“என்ன அமைதியா இருக்க? இது என் பொண்ணோட வாழ்க்கை. அவளை பிடிச்சு எப்படியோ போன்னு தள்ளி விடற மாதிரி இருக்கு நீங்க செய்யறது…”
“ஆனா பொண்ணுக்கு பிடிச்சிருக்கும் போது நாம எதுவும் செய்ய முடியாதே மலரு?…” என அமுதன்.
அவரால் இதற்கு மேலும் மகளையும் தவிக்க வைக்க முடியாது. தங்களுக்கு, தங்கள் குடும்பத்திற்கென்று பார்த்து அவளை மனதை உடைக்க அவருக்கு விருப்பமும் இல்லை.
அதே நேரம் முழுமையாக ஏற்கவும் முடியவில்லை. ஆனால் இப்போது அதிரனை சென்று பார்த்துவிட்டு வந்திருக்க அது பெரிதாய் பாதித்தது அமுதனை.
மகளை நன்றாக தெரியும். நிச்சயம் அதிரனை மறக்கவும் போவதில்லை. அதே நேரம் தங்களை மீறி அவள் அதிரனுடனான திருமணம் வரை போக போவதும் இல்லை என்று.
விதி. அவரால் வேறு எதையும் யோசிக்க முடியவில்லை. அப்படி ஒன்று தன் மகள் வாழ்க்கையில் அதிரனை கொண்டு வர காரணம் இதுவல்லாமல் வேறென்ன?
‘மேகாவை எனக்கு குடுங்க ஸார்’ என்ற அவனில் பொய்யில்லை. தெரிந்து தானே பேச சென்றேன்.
செல்வம் மோனிகாவும், செல்வமும் அவனுக்கு நிலைமையை விளக்கி இருந்தார்கள்.
நிச்சயம் இதுவரை அவன் மீது எந்த களங்கமும் சொல்ல முடியாது. அப்படி இருக்க மகளை தயங்காமல் கொடுக்கலாம் என்று பேச அமுதனும் ஒருவழியாய் சமாதான நிலைக்கு வந்திருந்தார்.
இங்கே பல்லவனும், மலரும் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. மேகாவை இருக்கும்படி சொல்லிவிட்டு மோனிகா கதவை திறந்து வெளியே வந்தாள்.
“என்ன மாமா சொல்லிட்டீங்களா?…” என்றாள் வரவும்.
“ஆமாம்மா…” என அமுதினியன் தலையை அசைக்க பல்லவன் மனைவியை ஏறிட்டான்.
‘நீ ஏன் சொல்லவில்லை’ என்னும் விதமாய் கண்டனமும், கவலையும் அதில் சரிவிகிதத்தில் இருந்தது.
“உங்க கோபம் தப்புன்னு சொல்லவே மாட்டேங்க. நான் சொல்லாம இருந்ததுக்கு வேணும்னா மன்னிப்பு கேட்டுக்கறேன். அதுக்காக வருவை தண்டிக்காதீங்க. அவ உடைஞ்சு போய்ட்டா…” என மோனிகா சொல்ல,
“காதலிச்சிட்டா யார் என்னன்னு பார்க்காம கல்யாணம் செஞ்சி வைக்கனுமா? என்ன பேசற மோனி நீ?…” மலர் அழுகையுடன் கேட்க அவரிடம் திரும்பினாள்.
“அத்தை நீங்க நடிகன்னு மட்டுமே பார்த்து பேசறீங்க. ஆனா அவங்களும் மனுஷங்க தான். இந்த காலத்துல கெட்டு போகனும்னு நினைக்கவும் நம்ம மனசு தான் வேணும். கட்டுப்பாடா இருக்கனும்னு நினைக்கவும் நம்ம மனசு தான் வேணும்…”
“சரியா சொன்னம்மா மோனி…” என்றார் செல்வம்.
“என்னங்க?…” என பல்லவனை அழைத்தவள்,
“இப்ப வருவோட மனசு உங்களுக்கு புரிஞ்சிருக்கும். கொஞ்சம் பொறுமையா யோசிங்க. அவளை வருத்தபடற மாதிரி வார்த்தையை விட்டு பேசாதீங்க…” என்றாள்.
தனது திருமணத்தில் தன் வீட்டில் அனுபவிக்காததா? இத்தனைக்கும் தனது அக்காவும், அண்ணனும் தன்னை பேசிய வார்த்தைகளை இன்றளவும் மறக்க முடியுமா?
