அவனை தொடர்ந்துகொண்டே போட்டோவும், வீடியோவும் எடுத்தபடி ஊடக மக்கள் துரத்த வேகமாய் வந்து காரில் மேகாவை கிடத்தி அமர்ந்துகொண்டான்.
நினைக்கவே இல்லை இப்படி ஒரு சூழ்நிலை நிகழும் என்று. மனது கனத்து போனது.
“ஹர்ஷத் டிஷ்யூ…” என்று கேட்க அவன் எடுத்து நீட்ட நீட்ட குருதி கசிவு நிற்கவில்லை.
“ஹர்ஷத் மேகா அப்பாவுக்கு கால் பண்ணி இன்பார்ம் பண்ணு. அவங்களை ஹாஸ்பிட்டல் வர சொல்லு…” என்று சொல்ல எல்லாம் மேகா கவனித்துக்கொண்டே தான் வந்தாள்.
உடலில் வலியை விட மனதின் வலி பெரிதாய் விழிகளில் பிரதிபலிக்க அவனை பார்த்தபடி உதட்டை கடித்தபடி வலியை அடக்கிக்கொண்டு கண்ணீர் விட,
“அழாத மேகா…” என்று மட்டுமே சொல்ல முடிந்தது அதிரனால்.
அவளின் கண்ணீருக்கு தடை சொல்லியவனின் கண்ணிலிருந்த நீர் துளி அவளின் விழிகளுக்குள் விழ அதனை உள்வாங்கி அழுத்தமாய் மூடி திறந்தாள் மேகா.
ஹாஸ்பிட்டல் செல்லும் வரை அழுதவள் அவனிடம் ஒருவார்த்தையும் பேசவில்லை.
இனி பேச என்ன இருக்கிறது என்று நினைத்தவள் அவனின் தவிப்பையும் உணர்வுகளையும் பார்த்தபடி வந்தவள் மனதில் தனது குடும்பம் மட்டுமே நிலையாய் நின்றது.
மருத்துவமனைக்குள் வரவும் கீழே இறங்க தயாராய் இருந்தார்கள் செவிலியர்கள்.
ஏற்கனவே ஹர்ஷத் போன் செய்து சொல்லியிருக்க அவர்களும் வரும் முன் காத்திருந்தனர்.
எல்லாம் கவனித்தபடியே தான் இருந்தாள் மேகா. அவள் என்ன நினைக்கிறாள் என ஓரளவு அனுமானித்துவிட்டான் அவளின் இதழோர இகழ்ச்சி புன்னகையில்.
அதை எல்லாம் நினைக்கும் நேரமற்று முதலில் அவளின் சிகிச்சையே முதற்கண்ணாக இருக்க உள்ளே சென்றான்.
மேகாவிற்கு அறை ஒதுக்கப்பட அங்கே அவளுக்கு முதலுதவியும், காயங்களுக்கு மருந்தும் போடப்பட்டு கைக்கும், தலைக்கும் கட்டு போடப்பட்டது.
அத்தனையும் கை கட்டியபடி அங்கேயே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தான் அதிரன்.
சத்தமில்லாத அழுகை. வெறும் கண்ணீர் மட்டும். முகத்தில் எந்த சுளிப்போ, வலித்ததற்க்கான காண்பிப்போ இல்லை.
அப்படி ஒரு உணர்வற்ற தன்மையில் அவளை கொஞ்சமும் நினைக்கவில்லை அதிரன்.
மனதிற்குள் ஏதேதோ உணர்வுகள் அலைமோத அவளை பயத்துடன், ஆம், பயமே மிதமிஞ்சி இருந்தது எதையோ வலிக்க கூற போகிறாள் என்று.
காயங்களுக்கு மருந்திட்டு அவள் சோர்வுடன் இருக்க ஒரு செலைன் ஏற்றிவிட்டு சென்றார்கள். ராஜவைத்தியம் தான். ஆனால் ஏற்புடையதில்லையே அவளுக்கு.
“ஸார்…” ஹர்ஷத்தின் அழைப்பில் அதிரன் திரும்ப,
“ப்ரெஸ் பீப்பிள் வெளில…”
“ஒருத்தரும் இங்க வர கூடாது. மேகா ஃபேமிலியை சேஃபா கூட்டிட்டு வா…” என்று சொன்னான்.
“ஓகே ஸார்…” என்று ஹர்ஷத் செல்லவும் அறைக்குள் அதிரனும், மேகாவும் மட்டும்.
