அதிரன் வர சொல்லிவிட்டான். ஒப்புக்கொண்டு அமர்ந்திருந்தவளுக்கு எப்படி செல்வதென்று தெரியவில்லை.
மேகா அறையை விட்டு இன்னும் வெளியேறவில்லை. அதுவும் முதல்நாள் மோனிகா சொல்லி சென்றது பெரிதாய் மனதை கலக்கி இருந்தது.
செல்லாமலும் இருக்க முடியாமல், எப்படி போவதென்றும் தெரியாமல் பயத்துடன் இருந்தவள் எழுந்து குளித்து கிளம்பி வெளியே வந்தாள் தனது பேக்குடன்.
“என்ன வரு? எங்க கிளம்பிட்ட?…” என மலர் மகளை பார்க்க மோனிகாவிற்கு பதட்டமும், கூடவே யாருமறியாமல் சிரிப்பும் வந்தது.
தான் செய்யாததா? அதிலும் மேகா முகத்தை வைத்துக்கொண்டு நின்றவிதம் இன்னும் புன்னகையை தந்தது.
‘எப்படி நிக்கிறா? விட்டா இவளே சொல்லிருவா போல? லவ் பண்ண கூட தெரியலை’ என மனதிற்குள்ளேயே தலையிலடித்துக்கொண்டாள் மோனிகா.
‘இவளை சொல்லி என்ன செய்ய? சும்மா கால் பண்ணேன், லைன் கிடைக்கலைன்னு சொன்னதுக்கே நம்பிட்டு இன்னும் அதை யோசிக்காம இருக்கா? இவளுக்கு என்னன்னு சப்போர்ட் பண்ண?’ மோனிகாவிற்கு மேகாவின் பயம் தான் பயத்தை தந்தது.
“கோச்சிங் சென்டருக்கும்மா…” மலரிடம் நடுக்கத்துடனே பதில் சொல்ல பார்வை மோனிகா பக்கம் திரும்பவே இல்லை.
“இப்பவா? என்ன திடீர்ன்னு கிளம்பிட்ட?…” மலர் மகளை விடாமல் கேட்டு சாப்பிட அழைத்து சென்றார்.
மேகாவிற்கு பயமும், பதட்டமும் அதிகரிக்க வியர்க்க ஆரம்பித்தது. மலர் அவளின் கையை பிடித்து அமர வைத்தவர்,
“முதல்லையே சொல்லியிருந்தா அண்ணனை கொண்டு போய் விட சொல்லிருப்பேன்ல? இப்ப ரெண்டுபேரும் வீட்டில இல்லை….” என்றார் மலர்.
மூன்று விரல்களில் ஆழமாய் கீறல் இருக்க இட்லியை பிய்த்து எடுக்க முடியாமல் கையை உதறினாள் மேகா.
“இரு இரு. கைல காயத்தோட நீ என்ன சாப்பிட? அதுவும் சூடா இருக்கு…” என்று மலர் எடுத்து ஊட்டிவிட கண்ணீர் வந்தது.
“வலிக்குதா? அதுக்கு தான் சூடா தொடாதன்னேன்…” என்றபடி அவளின் விரலை பற்றி ஊதிவிட மேகாவின் மனநிலை மோனிகாவிற்கு புரிந்தது.
இதை எல்லாம் கடந்து வந்தவள் தானே? மேகாவை கவனித்தபடியே அவள் இருக்க அந்த பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலையை குனிந்தவண்ணம் அன்னை ஊட்ட வாங்கிக்கொண்டு இருந்தாள்.
இரண்டு இட்லிக்கு மேல் அவளால் அங்கமர்ந்து உண்ண முடியவில்லை. தொண்டை விக்கிக்கொள்ள மலர் வேகமாய் தண்ணீரை எடுத்து நீட்டினார்.
“போதும்மா…” என சொல்லி மேகா நீரை குடிக்க,
“என்ன போதும்? அதுவும் நேத்தும் சரியா சாப்பிடலை. நைட் தலைவலி. கையெல்லாம் வேற கிழிச்சுட்டு. ஒழுங்கா சாப்பிடு பார்த்துக்கோ…” என அதட்டியவர்,
“எதுக்கு த்தை இவ்வளோ டென்ஷன். விதிப்படி தான் எதுவும் நடக்கும். டென்ஷன் ஆனா மட்டும்?…” என்றவள்,
“நான் இந்த குடும்பத்துக்கு வருவேன்னு நீங்க நினைச்சீங்களா என்ன? இல்லைல. அதுமாதிரி தான்….” என்று மோனிகா சமாதானமாய் பேசினாள் பொதுவாக.
