“எப்படி பிரதாப் மாதிரி பிராட் மைண்டடாவா? பிரதாப் மேலையே நம்பிக்கை இல்லைன்றேன். இப்ப நீங்க சொல்றதை கேட்டு கண்டிப்பா வருவாங்க. ஆனா ஏதாவது ஒரு சூழ்நிலையில வருவை இதை சொல்லி பேசமாட்டாங்கன்னு என்ன நிச்சயம்?…” என்றாள் மோனிகா.
“அப்ப என் பொண்ணை கல்யாணமே பண்ண வேணாம்ன்னு சொல்றியா? இல்ல அவனுக்கே கட்டி குடுக்க சொல்றியா?…” மலர் கொந்தளிக்க,
“சும்மா பேசனும்னு எதையாவது கேட்காதீங்க த்தை. இப்ப வேண்டாம்ன்னு சொல்றேன். எதையும் யோசிக்க வேண்டாம். அவ முதல்ல இதுல இருந்து வெளில வரட்டும். அவளுக்கு கொஞ்சம் டைம் குடுங்க…” என்று சொல்ல,
“மோனி, நீ சொல்றது தான் சரிம்மா…” என்றார் அமுதினியன்.
“இப்போதைக்கு இந்த பேச்சு வேண்டாம்…” என்று சொல்லிவிட்டார் மகனிடமும், மலரிடமும்.
“என்னங்க நீங்களும்?…” மலர் பேச,
“பேசாம இரு. அந்தம்மா அவங்க மகனுக்காக வரத்தான் செய்வாங்க. நம்ம சம்மதமில்லாம என்ன நடந்திரும்? அதுக்காக என் பொண்ணை பிடிச்சு தள்ளிவிட சொல்றியா நீ?…” என்றவர் பல்லவனை பார்க்க தலையசைத்தான் அவனும்.
“நீ எதை பத்தியும் நினைக்காதடா. உன் விருப்பமில்லாம எதுவும் நடக்காது. சரியா?…” என்று சொல்லவிட்டு எழுந்து சென்றதும் கதவை அடைத்துவிட்டு வந்து படுத்தவள் தனது மொபைலை எடுத்து காதில் ஹியர் போனை மாட்டிக்கொண்டாள்.
“மேகா…” அந்த குரலில் கண்ணை மூடியவளின் விழியோரம் நீர் கசிவு.
அன்று தியேட்டரில் இரண்டாம் முறை பல்லவன் பேசி முடித்ததும் போனை பேக்கினுள் போட அது தானே வாய்ஸ் ரெக்காடரை ஆன் செய்திருந்திருக்க தியேட்டர் விட்டு கிளம்பும் வரையான அத்தனையும் குரலாக பதிவாகியிருந்தது.
தோழிகள் வந்து குடுத்துவிட்டு சென்ற இரு நாட்கள் கழித்தே போனை எடுத்து சார்ஜில் போட்டவள் இதனை கவனிக்க, என்னவென்று கேட்டவள் இன்றுவரை கேட்டபடி இருக்கிறாள்.
எப்படி தனக்குள் வந்தான்? நிச்சயம் பதிலில்லை. ஆனால் அதிரனை, அவனின் காதலை அவளால் உணர முடிந்தது.
உணர மட்டுமே முடிந்தது. வேறு எதுவும் செய்ய முடியவில்லை. செய்வதாகவும் இல்லை.
அதிரன் மேகாவை விட்டு விலகிய அந்த நொடி அவளுள் காற்றென நுழைந்திருந்தான் சத்தமின்றி.
பிடிக்காது என்றிருந்தவளின் மூச்சாய் அவன் கலந்திருக்க அதனை தனக்குள்ளேயே மறைத்துக்கொண்டாள்.
மனது அவனை ஏதோ ஒருவகையில் தேடிக்கொண்டே இருக்க மீண்டும் மீண்டும் அவன் குரலை கேட்டாள்.
