“ஏன் என்னை கஷ்டப்படுத்தறீங்க? ஏற்கனவே ஏன் வாழறோம்ன்னு இருக்கறேன். என் குடும்பத்துக்காக தான் இருக்கேன். என்னை கொன்னுடாதீங்க….” என்றவள் இறைஞ்சுதலாய் கேட்க அவளின் கைகளை விட்டான் அதிரன்.
இன்னும் ஆழ்ந்த மயக்கத்திற்கு அவள் செல்லவில்லை. ஆனால் அவன் மீதான அச்சம் வார்த்தைகளாக வர,
“என்னை விலக்கி வைக்க உன் உயிரை தான் தடுப்பா நிறுத்தனும்ன்னு அவசியமில்லை மேகா. உன் கண்ணீர் போதும். நானே விலகிருவேன்…” என்றவன்,
“உன்னை நெருங்க வேண்டாம்ன்னு நீ நினைச்சா நிச்சயம் உன் வார்த்தைக்கு நான் மதிப்பு தருவேன் மேகா. நீ சொன்னதால உன்னை நாலு மாசம் பார்க்காம, பேசாம இருந்தேன்…” என்றதும் மேகா கண் சிமிட்டி அவன் பேச்சை கேட்டு கிரகித்தாள்.
“இப்பவும் இன்னொரு தடவை நான் விலகி நிக்கறேன். என் ஆசைகளை இந்த இடத்திலையே உன்னோட சேர்த்துட்டு நான் விலகி நிக்கறேன். கண்டிப்பா நீயா பேசற வரைக்கும் உன்னை எந்தவிதத்துலையும் நான் தொந்தரவு செய்ய மாட்டேன்…” என்று சொல்ல அவள் விழிகள் விரிந்தது.
“ஆனா ஒரு கண்டிஷன், ஒரே ஒரு கண்டிஷன். திரும்ப எப்பவும் எங்கயும் எத்தேர்ச்சையா கூட என் கண்ணுல நீ பட்டுட கூடாது. அதுக்கப்பறம் என்னை தாண்டி நீ எங்கயும் போக முடியாது. காட் இட்…” என்று சொல்ல மேகாவால் நம்ப முடியவில்லை.
“ஸ்மைல் ப்ளீஸ் மை கேர்ள்…” என்றான் புன்னகையுடன்.
அதிரனின் இதழ்கள் புன்னகைத்தது. ஆனால் விழிகள் கசிந்திருந்தது. மேகாவின் முகத்திலிருந்து அவன் பார்வை எங்கும் அசையவில்லை.
“உன்னோட சிரிப்பை கூட எனக்காக தர முடியாதா மேகா?…” என்று அவளை நோக்கி கை நீட்டியவனுக்கு அதனை தந்துவிடும் எண்ணத்திற்குள் அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டிருந்தாள்.
உயிரை உருக்கும் தன் வலியை அவளுள் கடத்தியிருந்தானோ? மேகாவிற்கு அந்த நொடியை கடந்துவர கடினமாக இருந்தது.
பெரும் அலையொன்று அவளை புரட்டி சென்றதை போல் பலவீனம் மேகாவை அழுத்த கண்விழிக்க போராடினாள்.
அவளின் ஆழ்ந்த உறக்கத்திலும் புருவங்கள் சுருங்கி அவள் விழிக்க முயல்வது அதிரனுக்கு தெரிய அவளின் காதருகே குனிந்து அமர்ந்தான்.
“என்னை பாட சொல்லி கேட்கனும்னு நினைச்சேன்னு சொன்னியே? உன் ஆசையை நிறைவேத்தாம எப்படி உன்னை விட்டு போவேன் மேகா?…”
மேகாவிற்கு அவன் குரல் கேட்டது. கண்கள் மூடி உறக்கத்தில் இருந்தாலும் அவனின் குரலை மனது உள்வாங்கியது.
