வேலை முடித்து படுக்க வந்தவனுக்கு, ரஞ்சித்குமாரின் யோசனையிலேயே பனிரண்டு மணியாகியும் உறக்கம் வரவில்லை.
இன்னுமா பொண்ணு பார்க்கறான்? டியூட்டியில இருந்தாலாவது வேலை நிமித்தமாக சென்றிருக்கலாம் எனலாம். இவனோ ரிட்டையர்ட் ஆனவன்.. எங்கையே இடிக்குதே என ரஞ்சித் குமாரின் எண்ணை கால்டிராக் செய்து பார்க்க, அவனின் இருப்பு கேரளா எனக்காட்டியது தொழில்நுட்பம்.
ரகுவரன் டெல்லின்னு சொன்னானே என யோசித்தவன்.. ம்.. ரஞ்சித்தோட சொந்தகாரனுக்கு இவன் விசயம் தெரியாமல் இருக்கலாம், இல்ல சொந்தங்களிடம் டெல்லி செல்வதாய் பொய் சொல்லி வேறு எதோ காரணத்திற்காக கேரளா கிளம்பியிருக்கலாம்.
கல்லூரியில் செமஸ்ட்டர் தேர்வுகள் முடிந்திருக்க, விடுமுறையென்பதால் நாளை காலை கேரளா செல்ல முடிவெடுத்த பின்னேதான் நள்ளிரவுக்கு மேல் உறக்கம் தழுவியது மதியழகனை.
காலை ஆறு மணிபோல் எழுந்து வந்தான் மதியழகன். ரஞ்சித்குமாரின் நினைவில் சரிவர தூங்காததால் கண்கள் சிவப்பேறியிருக்க, “மதி என்னய்யா கண்ணெல்லாம் சிவந்து கிடக்கு? ஜுரமேது இருக்கா?” என்றார் பதட்டத்தோடு.
“நல்லாத்தான் தாத்தா இருக்கேன், நைட் தூங்க லேட்டாகிடுச்சி, அதான்.” என்றவாறு கிச்சனுள் புக.. “அப்போ இன்னும் சித்த தூங்கலாமில்ல? இன்னைக்கு லீவுனு நேத்தே சொன்னியே.” என்றார் அக்கறையாக.
“காலேஜ் லீவ்தான் தாத்தா.. என் ஃப்ரண்டுக்கு நாளைக்கு கல்யாணம், அதுக்கு கிளம்பனும். நாளைக்கு சாயங்காலம்தான் வருவேன்.” என்றான்.
தவிர்க்க முடியாத சூழலில் கல்லூரி மாணவர்களோடு சுற்றுலா செல்வதற்கே, தாத்தாவை தனியே விட்டு செல்ல அத்தனை யோசிப்பவன், நண்பனின் திருமணத்திற்காக இப்படி தங்குவது போலெல்லாம் சென்றதேயில்லை மதியழகன்.
பேரனின் விருப்பம் ஆச்சர்யமளித்தபோதும், கிளம்பும் போது அபத்தமாக கேட்கவேண்டாம் என்றும், காரணமில்லாமல் மதியழகன் தன்னை தனியே விட்டு செல்லமாட்டான் என்றும்.. “எல்லார் கல்யாணத்துக்கும் போ.. ஆனா நீ மட்டும்..” எனும் போதே தாத்தாவை முறைத்தவன்.. “ஆரம்பிச்சிட்டியா? உன் பேரனுக்கு என்னவோ பொண்ணு கொடுக்க ஆளாளுக்கு க்யூவ்ல நிக்கிற மாதிரிதான் பேசுறது..” என அவனின் அத்தை மாமாவின் நினைப்போடு கடுகடுத்து டீ வைக்க ஆயத்தமானான்.
தன் பேத்தியின் நினைவோடு.. “என்னடா அப்படி சொல்லிபுட்ட? நீ மட்டும் ஊன்னு ஒத்த வார்த்த சொல்லு, நீ மறுப்பே சொல்லாத மாதிரி தங்க சிலையாட்டம் பொண்ணை ஒரே வாரத்துல உன் முன்ன நிறுத்தறேன்..” என்றார் ஆவலாகவும் ஆசையாகவும்.
தனக்கு தாமரையை பிடிக்கும் என தாத்தாவிற்கு தெரியாது ஆதலால், தாமரையை நினைத்து சொல்வார் என்றெல்லாம் யோசிக்கவில்லை மதியழகன்.
எங்கே யாரையாவது பார்த்திடுவாரோ என.. “அச்சோ தாத்தா.. நீ பாட்டுக்கு எங்கையாவது பார்த்து வச்சிடாத. இப்போ என்னால கல்யாணம் செய்துக்க முடியாது.
