அதிரன் அப்போதே தான் கிளம்பி வருகிறேன் என்றதும் அதிர்ந்து போனான் பல்லவன்.
“என்ன விளையாடறீங்களா? எங்களை நிம்மதியாவே இருக்க விட கூடாதுன்னு முடிவுக்கு வந்துட்டீங்களா?…” என்றான் பல்லவன் உணர்ச்சிவசப்பட்டு.
“பல்லவன், கொஞ்சம் நிதானமா பேசுங்க…” என்ற அதிரன்,
“மேகா நான் சொல்றதை கேட்ப தானே? அழ கூடாது. நான் வரேன். பேசிக்கலாம். இப்பவும் சொல்றேன். எனக்கு நீ மட்டும் தான். எப்பவும் நான் உன்னோட இருப்பேன்…” என்றான் அதிரன் அழுத்தமாய்.
அனைவருக்குமே அவனின் குரல் பயத்தையும், கூடுதலாக இதென்ன உணர்வோ என்றும் தோன்ற வைத்தது.
“மேகா…” மீண்டும் அழைத்தான் அதிரன்.
அவளிடம் கண்ணீரை தவிர வேறில்லை. பதில் வராது என்று தெரிந்தும் அதிரன் அழைத்து,
“சில் மேகா…” என்றான் மெல்லிய சத்தத்தில் புன்னகையுடன்.
அவனின் அந்த சின்ன சிரிப்பும், ஆறுதலும் கூட மேகாவை பலவீனமாக்க யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.
தன்னை என்ன நினைக்கிறார்களோ என்பதும், அதிரன் இங்கே வந்து அவனை எதுவும் சொல்லிவிடுவார்களோ என்றும் கொஞ்சம் கொஞ்சமாய் சிதறிக்கொண்டு இருந்தாள்.
“பல்லவன் நான் கிளம்பும் போது உங்களுக்கு கால் பன்றேன். உங்க நம்பர் என்கிட்டே இருக்கு…” என்று சொல்ல இன்னும் திகைப்பு மாறவில்லை அவனுக்கு.
பல்லவன் போனையே பார்த்துக்கொண்டு இருக்க அதிரன் அழைப்பை துண்டித்துவிட்டான்.
அதிரனின் குரலே அவர்களுக்கு சொல்லாமல் சொல்லிவிட்டது. இனி அவன் எவ்விடத்திலும் தேங்கி நிற்க போவதில்லை என்று.
மலர் தளர்ந்து அமர்ந்துவிட பல்லவன் மேகாவை விட்டு எழுந்து செல்லவில்லை இன்னும்.
“என்னங்க? ஏன் இப்படி உட்கார்ந்திருக்கீங்க?…” என மோனிகா பல்லவனிடம்.
“வேற எப்படி இருக்க? எல்லாம் கை மீறி போய்டுச்சு. அப்பா முடிவெடுத்துட்டாங்க. இதுல நான் என்ன சொல்ல?…”
“ஒரு நிமிஷம்…” என்ற மோனிகா மேகாவின் மொபைலை வாங்கி அதில் இருந்த அதிரனின் குரலை எல்லோரும் கேட்கும்படி போட்டுவிட்டாள்.
“இத்தனை நாள் நம்ம வரு கேட்டுட்டு இருந்தது இதுதான். இப்படி ஒருத்தன் விரும்பினா எந்த பொண்ணுக்கு தான் பிடிக்காது?…” என்று சொல்லி தியேட்டரில் அதிரன் பேசியவையை ஓடவிட்டாள்.
இதனை கேட்டு தானா அதிரனை புரிந்துகொள்ள வேண்டும்? அன்றே கேட்டானே? இன்று அதற்கெல்லாம் உட்சமாக அவன் தன் வீட்டு பெண்ணின் அழுகையில் அங்கே தவித்ததை கேட்டார்களே?
ஆனாலும் மலருக்கு மனது ஒப்பவில்லை. இருமனதாகவே அழுதுகொண்டு இருந்தார்.
“அன்னைக்கு மாமா வேண்டாம்ன்னு சொல்லும் போது அவர் என்ன பிரச்சனையா பண்ணாரு? சொன்னதுக்கு சரின்னு தானே சொல்லியிருக்காரு. அப்போ அதுல கோவப்பட என்ன இருக்கு?…”
“வேண்டாம்ன்னு சொல்ல நமக்கு விருப்பம் இருக்கற மாதிரி அதிரனுக்கு இருக்கும் தானே? அப்போ அவர் எதுவும் சொல்ல கூடாதா?…” மோனியின் கேள்வியில் அனைவரும் மௌனமாகினர்.
“அவங்க வரட்டும். பேசட்டும். கொஞ்சம் பொறுமையா இருங்க. இது நம்ம வீட்டு பொண்ணோட வாழ்க்கை. கொஞ்சம் அதையும் மனசுல வச்சுக்கோங்க…”
மோனிகா அனைவருக்கும் பொதுவாய் சொல்ல மேகாவின் பார்வை தனது மொபைலில் தான் இருந்தது.
அதில் மீண்டும் மீண்டும் அனைவருக்குமே கேட்டுக்கொண்டே இருந்தது அதிரனின் குரல்.
“மாமா நீங்க போய் உட்காருங்க….” என்று சொல்லிவிட்டு அனைவர்க்கும் குடிக்க ஏதாவது எடுத்து வர சென்றாள்.
இன்னும் பல்லவன் தங்கையை விட்டு நகரவில்லை. அங்கேயே அமர்ந்திருந்தவன்,
“வரு இங்க அண்ணனை பாருடா…” என்றான் அமைதியாய்.