இப்போதும் புன்னகையுடன் பேசுகிறானோ என்பதை போல அவளின் மனக்கண்ணில் அதிரன் புன்னகைத்தான்.
காதுக்கருகே அவனின் மூச்சுக்காற்று வெப்பமாய் அவளை தீண்ட உணர்வுகள் அவனை சென்றுவிடும்படி கூச்சலிட்டது.
“வெகுசீக்கிரம் என்னை நீ தேடுவன்னு நான் நம்பறேன் மேகா. நீ தான் எனக்குன்னு நான் உணர்ந்து ரொம்ப நாளாச்சு. ஆனா புரியவைக்கிறதுக்குள்ள இத்தனை நடந்திருச்சு…”
“இதுக்கு என்னால எந்தவிதத்திலையும் நியாயம் செய்ய முடியாது. ஆனா நீ கேட்டதை செய்ய முடியும். விலகி போறேன். பார்க்கலாம். உன்னை என் கண்ணுல காட்டின அந்த விதி திரும்ப சேர்த்து வைக்குதான்னு…”
“பட் ஒன் திங். எந்த காலத்திலையும் எனக்கு நீ மட்டும் தான். அதை நீ நினைச்சாலும் மாத்த முடியாது. அது நீ என்னோட இருந்தாலும் சரி. இல்லைனாலும்னு சொல்லமாட்டேன்…” என்று லேசாய் அவன் சிரித்தான்.
மேகாவிற்குள் அவனின் குரல் உயிரோடு கலந்தது அவளின் எதிர்ப்புகளின் பலத்தை குறைக்க முயன்றது.
ஒரு குரலுக்கு இத்தனை சக்தியா? அவனிடம் அது இருந்தது. அதிரனின் பேச்சுக்கள் அவளுள் ஊடுருவ துவங்கி இருந்தது.
வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தான். அவனின் பேச்சுக்களை கேட்க முடியாதென மறுக்கும் நிலையில் அவள் இல்லை.
அவள் கேட்டதை போல பாடவும் செய்தவன் அவளின் கருவிழிகள் மூடிய இமைக்குள் பாடலுக்கேற்ப அங்குமிங்கும் சுழன்றது.
பாடி முடித்து அதிரன் எழுந்து நிற்க கதவை திறந்துகொண்டு பல்லவன், அமுதினியன், மலர், மோனிகா என குழந்தையுடன் வந்து சேர்ந்தனர்.
அதிரனின் மேல் பாயவிருந்த பல்லவனின் கையை இறுக்கமாய் பற்றிக்கொண்டார் அமுதன்.
அவரின் பார்வையில் அத்தனை வலியும், கேள்விகளும். வெகுவாய் ஓய்ந்து போயிருந்தார் அவர்.
பார்வை மகளிடம் திரும்ப அவர்களின் கோபமும் ஆதங்கமும் அதிரனுக்கு தெரிந்தது.
“அப்ப உன்னால எங்க குடும்பம் அனுபவிக்கிறதுக்கு?…” பல்லவன் கொதித்து போய் கேட்க,
“இன்பேக்ட் மீடியா இருக்குன்னு தெரியவும் நான் கிளம்பறதா இருந்தேன். ஆனா உங்க கால் வரவும் பதட்டத்துல மேகா வெளில வந்துட்டாங்க…” என்றான்.
அத்தனை இலகுவாய் அவன் மேகாவின் பெயர் சொல்லவும் அமுதனின் பார்வை அதிரனை ஆராய்ந்தது. அவரின் பார்வையில்,
“எனக்கு உங்க பொண்ணை பிடிச்சிருக்கு அமுதினியன் ஸார்…” என்று பளிச்சென அவன் சொல்லவும் இதை அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை.
