துபாய் மாநகரம் அந்த இரவில் விதவிதமான விளக்குகள் வீசும் ஒளிவெள்ளத்தில் ஜொலித்துக்கொண்டிருந்தது.
துபாய் டூட்டி பிரி டென்னில் ஸ்டேடியத்தில் கூடியிருந்த ரசிகர்கள் மீது கண்ணை பறிக்கும் கலர் கலர் வர்ணங்களில் ஒளிக்கற்றைகளை வாரி இறைத்துக்கொண்டு இருந்தது.
அது மாபெரும் இசை நிகழ்ச்சி. தென்னிந்திய இசைக்கலைஞர்கள் ஒன்றுகூடி சிறப்பிக்கும் மகாசங்கம திருவிழா.
ஆரம்பித்ததில் இருந்து இன்னும் சற்றும் சலிக்காமல் அடுத்தடுத்த பாடகர்கள் வந்து ரசிகர்களை இசை வெள்ளத்தில் மூழ்கடித்துக்கொண்டு தான் இருந்தார்கள்.
அவன் வந்து மைக்கை கையில் எடுத்ததுமே விசில் சத்தமும், அனைவரின் ஆட்டமும், பறக்கும் முத்தங்களும் என அவனின் விழிகளை நிறைத்தது.
அத்தனை அன்புகளையும் அமரிக்கையான புன்னகையுடன் ஏற்றுக்கொண்டவனின் எதிரொலி சிறிய தலையசைப்பு மட்டுமே.
“ஒன் செக்…” என மைக்கை இதழருகே கொண்டு செல்ல அதன் மேல் அவனின் கற்றை மீசை உறவாடியது.
“அதி…” என்ற ஆக்ரோஷமான வெறித்தன ரசிகர்களின் ஆர்ப்பாட்டத்தை கண்டு களித்தவன் இரு கைகளை விரித்து தன் தோளை அசைத்தான்.
இப்போது அவனின் உடல்மொழியும் பாடல் பாடுவதற்கு இசைவாய் சேர்ந்து வரவும் கூட்டத்தில் படிப்படியாய் சத்தம் குறைந்து எங்கும் அமைதி.
சிறு புன்னகையுடன் இசையை இசையோடு மொழியை கலந்து இயக்க ஆரம்பித்தான் தனது குரலில்.
அவன் அதிரன் தேவராஜ். பெரும்பாடகன். பாடல்களின் காதலன். இப்போது சிறந்த நடிகனும் ஆவான்.
புகழ்பெற்ற இசை இயக்குனர் தேவராஜின் மகனாக சிறு வயதில் பாடல்களை பாட ஆரம்பித்தவனின் வாலிபம் திரைப்பட இயக்குனர்களின் பார்வையை கவர அலட்டிக்கொள்ளாமல் அதையும் கற்று தேர்ந்து சிறக்க, திறன்பட நடித்தான்.
எப்போதும் அவன் முகத்தில் படர்ந்திருக்கும் மென்மையும், புன்னகையுமே அவனுக்கென்ற தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருந்தது.
போதையூட்டும் அவனின் குரலுக்கு அடிமையாய் மாறியிருந்தார்கள் அவனின் தீவிர ரசிகர்கள்.
அந்த பாடகனின் ஆஸ்தான குரு பிரபல பின்னணி பாடகரான திரு. எஸ்.பி.பி அவர்கள். கடவுள் என்று சொன்னாலும் மிகையாகாது.
இப்போதும் அவரின் பாடலை தான் பாடிக்கொண்டிருந்தான் மேடையில். கொஞ்சி கொஞ்சி அலைகளோட என்ற பாடல் மூலம் இசையென்னும் அமிர்த அலையில் அவனின் ரசிகர்களை தனது வசீகரிக்கும் குரலால் மீளவிடாமல் கட்டி போட்டிருந்தான்.
பாடலை பாடி முடித்ததும் அவன் கையசைக்க அதன் பின்னர் கேட்டதெல்லாம் ஆர்ப்பரிக்கும் ஆழியலையென எழுந்த கரகோஷ சத்தம் மட்டுமே.
அத்தனையும் ஏற்று தன் இதயப்பகுதியில் கை வைத்து லேசாய் சிரம் தாழ்ந்து அவர்களின் பாராட்டுதல்களை ஏற்றுக்கொண்டு கையசைத்துவிட்டு சென்றான்.
அன்று நள்ளிரவிற்கு மேல் இசை நிகழ்ச்சி முடிந்ததும் தானிருக்கும் ஹோட்டலுக்கு வந்தவனுக்கு ஓய்வெடுக்க நேரம் குறைவாக இருந்தது.
