற்ற.. “வேண்டாம்.. வேண்டாம்.. சொல்லிடறேன் சொல்லிடறேன்..” என கெஞ்சலாய் ஒப்புகொள்ள, தனது சர்ட்டை சரி செய்து ரஞ்சித்திற்கு நேரேதிரே அமர்ந்தான்.
“பைரவன் இறந்ததுக்கப்புறம்.” என ஆரம்பிக்க.. இடைபுகுந்த மதி.. “என்ன கேஸ்க்காக எங்கப்பாவை கூட்டிட்டு பேனிங்க? எப்படி கொன்னுங்க? அதுலயிருந்து சொல்லு.” என்றான் கட்டளையாக.
ரஞ்சித்குமார் மறுக்க.. “உன் பர்சனல் நம்பரை கண்டுபிடிச்சி வந்துருக்கேன்.. இதுலயே என் சாமார்த்தியம் தெரிஞ்சிருக்கும். இந்த நேரம் இங்க வந்திருக்கேன்னா ஹாஸ்பிட்டல்ல உள்ளவங்களோட ஹெல்ப் இல்லாம இருக்குமா.?
ஒழுங்கா சொல்லிட்டேன்னா நான் பாட்டுக்கு கிளம்பிடுவேன், இல்ல, இவன் தண்ணியடிச்சிட்டு இறந்திடுவான்.” என்றான் மிரட்டலாக.
ரஞ்சித்தின் முகம் பயம்கொள்ள.. “பயப்படாத.. உண்மையை சொல்லிட்டினா, உன் மகன் உயிர் எனக்கு தேவையில்லை.” என்றான் மீண்டும்.
“அன்னைக்கு அந்த பொண்ணை கற்பழிச்ச நாலு பேரும் பெரிய இடத்து பசங்க, மேலயிருந்து அவனுங்க மாட்டக்கூடாதுனு எனக்கு நிறைய ப்ரஸர்.. அந்த நேரம் உங்கப்பா கோர்ட்டுக்கு போவேனு சொல்லவும் அவர் மேலயே பழியை சுமத்தி கேஸ் ஃபைல் பண்ண சொன்னாங்க, உங்கப்பா ஒத்துக்கல, பணிய வைக்கத்தான் அடிச்சேன், ஆனா செத்துட்டான்,
பைரவன் நல்லடக்கத்துக்கு ஒரு காண்ஸ்டபிளை அனுப்பி வைச்சேன், அவனுக்கு உங்கம்மாவை பார்த்ததும் பிடிச்சிடுச்சி போல..” எனும்போது அடக்கப்பட்ட ஆத்திரத்தோடு அமர்ந்திருந்தான் மதி.
“ஒரே ஒரு நாள் மட்டும் வா, இல்ல உன்னை விட்டுட்டு உன் பையனை விசாரிக்க கூட்டிட்டு போய்டுவோம்னு சொல்லவும், காண்ஸ்டபிளுக்கு பயந்து உங்கம்மா தற்கொலை பண்ணிடுச்சி.
உங்கம்மா தற்கொலைக்கும் எனக்கும் எந்த சம்மதமும் இல்ல.” என பிறழாமல் பொய்யுரைத்தான் ரஞ்சித்குமார்.
தன் தந்தையின் இறுதி சடங்கை காண்ஸ்டபிள் பரமானந்தம் கண்காணித்ததாக சந்தியாவின் அன்னை சொன்னது நினைவு வர.. “இல்லையே அந்த காண்ஸ்டபிள் பரமானந்தம் நீ சொல்லி உனக்காக கூப்பிட்டதாயில்ல சொன்னான்.” என உண்மையறிய வேண்டி கேட்க.. பரமானந்தம் என்ற பெயரை சொன்னதும் சொல்லிட்டானா என்பதாய் ரஞ்சித்தின் முகம் பேரதிர்ச்சியடைந்தது.
