அந்த ரசிப்பு விழிகளை அடைய இதழ்களில் தூரிகையாய் சிறு புன்னகையை தோற்றுவிக்க அதை பார்த்தவனுக்கும் புன்னகையே.
“மேகா…” என்றபடி அவள் முன்னால் குனிந்தமர்ந்தவன் வலதுகையின் சுட்டுவிரலை அவளோ நோக்கி கொண்டுவர மேகா விழிகள் அகன்றது.
வார்த்தையால் எதுவும் பேசாமல் மொழிகளற்ற அவனின் பார்வையும், அவை காட்டிய வர்ணஜாலங்களும் மேகாவை பேச்சிழக்க செய்ய பார்த்தபடி இருந்தாள்.
என்ன சொல்ல வருகிறான் என்று பார்க்க ஒற்றை விரலை நீட்டிக்கொண்டு வந்தவன் அப்படியே கையை இழுத்து தன் முகத்தை ஒற்றை கையால் மொத்தமாய் மூடியவன் எழுந்து இடுப்பில் கை வைத்து நின்றுவிட்டான்.
இந்த உணர்வுகள் அவளுக்கும் புதிது. ரசவாத நிகழ்வுகளை முழுமையாய் அனுபவிக்கமுடியாது அதனை என்னவென்றும் இன்னதென்றும் பகுக்கவும் முடியாது பெண் திண்டாட அவை அதிரனை இன்னும் அதிரவே வைத்தது.
அமர்ந்திருந்த இருக்கையின் பின்னால் சென்று நின்று தலையை கோதியவன் மீண்டும் இருக்கையின் முன்னால் கை ஊன்றி குனிந்து நின்றபடி மொபைலை பார்த்தான்.
“என்னன்னு கேட்க மாட்டியா மேகா?…” என்றவனின் குரல் இன்னுமே புதிதாய்.
காதல் இல்லை அதையும் தாண்டிய ஒரு தவிப்பு. இதென்ன இந்த பார்வையும், குரலும் என்னவோ செய்கிறது என்று அவனை மேலும் காண முடியாமல் விழிகளை தாழ்த்திக்கொண்டாள்.
அவளை நெஞ்சமெல்லாம் காதல் கசிய பார்த்தவன் முயன்று தன்னுணர்வுகளை விழுங்கிக்கொண்டான் அதிரன்
“மேகா, இங்க பாரு…” என்ற அழைப்பில் அவள் நிமிரவே இல்லை.
“ஓகே, ஓகே சில். சில்…” என்று அவளுக்கு சொல்லியவன் தனக்கும் சேர்த்து கூறிகொண்டு தண்ணீரை எடுத்து அருந்தியபடி மீண்டும் வந்தமர்ந்து மொபைலை கையில் எடுத்துக்கொண்டான்.
“டெய்லி எப்போ தூங்குவ?…” என்றான் பேச்சை மாற்றும் விதமாய்.
பதில் இல்லாது, ஒன்றும் சொல்லாமல் அவள் விழிக்க அவளை கேள்வியாய் பார்த்தான் அவன்.
“ஏன் தெரியாதா மேகா?…” என அதிரன் சிரிப்புடன் கேட்க,
“இல்லை, நிஜமா ஞாபகம் இல்லை. கண்ணை மூடி இருப்பேன். ஆனா எனக்கு தெரியாது எப்ப தூங்கறேன்னு…” என்றாள் மனதை மறையாது.
சொல்லும்பொழுதே அதன் வேதனையின் சாயல் மேகா முகத்தில் படர அதிரனின் மனது துடித்தடங்கியது.
எதையும் பேச முடியாத அவளின் சூழ்நிலை ஏற்கனவே புரிந்திருந்தாலும் மேகாவின் வாய்மொழியில் இன்னும் வலித்தது.
இந்த காத்திருப்பின் வலி எப்போது தீருமோ என்று இப்பொழுதிருந்தே எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டான்.
ஒருவனே காதலை சுமந்திருந்த பொழுது அவளின் மனதிற்காக காத்திருந்தவன் இப்போது அவளுக்கும் சேர்த்து சுமக்க இருந்தான்.
“ரொம்ப கஷ்டமா இருக்கா மேகா?…” என கேட்க மழுக்கென்று நீர் நிறைந்துவிட்டது அவளின் விழிகளில்.
அவளின் கண்ணீரை பார்த்தவன் பார்வையை வேறு திசைக்கு திருப்ப மேகா தன்னை சமாளித்துக்கொண்டாள்.
“பயமா இருக்கா?…” என்றான் மீண்டும் அவளை பாராமலே.
