எழுந்தானா என பத்து மணியிலிருந்து பத்து முறைக்கு மேல் சென்று பார்த்துவிட்டார் பழனியப்பன். பதினொரு மணியாகியும் மதியழகன் எழாமல் இருக்க.. அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அவனறைக்கு சென்று.. “மதி..” என கன்னம் தட்ட.. லேசாய் முகம் சுருக்கினான். ஆனால் எழவில்லை.
“மதி.. எழுந்து ஒரு வாய் சாப்பிட்டுட்டு தூங்குய்யா.. முகம் சோர்ந்து கிடக்கு, வயிறு ஒட்டியிருக்கு.” என கன்னத்தை நன்றாக தட்டினார்.
முயன்று கண்விழித்தவன்.. “ப்ச் தாத்தா.. இன்னைக்கு லீவ்தான?” என திரும்பி படுத்து உறக்கத்தை தொடர, “லீவ்தான், ஆனா சாப்பிடுட்டு படு.” என தோள் தொட்டு தன்பக்கம் திருப்ப முயன்றார்.
தானே திரும்பியவன்.. “மணி என்னாகுது? நீ சாப்பிட்டியா?” என தனது மொபைலை பார்க்க.. நேற்றிரவு அங்கிருந்து கிளம்பும்போதே சிம்மை கழட்டியிருந்ததால் அதனுள் சிம்கார்ட் இல்லை என்பதை நினைவூட்டியது.
“ஒரு டீ போடு தாத்தா.” என்றான் சலுகையாக. பழனியப்பன் சமையலறை செல்ல, பட்டன் போனிலிருந்து தனது சிம்மை மொபைலுக்குள் செலுத்தி, முகம் கழுவி வர, மஞ்சுவிடமிருந்து அழைப்பு வந்தது.
“நல்லாயிருக்கிங்களா தாத்தா? அம்மா கிச்சன்ல இருக்காங்க, இதோ தரேன்.” என பேசிக்கொண்டே சென்றவள், “அம்மா தாத்தா லைன்ல.” என மொபைலை நீட்டினாள்.
“அப்பா.”
“நேரமிருக்கும்போது வீட்டுக்கு வா காமாட்சி, மதி கல்யாண விசயம் பேசனும்.” என்றதும்.. “தாத்தா.. என் கல்யாண விசயத்தைப் பத்தி என்கிட்ட பேசாம அவங்ககிட்ட என்ன பேச போறிங்க?” என மதி கடுகடுத்தது காமாட்சிக்கும் கேட்டது.
“எப்படி பேசுறான் பார்த்தியாப்பா? என் அண்ணன் இருந்திருந்தா இப்படி பேச விட்டுடுவாரா?” என காமாட்சி வருந்த.. “சரிம்மா சரிம்மா, நீ கோவிக்காத, மதியே மனசு சரியில்லாம இருக்கான்.” என பெற்றோரை நினைத்து பேரன் அழுததை சொல்லி, “நான் அப்புறம் பேசறேன்.” என மகளை சமாதானம் செய்து பேரனை முறைக்க.. “என் மானத்தை வாங்கன்னே இங்க நடக்கிறத அங்க சொன்னியா?” என மதியும் முறைத்தான்.
“அப்படித்தான் சொல்லுவேன், எனக்கு உன்னையும் உங்கத்தையையும் விட்டா யாரிருக்கா? என் மூச்சு முடியும் முன்ன உனக்கொரு கல்யாணத்தை பண்ணி பார்க்கனும்னு ஆசைப்படறது தப்பா?” என ஆதங்கமாய் கேட்டு..
“இந்த காலத்து பசங்க காதல் கல்யாணம்னு எப்படி இருக்காங்க? நீயும்தான் இருக்கியே.. சாமி மாடு மாதிரி.. சம்பாதிக்கிறது, சமைக்கிறது, இதை தவிர வேற எதாவது தெரியுதா?” என்றார் கோபமாக.
“ஓய் தாத்தா.. என்னை என்ன சாமியார்னே நினச்சிட்டியா?” என்றான் இலகுவாக.
