பல்லவன் தங்கையின் தோளை பற்றியிருந்த விதமே அத்தனை இறுக்கமாய் இருக்க அவனின் மனநிலையை அது எடுத்துரைத்தது மேகாவிற்கு.
இன்னும் மனது தடதடத்தது. அனைவரும் இங்கேயும் அதிரனையும் மாறி மாறி பார்க்க இதோ அவனுக்கருகே அவனெதிரே அவ்விடத்தை கடக்க போகிறது அவனின் மேகம்.
அதிரனின் பார்வை இங்கேயே தான் இருந்தது. மேகா செல்வதை பார்த்தபடி முகத்தில் மாறாத புன்னகையுடன் அமர்ந்திருக்க அவள் ஒரு சதவீதம் கூட அவன்புறம் திரும்பவில்லை.
கைவிரல்களை உள்ளங்கைக்குள் இறுக்கமாய் பிடித்து வைத்திருந்ததிலேயே அவனிதழ்கள் விரிந்துகொண்டது அவளை கண்டு.
“மேகா…” மென்மையாய் அவன் சத்தமின்றி அழைக்க அந்த அழைப்பு அவளை எட்டியதை போல ஒருநொடி தடுமாறி பின் நடந்தாள்.
அவனின் பார்வை அவளின் அத்தனையையும் அவதானித்து தனக்குள் சேமித்துக்கொண்டது.
‘என்கிட்ட பயமா மேகா?’ என மனதிற்குள் கேட்டுக்கொண்டவன் அதே புன்னகையுடன் அடுத்த காட்சிக்கு தயாராகி எழுந்து நின்றான்.
ஏற்கனவே கதாநாயகி நடந்து வருவதை போன்ற காட்சி காட்சிப்படுத்தி படம் பிடித்துக்கொண்டிருக்க நாயகி வரும் பக்கம் பூக்களை தூவியபடி இருந்தார்கள் குழுவினர்.
அந்த இடத்தின் கடைசி பகுதிக்கு செல்ல வீசிய பூக்குவியல் சிதறிய வேகத்தில் மேகாவின் மேல் விழ பல்லவனுடன் சேர்ந்து அன்னார்ந்து பார்த்தாள்.
எங்கிருந்து விழுகிறதென மேகா திரும்ப அங்கே அதிரனும் எழுந்து நின்று இதனை பார்க்க நொடிபொழுதில் அவனின் விழிகளை ஸ்பரிசித்து தன்னை மீட்டுக்கொண்டு திரும்பினாள் மேகா.
“வாவ்…” என்றான் அதிரன் அந்த மின்னல் தருணத்தை ரசனையுடன் உள்வாங்கி.
“ஸார், ஷாட்….”
“ஓகே…” என்று சொல்லி மொபைலை ஹர்ஷத்திடம் நீட்டிவிட்டு அதே மனநிலையுடன் நடிக்கவும் சென்றான்.
அதற்குள் அவர்கள் அந்தே வீதியையே கடந்திருந்தனர். வீட்டிற்கு செல்லும் வரை ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளவில்லை.
பல்லவன் மோனிகாவிடம் மட்டும் அறைக்கு அழைத்து விஷயத்தை சொல்ல அவளுக்கு இன்னும் பதட்டமாகியது.
“எனக்கு வந்த கோவத்துக்கு. ஆனா கன்ட்ரோல் பண்ணிக்கிட்டேன். ஏற்கனவே கன்னாபின்னான்னு பேசறானுங்க…”
“உங்களுக்கு ஏன் இவ்வளோ கோவம் வருது?…”
“என்ன என்ன செய்ய சொல்ற மோனி? அவன் ஷூட்டிங்க்கு வந்தா அத்தனைபேரும் நம்மளைத்தான் பார்க்கறாங்க…” என்று பல்லை கடித்தான்.
“நாமளா இருந்தாலும் அதை தான் செஞ்சிருப்போம். இதெல்லாம் எல்லாருக்குள்ளையும் இருக்கற க்யூரியாஸிட்டி….”
“அதுக்குன்னு…” என்றவன்,
“இதுல அவன் வந்து உக்கார்ந்திருந்தான் பார்க்கனும். ஒரு நடிகன்னா அந்த ஸீன்க்கு மட்டும் தான கேரவன் விட்டு வரனும்?…”
“அப்படியா?…”
“ஆமா மோனி, என்னவோ இவன் தான் படத்தோட இயக்குனர் மாதிரி கண்ணுல கண்ணாடியை போட்டுட்டு இங்கிட்டும் அங்கிட்டும் பார்த்துட்டு சிரிச்சுட்டே இருக்கான்…”
“அதுக்கு உங்களுக்கு ஏன் கடுப்பாகுது?…”
“வரு மாடில இருந்தாளே? எனக்கு இவன் பார்வை அங்கயே வந்துட்டு போற மாதிரியே இருந்துச்சு, வரு இல்லைன்னா இவ்வளவு டென்ஷன் எதுக்கு?…” என்றான்.