மேகா இன்னுமின்னும் மனதளவில் பலமிழந்துகொண்டு இருந்தாள் இவர்களின் அன்பிலும் பேச்சிலும்.
“நீ என்ன சொல்ற மோனி? அதுக்குன்னு என்னவும் நடக்கறதா?…” மலர் கேட்க,
“என்னவும் நடக்கும் தான். ஆனா நடக்கிறது நல்லதா இருக்கனும்னு வேணும்னா வேண்டிக்கலாம். எந்த ஒரு விஷயமும் நடக்கும் போது வெறும் கெட்டது மட்டும் இருக்காது. அதுலயும் நமக்கே தெரியாம ஒரு நல்லது இருக்கும்…”
இப்போதும் பூடகமாக பேச மலருக்கு புரியவில்லை. மேகாவிற்கு இப்போது தெளிவாகிவிட்டது.
“என்னவோ சொல்ற. ஆனா பாரு இவளை…” என மகளை காண்பிக்க,
“விடுங்க த்தை. அவ போய்ட்டு வரட்டும். பசிக்கலையா இருக்கும். அதோட ரொம்ப நாள் கழிச்சு பார்க்க போறா…” என்றதும் பட்டென்று மேகா மோனிகாவை பார்க்க,
“கோச்சிங் சென்டர்ல இருக்கறவங்களை சொன்னேன். போய்ட்டு வரட்டும். கவனம் பாடத்துலயும் இருக்கனும். தன்னை பார்த்துக்கறதுலையும் இருக்கனும்…” என்றும் சொல்லி மேகாவை அழுத்தமாய் பார்த்தாள்.
“சரி விடு…” என்ற மலர்,
“மதியத்துக்கு கொண்டு போறியா? முதல்லையே சொல்லியிருந்தா லஞ்ச் செஞ்சிருப்பேன்….”
“அவ வந்திருவான்னு தான் நினைக்கேன் த்தை..” அதற்கும் மோனியே பதில் சொல்ல மேகாவிற்கு சென்றே ஆக வேண்டுமா என்றானது.
பாம்பின் கால் பாம்பறியும் என்பதை போல மேகா என்ன நினைப்பாள் என்று சரியாய் மோனி கணித்து பேச பதட்டம் கூடிக்கொண்டே இருந்தது.
“அப்படியா வரு? வந்திருவியா?…” மலர் மகளிடம் கேட்க,
“ஆமாம்மா…” என்றாள் வேறு என்ன சொல்வதென்று தெரியாமல்.
“நான் தான் சொன்னேன்ல, ரொம்ப நாள் கழிச்சு போறா. என்னன்னு கேட்டுட்டு வந்திருவா…” என சொல்லி மேகாவை பார்த்து கண்சிமிட்ட இன்னும் திடுக்கிட்டாள் மேகா.
“சரி சரி, பார்த்து போய்ட்டு வா…” என்றவர்,
“ஆமா கையில இருந்த பேண்டேய்ட் எங்க?…” என கேட்க,
“குளிக்கும் போது தண்ணி பட்டுச்சுன்னு எடுத்துட்டேன்…” என்றதும் மோனிகா வந்து காயத்தை துடைத்துவிட்டு வேறொன்றை போட்டுவிட்டாள்.
“கிளம்பு…” என சொல்ல சொல்ல மேகாவிற்கு கால்கள் அங்கிருந்து நகர்வேனா என்றது.
“இங்க வா…” என அவளை அழைத்து வந்த மோனி யாரும் அறியாமல்,
“எல்லாம் தெரியும். இப்ப பேச வேண்டாம். போய்ட்டு வா. பத்திரம்…” என்று சொல்ல வாசலுக்கு இறங்கினாள்.
வழக்கமாக ஆட்டோ ஸ்டான்ட் வந்து செல்பவள் அன்று அங்கே செல்லும் முன் வழியில் இருக்கும் ஆட்டோவில் ஏறிக்கொண்டாள்.
யாரும் தன்னை கவனித்து விடுவார்களோ என்று என்றுமில்லாத பதட்டம் சூழ்ந்துகொண்டது.
முதல்முறை அதிரனுடன் இணைந்து போட்டோ வந்த பொழுது கூட இத்தனை பதறவில்லை.
