“இன்னும் விலகி இருக்கலாம். முடியலை. வந்துட்டேன், இங்க நீ இருக்கிற இடம், நான் உன் பக்கத்துல. ஆனாலும் உன்னை பார்க்க முடியலை. நீயா எப்போ பார்ப்ப மேகா?…”
கணக்கில்லாத பேச்சுக்கள் அவளிடத்தில் பேசி, சிரித்து, கவலை கொண்டு என்று தன்னுணர்வுகளை அந்த புகைப்படத்தில் செலுத்திக்கொண்டு இருந்தான் அதிரன்.
நினைவுகளை மிஞ்சும் கனவுகளுடன் அன்றைய பொழுது கழிந்தது. அந்த ஒருவாரமும் அவனுக்கு நொடிகள் போல கரைந்துவிட்டது.
அன்று மதியத்திற்கு மேல் தான் அங்கே படப்பிடிப்பு. மக்களின் நடமாட்டத்திற்கு பங்கம் விளைவிக்காமல் சற்று தள்ளி ஏற்பாடாகி இருக்க காலையில் யாருக்கும் தெரியவில்லை.
பன்னிரெண்டு மணி போல படப்பிடிப்பிற்கான சாதனங்களுடன் வண்டிகள் வந்திறங்கவும் தான் தெரிய வந்தது அங்கிருப்பவர்களுக்கு.
“ப்பா ஷூட்டிங்காம்…” பதட்டமாக பல்லவன் வர,
“பல்லவா…” என்ற அமுதினியனின் முகமும் திகைத்தது.
“வரு…”
“மாடில இருக்காப்பா…” என்றான் கையை பிசைந்துகொண்டு.
வீட்டில் இருப்பவளை மோனிகா தான் கடைக்காவது அழைத்து செல்லுங்கள் என திட்டியிருந்தாள்.
முதல் நாள் மோனிகாவுடன் சேர்ந்தே வர அன்று மோனிகா மதியத்திற்கு மேல் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு வருகிறேன் என்று சொல்லி காலை பல்லவன் கிளம்பும் பொழுதே மேகாவை அனுப்பி வைத்திருந்தாள்.
கடைக்கு சென்றாளாவது ஒரு மாற்றம் கிடைக்கும் என்று அனுப்ப முடிவெடுத்திருக்க இப்படி ஒரு திருப்பத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
“வருவை கூட்டிட்டு கிளம்பு முதல்ல…” என்றார்.
இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்க மொத்த ஏரியாவும் கவராகிவிட்டது சடுதியில்.
கடையை விட்டு வெளியே வந்த பல்லவன் அதனை பார்த்ததும் தலையில் கை வைத்துவிட்டான்.
“ப்பா, இப்ப காரும் எடுக்க முடியாது. உள்ளையும் காரை கூட்டிட்டு வர முடியாது…” என்றவனின் பேச்சில் அமுதினியன்,
“யார் படம்?…” என கேட்க அங்கே கேரவன் வந்து நின்றது பல்லவனின் பார்வைக்கெட்டும் தூரத்தில்.
“ப்பா, அதிரன்…” என்றதும் அப்படியே அமர்ந்துவிட்டார் அமுதன்.
“அப்பா…” என அவன் உள்ளே வர,
“இல்லை, ஒண்ணுமில்லை. போய் தங்கச்சியை பாருப்பா…” என்றார்.
பல்லவனும் பார்த்துக்கொண்டே மாடிக்கு வர அங்கே மேகா வேறு இடத்தில் பார்த்திரங்களை கவனித்து பேப்பரில் குறித்துக்கொண்டு இருந்தாள்.
“என்னடா பன்ற?…”
“ஸ்டாக் செக் பண்ணாங்க ண்ணா. அதான் நான் பன்றேன்னு வாங்கினேன். அவங்க லஞ்ச்க்கு போயிருக்காங்க…” என்றாள்.
“ஓஹ், சரி நீ பாரு…” என்றவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
சிறிது நேரம் நின்றுவிட்டு கீழே இறங்கிவிட்டான். எங்கே தான் நின்று தன் பதட்டத்தில் அவளும் பதறிவிட்டால் என்று வந்துவிட்டான்.
பார்வை எல்லாம் அதிரன் எங்கே என்று தேட கீழிறங்கி ஒரு கடையின் முன்னால் அன்று அமர்ந்திருந்ததை போலவே குடைக்கடியில் அமர்ந்திருந்தான்.
கண்களில் கூலர் இருக்க பார்வை எங்கென்று கூட கண்டுபிடிக்க முடியவில்லை பல்லவனால்.
ஆனால் அதிரனின் பார்வை அந்த நொடி அவர்களின் கடையில் மாடியில் காற்றில் அலைபாய்ந்துகொண்டிருந்த அந்த துப்பட்டாவையும், அதை சுமந்த முகம் காட்டாத தன் மேகத்திலும் தான் நிலைத்திருந்தது ஒரு குறுஞ்சிரிப்புடன்.
“உன்னை என் கண்ணுல படாதன்னு சொன்னேன்ல மேகா…” என இதழ்கள் மெலிதாய் முணுமுணுத்தது இதழ்களில் நிலைத்துவிட்ட புன்னகையுடன்.