தங்கள் கடையின் முன்னே மேல் படியில் நின்றபடி பல்லவன் பார்வை அதிரனை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தது கண்காணிப்பாய்.
அதிரன் அந்த இருக்கையில் லேசாய் வேறு திசையில் தலை சாய்ந்திருந்தாலும் கண்ணாடி போட்டிருந்ததால் இங்கே திரும்பவில்லை என நினைத்தான்.
ஆனால பார்த்துவிடுவானோ? பார்க்கிறானோ? என பல்லவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. வேறு எதிலும் கவனம் செலுத்தமுடியவில்லை.
‘உங்க பொண்ணை எனக்கு பிடிச்சிருக்கு’ என்றவனின் அந்த சொல்லும், பார்வையும், பாவனையும் பல்லவன் சிந்தை முழுவதும் நிரம்பியிருந்தது.
அவன் நின்றிருந்தது சற்றே உயரமான படி தான். மேலிருந்து பார்த்தால் கூட்டத்தை தாண்டி அதிரனை பார்க்க முடிந்தாலும் பெரிதாய் தெளிவாய் தெரியவில்லை.
ஆனால் அதிரனுக்கு அவை எல்லாம் தேவையில்லையே. அவனின் பார்வையில் அவள் வந்துவிட்டாள். அதிரன் இதழ்களில் மலர்ந்த புன்னகை.
“ஹர்ஷத்…” என்று திரும்ப,
“ஸார்…”
“என் மொபைல்…” என கை நீட்டவும் அவன் எடுத்து தர,
“கொஞ்சம் பார்த்துக்கோ…” என சொல்லிவிட்டு மொபைலை எடுத்து டயல் செய்து ப்ளூட்டூத்தை காதில் பொருத்திக்கொண்டான்.
மாடியில் மேகா மட்டுமே அங்கிருக்க அழைப்பு வந்தது ப்ரைவேட் நம்பரில் இருந்து.
அவள் என்ன செய்கிறாள் என்பதையும் கவனித்தபடி அதிரன் இருக்க கண்ணாடியின் அருகே இருந்த பார்த்திரங்களை பார்த்துக்கொண்டிருந்தவள் மொபைல் சத்தத்தில் திசை திரும்பினாள்.
முகம் தான் தெரியவில்லையே தவிர அவள் அசைவுகள் அவன் கண்களில் விழுந்து நிறைந்தது.
“பிக்கப் மேகா…” புன்னகையுடன் அவள் குரலை கேட்க காத்திருந்தான் அதிரன்.
“ஹலோ…” என்ற மேகாவின் சத்தத்தில் அதிரனின் இதழ்கள் அவளுக்கான பாடலை மீட்டியது.
காதல் தேவதை மண்ணில் வந்ததோ
கண்கள் ரெண்டும் போதை கொண்டதோ
ஓஓஹோ முன்னால் பாரடி, உன் முகத்தை பார்க்கிறேன்
நீ பின்னால் போவதேன் நான் பெண்ணா கேட்கிறேன்
அதிரன் அழைப்பான் என்று அவள் நினைக்கவே இல்லை. அதிலும் எடுத்ததும் அவனின் அந்த குரல். அதன் பொருளை அறியாமல் குரலில் லயித்தவள் பாடலை கேட்டபடி அப்படியே நின்றுவிட்டாள்.
“மேகா…” என அவன் அழைத்த பின்னர் தான் அவள் தன்னுணர்வு வந்தாள்.
“ஹாங்…”
“அதிரன்…” என்றதற்கு மேகாவிடம் பதிலில்லை.
“எப்படி இருக்க மேகா?…” என்றான் அவன்.
பேசுவதா வேண்டாமா என மனதில் போராட்டம் எழும்ப ஆரம்பித்துவிட்டது மேகாவிற்குள்.
“மேகா…” மீண்டும் அவன் அழைக்க,
“பார்க்காம கால் பண்ண மாட்டேன். பேச மாட்டேன்னு சொன்னீங்க? ஏன் இப்ப?…” என்றாள் மெதுவாய்.
உயிர் செல்கள் எல்லாம் என்னென்னவோ உணர்வுகளை அள்ளி தெளிக்க உடல் மொத்தமும் புதுவெள்ளம் பாய்ந்ததை போல ஒரு குறுகுறுப்பு சேர்ந்துகொண்டது மேகாவிற்கு அவனிடம் பேசுகையில்.