எதையும் தைரியமாய் எதிர்கொண்டாள். ஆனால் இப்போதிருக்கும் மனநிலையே வேறல்லவா.
விரல்கள் எல்லாம் லேசாய் நடுங்க அவளின் மொபைல் சப்தம் கொடுத்தது அதிரனின் அழைப்பை ஏற்று வந்திருக்கிறேன் என்று. எடுத்து காதில் வைக்க,
“எங்க இருக்க மேகா?…” என்றான் ஆர்வமாய் அதிரன்.
“நான் ஆட்டோல வந்திட்டிருக்கேன்…”
“ஓகே உன் சென்டருக்கு ஆப்போஸிட் ஸ்ட்ரீட்ல இருந்து செகேன்ட் மெயின்ல கார்ல வெய்ட் பன்றேன். எப்படியும் உன் ரூட்ல என்னை க்ராஸ் பண்ணி தான் போகனும்…” என்று சொல்ல,
“கார்லயா?…” திகைத்த குரலில் கேட்டாள்.
“மேகா…”
“இல்லை, கார்ல, கார்ல வேண்டாம்…” என குரல் ஆட்டோக்காரருக்கு கேட்டுவிடாமல் கிசுகிசுப்பாய் வர அதிரனுக்குள் மாயாஜாலங்கள்.
“மேகா…” என்றவன் தலையை கோதிக்கொள்ள,
“ம்ஹூம், வேண்டாமே ப்ளீஸ்…” என்றாள் மீண்டும்.
ஒருநொடி மௌனமானவன் வேகமாய் யோசித்து முடித்தான். மேகாவையும் இதில் தவறு சொல்ல முடியாதே.
“ஓகே, நீ சென்டருக்கு போ. நான் கால் பன்றேன்…” என்றதும்,
“எனக்கு பயமா இருக்கு…”
“மேகா, நான் இருக்கேன்ல. நீ போ நான் வரேன்…”
“என்ன சென்டருக்கா?…” சுத்தமாய் ஓய்ந்து போனாள்.
இருக்கும் பிரச்சனைகள் பத்தாதா என தோன்றியது. இதில் சென்டருக்கே வந்து பேசினால் முடிந்தது கதை என்று நினைத்தாள்.
“அங்க வேண்டாம். அங்க எல்லாரும் பார்த்தா அவ்வளோ தான். வீட்டுக்கு தெரிஞ்சிரும்…”
“ஓஹ்…” என்றவனுக்கு மேகாவை எப்படி சந்திப்பதென்றே தெரியவில்லை.
“ஓகே, நான் உன்னை பார்க்கனும். என்ன செய்யலாம் நீயே சொல்லு…” என்றான் அதிரன்.
“நான், நான் என்ன சொல்ல?…”
“கார் சேஃப் தான் மேகா. என்கிட்டே என்ன பயம்?…” என கேட்க இன்னும் அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
“ஓகே, நான் அங்க தான் இருக்கேன். வெய்ட் பன்றேன். நீ டிஸைட் பண்ணு…” என்று லைனில் அவன் மௌனம் கொள்ள ஐந்து நொடிகூட கடக்க முடியவில்லை மேகாவால்.
“உங்க கார்ல நான் இருக்கறதை யாரும் பார்த்துட்ட?…”
“வாய்ப்பில்லைன்னு தான் நினைக்கேன்…” அவன் வலிந்து அவளை சமாதானம் செய்ய மேகாவால் அவனை தவிர்க்க முடியவில்லை.
“ஓகே, ஆனா இதுதான் லாஸ்ட். சரியா?…” என்றதும் அதிரன் சிரித்துவிட்டான்.
“என்ன லாஸ்ட்? இதுதான் பர்ஸ்ட். லாஸ்ட் சொன்னா அடுத்து பார்த்துக்க வேண்டாமா?…”
“நீங்க மாத்தி பேசறீங்க. இப்படித்தான் என்னையே கால் பண்ணவும் வச்சீங்க…” என்றதும் அவன் புன்னகை சத்தம் இவளை இம்சித்தது.
“சரி வச்சிடறேன். இன்னும் இருபது நிமிஷத்துல வந்திருவேன்…” என்றாள்.
“அதுக்கு ஏன் காலை கட் பண்ணனும் மேகா? நான் இங்க தனியா இருக்கேன். பேசு…” என்றான் அவளிடம்.