“ஆனா என்னோட விருப்பத்தை சொல்ல கூடிய சூழ்நிலை முன்னாடியும் இல்லை, இப்பவும் இல்லை. மேகா படிப்பு முடியட்டும்ன்னு வெய்ட் பண்ணேன். பட் இனியும் சொல்லாம இருக்க முடியலை…”
“உன்னை…” என்று பல்லவன் மீண்டும் அதிரன் மேல் அடிப்பதை போல போக,
“என்னங்க?…” என்று மோனிகா பிடித்து நிறுத்தினாள்.
“இப்பவும் நீங்க எனக்கு தான் மேகாவை குடுக்கனும்னு நான் சொல்ல வரலை. உங்க விருப்பம் தான். மேகாவுக்கும் விருப்பம் இருக்கனுமே?…” என்றான் புன்னகையுடன்.
அதில் வலி, ஏமாற்றம், வேதனை, இயலாமை, ஏக்கம் என்று எத்தனை உணர்வுகள்.
அதிகாரம் காண்பிக்கவில்லை. அதட்டவில்லை. பிடிவாதமாய் நிற்கவில்லை. வீராவேசமாய் பேசவில்லை. தன்னுடைய பலத்தை சொல்லி காண்பிக்கவில்லை.
பல்லவன் அடிக்க பாய்ந்தபொழுதும் கூட அசராமல் சிறு முறுவலுடனே தான் எதிர்கொண்டான் அவனை.
“உங்க குடும்பம் இன்னைக்கு இந்தளவுக்கு கலங்கி நிற்க நான் தான் காரணம். ஆனா எதுவும் திட்டமிட்டு நடக்கலை. இப்படி ஒரு சூழ்நிலையில் உங்களை எல்லாம் குடும்பமா சந்திச்சு என் விருப்பத்தை சொல்லுவேன்னும் நான் நினைக்கலை…”
“மேகாவை பார்த்துக்கோங்க. நான் கிளம்பறேன்…” என்றவன் மோனிகாவை தாண்டி செல்லும் பொழுது அவளின் கையில் இருந்த குழந்தையை பார்த்தான்.
“ஒரு நிமிசாம் தூக்கிக்கலாமா?…” என அதிரன் கேட்க திகைத்தவள்,
“போ…” என்று மோனிகா சொல்லவும் குழந்தை அவனிடம் தாவியது.
“அஷ்வின் ஸ்வீட் நேம்…” என்று அள்ளி அணைத்தவன் குழந்தையின் இரு கன்னத்திலும் முத்தம் பதித்தான்.
குழந்தையின் பெயர் வரைக்கும் தெரிந்து வைத்திருக்கிறான் என்று அதிர்ச்சியுடன் மற்றவர்கள் பார்க்க,
“நாம சீக்கிரமே மீட் பண்ணுவோம் சேம்ப்….” என்று சொல்லி அவனின் கன்னத்தில் தட்டிவிட்டு அதிரன் கிளம்பிவிட அனைவரும் ஸ்தம்பித்த நிலை.
சந்திப்போம் என்றால்? என்ன சொல்ல வருகிறான் என யோசிக்காமல் இருக்க முடியவில்லை.
————————————————
ஆனால் இவர்களின் யோசனைகளை பற்றி எல்லாம் நினைக்காமல் மேகாவை மட்டுமே நினைவாய் கொண்டு வெகு தொலைவு சென்றிருந்தான் அதிரன்.
பாரீஸ். அதிரன் பாரீஸ் வந்து ஒரு மாதம் முடிந்திருந்தது. புது படமொன்று படப்பிடிப்பு அதிகபட்ச படக்காட்சிகள் வெளிநாட்டில் நடக்க பாரீஸில் முகாமிட்டிருந்தனர் பட குழுவினர்.
அவர்களுடன் வந்திருந்தவன் இப்போது அங்கிருக்கும் உயரமான கட்டிடத்தில் தன்னை தாண்டி செல்லும் மேகங்களில் பார்வையை பதித்திருந்தான்.
அவனுடைய எண்ணங்கள் மேகாவுடனான நினைவுகளில் இலக்கில்லாமல் பயணமாகியது.