“உன் பிள்ளை தவம் தான் இருக்கான். வெளில பார்க்க அமைதியா தெரியுது. உள்ள ரொம்ப உடைஞ்சு போயிருக்கான். ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம், அந்த பொண்ணோட தான் நம்ம பையனுக்கு வாழ்க்கை…”
“அந்த பொண்ணு என்ன பெரிய?…”
“ம்மா…” என்று அதிரன் இறங்கி வந்துவிட்டான்.
“எந்த பொண்ணு?…” என சிரிப்புடன் கேட்க,
“இப்ப வந்து விளக்கமா பேர் சொல்லுவான் பாருங்க…” என்றார் சுபத்ரா.
மகனின் முகம் புன்னகையுடன் இருக்க, சற்று முன் பார்த்த அந்த சோர்வும், வேதனையும் வெளிப்படையாய் தெரியவில்லை.
தன்னை தேற்றியிருந்தானே? தனக்கு தானே சமாதானம் செய்வது அதிரனுக்கு அத்துப்படியாகி இருந்தது.
எதற்கும், யாரும் தனக்கு ஆறுதல் சொல்லும் அளவிற்கு எப்போதும் வைத்துக்கொள்ளாதவன் இப்போதும் அப்படியே முயன்று மீண்டிருந்தான்.
“எந்த பொண்ணு? நாங்க யாரையோ பேசறோம்…” என்றார் அவர் மகனிடம் அவனின் போக்கிலேயே.
“மேகா, மேகவர்ணா. எங்க சொல்லுங்க?…” என்று சிரித்துக்கொண்டே சொல்ல சுபத்ரா தேவராஜை பார்த்தார்.
“ரொம்ப முக்கியம்…” என சுபத்ரா சொல்ல,
“சாப்பிடலாமா?…” கேட்டபடி உணவு அறைக்கு சென்றான் அதிரன்.
“நீங்களும் வாங்க…” என்று தேவராஜை அழைத்துகொண்டு சுபத்ரா சென்றார்.
எப்போதும் இத்தனை சீக்கிரம் உண்ணுபவன் இல்லை. அதனை கேட்டு மேலும் எதற்கு அவனை வருத்த என்று உணவை எடுத்து வைக்க சாப்பிட்டு முடித்தவன் இருவரிடமும் சொல்லிக்கொண்டு படுக்க சென்றுவிட்டான்.
“தூங்கி எழுந்தா இன்னும் ப்ரெஷா இருக்கும் ப்பா…” என்றான் தேவராஜின் பார்வையில்.
“ஓகே, டேக் ரெஸ்ட்…”
“நீங்க ஸ்டுடியோ போகலையா?…”
“இல்லை. இனி எங்க போக?…” என்று அவர் அமர்ந்துகொள்ள அதிரன் மாடிக்கு வந்துவிட்டான்.
வந்தவன் மனது சமன் பட மறுத்தது. கண்ணை மூடியபடி அமர்ந்துகொண்டான் தனக்கு பிடித்தமான பாடல்களை ஓடவிட்டு கேட்டபடி.
எத்தனை இருந்தும் மேகாவின் அலை ஓயவில்லை. அவளிடம் பேசினால் என்ன என்று யோசித்துக்கொண்டே இருக்க அவன் அளித்திருந்த வாக்குறுதி அவனை அடக்கி வைத்தது.
பாடல்களை விடுத்து அவளுடன் பேசியவற்றை கேட்டபடி கண்ணை மூடி படுத்துவிட்டான் ஹர்ஷத் அழைக்கும் வரை.
—————————————————
இரவு உணவு முடிந்து மேகா ஹாலில் அமர்ந்து மோனிகாவுடன் அஷ்வினை வைத்து விளையாடிக்கொண்டு இருந்தாள்.
ஒவ்வொருமுறையும் தகப்பனும், அண்ணனும் வெளியே சென்றுவிட்டு உள்ளே வரும் பொழுதெல்லாம் செத்து பிழைக்கும் நிலை தான் மேகாவிற்கு.
எங்கே மாப்பிள்ளை என்று யாரையேனும் அழைத்துக்கொண்டு வந்துவிடுவார்களோ என பயந்துகொண்டே இருந்தாள்.
தன்னிடம் தாயோ, அண்ணியோ ஏதேனும் பேச அழைக்கும் நேரமெல்லாம் வியர்த்து போய்விடும்.
