மித்ரன் சென்றதும், தன் மகன், மருகள் படத்திற்கு முன் நிற்கவைத்து.. யாரையும் எதுவும் செய்யமாட்டேன் என வாய் மொழியாக சொல்ல வைத்து சத்தியம் வாங்கியும், ஒரு வாரமாக மதியை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை பழனியப்பன். கல்லூரிக்கு செல்ல வேண்டுமென்றாலும், நானும் உடன் வருகிறேன் என நின்றார் பிடிவாதமாக.
ரஞ்சித் மீதான கோபம் உள்ளுக்குள் கணன்ற போதும், சரி வர உண்ணாமல், உறங்காமல் கழிந்த பழனியப்பனின் பரிதவிப்பு மதியை மனமிறங்க செய்தது.
முன்பு தாத்தாவின் நிம்மதிக்காக சத்தியம் செய்தவன் தற்போது.. “அப்பாம்மா சத்தியமா அவனை ஒன்னும் செய்ய மாட்டேன் தாத்தா. உனக்காக என்னை மாத்திக்கிறேன்.” என்றான் மனதாற.
சற்றே நிம்மதியானவர்.. “இரண்டு மாசத்துக்கு லீவு போடுய்யா, என் கூடவே இரு.” என்றார் கெஞ்சலாக.
தன் தாத்தாவின் மனதை அமைதிகொள்ள செய்ய, “சரி தாத்தா.. ஆனா இரண்டு மாசத்துக்கெல்லாம் லீவ் போட முடியாது, காலேஜ் இருபது நாளுக்கு லீவ்தான். லீவ் முடியும் வரை எங்கையும் போகாம உன்னோடவே இருக்கேன்.” என்றான்.
பழனியப்பன் முகம் நிம்மதி கண்டது.
இரவு பத்து மணியாகியிருக்க, எதுக்கு இந்நேரத்துக்கு போன் செய்யிறார் என யோசித்தவாறு அழைப்பை ஏற்றான். “மதி தாமரைக்கு ஒரு சீட் கேட்டு வைக்கிறியா?” என்றார்.
“அப்ளிகேஷன் டைம் நேத்தோட முடிஞ்சிடுச்சி, நீங்களே போய் கேக்குறதுதான் சரியா இருக்கும் மாமா.” என்றான்.
“தாமரை வர மாட்டுக்கிறா மதி. அவளுக்கு உடம்பு சரியில்லன்ற மாதிரி எதாவது சொல்லி கேளேன்.” என்றார் தணிவாக.
கல்யாணம் செய்துக்கிற அளவுக்கு தாமரைக்கு இன்னும் பக்குவம் வரல, ஏற்கனவே பட்ட அவமானம் போதும், இரண்டு வருசம் போகட்டும், அதுவரை வீட்டுல சும்மா இருந்தா கல்யாணம் நின்னு போனதாலனு தப்பா பேசுவாங்க, கொஞ்சம் எனக்காக பாரேன்.”
இத்தனை கெஞ்சலாய் பேசும்போது என்னதான் செய்வதென.. “சரி மாமா.” என்று இணைப்பை துண்டித்தவன்.. அடுத்த நாள் காலை பழனியப்பனிடம் விசயத்தை சொல்லி கல்லூரிக்கு செல்ல அனுமதி கேட்டான்.
“கோவப்படாத மதி.. அது எதோ புரியாம பண்ணிட்டிருக்கு, சின்னபுள்ள, நாமதான எடுத்து சொல்லனும்? அந்த புள்ள படிக்கலனா உன் மஞ்சு வருந்துமே..” என்க.. “நேரமாச்சி, நான் கிளம்பறேன்.” என கிளம்பினான்.
அன்று மாலை அப்ளிகேஷனோடு வீட்டிற்குள் வந்தான் மதியழகன். ‘வா மதி.. ஏன் ரொம்ப நாளா வரலை.?” என காமாட்சி வரவேற்கவும்.. திரும்பி பார்க்காமலே இவங்க வந்திருக்காங்களா? என தனதறைக்கு செல்ல முற்பட்டாள்.
‘உங்கக்காகிட்ட இந்த அப்ளிகேஷன்ல கையெழுத்து வாங்கு..” என மஞ்சுவிடம் நீட்டினான்.
‘எனக்கு படிக்க விருப்பமில்ல மஞ்சு..” என்றாள் சன்னக்குரலில்.
‘படிக்காம என்ன பண்ணப்போற?” என்றான் தாமரையிடமே.
‘அதை இன்னும் யோசிக்கல. ஆனா படிக்கமாட்டேன்..” என்று தனதறைக்கு விரைந்தாள்.