வீடு கட்டின கடனே இன்னும் பாக்கியிருக்கு, கடன் மொத்தமும் கட்டிட்டுத்தான் கல்யாணம்.” என்றான் திட்டவட்டமாக.
“மாச மாசம் லட்சரூபா சம்பாரிக்கிறவன் இன்னும் கடனடைக்கலயா? கடனெல்லாம் அடைச்சிருப்பனு எனக்கு தெரியும். நான் பார்க்கத்தான் போறேன். சும்மா சாக்கு போக்கு சொல்லிடிருக்காத.” என்றார் அவரும் திடமாக.
“அச்சோ தாத்தா.. சத்தியமா அவ்வளோலாம் சம்பாதிக்கல. பேங்க் லோனும் கொஞ்சம் பாக்கியிருக்கு.”
“பார்த்தா பாரு.. உனக்கே கட்டி வச்சிடறேன்.” என சிரிக்க, “அடச்சீய்.. நாயே.. பேச்சைப்பாரு..” என திட்டியவர்.. “எப்பதான்யா கல்யாணம் செய்துக்கலாம்னு இருக்க? உன் பேரனுக்கு எப்போ கல்யாணம்னு கேக்குறவங்களுக்கு பதில் சொல்ல முடியல.” என்றார் கவலையாக.
அந்த உம்மனாம் மூஞ்சியைத் தவிர வேற யாரையும் பிடிக்கலயே தாத்தா என மனதினுள் மருகியவன்.. “ப்ச்.. எனக்கு நேரமாகுது தாத்தா. சும்மா தொணதொணக்காத.” என டீயை கொடுத்து, தானும் குடித்து, அடுத்து சமைக்க செல்ல.. “பொட்டச்சியாட்டம் தூங்கியெழுந்தா சமையல், பாத்திரம் கழுவறதுனு.. என் பேரனுக்கு எப்போதான் ஓய்வு கிடைக்குமோ கடவுளே..” என புலம்பியபடி டீயை குடிக்கலானார்.
பழனியப்பனின் புலம்பல்களை கண்டுகொள்ளாமல் ஒரு மணி நேரத்தில் வேலைகளை முடித்து குளித்து, தனது சிம்மை தாத்தாவிற்கென வாங்கிய பட்டன் போனில் போட்டவன், போனை சைலன்ட்டில் போட்டு, போன் அடித்தால் தாத்தா அறியா வண்ணம் மொபைலை ஓரிடத்தில் பத்திரப்படுத்தினான்.
ரஞ்சித்திற்காக முன்பே வாங்கி வைத்த புது சிம்மை எடுத்துக்கொண்டு தயாராகி வந்தவன்.. “தாத்தா நான் கிளம்பறேன். மதியம் சாப்பிடாம இருந்திடாத. நாளைக்கு கடையிலயிருந்து டிபன், சாப்பாடு வரும், என்னைப்பத்தி நினைச்சிட்டிருக்காம நேரத்துக்கு சாப்பிடு.” என எடுத்துரைத்து கிளம்பினான்.
மதுரையிலிருந்து தேனி சென்று டிபன் சாப்பிட்டவன், மேலும் இரண்டு மணிநேரப் பயணத்திற்கு பிறகு ரஞ்சித் மொபைல் எண் காட்டிய இடத்திற்கு வந்தடைந்தான் மதியழகன்.
மூனாறுல வந்து என்ன பண்றான்? என யோசித்தவாறே, புதிய சிம்மை தனது மொபைலில் போட்டு, ரஞ்சித்தின் எண்ணிற்கு அழைப்புவிடுத்தான்.
குடும்ப உறுப்பினர்கள் தவிர்த்து யாருக்கும் தெரியாத எண் என்பதால், வேறு எண்ணிலிருந்து மனைவி அழைக்கிறாளோ என அழைப்பை ஏற்றான் ரஞ்சித். “ஹலோ.. ரஞ்சித் சார்ங்களா?” என்றான் மதியழகன்.
புது குரலா இருக்கே? என யோசித்தவாறே.. “ஆமாம்.. நீங்க.” என கேட்க, “அதை உங்ககிட்ட நேர்ல சொல்ல சொல்லி அனுப்பிருக்காங்க சார். கொஞ்சம் வெளில வாங்க.” என்றான்.