“இது வேண்டாம். சரிவராது…” என்றதும் உடனே அவள் பக்கம் திரும்பியவன் புன்னகைத்து,
“ஏனாம்?…” என்றான் அதிரன்.
“அப்பா, அண்ணா ஒத்துக்கமாட்டாங்க…”
“உனக்கு ஓகே தானே?…” என்று கேட்க மேகாவிற்கு எதையும் சொல்லும் தைரியமில்லை.
அவளை சமாதானம் செய்யும் மனநிலையில் அதிரனும் இல்லை. எத்தனை பேசினாலும் அவளின் கண்ணீர் அதிகமாகுமே தவிர குறைய போவதில்லை என்று மென்மையாய் பார்த்தான் அவளை.
“மேகா, திரும்பவும் இது உனக்காக…” என்றவனின் குரலில் நிமிர்ந்தவள் கண்ணை துடைத்துவிட்டு பார்த்தாள்.
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென நான் கூற
அவனின் பாடல் மனதிற்கு இதம் சேர்க்க மெல்லிய புன்னகை அவள் முகத்தில் பரவ சிறு நம்பிக்கை தெரிந்ததை போல் இருந்தது.
அன்று மருத்துவமனையில் வைத்தும் அதிரன் இதை அவளுக்கென்றே பாடியிருக்க இப்போதும் உடல் சிலிர்த்தது அவ்வுணர்வில்.
“மேகா…” என தண்ணீர் பாட்டிலை காண்பித்தான்.
“இருக்கு, நான் அப்பறமா எடுத்துப்பேன்…”
“ம்ஹூம், குடி. வெய்ட் பன்றேன்…” என்றான்.
அவன் சொல்லியதற்கெல்லாம் மறுப்பின்றி அவளும் செய்ய அதிரனின் மனதில் இன்னுமின்னும் ஆழமாய் இறங்கினாள் மேகா.
அவனின் மேகம் எதிர்த்தாலும் பிடித்தது. முறைத்தாலும் பிடித்தது. வெறுத்தாலும் கூட பிடிக்கத்தான் செய்யும் போல என்றே தோன்றியது அதிரனுக்கு.
அவள் தண்ணீரை குடித்து முடிக்கும் வரை பார்த்திருந்தவன் பாட்டிலை வைத்துவிட்டு புறங்கையால் துடைக்க அது அதிரனுள் இன்னும் குறுகுறுப்பு கூடியது.
கன்னத்தில் கை வைத்தபடி இன்னும் முன்னே நகர்ந்து வந்து பார்த்தான் மேகாவை.
அவனிடம் பேசினாலும் மேகாவின் பார்வை ஒவ்வொரு நொடியும் கதவையும் திரும்பி பார்த்துக்கொண்டே இருந்தது.
“சில், இப்போ கட் பண்ணிடுவேன். இங்க என்னை பாரேன் மேகா…” என்று தன்பக்கம் அவள் கவனத்தை திருப்பினான்.
“எக்ஸாம் எப்போன்னு அன்னைக்கு போன்லயே கேட்டேன். நீ சொல்லலை?…”
“இன்னும் டேட் அநோன்ஸ் பண்ணலை…”
“ஓஹ், எப்படியும் இன்னும் ஒரு சிக்ஸ் மந்த்ஸ்ல இருக்குமா? எனக்கு தெரியலை. அதான் கேட்டேன்…”
“உனக்கு என்னை பிடிச்சிருக்கு தானே…” என கேட்டதற்கு அப்போதும் அவள் நேரடியாய் பதில் சொல்லாமல்,
“அவங்க விருப்பமில்லாம என்னால சம்மதிக்க முடியாது…” என்றாள் சுற்றி வளைத்து.
“அப்ப கூட பிடிச்சிருக்கு, ஆமா, இல்லை இப்படி எதுவும் சொல்ல மாட்டியா மேகா?…” அவன் ஏக்கம் புரிந்தது. அதனை தாண்டி வரத்தான் மேகாவின் அச்சம் தடுத்தது.
“ஓகே, நீ தூங்கு. நான் பார்த்துக்கறேன். இப்போதைக்கு எக்ஸாம்ல கவனம் வை. அப்பப்போ என்னையும் நினைக்கலாம். தப்பில்லை…” என்று குறுஞ்சிரிப்புடன் சொல்ல,
“ஒன்னு கேட்கனுமே?…”
“மேகா கேட்கலாமே…” என்றான் தலை சாய்த்து புன்னகையுடன்.
‘அன்றும் இப்படித்தானே தலை சாய்த்து தன்னை புன்னகையுடன் பார்த்தான். இல்லை இல்லை ரசித்து பார்த்தான்’ என்று தோன்ற அந்த புன்னகையை சுருட்டி மனதிற்குள் பூட்டிக்கொண்டாள்.