மூச்சை அடக்கியபடி அவர்கள் எதற்கு அழைத்தார்கள் என தெரியும்வரை பலமுறை துடித்து அடங்கும் அவளிதயம்.
அன்றும் அப்படி அமர்ந்துகொண்டு பேச்சில் இருக்க வாசலில் கார் சத்தம் அமுதனும், பல்லவனும் வந்துவிட்டதாக தெரிவித்தது.
“வந்துட்டாங்க போல….” என மலர் எழுந்து உணவை எடுத்து வைக்க செல்ல மேகா வாசலை பார்த்தபடி கையை பிசைந்துகொண்டு அமர்ந்திருந்தாள்.
“என்ன மேகா?…” என்று மோனிகா அழைக்கவும்,
“அண்ணி…” என்று திடுக்கிட்டு பார்த்தாள் அவளின் அந்த மேகா என்ற விளிப்பில்.
“என்ன, என்னன்னு கூப்பிட்டீங்க?…” என்று கேட்பதற்குள் வியர்த்துவிட்டது.
“ஹ்ம்ம், சும்மா கூப்பிட்டு பார்த்தேன். ஏன் இந்த பேர்ல கூப்பிட கூடாதா?…”
“இல்ல இதுவரைக்கும் யாரும் அப்படி கூப்பிட்டதில்லை. அதான்…”
“ஓஹ், யாருமே கூப்பிட்டதில்லையா?…” மோனிகா மீண்டும் கேட்கவும் மேகா மௌனமாக இருந்தாள்.
“ஆனா நல்லா இருக்குல…” என்று சொல்ல அவளின் எண்ணம் அதிரனிடம் ஓடியது.
“ஆமா…” என்றவள் சொல்லும் ஏக்கத்துடன் அவனை கொண்டே இருக்க மோனிகாவிற்கு பாவமாய் இருந்தது.
“இனிமே நான் கூப்பிடறேன்..” என்ற மோனிகாவை,
“வேண்டாம் அண்ணி. நீங்க எப்பவும் போல கூப்பிடுங்க…” என்றாள் அவசரமாய் மறுத்து.
அதற்குள் அமுதனும், பல்லவனும் உள்ளே வந்துவிட்டனர். அஷ்வின் காலை கட்டிக்கொள்ள எழுந்து ஓட பல்லவன் மேகாவை பார்த்தான்.
“சாப்பிட்டியா?…” என வந்ததும்.
“சாப்பிட்டேன் ண்ணா…”
“அப்பறம் என்ன? போய் படு…” என விரட்ட,
“எதுக்கு வந்ததும் அவ மேல கோவப்படறீங்க?…” என்று மோனி கேட்க,
“நீ வாயை மூடு…” என்றான் அதட்டலாக.
“வரு அண்ணன் சொல்றேன்ல. உள்ள போ…” என்றான் பல்லவன் சற்றே கோபத்தை குறைத்து.
அதற்கு மேல் அங்கே இருக்க முடியாமல் மேகா உள்ளே சென்று கதவை சாற்றிகொண்டாள்.
“இதுக்குதான் வேண்டாம்ன்னு சொன்னேன் கேட்டீங்களா? இப்படி அவனை போய் ஷூட்டிங் ஸ்பாட்ல பார்க்கனுமா? இப்படி பேசறான்னா அவனுக்கு எவ்வளோ திமிர் இருக்கனும்?…” என்று பல்லவன் சொல்ல,
இதனை சொல்லும்பொழுது மேகா கதவை திறந்து வந்து கேட்டும்விட படக்கென்று திரும்பியவன்,
“என்ன வரு?…” என்றான்.
“இல்ல, ரூம்ல தண்ணி இல்லை. அதான் எடுக்க வந்தேன் ண்ணா…” என்றவள் நடுக்கத்துடன் கிட்சனிற்கு சென்றாள்.
‘அதிரனை பார்க்க சென்றனரா? ஏன்? அங்கே என்ன நடந்தது? அதிரன் என்ன பேசினான்? எதுவும் புரியவில்லை.
ஆனால் உடலெல்லாம் வியர்த்து போனது பயத்தில். அதே நடுக்கத்துடன் தண்ணீரை பிடித்துக்கொண்டு யாரையும் பார்க்காமல் அறைக்குள் நுழைந்து கதவை சாற்றிக்கொண்டாள்.
