“அன்னைக்கு தியேட்டருக்கு மீடியாவை வரவழைச்சது அந்த தியேட்டர்ல வேலை செய்யற ஒருத்தர் தான். அவர் ப்ரென்ட்கிட்ட சொல்ல வ்சிஹ்யம் பெருசாகிடுச்சு…”
“ஓஹ்…” என்றவள் அதை பற்றி பேச விரும்பாமல்,
“ஓகே கால் கட் பண்ணுங்க…” என்றாள் மீண்டும் அவனிடத்தில்.
அதிரனால் போனை வைக்க முடியவில்லை. மேகாவின் அழைப்பை துண்டிக்க மனம் வரவில்லை.
“மேகா என்னை என்ன பன்ற நீ?…” அவன் தவிப்பாய் கேட்டதும்,
“நான் வைக்க முடியாது. நீங்க தானே கூப்பிட்டீங்க. கட் பண்ணுங்க…” என்றாள் இப்போது அதிகாரமாய்.
“ஹேய் உன் அண்ணா உள்ள வரார் மேகா…” என்றதும் வேகமாய் போனை வைத்துவிட்டு திரும்பி பார்த்தாள் பயந்துபோய் யாரும் வருகிறார்களா என்று.
இல்லை, ஒருவரும் வரவில்லை. மீண்டும் அதிரனை மேலிருந்து முறைப்பாய் பார்க்க அவளின் முறைப்பை உணர்ந்தான் அவன்.
மேல்நோக்கி அவள் இருக்கும் திசை பார்த்து ரசிகர்களுக்கு கையசைப்பதை போல கையசைத்து பறக்கும் முத்தத்தையும் காற்றோடு அனுப்பினான்.
மற்றவர்களுக்கு அது அதிரன் இயல்பாய் செய்வதை போல் தோன்றினாலும் மேகாவிற்கு அது தனக்கென்று தெரிய படபடப்பில் கடையினுள் ஓடிவிட்டாள்.
அதில் அதிரன் புன்னகை இன்னுமே அழகாய் விரிந்தது. முகமும் விகசிக்க மீண்டும் வந்து அமர்ந்தான்.
“ஸார், ஷாட் ரெடியாக இன்னும் அரைமணி நேரம் ஆகும்…” ஹர்ஷத் சொல்ல,
“ஓகே, நோ இஷ்யூஸ்…” என்றான் அவன் இலகுவாய்.
“அதுவரைக்கும் கேரவன்ல…”
“நோ…” என்றவன் இப்போது நன்றாய் திரும்பி பல்லவன் பக்கம் பார்க்க அவன் இதோ உன்னை அடித்துவிடுவேன் என்பதை போல அய்யனாராய் கையை முறுக்கிக்கொண்டு நின்றான் கடை வாசலில்.
“வரட்டும். எதுக்கும் இன்னொரு சேர் எடுத்து வை ஹர்ஷத்…”
“ஸார்…” என ஹர்ஷத் பார்க்க அதிரனின் மனநிலை அத்தனை மகிழ்ச்சியாய் இருந்தது.
இருவரும் இணைவது அத்தனை சாதாரணம் இல்லை என்றாலும் இனிமையான இந்த நிகழ்வுகள் தான் காத்திருப்பின் ரணத்திற்கு இதம் சேர்ப்பதாய் இருந்தது.
அதுவும் மேகாவிடம் இவ்வளவு இலகுவாய், எந்தவித சஞ்சலமும் இன்றிய உரையாடலும், மேகா தன்னிடம் பேசியதும் என்று அவனை பலமடங்கு உற்சாகமாய் மாற்றியிருந்தது.
“நான் மேகா சொல்ல கூடாதா மேகா? உன்னை அது டிஸ்டர்ப் பண்ணுதுன்னு நான் கண்டுபிடிச்சுட்டேனே மேகா?…” என சொல்லிக்கொண்டவன் மீண்டும் அவர்கள் கடையின் மாடியை பார்க்க அங்கே மேகா இல்லை.
அவ்வபோது பார்வை அங்கே சென்றாலும் ஹர்ஷத் கொடுத்துவிட்டு சென்ற டயலாக் பேப்பரிலும் கவனம் கொண்டான்.
நின்ற இடத்தை விட்டு அகன்ற மேகாவிற்கு இன்னும் படபடப்பு குறைந்தபாடில்லை.
அந்த தளத்தில் ஓரிடத்தில் இருந்த மேஜையின் அருகில் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டாள்.
சற்றுமுன் என்ன நடந்ததென்று கூட புரியாத நிலையில் ஒருவித தடுமாற்றம் அவளை ஆட்டிவைத்தது.
மொபைலை எடுத்து பார்க்க அவன் அழைத்திருந்ததை மீண்டும் மீண்டும் சுட்டி காண்பித்தது வந்திருந்த அழைப்பு.
‘எப்படி இவ்வளவு நேரம் பேசினோம்? ‘மேகா’ இந்த அழைப்பு தன்னுள் செய்யும் மாயம் என்ன?’ என கலக்கத்துடன் இருந்தாள்.
கீழே தந்தையும், அண்ணனும். மேலே இத்தனை நேரம் இவனுடன் பேசியிருக்க இரண்டுமே மனதை அறுத்தது.