கால் மணி நேரத்திற்கு பிறகு, மனைவி தவிர்த்து தான் இங்கிருப்பது யாருக்கும் தெரியாதே என்ற யோசனையோடு ரஞ்சித்குமார் வெளியே வர.. சந்தியாவின் அம்மா காட்டிய புகைப்படத்திலிருந்ததை விட சற்றே பருத்த உடல்வாகோடும், நரைத்த கேசத்தோடும் இருந்தவனை வெறியோடு ஊன்றிப்பார்த்தவன்.. நூறு மீட்டர் தொலைவிலிருந்து “ஹாய்.. சார்.” என கையுயர்த்தி தான்தான் அழைத்தேன் என்பதாய் செய்கை செய்து ரஞ்சித்தை நெருங்கினான்.
ரஞ்சித்.. “நான் இங்கிருக்கிறது உனக்கெப்படி தெரியும்? யார் நீ?” என வினவினான் சந்தேகப் பார்வையோடு.
“சார்.. உங்க சன் கூப்பிடறாங்க.” என இருபது வயது மதிக்கத்தக்க பெண் சொல்ல.. மேலேயுள்ள போர்டை பார்த்தவனுக்கு வைத்தியத்திற்காக வந்திருக்கிறான் எனப்புரிந்தது.
ரஞ்சித்தின் பெரிய மகனின் போக்கு சரியில்லை என்பதை சென்ற முறை அவனின் சொந்த ஊர் சென்று விசாரித்தபோது தெரிந்திருக்க..
யாருக்கும் தெரியாமல் வந்திருக்கிறான் என்றால் நிச்சயம் எய்ட்சாகத்தான் இருக்கும் என கனித்து.. “நீங்க இருக்கிறது மட்டுமல்ல, உங்க மகனுக்கு ட்ரீட்மண்ட்க்காக வந்திருக்கிங்கனும், மகனுக்கு என்ன வியாதின்னும் கூட எனக்கு தெரியும்.” என்றான் அர்த்தமான பார்வையோடு.
“யார்டா நீ? என் பொண்டாட்டியை பார்த்தியா?” என்றான் கோபமாக.
ரஞ்சித்தின் மனைவியிடம் மதி சந்திக்கவில்லை என்றாலும், தற்போது இவனை வெறுப்பேற்ற.. “எஸ்..” என்றான் இரு கண்ணிமைத்து இலகுவாக.
“சார்..” என மீண்டும் தீபா அழைக்க.. “உன்ன வந்து பேசிக்கறேன்.” என ரஞ்சித் அவசரமாக உள்ளே செல்ல, இந்த பெண் நர்ஸ் போல, மழையாளம் அல்லாது சுத்த தமிழில் பேசுதே என சில நொடி யோசித்தவன்.. ரஞ்சித்தை விடுத்து நிதானமாக பின் தொடர்ந்தான் அப்பெண்ணை.
ரஞ்சித் சென்ற அறைக்குள் சென்ற தீபா பத்து நிமிடம் கழித்து வெளியே வர.. யார் நீங்க? உள்ள வரக்கூடாது என மழையாளத்தில் மதியழகனோடு ஒருபெண் வாதம் செய்து கெண்டிருக்க.. “மேம்.. நான் ரஞ்சித் சாரை பார்க்க வந்தேனு கொஞ்சம் சொல்லுங்க.” என்றான் பணிவாக.
மதியழகனின் தோரணை பெரிய இடம்போல் அப்பெண்ணிற்கு தோன்ற, இவ்விடத்தில் புதிதாய் பணிக்கு சேர்ந்த தனக்கு இத்தனை மரியாதை தரும் மதியழகனை மாரியாதையோடு பார்த்த தீபா.. “ஆமாம்.. இவர் ரஞ்சித் சாரோட பேசிட்டிருந்தார், அவர் மகனை பார்க்க வந்திருப்பாராயிருக்கும்.” என மழையாளத்தில் எடுத்துரைத்து மதியழகனிடம்.. “சார் விசிட்டர்ஸ் இங்க வரக்கூடாது, அங்க வெய்ட் பண்ணுங்க. ரஞ்சித் சார் அரை மணி நேரத்துல வருவார்.” என ஓரிடத்தை காண்பித்தாள்.
“எங்க வெய்ட் பண்ணனு கொஞ்சம் வந்து காட்டுங்க மேம்.” என பணிவோடே அப்பெண்ணை அழைத்தான் மதியழகன்.
அப்பெண் வர.. பின் தொடர்ந்தவன்.. “ரஞ்சித் சார் மகனுக்கு இப்போ எப்படியிருக்கு?” என அவனின் வியாதி அறிய வேண்டி அக்கறை போலவே விசாரித்தான்.
“கிட்னி ஃபெயிலியர் கேஸ்.. இரண்டு மாசமா ட்ரீட்மண்ட் எடுத்துக்கிறாங்க. மத்தபடி எனக்கு எதுவும் தெரியாது சார். வைத்தியருக்குத்தான் தெரியும்.”