‘இவளுக்கு என்ன ஆச்சின்னே தெரியலை. எப்பப்பாரு ரூம்லையே இருக்கிறா.. சரியா சாப்பிடறதும் இல்ல.. இவ சிரிப்பை பார்த்தே இரண்டு மாசமாய்டுச்சி..” என்று புலம்பினார் காமாட்சி.
இதை ஏன் சொல்லலை என்பதாய் மஞ்சுவைப் பார்த்தான் மதி. “தாமரை பேச்செடுத்தா உங்களுக்கு பிடிக்காதுனுதான் மாமா சொல்லலை.” என்றாள் பாவமாக.
மதி இந்தளவிற்கு தாமரைக்காக நினைப்பதே பெரும் ஆச்சர்யமாகவும், சந்தோசமாகவும் இருக்க.. மகளின் அறையருகே வந்த காமாட்சி கதவை திறந்து.. “மதி இத்தனை சொல்றான், வந்து கதவை திறக்கமாட்டியா? எனக் கடிந்தார்.
“எனக்கு படிக்க பிடிக்கலம்மா.” என்றாள் கெஞ்சலாக.
“உங்கப்பா கேட்டாறேனு காலேஜ்ல ரிக்வஸ்ட் பண்ணி கேட்டு அப்ளிகேஷன் வாங்கி வந்துருக்கேன், நீ ஜாயின் பண்ணலனா எனக்கு அசிங்கமாகிடும். ஒழுங்கா அப்ளிகேஷன்ல கையெழுத்துப் போட்டு படிக்கிற வழியைப் பாரு..” என்றான் மிரட்டலாக.
தாமரை அமைதியாகவே இருக்கவும்.. “உன்கிட்டதான் சொல்லிட்டு இருக்கேன்..” என பல்லை நெறித்தான் கோபமாக.
தற்போதைக்கு தப்பித்தால் போதுமென சரியென்பதாய் தலையசைத்தாள். “மஞ்சு..” என அழைக்க, மஞ்சு அப்ளிகேஷனோடு வர, அதை வாங்கி கட்டிலில் வைத்து.. “நாளைக்கு காலைல ஒன்பது மணிக்கெல்லாம் காலேஜ்க்கு போய்டனும்..” என கட்டளையிட்டு வெளியேறினான்.
அப்பொழுதுதான் வந்த கதிரேசன், ‘என்ன மதி சொன்னா? படிக்கிறாளாமா?” என்றார் தவிப்போடு.
‘ம்.. நாளைக்கு கூட்டிட்டு போய் அட்மிஷன் போட்டுடுங்க..”
கதிரேசன்.. ‘சரி மதி.” என்றார் நிம்மதியோடு.
“கிளம்பறேன்த்த.. நாளைக்கு பத்து மணிக்கு காலேஜ்க்கு போய்டுங்க.” என மீண்டும் எடுத்துரைத்து கிளம்பினான் மதியழகன்.
அடுத்தநாள் காலையும் இறுதி முயற்சியாக.. “வேற காலேஜ்ல படிக்கிறேன்ப்பா” என கெஞ்சினாள் தாமரை.
கதிரேசன்.. “மதி உனக்காக கேட்டுருக்கான், இரண்டு வருசம்தானே? சீக்கிரம் போய்டும்டா..” என கெஞ்சி அழைத்துப் போனார்.
கல்லூரிக்கு சென்றதும்.. “ம்மா நீங்க இருங்க, நான் போய் கொடுத்துட்டு வரேன்.” என இவர்கள் கண்பார்வையிலிருந்து மறைந்தவள், கால் மணிநேரம் கழித்து வந்தாள்.
காமாட்சிக்கு அழைப்பு வர.. “மதிதாங்க கால் பண்றான்.” என அழைப்பை ஏற்க.. “எங்கத்தை இருக்கிங்க? மஞ்சுக்கு உடம்பு சரியில்ல, வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கேன். வீடு பூட்டியிருக்கு.” என்றான்.
“நான் இங்க அப்பாவோட இருக்கேன் மதி. காலேஜ்க்கு போய்ட்டு அப்படியே அப்பாவை பார்க்கலாம்னு வந்தேன். மஞ்சுக்கு காய்ச்சலாமே? இப்போ எப்படியிருக்கா? ஒரு பத்து நிமிஷம் இரு மதி, மாமா இங்கதான் இருக்கார், வந்துடறேன்..” என படபடத்தார் காமாட்சி.
“என் மடியில படுத்துக்கோ மஞ்சு, அம்மா வந்துடுவாங்க.” என போர்டிகோவில் கீழே அமர்ந்தான்.
“அழகுமாமா போன் கொடுங்க, அம்மாகிட்ட நான் பேசறேன்.” என வாங்கியவள், அன்னையிடம் பேச, தற்போது அவரிருக்கும் இடமறிந்ததும் சந்தோசமடைந்தவளாய்.. “நீங்க அங்கயே இருங்கம்மா. நான் அங்க வரேன்.” என இணைப்பை துண்டித்து.. “அழகுமாமா.. அம்மா உங்க வீட்டுலதான் இருக்காங்க.. நாமளும் அங்க போலாம்.” என்றாள் ஆசையாக.