“உன்னை பார்த்துட்டேன், அதான் கால் பண்ணேன்…” என்றான் சிரிப்புடன்.
“இல்லை சான்ஸே இல்லை…” என்றாள் அதே நிலையில் நின்றபடி.
இங்கே அதிரனுக்கு படபடவென்று அடித்துக்கொண்டது. எப்போது முகம் காட்டுவாள் என்பதை போல தவிப்புடன் இருந்தான். ஆனாலும் பேச்சில் காட்டிக்கொள்ளவில்லை அதனை.
“என்ன சான்ஸ் இல்லை? என்னால முடியாதா?…”
“நீங்க ப்ராமிஸ் பண்ணிருக்கீங்க…” என்றாள் ஞாபகமாக.
“ஓஹ், என்னன்னு?…” அதிரனின் புன்னகை கூடியது.
“என்னை பார்க்காம கால் பண்ணமாட்டேன்னு சொன்னீங்களே?…”
“நான் பாடினதை கவனிச்சியா மேகா? இல்லை திரும்ப பாடவா?…” என்றதும் ஒருநொடி அவளுக்கு புரியவில்லை.
அவனின் குரலும், பாடலும் மட்டுமே அவள் ரசனை உலகத்தை உயிர்பித்து அதனை முழுவதும் ஆக்கிரமித்திருக்க பாடியதன் பொருளை அவள் தேடவில்லை.
“மேகா, ஞாபகம் வந்துச்சா?…” என்றதும் மீண்டும் மனதில் ஓட்டிப்பார்த்தவள் வேகமாய் திரும்பினாள் மேகவர்ணா.
கண்ணாடியின் அருகே வந்து அவள் நின்றதும் அதிரனின் அகமெங்கும் பூக்கள் பூத்தது.
“மேகா…” என்ற அந்த இதழ்களின் புன்னகை அவனின் குரலில் குளிர்வாய் பரவ அது சில்லென்று தீண்டியது மேகாவை.
அத்தனை கூட்டத்திற்கு மத்தியில் குடையின் கீழே கூலருடன் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தவனின் தோற்றம் மேகாவை அடைய அசையாது நின்றுவிட்டாள்.
“நான் உனக்கு தெரியறேனா மேகா?…” என்றவன் இருக்கும் இடத்திலிருந்து எழுந்து நின்றுவிட கூடியிருந்தவர்கள் ஆர்ப்பரிக்க அந்த சத்தம் இங்குவரை கேட்டது.
மேகாவிற்கு அவனை கண்டுவிட்ட களிப்பு போய் இப்போது அச்சம் பிடித்தது அவனின் வாழ்வியலில்.
இத்தனை பேரின் மத்தியில் இருப்பவன் மனதில் நானா? என்னும் வியக்கும் எண்ணம் எழாமல் இல்லை.
அதுவே அவளை பயமுறுத்தியது. அவனிடம் தன் மீதான விருப்பத்தில் எந்த பொய்யும் காணமுடியவில்லை.
‘மேகா’ அவன் அழைக்கும் இந்த ஒற்றை வார்த்தை போதுமே அவனின் மொத்த காதலையும் பறைசாற்ற.
தான் காணவேண்டும் என எழுந்து நின்றவனின் அந்த செயல் ஒன்றே மேகாவை புரட்டியது.
“ஏன் இப்டி பன்றீங்க?…” என்றாள் ஆற்றமாட்டாமல்.
“என்ன பண்ணேன்?…” என்றவன் இப்போது சத்தமாய் சிரித்துவிட,
“நான் கேட்டா நீங்க சிரிக்கறீங்க?…” என்றாள்.
“இல்லை உன் அண்ணன் என்னை வாட்ச் பண்ணிட்டு இருக்கார். நான் எழுந்து நிக்கவும் அவர் பதறிட்டார்….” என்று சிரித்தான்.
கீழே அப்படித்தான் பல்லவன் செய்து கொண்டு இருந்தான். அதிரன் அமர்ந்து இருந்தவரை யாரிடமோ பேசிக்கொண்டிருக்கிறான் என்று நினைத்து அசிரத்தையாக நின்றவன் அவன் உடனே எழுந்ததும் பதட்டமாய் நகர்ந்து நின்று பார்த்தான்.
அதிரன் தன் குடும்பத்தை சொல்லவுமே மேகாவின் மயக்கம் தெளிந்ததை போல முகம் மாறினாள். அழைப்பை துண்டித்துவிட நினைக்க,