அவ்வளவு நேரம் நின்றுகொண்டு இருந்தவன் அங்கிருந்த சேரை நகர்த்தி அவளின் முகத்திற்கு நேர கொண்டு வந்து போட்டு அமர்ந்தான்.
“பேசு மேகா…” என அழைக்க அவன் பக்கம் தலையை திருப்பினாள் அவள்.
“என்னை என்னவோ சொல்லனும்னு நினைக்கிற தானே? பேசிடு…” என்று சொன்னாலும் அவன் குரல் உடைந்துவிடுவேன் என்பதை போல தழுதழுத்து இருந்தது.
அவளின் வார்த்தைகளுக்கு தன்னை முழுவதுமாக தயார் செய்துகொண்டான் அதிரன்.
“உங்களுக்கு என்னை பிடிக்குமா?…” அவள் கேட்டதும் எதையோ நினைத்திருந்தவனுக்கு அப்படி ஒரு இதம்.
அதுவரை முகத்தில் இல்லாத அந்த புன்னகை அதிரனின் இதழ்களில் குடியேற மென்மையாய் பார்த்தான்.
“உனக்கு தெரியுதா மேகா?…” என்றவனுக்கு எப்படி தன் மனதை வெளிப்படுத்த என்று தெரியவில்லை.
அத்தனை படங்களில் அவன் நடிக்காத காதல் காட்சிகளே இல்லை. பேசாத காதல் வசனங்கள் இல்லை.
ஆனால் அவனின் ஒட்டுமொத்த காதலுக்கும் சொந்தம்கொள்ள போகும் அவளின் முன் வார்த்தைகளை தேடி திரட்ட முயன்றான்.
முயற்சி முயற்சியாக மட்டுமே இருந்தது. அவளின் அந்த கேள்வியே அவனை மேகாவின் மேகத்தில் பறக்க செய்ய ஆழ்ந்து அனுபவித்தவன் கண்களே அவனின் நேசத்தை காட்டியது.
“ஆனா எனக்கு பிடிக்கலை. உங்களை சுத்தமா பிடிக்கவே இல்லை….” என்ற வார்த்தையால் அவனை குற்றுயிராக்கினாள்.
அப்பட்டமான வேதனையை அதிரனின் முகம் வெளிப்படுத்த மேகாவினுள் அதிர்வை கொண்டுவந்தது அவனின் அந்த முகம்.
அதை உணரும் நிலையில் தான் அவள் இல்லை. அவனை தன்னிலிருந்து விலக்கி வைக்க முழுமூச்சில் வீறுகொண்டு இருந்தாள்.
“உங்க மேல ஒரு மரியாதை, அபிமானம் இருந்துச்சு. ஆனா இப்ப எதுவும் இல்லை. எத்தனையோ தடவை நினைச்சிருக்கேன் உங்க வாய்ஸ்க்காக உங்களை பார்க்கனும்னு…”
மேகாவின் கூற்றில் அதிரன் முகம் வாடியதே தவிர அவளுக்கு இதுவாவது பிடித்ததே என்று புன்னகை வாடவில்லை.
தன்னிடம் தன் மீதான அவள் விருப்பு வெறுப்புகளை அவள் பகிர்ந்துகொள்வதாகவே எண்ணினான்.
“உங்களை ஒருதடவை நேர்ல மீட் பண்ணினா ஹலோ சொல்லனும், உங்க பாட்டுன்னா எனக்கு பிடிக்கும்ன்னு சொல்லனும்னு, உங்ககிட்ட ஒரு ஆட்டோக்ராப் வாங்கி என்கிட்டே ரெண்டு வரி பாட சொல்லனும்னு நினைச்சிருக்கேன்…”
“ஆனா நீங்க என்னை பார்த்ததால இத்தனை தூரம் என் குடும்பமும் எங்க மரியாதையும் சின்னாபின்னமாகும்ன்னு தெரிஞ்சிருந்தா உங்களை பத்தி நினைக்காமலே போயிருந்திருப்பேன்…”
“இன்னைக்கு நடந்த ஆக்ஸிடென்ட் வேற மாதிரி யோசிச்சு பாருங்களேன். இதுவே என்னை மாதிரி சாமானியன் ஒருத்தன் என்னை துரத்தினா தர்ம அடி விழுந்திருக்கும். எனக்கு மக்கள் பாதுகாப்பு கிடைச்சிருக்கும். நானும் ஈசியா அந்த இடத்தை விட்டு போயிருப்பேன்…”
“ஆனா எதுவும் இல்லை. உங்களை பிடிக்கும்ன்றதுக்காக என்னையும் சேர்த்து சம்பந்தபடுத்தி பேசறாங்க. உங்க லைம்லைட்ல என் குடும்பத்தை கொண்டுவராங்க. எங்களோட தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கிறாங்க…”
“எங்களுக்கு வேண்டாம் இந்த பரபரப்பு, பதட்டம், யாரும் பார்த்திடுவாங்களோன்னு பாதுகாப்போட சுத்தி வர இந்த வாழ்க்கை எதுவும் வேண்டாம்…”
“இந்த வந்ததி வெறும் வதந்தியா மட்டுமே போகட்டும். எப்பவும் நிஜமாக வேண்டாம். அதை நான் விரும்பவும் இல்லை…”
“இப்பவே எல்லாம் முடிஞ்சது. இந்த நிமிஷம் என்னவெல்லாம் பரவியிருக்குமோ? என் குடும்பம்?…” என்றவளுக்கு கண்ணீர் பொங்க அமைதியாக அவள் பேசுவதை கேட்டபடி அமர்ந்திருந்தான் அதிரன்.