எந்தவிதத்திலும் இதனை வீட்டினர் ஏற்றுக்கொள்ள போவதில்லை. அதையும் தாண்டி வதந்தி வெறும் வதந்தியாக மட்டுமே இருந்துவிட்டு போகட்டும் என்று நினைத்தவள் மனது அவனுக்காக கூட திறப்பதாக இல்லை.
தன் வீட்டை தாண்டி எதுவும் பெரிதில்லை என்ற முடிவில் அத்தனை ஸ்திரமாக இருந்தாள்.
விடையில்லாத கேள்வியாக, வழியறியா நேசத்தை கொண்டு தன் குடும்பத்தினர் யாருக்கும் எந்தவித வருத்தமும் வர கூடாதென்று இருந்தாள்.
சொல்லிவிடலாம், எனக்கு பிடித்திருகிறது என. ஆனால் அதன் பின்னான நிகழ்வுகள்.
‘பார்த்தியா நான் அன்னைக்கே சொன்னேன்’ என்பதை போன்ற பேச்சுக்களை குடும்ப எதிர்கொள்ள நேரிடும்.
‘இல்லை இல்லைன்னு சொன்னீங்க. இப்ப என்ன சொல்றீங்க?’ என்பதை போன்றான பரிகாசங்களுக்கு தந்தையை, குடும்பத்தை ஆளாக்க கூடாதென்று நினைவு பலமாய் வேரூன்றி இருந்தது.
அதிரனுக்கு மேகாவின் பெயர் எப்படி ஆறுதலோ, அதே போல அவனின் மேகா என்னும் அழைப்பு அவளுக்கு ஆறுதலாகி போனது.
கண்களை மூடியபடியே அவனின் குரலை கேட்டு உறங்க முயன்றாள். அந்த குரல் அவளின் வலிகளை கூட்டியது.
கடந்துவந்த தங்களின் வேதனைகளை காட்டியது. வெளியேற முடியாமல் தவித்த நொடிகளின் கனங்களை மெய்பித்தது.
வேண்டும், இந்த குரல் அவனை வேண்டாம் என்பதற்கும் பெரும் காரணியாக அவளுக்கு வேண்டும்.
அதிலேயே உருகி, அதிலேயே கரைந்து, அதிலேயே எரிந்து என மேகா அதிரனின் குரலை கொண்டே அதிரன் வேண்டாம் என்பதில் திடமாக இருந்தாள்.
‘என்னை நீ பார்த்திருக்கவே வேண்டாம்’ என எப்போதும் தோன்றும் எண்ணங்கள் அப்போதும்.
விடியலில்லா இரவை போல இருளில் அனைத்தையும் தொலைத்தும் தேடாமல் தனித்திருந்தாள்.
—————————————————–
ஒரு வாரம் கடக்க சொல்லியபடி அதிரன் இந்தியா வந்து சேர்ந்தான். வீட்டிற்கு வர அன்று அவனின் சொந்தங்கள் எல்லாம் அவனின் வீட்டில் தான்.
“வாங்க…” எல்லோருக்கும் பொதுவான அழைப்பை வைத்துவிட்டு தாயிடம் சொல்லிவிட்டு மாடிக்கு சென்றவன் குளித்து கீழே வந்தான்.
சுபத்ரா பதட்டத்துடன் இருக்க அவனுக்கு அதை போல எதுவுமில்லை. சிரித்த முகமாக வந்து அமர்ந்தான்.
“எப்ப வந்தீங்க தாத்தா?…” என்று சுபத்ராவின் தந்தையிடம் பேச,
“காலையில தான்…” என்றார் வரதராஜன்.
“சாப்பிட்டிங்களா?…” என கேட்க,
“இன்னும் இல்லை…” என்றார் வரதராஜன்
தன் சித்தப்பா, மாமா இருவரையும் பார்த்தவன் அவர்களையும் உண்ண அழைக்க வேண்டாம் என மறுத்துவிட்டார்கள்.
