“நான் இவ்வளோ சொல்றேன், நீ எங்களை முறைக்கிற?…” என்றான் பல்லவன்.
“முதல்ல கொஞ்சம் அமைதியா இருங்க. கோபத்துல பேசினா என்ன பேசறோம்ன்றதும் தெரியாது. என்ன யோசிக்கிறோம்ன்றதும் புரியாது…” என்றான் கோபத்துடன்.
“என்ன பேசற மோனி? உன் மாமா பண்ணின வேலைக்கு கோபப்படாம எப்படி இருக்க சொல்ற?…” என்றார் மலர்.
“இன்னும் மாமாக்கிட்டையே என்னன்னு கேட்காம, அவர் ஏன் இந்த முடிவுக்கு வந்தாங்கன்னு தெரியாம நீங்களா பேசாதீங்க த்தை. மாமா வரட்டும்….” அத்தனை நிதானம் அவளிடத்தில்.
பல்லவன் மனைவியை யோசனையாக பார்க்க மலருக்கு அப்படி எந்த யோசனையும் இல்லை.
ஒரே முடிவாக இருந்தார் மலர். இந்த பேச்சே எடுக்க கூடாதென்று அத்தனை ஸ்திரமாய் இருந்தார்.
அவரின் உறுதி மகளுக்கும் இருக்கும் என்று துளியளவும் தெரியாமல் போனது அவருக்கு.
அவர்கள் மீதான் பாசத்திற்கு கட்டுப்பட்டு மனதை அடக்கி, தன்னையே வதைத்துக்கொள்ளும் மகளை தாயாய் உணராது போனார்.
இவர்கள் இருவரிடமும் பேச முடியாதென நினைத்த மோனிகா உடனே கடைக்கு அழைத்துவிட்டாள்.
“மாமா நீங்க கிளம்பி வீட்டுக்கு வாங்க….” என்றாள்.
“என்னம்மா இந்த நேரம்? பல்லவனும் இல்லை…”
“அவர் வீட்டுல தான் இருக்கார். நீங்க வாங்க…” என்ற மோனிகா,
“மாமா நீங்க செல்வம் மாமாவோட பேசிட்டிருந்ததை பத்தி தான் இங்க விஷயம் போய்ட்டிருக்கு. நீங்களே வந்து பேசுங்க…” என்று சொல்லவும் அமுதன் ஒருநொடி யோசித்துவிட்டு,
“சரிம்மா, நான் அண்ணனோட வரேன்…” என்று வைத்துவிட்டார்.
“உனக்கு விஷயம் தெரியுமா மோனி?…” என்றான் பல்லவன்.
“ஹ்ம்ம்…” என மோனிகா தலையசைக்கவும் மலர் அவளை அதிர்ச்சியுடன் பார்த்தவருக்கு அழுகை தான் வந்தது.
“அப்போ எல்லாரும் பேசி முடிச்சுட்டு தான் இன்னும் எங்கட்ட சொல்லாம இருக்கீங்களா?…” என்றார்.
“அத்தை மெதுவா பேசுங்க. வரு இருக்கா…”
“என்னத்த மெதுவா பேச? ஒரு பொண்ணை பெத்திருந்தா தான என் வலி என்னன்னு புரியும்?…” என்ற மலர்,
“போயும் போயும் எவ எவ கூடியோ சேர்ந்து ஜோடி போட்டு நடிக்கிறவனுக்கு என் பொண்ணா?…” என்று அழுகை ஆரம்பிக்க மோனிகாவிற்கு வருத்தமாய் இருந்தது.
அவரின் எண்ணத்திலும் தவறில்லையே. தாயாய் அவர் சரியாகவே யோசிக்கிறார்.
ஒரு மேல்தட்டு நடுத்தர வர்க்கத்தினர்கள் அஞ்சும் திருமண சம்பந்தம் தானே இது. திரைத்துறையின் அவலங்களை அதிகளவிலேயே பார்த்துக்கொண்டு தானே இருக்கிறார்கள்.
திருமணம் செய்வதும், பிரிவதும் அவர்களுக்கு ஒரு விஷயமே இல்லையே. அப்படியிருக்க மகளின் வாழ்க்கையை பணயம் வைக்கமுடியுமா என யோசித்தார் மலர்.
மோனிகாவிற்கு புரியத்தான் செய்தது. ஆனாலும் இங்கே இருவரின் மனதிலும் பிடித்தம் என்ற ஒன்று உருவாகிய பின்பு யார் தடுக்க முடியும் என நினைத்தாள்.
அதிலும் அமுதினியனே மகளை, அவளின் மனதை கண்கூடாக கண்ட பின்பு இதனை யோசிக்காமல் இருப்பாரா?