அவன் வேண்டாம் என்று எத்தனை உரு போட்டுவைத்து இருந்தாலும் அதிரன் பேசியதும் தன்னால் அவனை துண்டித்து தள்ளி வைக்க முடியவில்லையே?
‘மேகா’ மீண்டும் அவளின் காதுக்கருகே அவன் அழைப்பதை போல இருக்க அங்கிருந்து சென்றுவிட்டால் போதும் என்று தோன்றியது.
இருக்க இருக்க அவனின் இருப்பை அவளின் ஒவ்வொரு அணுவும் உணர்ந்துகொண்டே இருக்க நிதானத்தை இழக்க துவங்கினாள் மேகா.
குடும்பத்தினருக்கு தெரியாமல் தான் செய்தது பெரும் குற்றவுணர்வாய் உருவெடுக்க அவளை பந்தாடியது அந்த செயல்.
விருப்பத்தை இன்னும் வாய்விட்டு சொல்லவில்லை, என்னை பார் என வற்புறுத்தவில்லை, அவளின் முன்னால் நின்று தொந்தரவும் செய்யவில்லை.
தன்னை பார்த்ததும் அழைத்தும் கூட மீண்டும் அவளுக்காய் பார்த்து பேசியது என்று அவனின்பால் தான் மனது உருண்டோடியது.
அதனில் இருந்து அதிரனில் இருந்து தன்னை இழுத்துபிடிக்க குடும்பத்தை கேடையமாய் வைத்துகொண்டாள் மேகா.
இனி எக்காரணத்தை கொண்டும் தானே அழைத்துவிடவே கூடாது என்று கண்ணை மூடி சிறிது நேரம் மனதை ஒருநிலைபடுத்த வேண்டுதலில் இறங்கினாள்.
பத்து நிமிடம் சென்று சாப்பிட சென்ற இருவர் வந்துவிட அவர்களிடம் தான் குறிப்பெடுத்த குறிப்பேட்டை நீட்டிவிட்டு கீழே இறங்கி வந்தாள்.
அமுதினியன் அவர் இருக்கையில் இருக்க, கல்லாவில் இல்லாது பல்லவன் இன்னும் வாசலில் நின்றுகொண்டு இருந்தான்.
அதனை பார்க்கவும் அதிரன் சொல்லியது ஞபாகம் வர தன்னையறியாமல் ஒரு குறுஞ்சிரிப்பு மேகாவின் முகத்தில்.
ஆனாலும் மனது அண்ணனை எண்ணி வருத்தம் கொண்டது. தனக்காக தானே இத்தனையும் செய்கிறான் என்று.
“அண்ணா…” என அவனை அழைக்க அமுதினியன் மகளை பார்த்தார்.
“என்ன வரு? பசிக்குதா?…” என்றான்.
மோனிகா வருவதாக சொல்லியிருக்க பல்லவன் அவளுக்கு அழைத்து வர வேண்டாம் என்றிருந்தான்.
நிச்சயம் இந்த வீதியில் வர முடியாதென்று தெரியும். அதனால் வர வேண்டாம் என சொல்லியிருந்தான்.
முதலில் இங்கிருந்து கிளம்பவேண்டும். ஏற்கனவே அக்கம்பக்கத்து கடையினர் பார்வையும் சிரிப்பும் பல்லவனை கடுப்பேற்றிக்கொண்டு இருந்தது.
அவன் உர்ரென்று நின்றிருக்க ஒருவரும் அருகில் வந்து எதுவும் கேட்க முடியவில்லை.
இல்லை என்றால் வந்து வம்பளந்து இருக்க கூடும். அதிலும் அன்றைகென்று மேகாவும் இருக்க பார்ப்பவர்கள் பேசுவதற்கு சொல்லவே தேவையில்லை.
அனைவரின் பார்வையும் அதிரனின் மேலும், இங்கே இவர்கள் கடையின் மேலும் என்றே இருந்தது.
ஷூட்டிங் வேறு அப்போது தான் ஆரம்பகட்டத்தில் இருக்க நிச்சயம் இரவாக்கிவிடுவார்கள் என்பதால் மேகாவை அழைத்துக்கொண்டு செல்ல வேண்டுமென பார்த்தான்.
இப்போது தங்கையே தேடி வர பசித்துவிட்டதோ? நேரமாகிவிட்டதே என்று தான் தந்தையையும் பார்த்தவன்,
“அப்பா வருவை கூட்டிட்டு கிளம்புவோம். போய்ட்டு சாப்பிட்டு நீங்களும், வருவும் வீட்டில இருங்க. நான் மட்டும் கடைக்கு வரேன்…” என்றான் பல்லவன்.
“இல்லப்பா, அதை தாண்டித்தான் போகனும், கார் எடுக்க முடியாதே?…” அமுதன் யோசிக்க,
“ஆட்டோல போவோம்ப்பா, வாங்க. வருவுக்கும் பசிச்சிடுச்சு….” என அவசரப்படுத்தினான் பல்லவன்.
அமுதன் மகளை பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் முன்னே நடக்க பல்லவன் மேகாவை தன் கையில் பிடித்தபடி நடக்க ஆரம்பித்தான்.
கடையை சூப்பர்வைசரிடம் சொல்லி ஒப்படைத்துவிட்டு அவர்கள் கீழே இறங்க மேகா நிமிரவே இல்லை