இவனின் அதிர்விலேயே இவன்தான் அன்னையை கேட்டிருக்கிறான் என உறுதி செய்த மதியழகன்.. “பரமானந்தம் இப்படி பண்ணுவானு நீங்க நினைக்கலயில்ல. அன்னைக்கு விளையாடிய அதே பணம்தான் இன்னைக்கும் விளையாண்டது.
சரி.. இதை குடி, நான் கிளம்பிடறேன்.” என மதுவை ரஞ்சித்திடம் நீட்ட.. “இல்ல இங்கெல்லாம் குடிக்கக்கூடாது, எனக்கு பழக்கமுமில்ல.” என்றான்.
மதுவின் வாடை மகனின் உயிருக்கு ஆபத்தென்பதால் அப்பொழுதும் கெஞ்சலோடு ரஞ்சித் மறுக்க.. “இப்போ நீ பேசினதெல்லாம் பத்திரமா இதுல பதிவாகியிருக்கு, இப்போ குடிக்கலன்னா நெட்ல விட்டுடுவேன்.” என தன் சர்ட்டில் பொருத்தியிருந்த பட்டன் வடிவிலான கேமராவை காண்பித்தான்.
அச்சோ ரெக்கார்ட் பண்ணிட்டானா? என ரஞ்சித்தின் முகம் மேலும் பயத்தை பூச, “நல்ல பிராண்ட்தான் வாங்கி வந்திருக்கேன், குடிச்சிட்டு தூங்கி எழு, காலைல தெளிஞ்சிடும்.” என மதி வற்புறுத்த, வேறு வழியின்றி.. “கையை அவுத்துவிடு.” என்றான் ரஞ்சித்.
“நான் ஊத்தி விடறேன், குடி.. நீ குடிச்சதும் உன்னை ரிலீஸ் பண்ணிட்டு கிளம்பறேன்.” என ரஞ்சித்தின் வாயில் மதுவை சரித்து, குடிக்க வைத்தபின்னே, இன்னொரு மதுபாட்டிலை எடுத்தவன்.. “இது உன் மகனுக்கு.” என அபிஷேக்கை பலவந்தமாய் குடிக்க வைக்க முற்பட..
“வேண்டாம்.. வேண்டாம்.” என ரஞ்சித் கெஞ்ச.. செய்யாத குற்றத்திற்கு தன் தந்தையை நிர்வாணமாக்கி அடித்தே கொன்றது, இவன் இச்சைக்கு அன்னையை பணிய சொல்லி மிரட்டியது, கணவன் இறந்த வேதனையோடு இவனால் எத்தனை மன வேதனைக்குள்ளாகியிருப்பார்? தகாத வார்த்தையை தாளமுடியாமலும், தன் எதிர்காலத்தை நினைத்தும், எத்தனை மன வேதனையோடு லாரியில் தனதின்னுயிரை மாய்த்திருப்பார் என அனைத்தும் நினைத்தவாறு கோபத்தோடு அபிஷேக்கின் வயிற்றை நிறைத்தான் மதுவால்.
அபிஷேக்கிடம்.. “அழகான பொண்ணை பார்த்தா உடனே அனுபச்சிடுவியாமே? அதான் எல்லாம் அனுபவிச்சிட்டயில்ல? இத்தனை சீக்கோட இனி உயிரோட இருந்து எதை சாதிக்க போற? உனக்கு மோட்சம் கொடுக்கிறனேனு சந்தோசத்தோட போய் சேரு.” என்றவன்..
ரஞ்சித்திடம்.. “நீ சாகறதை விட, உன் மகன் சாகறதை பார்க்க ரொம்ப கொடுமையா இருக்கும்ல? இன்னும் கொஞ்ச நேரத்துல உயிருக்கு எப்படி போராடுவானு நல்லா பாரு.. எங்கப்பாவை கட்டிவச்சி கதற கதற அடிச்சது நியாபகம் வரும். என் வலி புரியும்.” என்க.. வலி தாள முடியாமல்.. “அப்பா..” என அபிஷேக் வயிற்றை பிடித்தான்.