அவள் சொல்லியவை எதுவும் மறுப்பதற்கில்லை. அதற்காக தான் அவளை இழப்பதா?
ஒரு பெருமூச்சுடன் கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தவன் அந்த இருக்கையில் மெல்ல தாளமிட்டான் தன்னை சமன் செய்வதற்கென்றே.
தன்னுடைய பேச்சிற்கு அவனிடத்தில் பெரிதாய் பிரதிபலிப்பை எதிர்பார்த்திருக்க அவனானால் தாளமிடுகிறானே என அவனை உறுத்து விழித்தாள்.
“நான் பேசறேன், உங்களுக்கோ கொஞ்சமும் கோவம் வரலை?…” என ஆவேசத்துடன் கேட்க,
“சில் மேகா. உன்கிட்ட எனக்கு என்ன கோவம்?…” என்றான் மென்னகையுடன்.
“நான் சொல்றதை கொஞ்சமாவது யோசிக்கறீங்களா?…” என அவள் பதட்டத்துடன் கேட்க தலையசைத்தான் ஆமாம் என்று.
ஆனால் மேகாவிற்கு தான் அவனின் இந்த இலகுத்தன்மையும், புன்னகையும் குளிரை பரப்பியது.
“எங்கப்பாம்மா எங்க? எப்ப வருவாங்க?…” என வேகமாக கேட்க,
“வந்திட்டே இருக்காங்க? ஏன் என் கூட இருக்கறது உனக்கு பயமா இருக்கா?…” என மெலிதாய் கேட்க கேட்க எச்சிலை கூட்டி விழுங்கினாள்.
அதற்கு மேல் அமர்ந்திருக்க முடியாமல் அங்கிருந்து எழுந்தவன் அந்த அறைக்குள்ளேயே இங்குமங்கும் நடந்தான்.
வெளியே அவளின் பார்வைக்கு அவன் முகம் நிர்மலமாக, வெகு சாதாரணமாக தெரிந்தது.
ஆனால் உள்ளுக்குள் சுக்கலாய் சிதறி போயிருந்தவனின் உள்ளம் அவளின் அக கண்களுக்கு புலப்படவில்லை.
‘என்ன இத்தனை யோசிக்கிறான்?’ பயம் பயம் எல்லாம் அவளை வேறு என்னென்னவோ யோசிக்க வைத்தது.
‘இருக்கும் இடம் அவனின் செல்வாக்கை கொண்டது. இந்த நிமிடம் தன்னை இங்கிருந்து எப்படி வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் அழைத்து செல்லலாம் இவன்’ என நினைக்கையில் குடும்பத்தை நினைத்து கண்ணீர் பெருக்கெடுத்தது.
அவளின் இந்த பரிதவிப்பை கதவில் சாய்ந்தபடி அவளின் முகத்தையே பார்த்து நின்றவன் மீண்டும் அவளருகே வந்தான்.
“உன்னை என்னடா பண்ணிடுவேன் மேகா? என்னால உன்னை ஹர்ட் பண்ண முடியாது. நீ ஏதேதோ யோசிக்காம இரு…”
“ம்ஹூம், இப்பவே நான் போகனும். உங்களை நம்ப முடியாது. நம்பவும் மாட்டேன்…” என்றவள் கையில் இருந்த ஊசியை பறித்து எடுக்க முயல வந்து பற்றிக்கொண்டான் இரு கைகளையும்.