பணத்திற்காக தந்தையை கொன்றது மட்டுமல்லாமல், இச்சைக்கு தன் அன்னையை கேட்டிருக்கிறான் என்ற எண்ணமே மதியழகனின் மொத்த நிம்மதியையும் கெடுத்திருக்க, எப்பொழுது அவனை கொல்வோம் என்ற வெறியிலிருந்தான்.
ஆனால் மகனின் இறப்பிற்கு பின்னே ரஞ்சித்குமார் வீட்டை விட்டு வெளிவரவில்லை என்ற தகவலே தொடர்ந்து வர கடுப்பானான் மதியழகன்.
இனியும் தாமதிக்கவேண்டாம், இனி தன் வாழ்க்கை ஜெயிலில் என முடிவாகியாகிற்று, எனில் எதற்கு தாமதிக்க வேண்டும்?
தன் பெற்றோர் உயிரை பறித்ததுபோல் இன்னும் எத்தனை பேரை பலி கொடுத்தானோ? அந்த அயோக்கியன் செத்தால் மட்டுமே தன்னால் நிம்மதியாக இருக்க முடியும் என முடிவெடுத்து, காலை வழக்கம்போல் வேலைகளை முடித்தவன் ரஞ்சித்தின் சொந்த ஊரான போடிநாயக்கன்பட்டிக்கு கிளம்ப ஆயத்தமானான்.
காலை ஆறு மணிதான் என்பதால்.. “என்ன மதி? இந்நேரத்துக்கே கிளம்பிட்ட?” என்றார் பழனியப்பன்.
“அன்னைக்கு கல்யாணத்துக்கு போய்ட்டு நைட்டே வந்துட்டேன்ல தாத்தா? அவன் அடுத்தவாரம் ஃபாரின்க்கு போய்டுவான், இப்போ போனான்னா திரும்ப எத்தனை வருசம் கழிச்சி வருவானோ தெரியாது.. என் ஃப்ரண்ட்ஸ் எல்லாருமா இன்னைக்கு மீட் பண்றோம்.
நேத்து நைட்தான் முடிவு செய்தோம். நாளைக்கு காலைல வந்திடுவேன் தாத்தா.” என்றான்.
தாய் தந்தையர் நினைப்பில் பரிதவிக்கிறான்.. இப்படி எங்கேனும் போய் வந்தால் தெளிவடைவான் என சந்தோசமடைந்தவர்.. “நல்லா ஜாலியா இருந்துட்டு வரனும்ய்யா, போன தடவ மாதிரி இந்த தடவையும் அப்பாம்மாவை நினைசிட்டு இருக்கக்கூடாது.” என்றார் அக்கறையாக.
தற்போது போனால் ஆசிரியர் மதியழகனாக வீடு திரும்புவோமா? அல்லது கொலைகாரன் மதியழகனாக நேரே காவல் நிலையத்திற்கு செல்வோமா என வேதனையோடு நினைத்து.. “சரி தாத்தா.” என ஆழ்ந்து பார்த்தவன்.. “நீயும் என்னை நினைச்சிட்டிருக்காம நேரத்துக்கு சாப்பிடனும் தாத்தா.” என்றான் மிகுந்த அக்கறையோடு.
பேரனின் அக்கறையில் நெகிழ்ந்தவர்.. “பத்திரமா போய் வாய்யா.” என்றார் அன்போடு.
மதியழகன் சென்று இரண்டு மணிநேரம் ஆகியிருக்க, தேனியில் இறங்கி டீ குடித்துக்கொண்டிருந்தவனுக்கு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.
யாரா இருக்கும் என யோசித்தவாறு அழைப்பை ஏற்க.. பழனியப்பன்.. “மதி..” என்றார் தவிப்பான குரலில்.
“தாத்தா.. என்னாச்சு?” என்றான் பதட்டத்தோடு.
