“எதுக்குன்னு சொல்லுடா. அவ எங்கட்ட சொல்லிட்டு தான் கோச்சிங் சென்டர் போனா…” மலர் மகனை அதட்டினார்.
“உங்களுக்கு தெரியுமா அவ எங்க போனான்னு?…” என்று ஆத்திரமாய் கண்கள் சிவக்க கேட்க மேகாவின் கால்கள் நின்ற இடத்திலேயே வேரோடிவிட்டது.
“ண்ணா…” என்றவளின் சத்தம் கூட வெளியே வரவில்லை.
அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்க விட்டால் அடித்துவிடுவேன் என்பதை போல பல்லவன் பார்த்தான்.
“உனக்கு அவ்வளோ தைரியமா போச்சோ? பொய் சொல்லிட்டு போற அளவுக்கு?…” என்று கத்த,
“பொய்யா? என்னடா சொல்ற? எனக்கு புரியலையே?…” மலர் மகளையும், மகனையும் மாறி மாறி பார்த்தார்.
“நீங்க கொஞ்ச நேரம் சும்மா இருங்க. பொறுமையா பேசலாம்…” மோனிகா தடுத்துக்கொண்டே இருந்தாள்.
“இவ மேல எவ்வளோ நம்பிக்கை வச்சிருந்தோம். அத்தனையும் சுக்குநூறா உடைச்சுட்டு வந்து நிக்கிறா. இவளை…” என்று பாய அவனின் அந்த வார்த்தையில் வெகுவாய் உடைந்து போனாள் மேகா.
அறையின் கதவை திறந்துகொண்டு மோனிகா உள்ளே வர அவளை முறைத்து பார்த்தவன்,
“உனக்கு தெரியுமா? வரு அவனை தான் பார்க்க போறான்னு?…” என்று கேட்கவும் அவளிடம் பதிலில்லை.
“ஆனா நிச்சயம் அவனோட ப்ளான் தான் இது. வரு மனசை மாத்த, கன்வின்ஸ் பண்ணவே வரவழைச்சிருப்பான்…” என்றான் பல்லவன்.
“என்ன நடந்ததுன்னு கோபத்தோட கேட்காதீங்கன்னு உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது?…” என மோனிகா சொல்ல,
“கோபப்படாம எப்படி இருக்க முடியும்? அப்பா ஏதோ யோசிக்காம அவனை போய் பார்த்து பேசினதுக்கு உங்களுக்கு வேண்டாம்ன்னா எனக்கும் வேண்டாம்ன்னு சொன்னான். இப்ப என்னவாம்?…” என்றவன்,
“நிச்சயம் வருவை என்னவோ சொல்லி தான் வரவழைச்சிருக்கனும். இவளும் பைத்தியக்காரத்தனம் பண்ணிட்டா. இவ்வளவு தைரியமா எப்படி போவா இவ?..”
“உங்களுக்கு எப்படி தெரியும்? அதிரனை தான் வரு மீட் பண்ணான்னு…” மோனி கூர்மையாய் கேட்க,
“எல்லாம் அந்த பிரதாப் தான் போட்டோ எடுத்து அனுப்பியிருந்தான். இப்படி வர்ணா இங்க அதிரனை பார்க்க வந்திட்டு போறான்னு சொல்லி…” என்றதும் திகைத்து போனாள்.
“வருவுக்கு நிச்சயம் பண்ணோமே அந்த பையனா?…”
“அவனே தான். என் மூஞ்சிய எங்க கொண்டு போய் வச்சுக்க? பார்த்துக்கோங்கன்னு மட்டும் அனுப்பறான். எனக்கு எப்படி இருந்திருக்கும்…”
பல்லவனின் உணர்வுகளும் புரியத்தான் செய்தது. ஆனால் அவன் கொஞ்சமும் புரிந்துகொள்ளாமல் கோபப்படுகிறானே என்று தான் பார்த்தாள்.
இதையே தாங்க முடியவில்லை. இதில் தங்கை காதலித்து தான் அதிரனை பார்க்க சென்றாள் என்றால் என்ன ஆகுமோ என நினைக்கையில் உள்ளுக்குள் திக்கென்று இருந்தது.
“என்ன என்ன பார்க்கற? உனக்கே ஷாக்கா இருக்குல. அவன் அனுப்பிட்டு பார்த்துக்கோங்கன்னு என்ன அர்த்தத்துல சொன்னானோ? ஆனா எனக்கு செருப்பலடிச்ச மாதிரி இருந்துச்சு. என்ன நினைச்சிருப்பான் நம்ம குடும்பத்தை பத்தி?…”
அமுதினியன் வீடு வந்து சேரும் பொழுதே பல்லவன் புலம்பிக்கொண்டே தான் இருந்தான் அங்கே.
மலர் ஒருபக்கம் அழுதுகொண்டு இருக்க மோனிகா மீண்டும் மேகாவிடம் வந்துவிட்டாள்.
பல்லவனை என்ன செய்கிறான் என காண வரும் பொழுதே மேகாவிடம் எதையும் சொல்ல கூடாதென்று கண்ணை காட்டிவிட்டு தான் வந்தாள் மோனிகா.
எதுவாக இருந்தாலும் அமுதினியன் வரட்டும், அவரே பேசட்டும் என்று பொறுமையுடன் இருந்தாள்.
இந்த சூழ்நிலையை மிக நிதானமாக கையாள வேண்டும் என்று மேகாவை பாதுகாப்பாய் கவனித்துக்கொண்டாள்.
காதல் தைரியசாலியை கோழையாக்கும், கோழையை மூர்க்கமாக்கும். மூர்க்கத்தை மென்மையாக்கும்.
கிறுக்குத்தனங்களையும் உள்ளடக்கிய கிளிஞ்சல் கூடுகளாய் இந்த காதல் வலிமையும், மென்மையும் இணைந்தது.
இங்கே மேகாவின் மென்மை நிச்சயம் வலிமையை கூட்ட போவதில்லை. அவளின் பலவீனம் தன் குடும்பம்.
மோனிகா அறிந்தவரை வீட்டினர் வேண்டாமென்றால் நிச்சயம் தன்னை நிந்தித்துக்கொள்வாள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.