ஒரு வாரம் கழிந்திருக்க, ரஞ்சித்திடம் எந்த எதிர் வினையும் காணவில்லை. இன்று மஞ்சுவை பள்ளியில் விட வேண்டும், முதல் நாள் நானில்லாது கிளம்பமாட்டாள் என வழக்கமாய் தன் காலைப் பணிகளை முடித்து கிளம்பினான் அத்தை வீட்டிற்கு.
தன் குரல் கேட்டாலே உள்ளே ஓடிடுவாள்தான், ஆனாலும் இவ்வீட்டினுள் நுழைந்தாலே கண்கள் தன்போல் தாமரையை தேடும்.. இனி வழக்கத்தை மாற்றி அவளைக் தேடக்கூடாது என கண்ணிற்கும் மனதிற்கும் கட்டளையிட்டு.. “மஞ்சு..” என அழைத்தபடி உள்ளே வந்தான்.
“அழகுமாமா.. டிரஸ் பண்ணிட்டிருக்கேன்.” என தனதறையிலிருந்து குரல் கொடுத்தாள் மஞ்சரி.
கல்லூரி விடுமுறை என்பதால் சமையல் கற்றுகொள் என காமாட்சியின் பிடிவாத்தில் கிச்சனில் அன்னையோடு இருந்தாள் தாமரை.
தனது விஷேசத்தின் மொத்த செலவையும் அவன்தான் கொடுத்திருக்கிறான் என மஞ்சு சொன்னதிலிருந்து மதியிடம் முன்பிருந்த இறுக்கம் தளர்ந்திருக்க, மனம் அவன் முகம் பார்க்க உந்தியது.
மஞ்சுவை பள்ளிக்கு அழைத்து செல்ல இன்று மதி வருவான் என தாமரைக்கும் தெரியும், கடந்த பத்து நிமிடமாக அவனை எதிர்பார்த்திருந்தாள்தான், ஆனாலும் அன்றுபோல் இன்றும் நான் பார்ப்பதை அறிந்துவிட்டானென்றால் என்ற பதட்டம் வர அன்னை செய்யும் சமையலில் கவனம் செலுத்தினாள்.
“வா.. மதி,” என குரல் கொடுத்து, “தாமரை மஞ்சுக்கு இட்லி போட்டு எடுத்துட்டு வா.” என பணித்து வெளியே வந்தார் காமாட்சி.
சற்று முன் புத்தியிட்ட கட்டளையை மறந்து, என்ன ஆச்சர்யமா கிச்சன் பக்கம்லாம் வந்திருக்கா? என நினைத்தவன்.. “மாமா கிளம்பிட்டாராத்தை.?” என்றான் இயல்பாக.
“இப்போதான் மதி கிளம்பினார்.” என்ற காமாட்சியின் முகம் வாட்டமாய் இருப்பதை கவனித்தாலும், ஏன் இப்படி இருக்கிறார்கள் என தனக்கு தெரியும் ஆதலால் ஏதும் விசாரிக்கவில்லை.
“ஏன் மதி? உன் கல்யாணத்தை பத்தி நான் பேசக்கூடாதா?” என கண்கலங்கினார் காமாட்சி.
“நீங்கன்னு இல்லத்த, கல்யாணத்தை பத்தி யார் பேசறதும் எனக்கு பிடிக்கல.” என்றான் தன்மையாகவே.
“இப்படி சொன்னா எப்படி மதி? அண்ணன் அண்ணிகிட்ட இப்படி மறுத்து பேசுவியா?” என்றார் ஆதங்கமாக.
மஞ்சு வெளிவருவதை பார்த்தவன்.. அவங்க இல்லைன்றதுதான் பிரச்சனையே என மனதில் மருக்கியவன்.. “இந்த பேச்சை இத்தோட விடுங்கத்தை.” என முடித்து.. மொபைலை எடுத்தான்.
“முதல்ல தலை வாரிவிட்டுடு தாமரை.” என மஞ்சு சொல்ல, தோள்பட்டையை தொடும் அளவிற்கான முடியென்பதால் ஐந்து நிமிடத்தில் வேலை முடித்து தனதறைக்கு செல்ல எத்தனித்தவளிடம்.. “தாமர.. நான் பேக் பண்றேன், கொஞ்சம் டிபன் ஊட்டி விட்டுடேன். டைமாகுது.” என்றாள் கொஞ்சலாக.