ஆம், மோனிகாவிடம் பேசியிருந்தார் அமுதினியன். மேகா அவர்கள் கடைக்கு வந்துவிட்டு வீட்டிற்கு வந்த பின்பு ஒருவாரமாக இதே யோசனையில் இருக்க,
“என்ன மாமா உங்க முகமே சரியில்லை. நானும் இந்த ஒருவாரமா பார்க்கறேன்…” என்று கேட்டுவிட்டாள்.
மகனிடம் இதனை பேச முடியாது. நிச்சயம் அவன் யோசிக்கவோ, இல்லை தனக்கு சரியான யோசனையை சொல்லவோ மாட்டான் என்பதில் நிச்சயம்.
அந்தளவிற்கு நிகழ்வுகள் பல்லவனை மாற்றி இருக்க அப்போதைக்கு அவருக்கு தேவை இருபக்கமும் யோசித்து சரியான வழியை காண்பிக்க ஒரு ஆள்.
எப்போதும் யார்க்கும் பாதகமின்றி தான் அமுதன் முடிவுகள் இருக்கும். முன்பு அண்ணன், அக்கா குடும்பம் என்று இருந்த பொழுதும் அனைவரையுமே அனுசரித்து அரவணைத்து செல்லும் மனிதர்.
இப்போது தன் பெண்ணும் வாழவேண்டும், அந்த முடிவு சரியானதா என்றும் தெரிய வேண்டும்.
மகள் கடையில் இருந்த அன்று அதிரனின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த பொழுது மாடியில் தனியாய் இருப்பவளை காண சென்றவருக்கு தான் பார்த்ததை இன்னும் நடந்ததை நம்பமுடியவில்லை.
காதில் மொபைலுடன் பார்வை தூரத்தில் இருந்தவனை கண்டுகொண்டிருக்க அவள் முகத்தில் மலர்சிச்யும், கூடவே பயமும்.
அவர் சென்ற நேரம் அதிரனுக்கு அடிபட்டதை பற்றி அவள் விசாரித்துக்கொண்டு இருக்க இரண்டு நொடி நின்றிருந்தவர் அதற்கு மேல் நிற்கமுடியாமல் கீழே வந்துவிட்டார்.
பல்லவன் எதையும் கவனிக்கவில்லை. அதிரனை பார்த்தபடி வாசலில் இருக்க மகனிடம் அப்போது எதுவும் சொல்ல முடியவில்லை.
மகளை அழைத்துக்கொண்டு படப்பிடிப்பு நடக்கும் இடத்தை தாண்டி செல்ல அங்கேயும் அதிரன்.
புன்னகையுடன் மகளை பார்த்து எழுந்து நின்றதும் அமுதனின் கண்களில் தவறவில்லை.
ஒருவாரமாக மனதில் போட்டு அதையே குழப்பிக்கொண்டிருக்க மோனிகா கேட்டதும் சொல்லிவிட்டார்.
“நான் இதை எதிர்பார்க்கவே இல்லைம்மா. முதல் தடவை பேசின மாதிரியே இல்லை….” என்றார் வருத்தத்துடன்.
மகளுக்கு காதலா? அதிலும் ஒரு நடிகனுடன். இதை ஏற்க அத்தனை சிரமமாக இருந்தது மனதிற்கு.
அவரை காணவே கவலையாகியது மோனிகாவிற்கு. என்ன சொல்லி தேற்ற முடியும் அவளால்?
மகனின் காதலை ஏற்றுக்கொண்டவருக்கு மகளின் காதல் உவப்பானதாக இல்லை.
ஏற்கனவே அதிரன் விருப்பத்தை நேரடியாக சொல்லியிருக்க மகளின் மனதில் ஒன்றுமில்லை என்று பயமின்றி இருந்தார்.
இப்போது மகளுக்கும் அவன் மீது எண்ணமிருக்க நிச்சயம் அவளாக வாயை திறந்து சொல்ல போவதில்லை என்று புரிந்துபோனது அமுதனுக்கு.
“என்னம்மா செய்யலாம்?…” மருமகளிடம் கேட்க,
“எனக்கு ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்தப்பவே தெரியும் மாமா…” என்றவள் அன்று நடந்ததை சொல்ல கூடவே மோனிகாவிற்கு மேகா அதிரனின் குரலை கேட்பதை தெரிந்து வைத்திருந்தாள்.
“அந்த வாய்ஸ் கேட்டு எனக்கே ஒருமாதிரி ஆகிடுச்சு. அதிரன் குரல்ல பொய்யில்லை. அவர் விருப்பத்திலையும் பொய்யில்லை. ஆனா இதுக்கு மேல என்ன சொல்ல? நீங்க தான் முடிவு பண்ணனும்…” என்றுவிட்டாள்.
மீண்டும் மீண்டும் மனதிற்கு நினைத்து பார்த்துவிட்டார் அமுதினியன். மனது ஊசலாடியது எந்த பக்கமும் இறங்க முடியாமல்.