வீட்டினர் தன் மீது வைத்த நம்பிக்கைக்கு பாதகம் செய்வதை போல தன் செயல் இருக்க அதிரனுடனான இந்த சந்திப்பு கூட அவளுக்கு ஓரத்தில் முள்ளாய் குத்தியது.
ரசிக்கவும் முடியாமல், ரசிப்புடன் கசப்பாய் தன் செயல் மனதில் இறங்குவதையும் தடுக்க முடியாமல் அல்லாடுபவளை கனிவுடன் பார்த்தான்.
“ரொம்ப கஷ்டப்படுத்தறேனா மேகா?…” என்று கேட்டவன் குரலில் இருந்த வருத்தத்தை மேகாவால் ஜீரணிக்க முடியவில்லை.
“இது இன்னும் கஷ்டமா இருக்கு. இன்னும் எத்தனை நாள் இப்படியே உங்களுக்கும், வீட்டுக்கும் பார்த்து நான் இருக்கறது?…” என்று தலையை தாங்கிக்கொண்டவள்,
“நீங்க ஏன் என்னை பார்த்தீங்க?…” என்றாள் மீண்டும் முதலில் இருந்து.
“ஓஹ்…” என்று சிரித்தவன்,
“அதான் சொன்னேனே? என் கண்ணுக்கு நீ அழகா தெரிஞ்ச. அப்பவே பிடிச்சது. மேகாவை இன்னும் இன்னும் இப்ப பிடிக்குது. என்ன பண்ண?…” என்றான்.
அவளின் உணர்வுகள், தவிப்பு எல்லாம் புரிந்தாலும் தன்னால் அவளை விட்டும் குடுக்க முடியாமல் இப்போது அவள் காதலை அறிந்த பின் அவளிடமிருந்து தன்னை தள்ளியும் வைப்பது பெரும் அவஸ்தைக்குள்ளாக்கியது அதிரனை.
முடிந்தளவு தன் பிடிவாதத்தை அவளிடம் காண்பிக்க கூடாதென நினைக்க நினைவுக்கும், நிகழ்விற்கும் இடையில் காதலால் முரண்பட்டு நின்றான் அதிரன்.
மீண்டும் அவள் உணர்ச்சிவசப்பட்டுவிட்டாள் என்று புரிந்து போக இப்போது என்ன செய்து ஆற்றுப்படுத்துவதாம்?
அப்போது தான் ஞாபகம் வந்தவனாக எழுந்து டேஷ்போர்ட் பக்கம் கைகளை நீட்ட மேகா நகர்ந்து ஜன்னலை ஒட்டி அமர இதழ்களுக்குள் புன்னகை அரும்பியது.
“மேகம் தள்ளி போகுதே?…” என்றபடி அந்த பாக்ஸை எடுத்து அமர்ந்தான் இருக்கையில்.
அப்போதுதான் அவனின் உடையை கவனித்தாள் மேகா சாதாரண டிஷர்ட், ட்ராக் பேண்ட் சகிதம் தான் அமர்ந்திருந்தான்.
அவன் எழுந்தமர்ந்த இடத்தில் சிறிய அளவிலான டர்க்கி டவல் ஒன்று சுருண்டு இருந்தது.
“ஜாக்கிங் போயிருந்தீங்களா?…” என்றாள் அவனிடம்.
“ஹ்ம்ம், ஏன்?…”
“இல்ல உங்க ட்ரெஸ். அதான்…” என சொல்லி அதிகமாய் கேட்டுவிட்டோமோ என பார்வையை தாழ்த்திக்கொள்ள,
“மேகா என்கிட்டே என்ன வேணாலும் கேட்கலாம். மேகாவுக்கு மட்டும் தான் அந்த ரைட்ஸ். சரியா?…” என்றான் குறுஞ்சிரிப்புடன்.
சின்னதாய் வெட்க புன்னகை மிளிர தலையசைத்து ஒப்புதலாய் தன் மனதை காண்பிக்க,
“கேளேன். நமக்கு எப்போ கல்யாணம், கல்யாணத்துக்கப்பறம் எத்தனை ஹ்ம்ம்…” என சொல்லி நிறுத்திவிட்டு குறும்புடன் குறுகுறுப்பாய் பார்க்க உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை ஒரு உணர்வு தலைதெறித்து ஓடியது மேகாவிற்கு.
“ப்ளீஸ்…” என்றாள் மெதுவாய்.
“ஓகே ஓகே. சில் மேகா பொண்ணே…” என்றவன் தனது கையில் இருந்ததை நீட்டினான்.
“என்னதிது?…” அதனை வாங்காமல் பார்த்தாள்.
“அம்மா இதை உனக்கு குடுத்து விட்டாங்க. இந்த மீட்டாச்சும் நமக்கு நல்லா இருக்கனும்னு ஸ்வீட் குடுத்துவிட்டாங்க…” என்றான்.