“பின்ன நீயென்ன இளவட்டமா? உன் பாட்டி எனக்கு அத்தபுள்ள. எவனோ பொண்ணு கேட்டு வந்தான்னதும் வூடு பூந்து ரகளை பண்ணி, என் அத்தபுள்ளைய யாருக்கும் விட்டுகொடுக்காம ஒரே வாரத்துல கல்யாணம் கட்டினேனாக்கும்..” என்றார் பெருமையாக.
“உன் அத்த புள்ளைக்கு உன்ன பிடிச்சிருந்திருக்கும், கேட்டதும் கட்டிக்கிட்டாங்க, ஆனா என் அத்தபுள்ள என்னை கண்டாலே ஓடுறாளே. அவளை எதுக்கு நான் கட்டிக்கனும்?” என்றான் ரோசமாக.
“மதி.. மதி..” என ஆனந்தமாய் அழைத்தவர்.. “அப்போ தாமரைக்கு சம்மதம்னா நீ கட்டிக்குவியா? காமாட்சிகிட்ட நான் பேசறேன்.” என்றார் பேரன்போடும் எதிர்பார்ப்போடும்.
அச்சோ உளறிட்டேனே என தன்னைத்தானே கடிந்தவன்.. “அப்படியேதும் கேட்டிடாத தாத்தா, இப்போதைக்கு எனக்கு கல்யாணம் செய்துக்கிற ஐடியாவே இல்ல.” என்றான் திட்டவட்டமாக.
பழனியப்பன் முகம் வாடிட.. “சாப்பிட்டியா தாத்தா.?” என்றான் அக்கறையாக.
“எனக்கு பசியில்ல.” என வெளியேறினார் கோபத்தோடு.
“எது.. பசியில்லையா? மணி பனெண்டாகப்போகுது.” என கோபத்தோடு பின் தொடர்ந்தவன்.. பழனியப்பனின் முகம் பார்த்து கோபம் குறைத்து, “ஏன் தாத்தா இப்படி பண்ற? டைமுக்கு சாப்பிடலனா சுகர் ஏறிடும், பிரஸ்ஸர் குறைஞ்சிடும் தாத்தா.” என்றான் கவலையாக.
“பெத்த ஒரு மகனையும், தங்கமான மருமகளையும் எமனுக்கு தூக்கி கொடுத்தாச்சி, மிஞ்சி இருக்கிறது நீ மட்டும்தான், ஒத்த பேரனுக்கும் கல்யாணம் பண்ணாம கண்ணை மூடிட்டேனா என் ஆத்துமா அடங்குமா? ஒத்த பேரனுக்கு கல்யாணம் செய்துவைக்க முடியாதவனுக்கு சோறு ஒன்னுதான் குறையா போச்சா? நானெதுக்கு உசிரோட இருக்கனும்?” என கண்கலங்கினார் வேதனையோடு.
அதிகாலையில் மதி அழுதது பழனிப்பனை மிகவும் பாதித்திருக்க, தன்னிடம் சகஜமாய் இருப்பதாய் காட்டிக்கொண்டு, பெற்றோர் இழப்பை தாளமுடியாமல் மனதோடு மருகுறான் என்பது ஆழமாய் பதிந்துபோக, தற்போது கண்ணீர் தன்போல் வந்தது.
“ப்ச் தாத்தா.. ப்ளீஸ் அழாத.” என கெஞ்சினான் பாவமாக.
“அட போய்யா. என் மகனிருந்தா இந்நேரம் உனக்கு கல்யாணம் செய்து வைக்காம விட்டுருப்பானா?” என முகம் திருப்பினார் வேதனையோடு.
இவர் முன்னே அழுததுதான் நான் செய்த பெரும் தவறு.. தன்னை நினைத்து வருந்தியே சாப்பிட மறுக்கிறார், இவரை சாப்பிட வைக்க இதை விடுத்து வேறு வழியில்லை என.. “அந்த இட்லி வேணாம், சட்னியும் கெட்டு போயிருக்கும், சூடா தோசை ஊத்தறேன்.” என கனிவோடு சொல்லி, கிச்சனுள் நுழைந்தவன், கால் மணிநேரத்தில் இருவருக்கும் தோசை வார்த்து, சட்னி அரைத்து எடுத்து வர.. “எனக்கு வேணாம்.” என்றார் வீராப்பாக.