ஏதேனும் விஷேஷமென்றால் கூட மூன்றாவது மனிதரை போல சிரிப்புடன் கடந்துவிடும் அந்த கசப்பு மனதை விட்டு அகலவில்லையே?
பல்லவனுக்கும் அந்த வேதனை தெரிந்திருந்ததே. காதல் கை கூடினாலும் சில விஷயங்கள் விஷமாய் அப்படியே பதிந்தது பதிந்தது தானே?
“புரியுதா?…” என்றாள் மோனிகா.
“ஹ்ம்ம்…” என்றவன் சிறிது நேரம் கண் மூடி அமைதியாய் இருந்தான்.
“பல்லவா, நாங்க விசாரிச்சுட்டோம் ப்பா. நீ பயப்படற அளவுக்கு எதுவும் இல்லை. யோசிச்சு பாரு. அந்த பிள்ளை இதுவரைக்கும் எந்தவிதத்துலையும் நம்ம வருவை தொந்தரவு செய்யலை…”
“நம்ம குடும்பத்தையும் தொந்தரவு செய்யலை. நம்மளை வற்புறுத்தலை. நம்ம பக்கம் பேசினவங்க எல்லாம் நம்மளை சேர்ந்தவங்க. அவங்க அனுப்பி இல்லை…” என்றார் கூடுதலாக.
“குடுத்தா நல்லா இருக்கும்னு சொல்லி தான் பேசினாங்க. இதுவரைக்கும் அந்த பையன் ஹாஸ்பிட்டல்ல சொன்னதோட சரி. நம்ம முடிவுக்காக தானே காத்திருந்தாங்க…” என்றவர்,
பல்லவன் எழுந்தவன் மீண்டும் அமர்ந்துவிட்டான் இருக்கையில். முகத்தில் அத்தனை சோர்வு.
தங்கை காதலித்தாளா? அதுவும் இத்தனைக்கு பின்னுமா? எப்படி அவன் மீது இந்த விருப்பம் முகிழ்த்தது?
யோசனைகள் இதனை சுற்றியே இருக்க மேகா வந்தமர்வதை அத்தனை கூர்மையாய் பார்க்க அவர்கள் முன்பு நடுக்கத்துடன் அமர்ந்தாள்.
முகமெல்லாம் அழுது ஓய்ந்திருந்தது. இன்னும் விசும்பல் குறையவில்லை அவளிடத்தில்.
யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் மேகா உடலை குறுக்கிக்கொண்டு அமர்ந்திருக்க தங்கையை அப்படி காணமுடியவில்லை அவனால்.
“வரு எழுந்திரு…” என்று எழுப்பி அவளின் கையை பிடித்து அழைத்து அறைக்குள் செல்ல பின்னோடு ஓடினாள் மோனிகா.
மற்றவர்கள் அந்த அறை வாசலில் நின்றுகொண்டார்கள். அவளை கட்டிலில் அமர வைத்து எதிரே தானும் அமர்ந்துகொண்டான்.
“நீ போ நான் பேசறேன்…” என சொல்ல மோனிகா நகரவில்லை.
மேகாவும் அவளின் கையை பிடித்துக்கொண்டு என்ன பேசுவானோ என்று கண்ணீருடன் அண்ணனை நிமிர்ந்து பார்க்கவே இல்லை.
“எங்களுக்கு தெரியாம அதிரனோட பேசிட்டிருக்கியா நீ? எத்தனை நாளா?…” என்றான்.
எத்தனை முயன்றும் அவனால் கடுமையாக பேசாமல் இருக்க முடியவில்லை. அவனறியாமல் அந்த குரலில் கோபம் வந்து ஒட்டிக்கொள்ள மோனிகாவின் இடையை கட்டிக்கொண்டாள் மேகா.
“இனிமே அவரை பார்க்கமாட்டேன். கண்டிப்பா பேசமாட்டேன். ஆனா கோவப்படாதீங்கண்ணா. என்னால முடியலை. என்னை இப்படியே விட்டுடுங்க. எனக்கு கல்யாணமும் வேண்டாம். ப்ளீஸ்…” என்று சொல்லி பெருங்குரலெடுத்து அழுதுவிட்டாள்.
