“என்ன சொல்ற? அப்ப அவன் என்ன வேணா சொல்லலாமா? அவனால தான் இவ்வளவும்…”
“நான் சூழ்நிலைன்னு சொல்றேன். நீங்க அவரை காரணம் சொல்றீங்க. பொண்ணை பிடிச்சிருக்குன்னு சொல்றவனை எல்லாம் அடிக்கனும்னா உங்களையும் அதுல சேர்த்துக்கலாம்…” என்று சொல்லவிட மலர் பயந்து பார்த்தார்.
“என்னம்மா? நீங்க ரெண்டுபேரும்…”
“நாங்க சண்டை எல்லாம் போடலை அத்தை. இவருக்கு உண்மையை சொல்றேன்…” என்ற மோனிகா,
“என்ன ஒன்னு வரு விஷயம் ஊரே பார்க்க நடந்திருச்சு. பாதிப்பு நமக்கு தான். ஆனா அதிரனுக்கு எந்த பாதிப்பும் இல்லைன்னு நீங்களா முடிவு பண்ணுவீங்களா?…”
“அவன் எல்லாம் தெரிஞ்சும் கமுக்கமா இருந்திருக்கான். அவனுக்கு நீ சப்போர்ட் செய்வியா?..”
“இது கண்டிப்பா சப்போர்ட் இல்லை. அவர் யாரோ எனக்கு. ஆனா வேற எப்படி இருக்கனும்? இதுல அவர் ஒதுங்கி மட்டும் தான் இருக்க முடியும். அவரும் ஒருவிதத்துல சூழ்நிலையில அகப்பட்டிருக்கார். அது நமக்கு தேவையும் இல்ல….”
“மோனிகா…”
“இங்க பாருங்க, அவர் காரணம் காரணமில்லைன்றது வேற. ஆனா நீங்க மொத்தத்துக்கும் அவரை மட்டுமே சொல்லாதீங்க. நமக்கு அது அவசியமில்லாதது. முதல்ல வருவை பாப்போம். தேவை இல்லாம பேசி நமக்கு நாமளே டென்ஷன் வச்சுக்க வேண்டாம்…”
“பல்லவா விடுப்பா…” என்று அமுதன் சொல்லவும் அங்கேயே அமர்ந்துவிட்டான்.
செல்வம் அழைத்து விவரத்தை பல்லவனிடம் கேட்டுவிட்டு மறுநாள் வருவதாக சொல்லி வைத்தார்.
அழைப்புகள் வந்தவண்ணம் இருக்க வேறு யாரின் அழைப்பையும் எடுக்க வேண்டாம் என அமுதன் சொல்லிவிட்டார்.
அடித்து அடித்து ஓய்ந்தது தான் மிச்சம். எடுத்து யாருக்கும் பதில் சொல்லவில்லை.
குடும்பத்தினர் ஒருவகையில் அமைதியிழந்து இருக்க மேகா வேறுவிதத்தில் அமைதியிழந்து இருந்தாள்.
புன்னகையுடன் தன்னிடம் பேசியவனை கூட ஓரளவு அகத்திலிருந்து புறந்தள்ளியவளால் அவனின் கலங்கிய கண்ணீர் முகம் மனதை விட்டு அகலவே இல்லை.
“மேகா…” அவனின் அழைப்பு அவளை உருக்கி வதைத்தது.
மருத்துவமனையில் கண் விழித்த பொழுது வீட்டினர் மட்டுமே இருக்க அறையைவிட்டு கிளம்பிய பொது அவன் நின்ற, அமர்ந்த இடங்களை எல்லாம் அவள் விழிகள் தன் அனுமதியின்றி அலசியது அவனின் இருப்பை தேடி.
அவன் காலில் அடிபட்டிருந்ததே என்பது வரை அவனின் நினைவுகள் அவளில் கலந்துவிட்டிருந்தது.
‘தேடாதே, நினைக்காதே’ என எண்ண எண்ண எண்ணங்களின் வலிமை அவனிடமே கடைசியில் சென்று சேர கண்களை திறக்கவும் அஞ்சினாள். மூடவும் அஞ்சினாள்.
தனிமையில் அவன் குரல் மட்டுமே எதிரொலித்தது. அவள் விழி மூடியிருந்த நேரம் அவன் தன் காதில் கூறியவைகள் எல்லாம் மந்திரமென மீண்டும் மீண்டும் எழும்பி அவளை தள்ளாட வைத்தது.
“வரு…” மோனிகாவின் அழைப்பில் திரும்பி பார்த்தாள்.
“உன் ப்ரெண்ட்ஸ் வந்திருந்தாங்க. உன் பேக் நீ அங்கயே விட்டு வந்துட்டியாம். அதை குடுத்துட்டு போனாங்க…” என்று அங்கிருந்த மேஜையில் வைத்தவள்,
“ஏதாவது வேணுமா?…” என்றதற்கு இல்லை என்று தலையை அசைத்தாள்.
மோனிகாவிற்கு அது வித்தியாசமாக தெரிய மேகாவின் எதிரே வந்து கட்டிலில் அமர்ந்தாள்.
“என்னடா, என்ன யோசிக்கிற?…” என்று கேட்க அதற்கும் தலையசைப்பு தான்.
கண்ணில் நீர் பொங்க மோனிகாவையே பார்த்திருக்க அவளின் நிலையை என்னவென்று எடுப்பதென மோனிகாவிற்கு தெரியவில்லை.