“வீட்டுக்கு வாய்யா, போலீஸ் வந்திருக்காங்க, என்னென்னவோ சொல்றாங்க. எனக்கு கிறுகிறுக்குது.” என கமறினார்.
“தாத்தா.” என்றான் பேரதிர்ச்சியோடு.
இன்ஸ்பெக்டர்.. “மிஸ்டர் மதியழகன் எங்கயிருக்கிங்க?” என்றார் அதிகார குரலில்.
“சார்.. என்ன விசயமா சார் வந்துருக்கிங்க?” என பதட்டத்தோடு கேட்க, “நீங்க கேக்குறதுக்கு விளக்கம் சொன்னா உங்க தாத்தா அதிர்ச்சியில உலகத்தை விட்டு போய்டுவார், பரவால்லைனா சொல்றேன், வேணாம்னா உடனே வீட்டுக்கு வாங்க.” என்றார் கட்டளையாக.
“வரேன் சார், ஆனா நான் தேனியில இருக்கேன், வர இரண்டு மணிநேரம் ஆகும். தாத்தாகிட்ட எதுவும் பேச வேணாம். ப்ளீஸ் சார்.” என்றான் பணிவோடு.
“ஸ்டேசன்க்கு வேணாம். இப்போ கிளம்பிட்டு, சரியா இரண்டு மணிநேரம் கழிச்சி வீட்டுக்கு வரேன், லேட் பண்ணாம சீக்கிரம் வந்திடுங்க.” என இணைப்பை துண்டித்தார் இன்ஸ்பெக்டர்.
“மகனை கொன்றதற்கு கம்ப்ளைன் செய்திருப்பானோ? கைதாவது பிரச்சனையில்லை.. ஆனால் அவனை கொல்லாமல் ஜெயிலுக்கு போவதா? என ரத்தம் சூடேறியது மதியழகனிற்கு.
ஆனால் சொன்னதுபோல இரண்டு மணிநேரத்தில் இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு வந்து, நான் போகவில்லையென்றால் தாத்தாவை மிரட்டுவார்களோ என்ற பயமிருக்க, வேறு வழியின்றி மதுரைக்கு செல்லும் பேருந்து நின்றிருந்த இடத்திற்கு விரைந்தான்.
“உங்கப்பா செத்ததுக்கப்புறம் என் மருமகளை யாரோ தொந்தரவு செய்தாங்களாமே? அதை தாங்க முடியாம தற்கொலை பண்ணிக்கிச்சாம், அது விபத்துல சாகலயாய்யா?” என்றார் மிகுந்த வேதனையோடு.
“தா.. தாத்தா..” என மதியழகன் தவிக்க.. “சொல்லுய்யா.. அது உனக்கும் தெரியும்னும், உங்கம்மாவை அந்த நிலைக்கு ஆளாக்கினவனை கொல்லனும்னு நீ இருக்கியாம். இதெல்லாம் உண்மையாய்யா?” என்றார் பெருகிய கண்ணீரோடு.
“ச்சே.. ச்சே.. அப்படில்லாம் இல்ல தாத்தா, யாரோ தப்பா தகவல் கொடுத்துருக்காங்க, அது நாம இல்லனு தெரியாம போலீஸ் விசாரிக்க வந்திருப்பாங்க.” என சமாளிக்க..
“இல்லய்யா, உங்கப்பாம்மா செத்த நாள் கிழமைனு எல்லாம் சரியா சொல்றாங்க, அதில்லாம நீ மூனு மாசம் முன்ன உன் சினேகிதன் கல்யாணத்துக்கு போனயில்ல? அதுகூட பொய்யாம், என்கிட்ட பொய் சொல்லிட்டு அவனை பழிவாங்க போனேன்னு சொல்றாங்கய்யா.”
“ப்ச் தாத்தா.. அப்படிலாம் எதுவுமில்ல, நீ சாப்பிட வா.” என்றான் கனிவாக.