“காய்ச்சலோட பைக்ல எங்கெங்க சுத்தறது மஞ்சு.?” என மறுக்க.. “ப்ளீஸ் மாமா.. இன்னைக்கு விட்டா உங்களோட ஜாலியா இருக்க டைம் கிடைக்காது. உங்களோட இருந்தா எனக்கு காய்ச்சல் சீக்கிரம் சரியாகிடும்.” என்றாள் கொஞ்சலாக.
இதற்குமேல் மறுக்க முடியாதென மஞ்சுவை அழைத்துக்கொண்டு தன் வீட்டிறக்கு வந்தான்.
காமாட்சியும் தாமரையும் தாத்தாவோடு பேசிக்கொண்டிருந்தனர். “வாங்கத்தை..” என்றான். பிறகு தாமரையையும் பார்த்தான். ஆனால் அச்செயலை செய்தபின்னே குற்றவுணர்வு அதிகரிக்க தலைகுனிந்திருந்தாள்.
‘மஞ்சுக்கு என்னாச்சு?” என்றார்.
“காய்ச்சல்த்தை.. ஹாஸ்பிட்டல்க்கு போய்ட்டுதான் வந்தோம், வைரல் ஃபீவராம். டாக்டர் ரெஸ்ட் எடுக்கனும்னு சொன்னார்.” என்றவன்.. “மஞ்சு.. வா படுக்கலாம்.” என அழைத்துப் போனான் தனதறைக்கு.
மகளை படுக்க வைக்க காமாட்சியும் மதியோடு உள்ளே சென்றிட, “வா தாமரை.. மஞ்சுகிட்ட போலாம்.” என பழனியப்பன் அழைக்க, வேறு வழியின்றி தாத்தாவோடு உள்ளே வந்தாள்.
மஞ்சுவிற்கு தைலம் தேய்த்து பெட்சீட் போர்த்திவிட்ட மதிக்கு அழைப்பு வர.. “கிருஷ்ணன் சார் எதுக்கு கூப்பிடறார்? அப்ளிகேஷன்ல எதாவது தப்பா ஃபில் பண்ணிட்டாளா?” என்ற யோசனையோடு ஆன்செய்தான்.
கிருஷ்ணன் சொன்னதை கேட்க மதிக்கு முகம் அத்தனை கடினமாய் மாறியது. ஆகினும்.. “அப்ளிகேஷன் தவறி தண்ணியில விழுந்துடுச்சி, எப்படி கொடுக்கனு வந்துட்டேனு இப்போதான் சொன்னா. சாரி சார்.. நான் மதியம் வரேன்.” என இணைப்பை துண்டித்து, கோபமாய் வெளியே வந்தான்.
தாமரை சேரில் அமர்ந்திருக்க.. அவளருகே சென்றவன்.. “அப்ளிகேஷன் கொடுத்திட்டியா?” என்றான் அமர்த்தலாக.
‘ம்ம்..” என்றவள் தனது ஹேண்ட்பேகை இறுக்கிப் பிடித்தாள்.
‘உன் பேகை கொடு..” என்றான்.
‘ம்ஹும்..” என மறுத்து மடிமீது வைத்துக்கொண்டாள்.
மதியழகன் முறைக்க.. அவன் பார்வையை பார்க்கவில்லை என்றபோதும், தன்னை நோக்கி முன்னேறிய கால்களை பார்த்து பயந்து, அமர்ந்த நிலையிலேயே பின்னே நகர்ந்தாள்.
அப்ளிகேஷனை போல இருக்கே என நினைத்த காமாட்சி.. “என்னாச்சு மதி?” என பதட்டத்தோடு கேட்க,
“அப்ளிகேஷனை கொடுக்காம வந்ததோட, அதை கிழிச்சி வேற வச்சிருக்கா.” என தாமரை முகத்தினில் விட்டெறிந்தான் அதீத கோபத்தோடு.
“அச்சோ..” என காமாட்சி தலையில் அடித்துக்கொள்ள..
“கல்யாணமும் செய்துக்காம, படிக்கவும் செய்யாம என்ன செய்யலாம்னு இருக்க?” என அவளின் கன்னத்தை அழுத்தமாய் பற்றி நிமிர்த்த.. மதியின் கோப முகம் பார்த்த தாமரைக்கு இவன் சொந்தம் என்பதெல்லாம் மறந்து.. சுத்த ஆசானாக தெரிய.. அப்ளிகேஷனை கிழிச்சதுக்கு என்ன செய்வானோ என பயந்து கண்கலங்கினாள் தாமரை.