“தாத்தா ப்ளீஸ்.. என்ன படுத்தாம சாப்பிட வா.” என்றான் கெஞ்சலாக.
“வேணாம்னா வேணாம்தான்.”
“நான் நேத்து மதியம் சாப்பிட்டது, பசி கண்ணை கட்டுது, நீ சாப்பிட்டா நானும் சாப்பிடறேன், இல்ல வேணாம்.” என மிரட்ட, நேத்து மதியம் சாப்பிட்டதா? அதான் வயிறு ஒட்டிகிடந்ததா? என பழனியப்பன் பரிதவிக்க, “ஓ… அப்போவும் சாப்பிடமாட்டியா? சரி விடு. நீ எப்போ சாப்பிடுறியோ நானும் அப்போவே சாப்பிட்டுக்கிறேன்..” என வயிற்றைப் தடவியவாறு என தனதறைக்கு செல்ல எத்தனிக்க.. “சாப்பிடலாம் வா.” என்றார் பேரனோடான உண்ணா விரத போராட்டத்தில் தோற்ற கோபத்தோடு.
இளஞ்சிரிப்போடு இவன் பரிமாற, பழனியப்பன் கோபத்தோடு உண்ண, அன்பு தாத்தாவை பாவமாய் பார்த்தவாறு உண்டான்.
“மூனு வேளை தின்னுட்டா மட்டும் ஆயுசு கெட்டி ஆகிடுமா? மனசுல நிம்மதி வேணும். உனக்கு என்னைக்கு கல்யாணம் ஆகுதோ அன்னைக்குதான் எனக்கு நிம்மதி. எனக்கந்த கொடுப்பினை உண்டா இல்லையானு நீயே முடிவு பண்ணிக்க.” என்றார் ஆற்றாமையோடு.
பேரன் இத்தனை இறங்கி வந்ததே பெரிய விசயமென பழனியப்பனுக்கும் நிம்மதியானது. ஆனால் இவன் சொல்வதுபோல் இரண்டு வருசமெல்லாம் பொறுமை காக்க முடியாது, காமாட்சியிடம் பேச வேண்டும். என நினைத்துக்கொண்டார்.
மதியழகனிற்கு நேற்றுவரை பழிவாங்கும் உணர்வு மட்டுமே, ஆனால் இன்று ஒரு கொலையை செய்திருக்கிறோம், ரஞ்சித் நிச்சயம் எதிர்வினையாற்றுவான். தன்னுயிரை கொடுத்தேனும் அவன் உயிரையும் நான்தான் எடுப்பேன், என் தந்தையை கொன்றதை போல அடித்தே கொல்லனும்..
தன் அன்னையை கேட்ட வாயிலுள்ள அனைத்து பற்களையும் பிடுங்க வேண்டும், அந்த நாக்கை அறுக்க வேண்டும், என மதியழகனின் எண்ணங்கள் குரூரமாய் மாறியது.
நிச்சயம் இதில் பின் விளைவுகள் வரும், ஆனால் தன் எண்ணத்தை மாற்றிக்கொள்ள இயலாது. அதே நேரம் தன்னை சார்ந்தவர்களையும் கஷ்டப்படுத்தக்கூடாது. எனில் திருமணத்தை கைவிட வேண்டும்.
காதல்.. அதை தன்னோடு புதைத்துவிட்டான் மதியழகன். அறியா வயதில் தாமரை மீது பாசம், பின்னே நேசம், பின்னே எட்டு வருடமாய் காதலாய் உருவெடுத்த பந்தம். அவளின் ஒவ்வொரு பருவமும் பசுமரத்தாணியாய் நெஞ்சில் பதிந்திருக்கிறது.