அறைக்குள் வந்தவன் குளித்து உடைமாற்றி சற்றே நிதானமாகிய பின்னர் சூடாக குடிப்பதற்கு க்ரீன் டீ ஆடர் செய்துவிட்டு,
“ஹர்ஷத்…” என்று அழைக்கவுமே முன்னறையில் இருந்த ஹர்ஷத் கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான்.
“நாளைய ப்ரோக்ராம் என்ன?…” என்று கேட்டுக்கொண்டே அங்கிருந்த படுக்கையில் விழுந்திருந்தான் அதிரன்.
“நாளைக்கு மார்னிங் பதினோரு மணிக்கு மிராக்கில் கார்டன்ல போட்டோ ஷூட் இருக்கு ஸார். அங்க வச்சு ஒரு சாங் ஷூட்டிங் இருக்குது. அடுத்தநாள் ஷிப்ல நெக்ஸ்ட் ஷூட்டிங். நாம ஷிப்ல தான் ரெண்டு நாள் ஸ்டே பண்ண போறோம். பர்மிஷன் ப்ராசஸ் எல்லாம் ஓவர்…”
“ஷிப்ல எத்தனை நாள் சொன்ன?…”
“ரெண்டு நாள் ஸார்…”
“ஓகே, பட் ஷெட்யூல் பக்காவா இருக்கனும்…”
“சூர் ஸார்…”
“இந்தியாவுக்கு என்னைக்கு ப்ளைட்…”
“நாம ஷிப் விட்டு மூவ் ஆனதும் இங்க அன்னைக்கு நைட் ஐலாண்ட் ஹோட்டல்ல பார்ட்டி. நெக்ஸ்ட் டே மார்னிங் ப்ளைட்…”
“பார்ட்டி?…” என்ற கேள்வியுடன் ஹர்ஷித்தை பார்க்க,
“ஸாரி ஸார். இது இங்க வந்து பிக்ஸ் பண்ணினாங்க. நாளைக்கு உங்களுக்கு சொல்லிடலாம்னு டிஸைட் பண்ணிருக்காங்க…”
“ஓஹ்…” என்றவன்,
“ஷிப்ல இருந்து மூவ் ஆனதும் அன்னைக்கே டிக்கெட் புக் பண்ணிடு…”
“ஸார்…” ஹர்ஷித் இழுத்தான்.
“வாட்?…”
“டைரக்டர்…”
“லுக் ஹர்ஷித், இங்க நான் வரதுக்கு முன்னாடி என்னென்ன ப்ரோக்ராமோ அதுபடிதான் நான் இருக்க முடியும். திடீர்ன்னு இவங்க பார்ட்டி அரேஞ்ச் பண்ணினா அதுக்கெல்லாம் நான் வளைஞ்சு போக முடியாது…” அழுத்தமான குரலில்.
அதிரன் எப்போதும் அதிர்ந்தோ, இல்லை அதட்டி, கட்டளையாகவோ கூட பேசி பார்த்ததில்லை யாரும்.
ஆனால் வார்த்தையில் தரும் அழுத்தத்திலேயே யாரும் மீறமுடியாத வகையில் எல்லாம் அடங்கி இருக்கும்.
அதற்கு மேல் அதிரனை வற்புறுத்தவோ, மீண்டும் அதை பற்றி பேச்செடுக்கவோ கூட முடியாது.
ஹர்ஷத் மௌனமாகிவிட டீ வந்ததும் குடித்துவிட்டு டைம் செட் செய்து கண்ணை மூடிக்கொண்டான் அதிரன்.
“நீயும் ரெஸ்ட் எடு மேன்…” என்று கவிழ்ந்து படுத்துக்கொண்டான்.
ஹர்ஷத் இனி எங்கே உறங்க? இனி அந்த டைரக்டர் ஹர்ஷித்தை தான் போட்டு பிராண்டுவான் என்பதால் உறக்கம் வராமல் படுத்திருந்தான்.
விடியற்காலையே எழுந்துவிட்ட அதிரன் தன்னுடைய உடற்பயிற்சிகளை முடித்துக்கொண்டு கிளம்பி கீழே வர உணவுண்ணும் இடத்தில் அவர்களின் படக்குழுவினரும் இருந்தார்கள்.
அதிரன் வரவும் அனைவரின் பார்வையும் அவனை மொய்க்க அனைவரிடமும் வழக்கமான புன்னகையை பரிசளித்தவன் தனக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு சாப்பிட அமர்ந்துவிட்டான் தனி மேஜையில்.