“என் பையன் படுற அவஸ்த்தை தாங்க முடியாம நான் குடிச்சேன், இப்படி வலியோட வாழ்றதுக்கு சாகறது மேல்னு, என்னை கட்டிப் போட்டுட்டு என் பையனும் குடிச்சிட்டானு எல்லாருக்கும் சொல்லிடு.
அதை விட்டுட்டு என்னை பழிவாங்கனும்னு கிளம்பின.. என்கிட்ட இருக்க எவிடன்ஸ் வச்சி கேஸ் ஃபைல் பண்றதோட இல்லாம, உன் பழைய வீர தீர செயல்களையும் தூசி தட்ட வச்சிடுவேன்..” என ரஞ்சித் செய்த மற்ற குற்றங்களின் விபரங்களையும் சிறு மாற்றமில்லாமல் ஒப்புவித்து.. “எல்லாத்துக்கும் என்கிட்ட எவிடன்ஸ் இருக்கு.” என எச்சரித்தே வெளியேறினான் மதியழகன்.
பத்து மணிபோல் பஸ் ஸ்டாண்டிற்கு வந்தவன் வாட்டர் பாட்டில் மட்டும் வாங்கிக்கொண்டு பயணிக்கலானான்.
இப்படி செய்ய திட்டமிட்டெல்லாம் வரவில்லை மதியழகன். தன் அன்னை எப்படி இறந்தார் என்ற விபரம் அறிந்தபின்னே, அதை அவன் வாய் மொழியாக சொல்ல வைத்து, ரெக்கார்ட் செய்து, அவனின் குடும்பத்தாரிடம் காட்ட வேண்டும், அவர்களும்தானே லஞ்சப்பணத்தை அனுபவித்திருப்பார்கள்? எந்த நேரம் மாட்டுவோமோ என மொத்த குடும்பத்தையும் பயப்பட வைக்க வேண்டும்.
பிறகு வாய்ப்பு கிடைக்கும்போது தன் தந்தையை அடித்ததை போல கட்டி வைத்து ரஞ்சித்தை அடிக்க வேண்டும், இத்தனைக்குப் பிறகே அவனை கொல்ல வேண்டும் என பல திட்டங்களோடு வந்தான்.
ஆனால் தன் அன்னையை கேட்டிருக்கிறான் என்றறிந்த பின்னே நெஞ்சம் சுக்கு நூறாய் சிதற.. தன் திட்டமனைத்தும் விடுத்து, புதுத்திட்டம் தீட்டி அதனை செயல்படுத்தி வந்த பின்னும் இன்னும் ஆத்திரம் அடங்கவில்லை மதியழகனிற்கு.
தன் அன்னை இறக்கும்போது நாற்பது வயது.. பத்தொன்பது வயதில் நான்.. அந்த வயது பெண்ணையும் விட்டு வைக்காத காமுகனுக்கு இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என மருகியபடி பயணித்தான் வீட்டிற்கு.
அதிகாலை மூன்று மணிக்கு வீட்டிற்கு வந்தான். வீட்டைப் பூட்டி, வெளியே தாழ்வாரத்தில் கயிற்று கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்தார் பழனியப்பன்.
தான் வெளியே சென்றால் வழக்கமாய் தலையணையடியில் சாவியை வைப்பார் என அவரின் உறக்கம் கலைந்திடா வண்ணம் மெல்ல தலையணையை உயர்த்த, சிறு அசைவிற்கே விழித்துக்கொண்டார் பழனியப்பன்.