“இல்ல தாத்தா.” என பொய்யுரைத்தாலும் முகம் வேதனையை காண்பிக்க, “அப்படியில்லன்னா நீ ஏன்ய்யா அவங்க கூப்பிட்டதும் வந்த?” என்றார் வலுத்த சந்தேகத்தோடு.
ஏதும் பேசாமல் சேரில் அமர்ந்தவன் வேதனையோடு கண்மூட, இன்ஸ்பெக்டர் வந்தார்.
“மதி.. போலீஸ் வந்திருக்காங்க.” என பழனியப்பன் பயந்த குரலில் சொல்ல, கண் திறந்தவன்.. “வாங்க சார்.” என்றான் இறுகிய முகத்தோடு.
உள்ளே வந்தவர்.. “ஹலோ.. ஐயாம் மித்ரன்.” என சினேகமாய் கை நீட்ட, தாத்தா அருகிலிருக்க வேறு வழியின்றி கை குலுக்கியவன்.. “எங்கம்மா ஏன் தற்கொலை பண்ணிக்கிட்டாங்கனு தாத்தாகிட்ட சொல்லியிருக்கிங்களே, அப்படியே எங்கப்பா எப்படி இறந்தார்னும் சொல்லியிருக்கலாமில்ல சார்?” என்றான் அடக்கப்பட்ட ஆத்திரத்தோடு ஆங்கிலத்தில்.
பெரியவருக்கு புரியக்கூடாதென ஆங்கிலத்தில் பேசும் மதியழகனை அர்த்தமாய் பாரத்தவாறு.. “உங்க தாத்தா மேல அவ்வளோ பாசமா?” என்றார் இலகுவாக.
“அந்த அயோக்கியனுக்காக இவ்வளோ பார்க்குறிங்களே? என் தாத்தாக்கு பார்க்க மாட்டேனா?” என்றான் கோபமாக.
“ஹம்.. ஒரு இன்ஸ்பெக்ட்டர்கிட்ட இவ்வளோ தைரியமா பேசுறிங்க.” என பாராட்டி, “ஆனா நான் இங்கிலீஸ்ல பேசப்போறதில்ல, சுத்த தமிழ்ல உங்க தாத்தாக்கு புரியறமாதிரிதான் பேசுவேன்.” என அழுத்தமாய் சொல்லி..
“உங்க இழப்பு ஈடுகட்ட முடியாத ஒன்னுதான், நிச்சயம் இப்படி நடந்திருக்கவே கூடாது.” என வருந்தி.. “ஆனா அதுக்காக பழிவாங்க கிளம்புறது தப்பில்லைங்களா மிஸ்டர் மதியழகன்.” என்றார் தன்மையாக.
“கண்டிப்பா தப்புதான், ஆனா இந்த தப்பை செய்யலன்னா என் அப்பாம்மா ஆத்மா சாந்தியடையாது. என்னாலயும் நிம்மதியா வாழ முடியாது சார்.” என்றான் திடமாகவே.
“நோ.. மதியழகன். உங்களைப்பத்தி காலேஜ்ல விசாரிச்சேன், ரொம்ப நல்லவிதமா சொன்னாங்க, ஈவ்னிங் டைம் டியூசன்ல நிறைய ஏழைப்பிள்ளைகளுக்கு ஃப்ரீயாவும் சொல்லிதரிங்களாம். இப்படி உயர்ந்த குணத்தோட இருக்க நீங்க பழிவாங்க கிளம்பி உங்க லைஃப்பை வீணாக்கிக்காதிங்க.”
“ஓ.கே. சார்.” என்றான் அமர்த்தலாக.
பழிவாங்குவதில் உறுதியோடிருக்கிறான் என்றுணர்ந்த ஆய்வாளர்.. “நானும் ரஞ்சித் மாதிரியான ஆளா இருந்திருந்தா இந்நேரம் உங்களை உள்ள தூக்கி போட்டிருப்பேன், ஆனா நான் அப்படிபட்டவன் இல்ல.. உங்களோட உண்மையான ஆதங்கமும், தாங்க முடியாத வேதனையையும் புரிஞ்சி, என் தம்பிபோல நினைச்சி அறிவுரை சொல்ல வந்துருக்கேன்.