“ஹர்ஷத்…”
“ஸார்…” என்றதும்,
“உன்னை சாப்பிட கூட நான் தான் சொல்லனுமா மேன்?…” என அதிரன் கேட்க,
“நோ ஸார். நான் எடுத்துக்கறேன்…” என்று தனக்கு எடுத்து வந்து அதிரனருகே அமர்ந்துகொண்டான்.
தனியே சென்றாலும் அதிரனின் கண்டனத்திற்குள்ளாக வேண்டியதாகுமே என அமர்ந்துகொண்டான்.
அதிரன் உணவு மேஜைக்கு வந்த டைரக்டர் உமேஷ் அவனுக்கு காலை வணக்கத்தை சொல்லிவிட்டு தானும் அமர்ந்தார்.
“ப்ரேக்பாஸ்ட் உமேஷ்?…” அதிரன் புன்னகையுடன் கேட்க,
“முடிச்சுட்டேன். கொஞ்சம் முன்னாடிதான் அதி…” என்றான்.
“இன்னைக்கு ஷூட்டிங் லொகேஷன் என்ன உமேஷ்?…” என்றான் அதிரன்.
“நான் ஹர்ஷத்கிட்ட சொல்லிட்டேனே?…” உமேஷ் சொல்ல,
“இங்க நடிக்கிறது நான்னு தான் நான் நினைச்சிட்டு இருந்தேன்…” சற்றே கேலியுடன் சொல்லிய அதிரனின் முகத்தில் இலகுவான புன்னகை மட்டுமே.
உமேஷிற்கு அத்தனை கடுப்பாக இருந்தது. வளர்ந்து வரும் இயக்குனர் அவன். இரண்டு ஓரளவு வெற்றிப்படமாக கொடுத்திருந்தவன் மூன்றாவது படமோ தோல்வி. இப்போது நான்காவது படத்தை இயக்கினான்.
அவனின் இயக்கத்தில் நம்பிக்கை வைத்து, கதையும் நன்றாக இருந்ததனால் அதிரனை அதில் நடிக்க வைக்க முடிந்தது அதன் தயாரிப்பாளரால்.
சற்று ஈகோ குணமான உமேஷிற்கு தொட்டதற்கெல்லாம் அதிரனிடம் சொல்லவேண்டிய இந்த கட்டாயத்தில் கடுப்புகள் தான்.
சிரித்துக்கொண்டே தன்னுடைய கேள்விகளையும், மறுப்புகளையும் அழுத்தமாய் தடம் பதிக்கும் அவனின் மேல் தீராத புகைச்சல்.
இருவரும் திறமைசாலிகள். ஆனால் குணம் ஒத்துபோவதில்லை. தான் படத்தின் இயக்குனர் என்பதில் உமேஷ் ஒருபக்கம் இழுக்க, அதிரன் பெரிதாய் எந்த பாவனையும் காண்பிக்கமாட்டான்.
புன்னகையும், மௌனமும் தான் அவன் மறுப்பு. வலிக்காததை போல வார்த்தைகள். ஆனால் அதை தாண்டி நெருங்கவிடமாட்டான் அதிரன்.
“ஹர்ஷத் சொல்லலையா நீங்க?…” என்று அவனிடம் உமேஷ் கேட்க,
“கேள்வி கேட்டது நான் உமேஷ். சொல்ல விருப்பம் இல்லைன்னா நோ இஷூஸ்…” என்று சிறுநகையுடன் சொல்லிவிட்டு டிஷ்யூவால் கையை துடைத்துக்கொண்டு எழுந்துவிட்டான் அதிரன்.
உமேஷின் முகம் வெளுத்துவிட்டது. அதே நேரம் ஆத்திரமாய் வந்தது அதிரன் மேல்.
எத்தனை சிரமத்தில் இங்கே வந்து ஷூட்டிங் ஏற்பாடுகள் செய்து அதிக பொருட்செலவில் ஒரு கப்பலை இரு நாட்களுக்கு முன்பதிவு செய்து என செலவுகள் கோடிகளில் இருக்க அதிரன் எழுந்துகொண்டதே என்னவென்று விளக்கியது.
“பேசலாம் அதிரன். ப்ளீஸ்…” என்றான் உமேஷ் தானே இறங்கி வந்து.
“நான் ஹர்ஷத்கிட்ட கேட்டுப்பேன். நீங்க உங்களோட நெக்ஸ்ட் மூவ் என்னன்னு பாருங்க…” அழகான புன்னகை கூட கருவறுக்குமோ?
இங்கே உமேஷின் எதிர்காலத்தையே அறுப்பதை போலிருந்தது. முன்பு இயக்கிய கதைகள் பி சென்டர், ஸி சென்டரில் ஓடியிருந்தாலும் அவன் எதிர்பார்த்த வெற்றி இல்லை.