தன் மீது அவளிற்கு காதலில்லையென்றாலும் தன்னால் அவளை விடுத்து நிச்சயம் வேறு பெண்ணை மணக்க முடியாது, ஆனால் அவள் துணையில்லாமல் வாழ முடியும், வாழ வேண்டும் என திடமாய் முடிவெடுத்தான்.
ரஞ்சித்தை கொன்றபின்னே சட்டப்படி தண்டனையை அனுபவிக்கலாம், அதில் மாற்றமில்லை, ஆனால் தன் நிலையை தாத்தாவால்தான் நிச்சயம் தாங்க முடியாது, தாத்தாவை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை அத்தையிடம்தான் ஒப்படைக்க வேண்டும், வேறு வழியில்லை. வேறெங்கு விட்டாலும் உயிரை மாய்த்துக்கொள்வார்.
மஞ்சு வர சொன்னாளே, அன்றே அத்தையிடம் இது குறித்து பேசலாமா என யோசித்தவன்.. வேண்டாம் வேண்டாம், கைதான பின்னே கொஞ்ச நேரம் கூடவா பேச விடமாட்டார்கள்? எதற்காக இந்த கொலையென பிறகு சொல்லிக்கொள்ளலாம். என பல யோசனையோடு படுத்திருந்தான்.
அன்று மதியம் இரண்டு மணியளவில் மதியழகனிற்கு அழைப்பு வந்தது. எதிர்பார்த்திருந்த அழைப்பை ஆவலோடு ஏற்கவும்.. “அண்ணே.. அந்த ரஞ்சித்தோட பையன் இறந்துட்டானாம். என்ன வியாதினு தெரியல, ஆனா மூனாறுல ஆயுர்வேதிக் ட்ரீட்மண்ட் எடுத்திட்டிருந்தானாம். அக்கிரமங்களை செய்யிறவனுங்க எத்தனை நாளைக்கு ஆட முடியும்? நல்லா ஆடவிட்டு கடவுள் கைவிட்டுட்டார் போல, விடியகாலம் இறந்துட்டானாம்.” என்றான் ரகுவரன்.
“அப்படியா ரகு? ஆனா அவன் மகன் இறந்ததுல எனக்கு சந்தோசமில்ல, அந்த ரஞ்சித்தை என்னைக்கு என் கையால கவனிக்கிறேனோ அன்னைக்குத்தான் முழு சந்தோசம் கிடைக்கும்.” என ஆத்திரத்தோடு சொல்லி, “சரி இப்போ எங்கயிருக்க?” என்றான்.
“அவன் வீட்டுக்கு பக்கத்து தெருவுல இருக்கேண்ணா.”
“இன்னைக்கு இந்த நியூஸ் போதும், இனி அங்க இருக்காத, கிளம்பி வீட்டக்கு போ, ஒன்னு இரண்டு வாரம் கழிச்சி அவனை பிடிக்க முடியுமா பார்க்கலாம்.”
“சரிண்ணே..” என்க.. இணைப்பை துண்டித்தவன், இயற்கையா இறந்த மாதிரிதான் சொல்லிருக்கியா? சூப்பர். அத்தனை பெரிய வைத்திய சாலையில் அனைவரையும் ஏமாற்றி உள்ளே சென்றது சாதாரண விசயமில்லை என்பது மதி அறிந்ததே.
எது நடந்தாலும் பார்க்கலாம் என்ற துணிவோடுதான் உள்ளே போனான். நம் நல்லநேரம் அன்று தந்தையை கைவிட்ட கடவுள் இன்று தனக்கு பக்கபலமாய் இருந்திருக்கிறார் என்றே நினைத்தான்.
வீட்டிற்கு வந்தும் கூட, கொலை செய்தவன் நான், நான் மாட்டிக்கொண்டாலும் தனக்கு உதவி செய்த பெண் மாட்டிக்கொள்ளக் கூடாது என வேண்டியிருந்த மதியழகனுக்கு இச்செய்தி பெரும் ஆசுவாசத்தை கொடுத்தது. இது போதும். இனி விசாரணை என வந்தாலும் அப்பெண்ணை காட்டிகொடுக்காமல் இருந்திடலாம் என நிம்மதியடைந்தான்.