“சரி எடுத்துட்டு வரேன்.” என முனுமுனுத்து கிச்சன் சென்றவளுக்கு அத்தனை தடுமாற்றம்.
மதி வழக்கம்போல் மொபைலைதான் பார்த்திருந்தான். ஆனால் அவனை பாராமல் அவன் முன்னாலே உலவுவது இவளுக்கு பெரும் சிரமமாக இருக்க, இட்லியை போட்டு சாம்பார் ஊற்றியவள், தன் கைமேலே கொட்டிக்கொண்டாள்.
சூடு தாளாமல் “அம்மா.” என கத்த, கரண்டி விழுந்த சத்தத்தில் காமாட்சி பதறி உள்ளே போக, “ம்மா.” என முகம் சுருக்கினாள் கண்ணீரோடு.
ரொம்ப சூடா ஊத்திக்கிட்டாளோ? குரல் அழறமாதிரி இருக்கு எனப்பதறிய போதும், அமைதியாக அமர்ந்திருந்தவன், மஞ்சு வரவும், “மஞ்சு இட்லி எடுத்து வா நான் ஊட்டிவிடறேன்.” என்றான்.
தாமரைக்கு காயம் என்றதும் வந்த பசி போய்விட, “எனக்கு பசிக்கல மாமா.” என்று, அன்னை அக்காளிடம் விடைபெற்று கிளம்பினாள்.
பைக்கில் அமர்ந்ததும்.. “பதினொன்னாவது போற, நீ தலைவாரிக்கமாட்டியா?” என்றான்.
“அது பின்னாடி வகிடெடுக்க வரமாட்டுக்குது மாமா. தாமரைன்னா இரண்டு நிமிஷத்துல பிண்ணிவிட்டுருவா.” என்றாள்.
அதன் பின் தாமரை பேச்சை விடுத்து, பள்ளிப்பாடம் பற்றி பேசியும், அறிவுரை வழங்கியபடியும் பயணித்தான்.
கல்லூரி விடுமுறைதான், ஆனால் அலுவலகப்பணி இருக்கவே சென்றான். அடுத்தடுத்த நாளும் ரஞ்சித் வீட்டை விடுத்து எங்கும் செல்வதில்லை என தகவல் வர, காரியம் முடியும்வரை வெளில வரமாட்டானா இருக்கும் என நினைத்தவன், எப்படியாகினும் என் கைக்கு சிக்காமலா போய்டுவான் என ரஞ்சித்தை எதிர்கொள்ளும் நாளுக்காக காத்திருந்தான்.
மேலும் இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும், ரஞ்சித் வீட்டை விட்டு வெளிவரவில்லை என்ற பதில்தான் ரகுவரனிடமிருந்து வந்தது.
நாளை கதிரேசன் வெளியூருக்கு செல்லவிருக்க, மதிக்கு அழைப்புவிடுத்து, வழக்கம்போல் மகள் மனைவி பாதுகாப்பிற்கு மதியை துணைக்கழைத்தார்.
வீட்டிற்கு சென்றால் மனதை கட்டுப்படுத்த இயலாது, புத்தி எடுத்துரைத்தாலும் மனதும் கண்ணும் அவளைதான் தேடுகிறதென, மஞ்சுவை முதல்நாள் பள்ளிக்கு அனுப்பிய பின்னே அங்கு செல்லவில்லை.
“இப்போலாம் தாத்தாவால முடியறதில்ல மாமா, அவரை தனியா விடவும் பயமாயிருக்கு, இனி வெளியூர் போறதை குறைச்சிக்கோங்க.” என்றான் தன்மையாகவே.
மதியின் பேச்சில் மாமனாருக்கான அக்கறை தெரியவும் நெகிழ்ந்தவர்.. “நீ சொல்றதும் சரிதான், வயசானவரை தனியே விடறது கஷ்டம்தான்.” என ஒப்புகொண்டு, “பகல்லெல்லாம் தனியாதான் இருக்கார்? அவருக்கு ஒரு துணையிருந்தா இப்படி கவலைபட தேவையிருக்காதில்ல?” என்றார்.
“தாத்தாவை பார்த்துக்கிறதுக்காகவெல்லாம் கல்யாணம் செய்துக்க முடியாது மாமா.” என்றான் இலகுவாகவே.