“கிட்னி போச்சா? நான்கூட இவன் ஆடுன ஆட்டத்துக்கு எய்ட்ஸ் வந்திருக்கும்னு நினைச்சேன்.” என சத்தமாகவே முனுமுனுக்க.. “என்ன சொல்றிங்க சார்?” என உடனிருந்தவள் அதிர.. “பொண்ணுங்க விசயத்துல அந்த அபிஷேக் ரொம்ப மோசம் மேம்.. அவனோட அம்மா முகத்துக்காகத்தான் உதவி பண்ண வந்தேன்.” என்றான் அப்பெண்ணை ஊன்றி பார்த்தபடி.
“சார் நான் கிளம்பறேன், இப்படி பேசிட்டிருக்கிறதை வைத்தியர் பார்த்தா என் வேலை காலியாகிடும். ரொம்ப கஷ்ட்டப்பட்டு இங்க வேலைக்கு சேர்ந்திருக்கேன்.” என கிளம்பப்பார்க்க.. “கொஞ்சம் நில்லுங்க மேம்.” என்றான் அவசரமாக.
“நைட் ஒன்பது மணிக்கு மேல வைத்தியர் வீட்டுக்கு போய்டுவார். ஆனா என்னோட சேர்த்து பதினாறு பேர் வேலை செய்யிறோம். அவங்கள்லாம் ஒத்துக்கமாட்டாங்க.” என்றாள் கவலையாக.
“பர்மிஷன் கேட்டாதான ஒத்துக்க மாட்டாங்க. உங்க ஒர்க்கர்ஸ் டின்னர் டைம் மட்டும் சொல்லுங்க, மத்ததை நான் பார்த்துக்கிறேன்.” என எங்கெங்கு கேமரா இருக்கிறது? எதை உண்டால் அபிஷேக் உயிருக்கு ஆபத்தாகிடும் என்பன போன்ற தகவல்களை கேட்டறிந்து..
பத்தாயிரம் ரூபாயை கொடுத்தவன், “ரொம்ப தேங்க்ஸ் மேம்.. இந்த நன்றியை என் வாழ்நாள் வரை மறக்கமாட்டேன்.” என்க.. தீபாவின் முகம் கலவரம் கொள்ள.. “கவலைப்படாதிங்க.. உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது.” என்றான் நம்பிக்கையாக.
தனது இரண்டு மாத சம்பளத்தை ஒட்டுமொத்தமாய் பார்த்த தீபாவும் நன்றி சொல்லி கிளம்பிட, ரஞ்சித் வருகைக்காக காத்திருந்தான்.
ஒரு மணிநேரமாகியும் ரஞ்சித் வரவில்லையாதலால் யோசனை வந்தவனாக கிளம்பினான். அரை மணி நேர பயணத்திற்கு பிறகு மதுக்கடைக்கு வந்தவன், இரண்டு மது பாட்டில்களை வாங்கி சர்ட்டினுள் பத்திரப்படுத்தி, மதிய உணவு உண்டு, மீண்டும் அவ்விடம் வர ஒன்றரை மணி நேரமானது.
இனி அவனிற்கு அழைக்கக்கூடாது, எப்படியும் தன் வருகை அவனிற்கு சந்தேகத்தை வரவழைத்திருக்கும். நிச்சயம் தன்னை காண வருவான், அல்லது போனில் அழைப்பான் என காத்திருக்கலானான்.
இரவு எட்டரை மணியாகியும் ரஞ்சித் வரவில்லை. ஒன்பது மணிக்கு வைத்தியர் சென்றிடுவார் என தீபா சொன்னதால் மேலும் அரைமணி நேரம் பொறுமை காத்திருந்தான்.
ஒன்பது மணிபோல் அபிஷேக் பகுதியிலிருப்பர்கள் உணவுண்ண சென்றிட, தீபாவின் உதவியோடு மீதமிருந்த இரண்டு பேருக்கு தெரியாமல் ஒன்பதரை மணிபோல் அபிஷேக் அறையினுள் நுழைந்தான்.
நீண்ட மர பெஞ்சில் ரஞ்சித் உறங்கிக்கொண்டிருக்க, அங்கே கொடியில் இருந்த பெல்ட்டை எடுத்து ரஞ்சித்தின் இரு கைகளையும் கட்டிக்கொண்டிருக்க, சட்டென கண்விழித்த ரஞ்சித்.. “ஏய்.. யார்டா நீ?” என திமிற..
“உன் மேல கொலை வெறியில இருக்கேன், என்னோட போட்டி போடுறியா?” என மூர்க்கமாய் ரஞ்சித்தின் வயிற்றை அழுத்தி, தன் பணியினை செய்து முடித்தான்.