“பேசு வரு…” என்று சொல்ல மறுப்பாய் தலையசைத்தவள் மோனிகாவின் மடியில் சாய்ந்து சத்தமின்றி அழ அழ மோனிகா உள்ளுக்குள் பயந்தாள்.
‘மேகாவை எனக்கு குடுங்க’ என்ற அதிரனின் முகம் தோன்ற அவன் விழிகளில் கண்ட அந்த வலி இப்போது மேகாவின் முகத்திலும்.
“கடவுளே…” நெஞ்சில் கை வைத்தபடி மோனிகா அதிர்ச்சியுடன் இருக்க மேகாவின் அழுகை குறைந்தபாடில்லை.
“வரு இங்க பாரு. எழுந்து உட்கார். அண்ணி சொல்றேன்ல…” என்று எழுப்பி அமர வைக்க விசும்பியபடி இருந்தாள்.
“பேசுடா…” என்று சொல்ல,
“அண்ணி…” என்றதற்கு மேல் வார்த்தை வரவில்லை.
“வரு அழாத. இங்க பாரு, உன் அண்ணன் வந்துடுவாரு. நீ இப்படி இருந்தா அவருக்கு அதிரன் மேல தான் இன்னும் கோவம் வரும்…” என்று சொல்ல அழுகையை அடக்க முயல்வது தெரிந்தது.
இதை எந்தவகையில் எடுத்துகொள்வதென்று திகைப்புடன் மோனிகா பார்க்க கண்ணை கைகளால் துடைத்த மேகா அடிபட்ட கை கன்னத்தில் பதியவும் வலியில் முகம் சுண்டினாள்.
“ஹேய் பார்த்துடா…” என அவளின் கையை பிடித்து ஊதிவிட அதுவும் அதிரனை தான் நியாபகப்படுத்தியது மேகாவிற்கு.
அடிபட்டு தியேட்டரில் இருந்து மருத்துவமனைக்கு காரில் செல்கையில் கையை பிடித்து காற்றை இழுத்து ஊதியபடி வந்தவனின் அந்த முகம்.
நெஞ்சை பிசைய ஓவென்று இன்னும் அழவேண்டும் உணர்வு. இருக்குமிடம், குடும்பம் எல்லாம் பார்த்து மனதை பூட்டினாள் மேகா.
“வரு…” தான் பிடித்திருந்த கையை பார்த்தபடி இருந்த அவளின் அசையாத தோற்றத்தை கண்டு இன்னும் கிலி பிடித்தது மோனிகாவை.
தான் நினைப்பது சரியானால் இன்னும் அவளே எதையும் உணராத நிலையில் இருக்கிறாள் என்று புரிந்துபோனது மோனிகாவிற்கு.
இரண்டு மூன்று நாளானால் நிச்சயம் தெளிந்துவிடுவாள் என நினைத்த மோனிகா அவளுடனே இருந்தாள்.
வீட்டினர் நடந்ததை பற்றி எதுவும் பேசவில்லை. எதையும் பார்க்காமல் வீட்டிற்குள்ளேயே அவர்களுக்குள் பேசியபடி நேரத்தை போக்கி தங்களை தேற்றிக்கொண்டனர்.
அதில் பெரும்பங்கு மோனிகாவையே சேரும். எதையும் யோசிக்கவிடாது ஏதாவது அவர்களை கவனித்து வேலை வாங்கிக்கொண்டு பிள்ளையை வைத்தும் திசை திருப்பினாள்.
“நீங்களா கடையை மூடிட்டு இல்லை கடையை இப்படி விட்டுட்டு எப்பயும் இருக்கமாட்டீங்க. இப்ப இதை யூஸ் பண்ணிக்கலாம். அதை நினைக்காதீங்க. சீக்கிரம் இதுவும் அடங்கிரும்…”
இப்படி பேசி பேசி குடும்பத்தை தேற்றி கொண்டுவந்தாள். பல்லவனின் கோபத்தை குறைத்து நிதர்சனத்தை அமைதியாக புரியவைக்க அவனும் ஓரளவு கோபத்தை குறைத்தான்.
அதிரனின் செய்தியோ, இல்லை அவன் சம்பந்தப்பட்டதோ, அவனின் முகமோ, குரலோ எதுவும் வீட்டிற்குள் வந்துவிட கூடாதென்று கவனமாக இருந்தார்கள்.
ஒருவாரம் கழித்து கடைக்கும் செல்ல, மற்றவர்களை எதிர்கொள்ள என ஓரளவு தயாராக இருந்தனர்.
ஆனால் மாற்றம் பெரும்பங்கு வந்ததென்னவோ மேகாவிடம் தான். முடிந்தளவு பேச்சுக்களை குறைத்தாள். குறைக்கவேண்டும் என இல்லை. ஆனால் அவளால் பேசமுடியவில்லை.
அவளின் மனநிலையை கருத்தில்கொண்டு வீட்டினரும் அவளை தொந்தரவு செய்யவில்லை. இந்தளவிற்கு தேறியதே போதும் என்றுவிட்டனர்.
அதுவே இன்னும் குடும்பத்தை பற்றிக்கொள்ள வைத்தது மேகாவை. எக்காலத்திலும் அவர்களை விட்டுக்கொடுக்கும் எண்ணமில்லை அவளுக்கு.
ஆனால் எந்த நேரமும் மொபைலை வைத்துக்கொண்டு ஹியர்போனை காதில் மாட்டியபடி தான் இருப்பாள் தனிமையில்.
மற்றவர்கள் பாடல் கேட்கிறாளோ என நினைத்து அவளை அவள் போக்கில் விட அவள் கேட்டது?