அவளின் அழுகை அனைவரையும் உலுக்க இப்படி அழுது பார்த்திராதவர்கள் திகைத்துவிட்டனர்.
“சத்தியம், சத்தியமா உங்களை மீறி எதுவும் செய்யமாட்டேன். ப்ளீஸ் அண்ணா…” என அவளின் கேவல் வெடித்து சிதற அது அதிரனை தொட்டது?
அந்த சத்தத்தில் அனைவரின் கவனமும் மொபைலுக்கு திரும்ப மேகாவும் கண்ணீருடன் அதை பார்த்தாள்.
‘ஒரு விஷயம், திரும்ப திரும்ப சொல்றேன். நான் எப்பவும் உன்னோட தான் மேகா. எனக்கு நீ மட்டும் தான்’ என்ற குரலில் இருந்த தீவிரமும், அவன் பேச வந்ததும் இப்போது மேகாவிற்கு விளங்கியது.
அவனுக்கு ஏதோ வகையில் தெரிந்திருக்கிறது. இப்போதும் தன்னை அழைத்திருக்க இன்னும் அழுகை பொங்கியது.
பல்லவன் சற்றே சாய்ந்து கைக்கெட்டும் தூரத்தில் இருந்த அந்த மொபைலை எடுத்தான்.
நம்பர் எதுவும் இல்லாமல் இருக்க மேகாவை பார்க்க அவள் பார்வை தவிப்புடனும், ஏமாற்றத்துடனும் அலைபாய்ந்தது.
இத்தனை தூரம் பார்வையில் பிரிவை, வலியை வெளிப்படுத்துமளவிற்கு தங்கையிடம் மாற்றம் அன்று தான் கண்டிருந்தான்.
எப்படி இதனை கவனிக்காமல் விட்டோம் என்று தோன்ற அதனை நினைத்துக்கொண்டே காலை அட்டன் செய்து ஸ்பீக்கரில் போட்டான்.
“மேகா…” உயிரை இழுக்கும் அதிரனின் குரல்.
கேட்பவர்களையும் அவனின் பக்கம் சாய்க்கும் மந்திரக்குரல். இதென்ன காதலாய்? காந்தமாய்?
அனைவருமே அந்த குரலை கேட்டனர். அனைவருமே ஒருவித திகைத்த நிலையில் ஸ்தம்பித்து இருக்க மேகா கதறிவிட்டாள் அவனின் அழைப்பில்.
பேசிவிட கூடாதென்று இரு கைகளையும் வாயில் வைத்து இருக்கமாய் மூடியபடி மேகா அழுது கொண்டே இருக்க,
“மேகா…” அவனின் குரல் இன்னுமே நெஞ்சை பிழிந்தது.
அழுகையை அடக்க முயலும் மேகாவின் கேவல் அவனை அடைய அங்கே ஒருமனநிலையில் இல்லை அதிரன்.
உண்மையில் பேச முடியாமல் தான் இருந்தான் பல்லவனும். இத்தனை தவிப்பும் அவர்களுக்கு தெள்ளதெளிவாய் தெரிய தாளமாட்டாமல் மோனிகாவை எழுந்து அணைத்துக்கொண்டாள் மேகா.
“நான் பேசலை அண்ணி. கட் பண்ண சொல்லுங்க. ப்ளீஸ். நான் அழுதா அவங்க கஷ்டப்படுவாங்க அண்ணி. ப்ளீஸ். ப்ளீஸ். ப்ளீஸ்…” என்று கதற,
“மேகாம்மா, என்னாச்சுடா? நான் அங்க வரேன் இப்போ…” என்றான் அதிரன்.
அதற்கு மேல் பேசாமல் இருக்க முடியாதே? பல்லவன் மனதோடு விழிகளும் கலங்கியது தங்கையின் கண்ணீரில்.
“நான் பல்லவன் பேசறேன்…” என்றான் அதிரனிடம்.
“பல்லவன், நான் தான் மேகாவை பார்க்க வர சொன்னேன். ப்ளீஸ் மேகாவை எதுவும் சொல்லிடாதீங்க…” என்றான் உடனே சஞ்சலமான குரலில்.
தனக்கு வலிக்க வலிக்க அத்தனை அழுகை தன் மேகப்பெண். அந்த கண்ணீர் தன்னால் என்பதே உயிரை அறுத்தது அதிரனுக்கு.