அந்த ரஞ்சித்தை நீங்கதான் கொல்லனும்னு இல்ல, இன்னும் ஆறு மாசமோ ஒரு வருசமோ அவனே போய் சேர்ந்திடுவான்.
எஸ்.. அவனுக்கு லங்ஸ் ப்ராப்லம் இருக்காம், ஒரு மாசம் முன்ன ரொம்ப முடியாம அட்மிட் ஆகி இப்போ அஞ்சு நாள் முன்னதான் டிஸ்சார்ஜ் ஆனான்.
இன்னும் கொஞ்ச நாள்ல சாகப்போறவனை வீணா எதுக்கு நீங்க கொன்னு உங்க லைஃப்பை வேஸ்ட் பண்ணிக்கனும்?” என்றார்.
இத்தனை சொல்லியும் மதியழகனின் அழுத்த முகம் சிறிதும் மாறவில்லை. இனி தாத்தாவை வைத்துதான் பேசவேண்டும் என நினைத்த மித்ரன்..
“பெரியவரே..” என பழனிப்பனிடம் பைரவன் இறந்ததை விடுத்து, அழகம்மாள் இறந்த காரணத்தை மீண்டும் விளக்கி, “உங்க பேரன் அவனை கொல்ல திட்டம் போட்டிருக்கான், அப்படி நடந்தா கண்டிப்பா பல வருசம் ஜெயில்லதான் இருக்கனும்.
காலேஜ்ல உங்க பேரனுக்கு நல்ல பேரிருக்கு. சொந்த முயற்சியில யார் துணையுமில்லாம இந்தளவுக்கு வந்ததை வீணாக்கிக்க வேணாம்னு எடுத்து சொல்லுங்க.” என்றார் மித்ரன்.
“அய்யா மதி.. இவரு சொல்றது உண்மையா?” என கேட்க, மதியழகன் வேதனையோடு தலைகுனிய.. “உன் சத்தியமா சொல்லுறேன்.. உனக்கு மட்டும் எதாவது ஆச்சுன்னா அடுத்த நிமிசமே மண்ணெண்னை ஊத்திக்கிட்டு செத்துபோய்டுவேன்ய்யா.” என்றார் கண்ணீரோடு.
“எனக்கு ஒன்னும் ஆகாது தாத்தா.” என்க.. “வம்சத்துல மிஞ்சி இருக்கிறது நீ ஒருத்தன்தான். ஜெயில்ல கிடந்து சாகவா அம்புட்டு படிப்பு படிச்ச? நீ அவனை கொன்னாலும் என் மருமக மீண்டு வரப்போறதில்ல, தப்பு செய்தவனை அந்த கடவுள் பார்த்துக்கட்டும், யாரையும் எதுவும் செய்யமாட்டேன்னு என்மேல சத்தியம் பண்ணு..” என்றார் பிடிவாதமாக.
“தாத்தா..” என மதி வேதனையடைய.. அவராகவே மதியின் கையை எடுத்து தன் தலைமீது வைத்து.. “வேணாம்ய்யா.. உனக்கு ஒன்னுனா செத்தபின்ன கூட என் கூடு அலைஞ்சிட்டேயிருக்கும். யாரையும் எதுவும் பண்ணமாட்டேனு சொல்லுய்யா.” என்றார் வேண்டுதலாக.
அப்பொழுதும் மதி அமைதிகாக்க.. மருமகள் இறந்த விதம் ஒருபுறம் பெரும் வேதனையளிக்க, இனி பேரனின் வாழ்வும் என்னாகுமோ என பெரும் அச்சம் உண்டானது பழனியப்பனிற்கு.