“ஓகே, நான் டின்னர் முடிச்சுட்டு வரேன்…” என்று எழுந்து சென்றான் அதிரன்.
வரதராஜன் மகளை கண்டன பார்வை பார்க்க அவர் யாருக்கென்று பார்ப்பார்? மகனுக்கு பரிமாற வந்துவிட்டார்.
தான் வந்த நேரம் தாமதம். இவ்வளவு நேரம் உண்ணாமல் இருக்கமாட்டார்கள் என்று அதிரனுக்கும் தெரியும்.
அதனால் அவன் அவர்கள் இல்லை என்றதும் கூட பெரிதுபடுத்தவில்லை. தான் எழுந்து வந்துவிட்டான்.
“என்ன அதி?…” மகனிடம் மெல்லிய குரலில் சுபத்ரா சொல்ல,
“என்னம்மா? என்னாச்சு?…” என்றான் ஒன்றும் தெரியாததை போல.
“தாத்தா கோவமாகிட்டார்…”
“அதனால என்ன?…” என்றான் இலகுவாக சிரித்தபடி.
தேவராஜ் இருந்திருந்தாலாவது சுபத்ரா தைரியமாக இருப்பார். அதிரனிடம் அதிகாரம் காட்டினால் என்னாகுமோ என பயத்துடன் தான் இருந்தார் அவர்.
“ஏன் டென்ஷன்? ஆமா நீங்க சாப்பிட்டீங்களா?…”
“ஹ்ம்ம், அப்பாவோடவே…”
“ஓகே…” என்று சாப்பிட்டு முடித்து வந்து வரதராஜன் எதிரே அமர்ந்தான்.
“சொல்லுங்க தாத்தா…” என கேட்க,
“முன்னாடியே நான் வரனும்னு இருந்தேன். போன மாசமே வந்திருப்பேன். ஆனா அதுக்குள்ளே நீ பாரீஸ் போய்ட்ட…”
“ஓஹ்…” என்றான் புன்னகையுடன் தலையசைத்து.
“என்ன ஓஹ், நான் என்ன கேட்கறேன்னு தெரியலையா?…”
“தெரியாம இல்லை தாத்தா. சொல்ல வந்ததை சொல்லுங்க….”
“நம்ம குடும்பத்துக்கு இது தேவை இல்லை. ஏதோ சும்மா ரூமர்னு நினைச்சா, இப்ப இங்க வந்து பார்த்தா உன் அம்மாவும், அப்பாவும் வேறென்னவோ சொல்றாங்க…”
“சொன்னாங்க தானே? அப்ப உண்மை தான்….” அசராமல் பதில் சொல்ல வரதராஜனுக்கு பிபி ஏறியது.
பெயர் சொல்ல இத்தனை ஜாலங்களா இவன் முகத்தில் என்று பார்த்தபடி இருக்க, ‘பேர் சொல்லும் போதே என் பிள்ளை முகம் எவ்வளவு சந்தோஷமா இருக்கு’ என பார்த்தார் சுபத்ரா.
“தாத்தா…” என்று அவரின் கை தொட்டு அதிரன் அழைக்க,
“ஹாங், என்ன சொன்ன?…” என்றா மீண்டும்.
“மேகா, மேகவர்ணா உங்க பேத்தி பேர்…” மீண்டும் அவன் புன்னகையோடு சொல்ல வரதராஜனுக்கு புரிந்துபோனது.
“ஓகே தாத்தா நாளைக்கு பேசலாம். நான் ரெஸ்ட் எடுக்கறேன்…” என்று சொல்லி மாடிக்கு சென்றுவிட்டான்.
“என்னம்மா?…” என மகளிடம் அவர் கேட்க,
“அவனுக்கு பிடிச்சிருக்குப்பா…”
“என்னவோ எனக்கு சரியாபடலை….” என்று எழுந்துவிட்டார்.