அதற்கு மேல் அங்கே என்ன நடக்கிறது எதுவும் கேட்கவில்லை. கட்டிலில் வந்து அமர்ந்தவள் என்ன செய்வதென்று எதுவும் தெரியவில்லை.
படபடப்பும், பதட்டமும் அதிகமாக மேகாவை வேறு எதுவும் யோசிக்க விடவில்லை.
தலையும் புரியாமல், வாலும் புரியாமல் எதற்கு இந்த திடீர் சந்திப்பு? அதிரனை ஏன் சந்திக்க வேண்டும்? அவளுக்கு தலையே வெடித்துவிடும் போலானது.
ஒருவேளை அவன் தான் வர சொல்லியிருப்பானோ என்று யோசித்து யோசித்து குழம்பி போனாள்.
வீட்டினரிடம் நிச்சயமாக இதனை வெளிப்படையாய் பேசவும் முடியாது, கேட்கவும் முடியாது.
தன்னை என்ன நினைப்பார்களோ? என்று வேறு அச்சம் பிறக்க யோசித்துக்கொண்டே இருந்தவள் அதிரனிடமே கேட்டுவிடுவது என்று தீர்மானத்திற்கு வந்துவிட்டாள்.
அந்த நொடி அவன் தன்னை அவனாக அழைக்க மாட்டேன் என்றதும், தான் அழைத்தால் மட்டுமே தன்னை தொடர்வதாக சொல்லியதும் மறந்து போனது.
அதுவே அவளுக்கு கடைசி வாய்ப்பு என்றதும் கூட மறந்துவிட்டிருந்தாள் இந்த களேபரத்தில்.
அவனின் எண்ணும் இல்லாமல் எதில் அழைக்க என யோசித்து யோசித்து உடனே அவனின் இன்ஸ்டாகிராம் ஐடிக்கு சென்றாள்.
அதிரனின் அபிஷியல் ஐடியை தேடி எடுத்தவள் உடனே அழைப்பையும் விடுக்க நிகழ்வுகளின் ஆரம்பமாய் இந்த இன்ஸ்டா லைவ் ஞாபகம் வர உடனே அழைப்பை துண்டித்துவிட்டு அமர்ந்துவிட்டாள்.
அழைப்பு சென்றிருக்குமோ? மீண்டும் வேண்டாத வேலை பார்த்துவிட்டோமோ என்று யோசித்துக்கொண்டிருக்க அதிரன் அவளுக்கு அழைத்துவிட்டான்.
ப்ரைவேட் நம்பர் அவளின் மொபைலில் மினுங்கி சிணுங்க ஒரு பெருமூச்சுடன் எடுத்தாள் மேகா.
“இன்ஸ்டா ஐடிக்கு கால் ட்ரை பண்ணியிருந்தியா மேகா?…”
“ஹாங், ம்ம்ம்…” என்றாள் சின்ன குரலில்.
“அந்த ஐடி ஹர்ஷத் தான் ஹேண்டில் பண்ணுவான். நீ கால் பண்ணவும் எனக்கு பார்வட் பண்ணிட்டான்….” என்றதும் அவனிடம் என்ன பேச அழைத்தோம் என்றதே மறந்துவிட்டது.
“என்ன இந்நேரம் கால் பண்ணியிருக்க? ஏதாவது சொல்லனுமா?…” எத்தனை முயன்றும் அவன் குரல் வெளிப்படுத்திய காதலை அவனால் மறைக்க முடியவில்லை.
அதில் உறைந்துபோய் அமர்ந்திருந்தாள் மேகா. எத்தனை ஆசையுடன் கேட்கிறான்? இவனிடம் என்னால் சொல்ல முடியவில்லையே? என மருகி அமர்ந்திருந்தாள்.
“மேகா…” அதிரன் அழைக்க,
“அப்பாக்கிட்ட என்ன சொன்னீங்க?…” என்றாள் சுதாரித்துகொண்டு.
“ஏன்?…”
“அப்பா இன்னைக்கு உங்களை பார்க்க வந்தாங்களாம்…”
“ஏன் அவங்க வந்தது உனக்கு தெரியாதா?…”
“இல்லையே. சொல்லலை, இப்பவுமே என்னை உள்ள போக சொல்லிட்டு தான் பேசறாங்க….”
“ஓஹ்…”
“அப்பாட்ட என்ன பேசினீங்க? அண்ணா வேற ரொம்ப கோபமா இருந்தாங்க?…”