“பண்ணிக்கலாம் மாமா, இரண்டு வருசம் போகட்டும்.” என தாத்தாவிடம் சொன்ன பதிலையே சொல்லி, “தாத்தாக்கு சாப்பிட குடுத்துட்டு, அங்க தங்கறதா சொல்லிட்டு வரேன் மாமா.” என்க..
“இல்ல மதி.. நீ மாமா கூட இரு, இவங்களை பத்திரமா இருக்க சொல்றேன்.” என மறுத்துவிட்டார் கதிரேசன்.
“ஆச்சி, உங்கப்பாக்கு இப்போலாம் முடியறதில்லையாம், மதி சொல்லவும் அவனை கூப்பிட்டு அந்த நேரம் அவருக்கெத்தாவதுனு ரொம்ப கஷ்டமாகிடும்னு வர வேணாம்னுட்டேன், பத்திரமா இருங்க.” என எடுத்துரைக்க..
ஆறு வருடங்களுக்கு மேலாக தந்தை அழைத்தால் வந்துவிடுபவன், இன்று ஏன் வரவில்லை? அன்றைக்கு நான் பார்த்ததை பார்த்ததால் வர மறுத்துவிட்டானோ? என யோசிக்க, தாமரையின் மனம் ஏமாற்றமாய் உணர்ந்தது.
மேலும் ஒரு மாதம் கடந்திருக்க, மஞ்சுவின் பேரண்ட்ஸ் மீட்டிங்கிற்கு சென்று தன்னோடே அழைத்து வந்தவன், “எனக்கு டைமாகுது மஞ்சு. காலேஜ்ல வேலையிருக்கு.” என வீட்டினுள் வராமலே சென்றிருந்தான்.
தாமரையின் மேற்படிப்பிற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடியும் தருவாயிலிருக்க.. ‘அப்பா பி.ஜிக்கு என்னை வேற காலேஜ்ல சேர்த்திவிடுங்க..” என்றாள்.
‘எனக்கு உன் படிப்பை விட சேஃப்டிதான் முக்கியம்.. இந்த காலேஜ்லயே அப்ளிகேஷன் போடு.” என்றார் கதிரேசன்.
‘தாமரை எதுக்கு இப்படி அடம் பண்ற? நம்ம கம்பெனியில வேலை செய்யற அளவுக்கு நீ இன்னும் மெச்சூட் ஆகலை..
இந்த காலேஜ்ன்னா உன்னோட ஸ்கூட்டியில பத்தே நிமிசத்தில போய்டலாம். நம்ம மதியும் அங்கயே ஒர்க் பண்றதால உனக்கு எந்த பிரச்சனையும் வராது. ஒருவேளை பிரச்சனை வந்தாலும் அவன் சரி பண்ணிடுவான். நீ அங்கையே படிடா.. அதுதான் உனக்கு நல்லது..“ என பெறுமையாய் எடுத்துரைத்தார்.
‘மூனு வருசமா அந்த காலேஜ்லதான படிச்சேன்? எதாவது பிரச்சனை வந்திருக்கா.? அதுவுமில்லாம அவர் சயின்ஸ் டிபார்ட்மெண்ட்.. நான் மேக்ஸ் டிப்பார்ட்மெண்ட். காலேஜ்ல இன்னைக்கு வரைக்கும் அவர் என்னோட சொந்தகாரார்ன்னு கூட யாருக்கும் தெரியாது.
என்கிட்ட அவ்ளோ டிஸ்டன்ஸ் மெயின்ட்டன் பண்றார். அவரால எனக்கு ஒரு பாதுகாப்பும் கிடையாது. வேற காலேஜ்ல சேர்த்திவிட்டா படிக்கிறேன்.. இல்லன்னா படிக்கலை..” என்றாள் உறுதியாக.
அன்று சூடான சாம்பாரை ஊத்திக்கொண்டபோது, என்ன ஏதென்று தன்னிடம் விசாரிக்கவில்லையென்றாலும், மஞ்சு அன்னையிடம் கூட விசாரிக்காமல் அவன் பாட்டிற்கு சென்றது தாமரையை வெகுவாய் காயப்படுத்தியிருக்க, இனி அவனை நினைக்கவே கூடாதென நினைத்தாள்.