“நீ அவனை கொன்னா, கோர்ட்ல வச்சி எதனால கொன்னனு கேட்பாங்களே, உங்கம்மாவை கேட்டானு உன்னால எல்லார் முன்னாடியும் சொல்ல முடியுமா? அப்படியே சொன்னாலும் அது என் மருமகளுக்கு அசிங்கம்யா.. எதாவது நடந்தா மானம் போய்டுமேனுதான் உயிரை மாய்ச்சிருக்கும், இப்போ நீயே அதை கிளற போறியா?” என்றார் வலியோடு.
இக்கோணத்தில் யோசிக்காத மதியழகன்.. “ஆனாலும் என்னால தாங்க முடியல தாத்தா.” என்க.. “அப்ப என்னை முதல்ல கொன்னுடு, இந்த கொடுமைலாம் பார்க்காம போய் சேர்ந்துடறேன்.” என தன் தலைமீது அடித்துக்கொண்டார் வேதனையோடு.
“ப்ச்.. தாத்தா.” என பழனிப்பனை தடுக்க.. “என் பேச்சு கேட்கமாட்டியாய்யா?” என கெஞ்சலாய் பரிதவிக்க.. இதற்கு மேல் அமைதிகாத்தால் இந்த நிலையே தன் தாத்தாவின் உயிரை பறித்துவிடுமென.. “சரி தாத்தா.. நான் யாரையும் எதுவும் பண்ணல.” என்றான் தோல்வியோடு.
“குட் மிஸ்டர் மதியழகன்..” எனப் பாராட்டி, “பரமானந்த்துகிட்ட பேசி உன்னை பொய் கேசுல உள்ள தள்ள ஏற்பாடு செய்திருக்கான் ரஞ்சித்.
உங்கம்மாவை இந்த ஊரைவிட்டு வேற எங்கையாவது போய் பிழைச்சிக்கோங்க, அந்த ரஞ்சித் பொல்லாதவன், உங்க பையனையும் விட்டு வைக்கமாட்டானு எடுத்து சொல்லியிருக்கான். உங்கம்மா ரொம்ப பயந்துட்டாங்க போலா, அதான் தற்கொலை செய்துருக்காங்க. பாவம்.. அவங்களும் என்ன செய்வாங்க?” என வருந்தி..
“பரமானந்தம் சொல்லித்தான் உன்னை தேடி வந்தேன், டிப்பார்ட்மண்ட்ல இப்படி அதிகாரியும் இருந்திருக்காங்கனு வெக்கப்படறேன், உங்கப்பாம்மாவை நினைச்சா ரொம்ப வேதனையாதான் இருக்கு.
ஆனா நீ உங்கப்பாவை நினைச்சி பெருமை படனும். யாரோ ஒரு பொண்ணுக்கு நீதி கிடைக்கனும்னு உயிரையே விட்டுருக்கார், அப்பட்டி பட்டவர் பையன் கொலை தண்டனை கைதியா ஜெயில்ல இருக்க வேண்டாம்.
உன்னை நம்பி உன் தாத்தா இருக்கார், குரோதத்தை விட்டு உனக்கான வாழ்க்கையை வாழு. ரஞ்சித்தை கடவுள் பார்த்துப்பார். வாய்ப்பு கிடைச்சா நானும் கண்டிப்பா கவனிக்கிறேன்.” என்றார் ஆங்கிலத்தில்.
“சார்..” என வேதனையோடு கலங்கினான் மதியழகன்.
“டேக் கேர்.” என மதியழகனின் முதுகை தட்டி, வெளியேற எத்தனிக்க.. “ஐய்யா.. தக்க நேரத்துல வந்து என் பேரனை தப்புசெய்ய விடாம பார்த்துக்கிட்டிங்க. ரொம்ப நன்றிங்க.” என பழனியப்பன் கை கூப்பி வணங்க..
“இவருக்காகவாவது உங்க மனசை மாத்திக்கோங்க மதியழகன்.” என்று மீண்டும் எடுத்துரைத்து கிளம்பினார் மித்ரன்.