“மதி.. இன்னைக்குதான கல்யாணம்ன்ன? இந்நேரத்துக்கே வந்துட்ட?” என்றபடி சாவியை எடுத்துக்கொடுக்க.. “கல்யாணத்தையும் அட்டன் பண்ணலாம்னுதான் போனேன், என் மத்த ஃப்ரண்ட்ஸ்லாம் வேலையிருக்குனு ரிசப்ஷன் முடிஞ்சதும் கிளம்பறேன்னானுங்க, நீ தனியா இருப்பியேனு நானும் கிளம்பிட்டேன். மத்ததை காலைல பேசிக்கலாம். உள்ள வந்து தூங்கு தாத்தா.” என வீட்டை திறந்து உள்ளே போனான்.
கண்ணாடி போட்டு, கட்டிலை எடுத்து நிறுத்தி, உள்ளே வந்த பழனியப்பன்.. “டீ போடட்டுமா மதி?” என்க, மதியிடம் பதிலில்லை.
மதியின் அறைக்குள் நுழைய, பாத்ரூமில் தண்ணீர் சத்தம் கேட்டு, “மூஞ்சி கழுவிட்டு வா மதி டீ வைக்கிறேன்.” என்று டீ வைக்க போனார்.
டீ வைத்து வந்து மதியை பார்க்க, தலைகூட துவட்டாமல் ஈரத்துண்டோடு தாய் தந்தை படத்தின் முன் நின்றிருந்தான் கண்ணீரோடு.
“மதி..” என பதறி அழைக்க, “தாத்தா..” என கட்டிக்கொண்டான் இறுக்கமாக. “மதி.. என்னய்யா ஆச்சு?” என பேரனின் முதுகை நீவிவிட,
உன் மருகளை ஒருவன் சல்லாபத்திற்கு கேட்டிருக்கிறான், தாளமுடியாமல் உயிரை விட்டுட்டாங்க என்றா சொல்ல முடியும்? என நினைத்து கண்ணீர் விட,
“மதி.. என்னைய்யா சின்ன பிள்ளையாட்டம் அழுதுட்டு?” என அதட்டி அவனிடமிருந்து விலகி, “கல்யாணத்துல உன் சிநேகிதனோட அப்பாம்மா பார்த்தியா? அவங்களை பார்க்கவும் பைரவன், அழகம்மா நியாபகம் வந்துடுச்சா?” என தானும் கண்ணீர் விட..
“என்னய்யா கேக்குற?” என புரியாமல் பார்க்க.. “சரி போய் படு தாத்தா.” என்றான் சோர்வோடு.
“ரொம்ப அலுப்பா தெரியற, உடம்பை துடைச்சிட்டு துணி மாத்திட்டு வா, டீ குடிச்சினா சித்த நல்லாயிருக்கும்..” என்க.. “இல்ல தாத்தா வேணாம். கதவை பூட்டிட்டு படு.” என்று உடைமாற்றி படுத்து கண்மூட, கடைசி பத்து நாட்களில் அன்னை எடுத்துரைத்த உபதேசங்களே கண்முன் நிழலாட, “உன் பிரச்சனையை என்கிட்ட சொல்லியிருக்கலாமில்லம்மா?” என புலம்பினான் வேதனையோடு.
ஹாலுக்கு வந்த பழனியப்பன், “அப்பாம்மா வேதனை மறந்து வேலைக்கு போய்ட்டு வந்திட்டிக்கானு பார்த்தா, இவ்வளோ வேதனையை உள்ள வச்சி மருக்கிட்டிருக்கானே? சின்ன புள்ளையாட்டம் அழுவுறவனை எப்படி சமாதானப்படுத்துறது? இவனுக்கு கல்யாணம் ஆகி குழந்தை குட்டினு ஆனாதான் அப்பாம்மா வேதனை கொஞ்சமாவது குறையும், இனி திருமணத்திற்கு கெஞ்சாமல் உண்ணாவிரதம் இருந்தாவது சம்மதிக்க வைக்க வேண்டுமென முடிவெடுத்தார் பழனியப்பன்.