அதிர்ச்சியில் வாயடைத்து போனவள் கையை வாயில் வைத்து திகைத்து போய் பார்க்க அந்த பாவனையில் இன்னும் சிரிப்பு கூடியது அதிரனுக்கு.
அதில் குண்டு குண்டாய் குலோப்ஜாமூன் சர்க்கரைபாகில் மிதந்து கொண்டிருந்தது.
“எடுத்துக்கோ…” என்றவன் ஸ்பூனால் ஒரு ஜாமூனின் பாதியை உடைத்து தனக்கு எடுத்துக்கொண்டவன் அவளுக்கும் அந்த அரை ஜாமூனை நீட்ட ஸ்பூனை வாங்க கையை நீட்டினாள்.
“கைல அடி பட்டிருக்கே. வாங்கிக்கோ…” என்றவன் முதன் முதலாய் அவளுக்கு தர கூச்சமும், வெட்கமும் போட்டி போட்டாலும் அத்தனையும் மீறி காதல் ஒன்றே அங்கு பிரதானமானது.
“ஸ்வீட் ரொம்ப சாஃப்ட் இல்லையா?…” என்றான் தலை சாய்த்து புன்னகையுடன்.
எதை சொல்கிறான் என்றே வரையறுக்கமுடியாத பாவனையில் அதிரன் இருக்க மேகாவிற்கு தன்னையும் சேர்த்தென்று புரியத்தான் செய்தது.
“வீட்டுக்கு கொண்டு போகவேண்டாம். இங்கயே சாப்பிடு…” என்று சொல்ல அடுத்ததை தானே எடுத்துக்கொண்டவள் ரசித்து உண்ணுவதை பார்த்தவன்,
“லேசா மயக்கம் வரலையா?…” என்று கேட்கவும் பட்டென்று புரையேறியது மேகாவிற்கு.
“ஹேய் மெதுவா…” என்று தலையில் தட்ட போக வேகமாய் நழுவி பின்னால் சாய்ந்தாள் மேகா.
“ஹ்ம்ம்…” என்று தலையசைப்புடன் சிரித்துக்கொண்டவன் தானும் அதை போல் சாய்ந்து அவளையே அணுவணுவாய் ரசிக்க,
“போதும்…” என்றாள் பாக்ஸை மூடி வைத்து.
“பயந்துட்டியா?…” என்றான் அட்டகாச சிரிப்போடு அவளின் முகம் கண்டு.
அதிரன் அப்படி சிரித்து இன்றுதான் முதல்முறை காண்கிறாள். படத்தில் பார்த்திருக்கிறாள், ஆனால் அது வேறு இது வேறு.
எப்படி தன்னால் அவனை அவனின் உண்மை தன்மையை பிரித்தறிய முடிகிறது என்பதில் இன்னுமே ஆச்சர்யம்.
ஆனால் அவனை அவதானிக்கிறாள். ஆராதிக்கிறாள். அவனின் அசைவுகளை அனுபவித்து அகத்திற்குள் ஒளித்துக்கொள்கிறாள்.
“நான் கிளம்பட்டுமா?…” என மேகா கேட்க அவனுக்கு சற்றும் அனுப்ப மனமில்லை.
“ஹ்ம்ம்…” என்று மட்டும் சொல்ல இதை என்னவென்று எடுப்பது என பார்த்தாள்.
“கல்யாணம் பண்ணிக்கலாமா மேகா?…” மீண்டும் கேட்டுவிட்டான்.
அவளால் தான் அதற்கு பதில் சொல்லமுடியவில்லை. இந்த மௌனம் அவனுக்கு இன்னும் காதலை கூட்டியது.
உள்ளுக்குள் அலையடித்து ஆர்ப்பரிக்கும் உணர்வு, சுகமாகவும், வதையாகவும் அவனை பந்தாட,
“தவிக்க விடற மேகா…” என்றான் அவளை பார்த்தபடி.
மேகாவிற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திருதிருத்து விழிக்க மூச்சுவாங்கியது அவனின் காதலில்.
“மேகா…” என்றவன் வலது கை தன்னை நோக்கி உயர மீண்டும் தனது காயம்பட்ட கையை காண்பிக்க சொல்லி கேட்கிறானோ என்று தோன்றியது.
அவளின் கைகள் உயர்வதற்குள் அதிரனின் கையின் மற்ற விரல்கள் அவனின் உள்ளங்கையில் குவிந்துகொள்ள சுட்டுவிரல் மட்டும் தன்னை நோக்கி நெருங்கியது.
விழிகள் லேசாய் சுருங்கி, மீசைக்கடியில் கவர்ந்திழுக்கும் புன்னகையுடன் அதிரன் அந்த விரலை மேகாவின் இடது தோள்பட்டைக்கும் கழுத்திற்கும் இடையேயான மச்சத்தின் அருகே கொண்டு சென்றான்.
“இது என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது. டச் பண்ணிக்கவா?…” என்று கேட்டதும் மூச்சை இழுத்து பிடித்தாள் மேகா.