“சரி விடுங்க வந்தாச்சுல…”
“என்ன வந்தாச்சோ? எல்லாம் உன்னால…” என அடுத்து மோனிகாவின் மேல் பாய்ந்தான்.
“நான் என்ன பண்ணேன்?…” என்று மோனிகா திகைக்க,
“நீ சொல்லி தானே வருவை கூட்டிட்டு போனேன்….”
“அதுசரி, அப்ப அவ வீட்டுக்குள்ளயே இருந்தா உங்களுக்கு சந்தோஷமா?…” என்று அதற்கு மேல் கடுப்பாய் பொரிந்தாள்.
“யாரோ பார்க்காங்க, யாரோ சொல்றாங்கன்னு நீங்க இன்னும் முடங்கிட்டே இருந்தா நஷ்டம் நமக்கு தான். முதல்ல உங்க தங்கச்சி உணர்வுகளுக்கு மதிப்பு குடுங்க. ஊர்ல உள்ளவனுக்கு ஆயிரம் வேலைல இதுவும் ஒன்னு. ஆனா நமக்கு அப்படியா?…”
மோனிகா நன்றாக திட்டிவிட்டு அறையை விட்டு செல்லவும் சற்றே அடங்கினான் பல்லவன்.
ஆனால் மோனிகாவிற்கு இன்னும் பதட்டம் அடங்கவில்லை. மேகா என்ன செய்கிறாள் என பார்க்க வந்தாள்.
மலருடன் கடையில் இருந்த பொருட்களை பற்றி பேசிக்கொண்டு மேகா அமர்ந்திருந்தாள்.
பெரிதாய் முகத்தில் எந்த சுணக்கமோ, மாற்றமோ இல்லை. சாதாரணமாக தான் தோன்றியது.
ஆனாலும் மோனிகாவிற்கு அமைதி இல்லை. அதிரன் பார்க்காமலா இருந்திருப்பான் என நினைத்தாள்.
காதலித்தவளுக்கு, அதனை காப்பாற்றி கை சேர்த்துகொண்டவளுக்கு அதிரனின் காதலும், மேகாவின் தடுமாற்றமும் நன்றாகவே புரிந்தது.
யோசனைகளை விட்டுவிட்டு மோனிகா அவளுடன் பேசிக்கொண்டிருக்க வெளியே அமைதியாக இருந்தாலும் உள்ளே தணலாய் தகித்தது மேகாவின் உணர்வுகள்.
மனதிற்குள் குளிரும், அனலுமாய் அவளை வாட்டிக்கொண்டு இருந்தது. இருபக்கமும் செல்லமுடியாத இருதலைகொள்ளி எறும்பென அவளுக்குள்ளேயே போராடிக்கொண்டு இருந்தாள் மேகவர்ணா.
———————————————
அவளின் போராட்டம் அதிரனுக்கும் இல்லாமல் இல்லை. மேகாவை கண்ணில் பார்க்கும் வரை கூட திடமாய் இருந்தவனின் கட்டுப்பாடுகள் எல்லாம் மொத்தமாய் தகர்ந்திருந்தது.
முதல்முறை காத்திருப்பு நன்கு மாதங்கள் என்றால், இரண்டாம் முறை ஒருமாதம், சில நாட்கள். இப்போதோ கடைசியாய் அவளுக்கு தான் அளித்த வாக்கு.
நினைக்கையில் மெலிதாய் சிரித்துக்கொண்டான் அதிரன். இந்த காத்திருப்பின் கால அவகாசம் எத்தனை நாட்கள் என.
அன்றைய நிகழ்வும் கூட செய்தியாய் வரத்தான் செய்தது. பெரிதாய் தாக்கங்கள் இல்லாவிடிலும் இதுவும் பேசப்பட்டது.
பல்லவன் மேகாவை அழைத்து சென்ற விதமும், அதிரன் அமர்ந்து பார்த்ததையும் வைத்து ‘வீட்டு சிறையிலா அதிரனின் இதயராணி?’ என்று அடைமொழி இட்டு தங்களின் கடமையை ஆற்றி இருந்தார்கள் சமூகஊடக ஆர்வலர்கள்.
இப்படியான செய்திகள் வர அவற்றை பார்த்துவிட்டு அதிரன் வெகுவாய் சலித்து போனான்.
“இவங்களை வச்சுக்கிட்டு ஒரு லவ் பண்ண முடியுதா?…” என சொல்லிக்கொண்டவன் மனதோ அன்று மேகா பார்த்த அந்த அரை நொடிக்கும் குறைவான அந்த மின்னல் பார்வையிலேயே நின்றுகொண்டது.
“எப்ப கூப்பிடுவ மேகா?…” என கேட்டுக்கொண்டான் அதிரன்.
உறக்கமின்றி மொட்டை மாடியில் தோட்டத்திற்கு நடுவே வெட்டைவெளியில் படுத்திருந்தவன் தன்னை கடந்து சென்ற மேகங்களிடம் தன் ஆசைகளை சொல்ல அது நிறைவேறவும் செய்தது.