அதன் காரணமே கதிரேசன் எத்தனை முறை எடுத்துரைத்தும் படித்த கல்லூரியில் விண்ணப்பிக்க மறுத்துவிட்டாள் தாமரை. இச்செய்தியை மஞ்சு மதியழகனிற்கு தெரிவித்தாள் வழக்கமான இயல்போடு.
“அவ பாட்டுக்கு படிச்சிட்டிருந்தா, நல்ல இடமா கேட்டாங்கனு பொண்ணு பார்க்க வர சொன்னதுதான் நான் செய்த பெரும்தப்பு, அதனாலயேது படிப்புல நாட்டமில்லாம போய்டுச்சா ஆச்சி?” என மகளின் புதிய பிடிவாத குணத்தை கதிரேசன் மனைவியிடம் சொல்லி புலம்ப..
“ஏங்க படிப்புல இஷ்டமில்லனா வேற காலேஜ்ல படிக்கிறேனு ஏன் சொல்லப்போறா? படிக்க பிடிக்காமல்லாம் இருக்காது, அந்த காலேஜ் பிடிக்கலன்றானா அங்க எதாவது பிரச்சனையானு விசாரிப்போம்.” என கணவனுக்கு ஆறுதலளித்து, தன் கவலையை தந்தையிடம் புலம்பினார் காமாட்சி.
பழனியப்பன் மதியிடம் புலம்பினார்.
ஓ.. நான் ஒர்க் பண்ற காலேஜ்ல படிக்க கூட பிடிக்காத அளவுக்கு இவளை என்ன செய்தேன் என கடுப்பானவன்.. கண்ணு முன்னால இருந்து இம்ச பண்ணாம எங்கையோ போகட்டும் என நினைத்து.. “அதெல்லாம் அவ விருப்பம் தாத்தா, ஒரே காலேஜ்ல படிக்க போரடிச்சிருக்கும், இல்ல அவ ஃப்ரண்ட்ஸ் யாராவது வேற காலேஜ்ல சேர்வாங்களா இருக்கும், இங்க படிக்க பிடிக்கலனா அவ விருப்பப்பட்ட காலேஜ்ல சேர்த்திவிட சொல்லு.”
இப்படி அத்துவுட்டு பேசுற அளவுக்கு அந்த புள்ள என்ன செய்துடுச்சி? உன் சொத்துலயா பங்குக்கு வந்துடுச்சி?” என பழனிப்பன் சிடுசிடுக்க..
ஒருவேளை என்கிட்ட சொத்திருந்திருந்தா பங்குக்கு வந்திருப்பாளோ என்னவோ? உன் மகளும் வேற இடத்துல மாப்பிள்ளை பார்த்திருக்கமாட்டாங்க என நினைத்து.. “என்னை பார்க்க பிடிக்காமத்தான் அவ வேற காலேஜ்ல படிக்கிறேன்னுருக்கா, இது தெரியாம என்கிட்ட மல்லுகட்டிட்டிருக்க..” என மதியழகனும் முறைத்தான்.
ஒருவேளை பேரன் சொல்றதும் உண்மையா இருக்குமோ? அன்னைக்கு மஞ்சு சடங்குல மதி வாங்கி போன பூவையே வைக்கல என யோசித்தபோதும், மஞ்சுக்காக வாங்கினதை நான் எப்படி வைக்கிறதுனு கேட்டுச்சே. மஞ்சுக்குன்னா என்னென்னாலும் செய்யிறான், தாமரைக்கு அப்படியில்லைதானே? என தாமரையின் கூற்றையும் மனதில் எண்ணி.. “உன்னை யாருக்கு பிடிக்காது மதியழகா? நீ நினைக்கிறமாதிரி இருக்காது, அந்த புள்ளைகுள்ளயும் எதோ சங்கடம் இருக்கலாமில்ல?
வாத்தியார்ன்ற முறையில கூட பேசவேணாம், உன் மஞ்சுவோட அக்கான்ற முறைக்காவது இரண்டு வார்த்தை எடுத்து சொல்லுய்யா. எனக்கென்னவோ நீ சொன்னா கேட்டுக்கும்னு தோணுது.” என்றார் கெஞ்சலாக.
“அவளுக்கு இங்க படிக்க விருப்பமில்லனா நாம என்ன செய்ய முடியும் தாத்தா? அவங்கப்பாம்மா பேச்சையே கேட்காதவ நான் சொல்லி கேட்க போறாளா?” என எடுத்துரைத்து கிளம்பினான் கோபமாக.