“ண்ணா நான், ப்ளீஸ் ண்ணா…” என மீண்டும் அவள் அழ,
“ஓகே ஓகே. கொஞ்சம் அமைதியா நான் கேட்கறதுக்கு பதில் சொல்லு…” என்றவன்,
“அதிரன் எப்போ எப்படி உன்னை காண்டேக்ட் பண்ணான்?…” என்றான்.
“போன்ல. என் நம்பர்க்கு…” என விசும்பலுடன்.
“அதான் எப்போ? நீ தியேட்டருக்கு போய்ட்டு வந்த பிரச்சனைக்கு அப்பறமா?…” என கேட்க எச்சிலை கூட்டி விழுங்கியவள் உடல் நடுங்கியது.
“இல்லை…” என மறுப்பாய் தலையசைக்க பல்லவன் விழிகள் இடுங்கியது.
“அப்ப இல்லைன்னா எப்போ? நீ நம்ம கடைக்கு வந்தியே அப்போவா?…” என மீண்டும் கேட்க,
“ம்ஹூம்…”
“சரி, நீயே சொல்லு…” என்று கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருக்க மோனிகா வந்துவிட்டாள்.
“இங்க பாரு வரு, உனக்காக யோசிக்க முடியும், சப்போர்ட்டா நிக்க முடியும். ஆனா கேட்கிறதுக்கு நீ தான் பதில் சொல்லனும். சும்மா மென்னு முழுங்காம தைரியமா பேசு…” என்றாள்.
“நான் பேசினது காதில விழுந்துச்சு தானே? நான் என்ன உங்களுக்கு கதை சொல்றேன்னா சொன்னேன்?…” என்று தானும் அவனுக்கு சளைக்காமல் முறைத்து நின்றாள்.
அந்த சூழ்நிலை சற்றே இலகுவானதை போல இருந்தாலும் பல்லவனுக்கு இது எங்கிருந்து ஆரம்பித்ததென்று தெரியவேண்டி இருந்தது.
“காபி எடுத்துக்கோ வரு…” என்றான் அண்ணன்.
“ம்ஹூம்…”
“லஞ்ச் டைம் தாண்டிடுச்சு. இன்னும் யாரும் சாப்பிடலை. சாப்பிடற மனநிலையும் இல்லை. காபியை குடி…” என சொல்ல,
“ஆமாமா, அப்பறம் அதிரன் வீட்டுல இருந்து வரப்போ மயங்கி விழுந்திட போற…” என்று மோனிகா கிண்டலாய் பேச,
“நீ என்ன முடிவே பண்ணிட்ட மாதிரியே பேசற?…” என்றான் பல்லவன் மனைவியை.
“மாமா முடிவு பண்ணிட்டாங்களே?…” என்றதும் மேகா வேகமாய் நிமிர்ந்து பார்க்க,
“என்ன பார்க்கற? உன்னோட அப்பா உன் கல்யாணத்துக்கு சம்மதிச்சாச்சு காலையிலையே…” என சொல்லியும் மேகாவின் முகத்தில் கலவரம் குறையவில்லை.
“எங்களுக்கு எப்பவோ தெரியும் வரு. ஆனா யோசிக்க நேரம் தேவைப்பட்டுச்சு. நீ என்ன முடிவுல இருக்கன்னு தான் பார்ப்போம்ன்னு இருந்தோம். அதுக்குள்ளே உன் அண்ணன் இங்க வந்து ஒரே ஆட்டம்…”
“மோனி…” என பல்லை கடித்தான் பல்லவன்.
“ஓகே, ஓகே. காபியை குடி…” என்று அவளும் எடுத்துகொண்டு அங்கேயே அமர்ந்துவிட,
“நீ போ, நான் பேசனும்…”
“அதெல்லாம் முடியாது. நான் இங்க தான் இருப்பேன்…” வம்பிற்கென்றே மோனிகா செல்லவில்லை.
“ஏன் சொல்ல சொல்ல கேட்கமாட்டேன்ற மோனி?…”
“நம்மளும் லவ் மேரேஜ் தான். ஞாபகம் இருக்கட்டும். அப்ப எவ்வளோ டயலாக்ஸ் பேசுனீங்க? என் அண்ணனை அடிக்க எல்லாம் வந்தீங்க. இப்ப உங்களோட பேச்சை நான் கேட்க வேண்டாமா?…” என சொல்ல அந்த இறுக்கத்தில் மேகாவிற்கு புன்னகை நெளிந்தது.
இருவரும் இப்படி சண்டையிட்டு கொள்வதை வெளியே இருந்து பார்த்த மலர் தலையிலடித்து கொண்டார்.
“என்ன நடந்துட்டு இருக்கு, இவங்க இப்பத்தான் புதுசா கல்யாணம் பண்ண மாதிரி சண்டை? ஹ்ம்ம்…” என்று மலர் எழுந்து பேரனை பார்க்க செல்ல,
“என்ன மலரு, இப்ப எதுக்கு நீ இன்னும் அழுதுட்டே இருக்க?…” என செல்வம் கேட்கவும்,
“அழாம என்ன மாமா பண்ண? என் பொண்ணுக்காச்சும் நம்ம வளசல்ல ஒரு சம்பந்தம் முடிக்கனும்னு இருந்தேன்…” என்றதும் செல்வம் திகைத்து போனார்.
“இப்ப இந்த பேச்சு தேவையா? பல்லவன் காதுல விழுந்தா…”
“விழுந்தா என்ன? அவன் இஷ்டப்படி அவன் கல்யாணம் பண்ணிக்கிட்டான். ஆனா அன்னைக்கு கேட்டவங்களுக்கு எல்லாம் நாம தானே பதில் சொன்னோம்…” என மீண்டும் பொங்கிய அழுகையை அடக்கியவர்,
“ஆம்பிளை பையன் அவன் கல்யாணத்துக்கே அவ்வளோ பேச்சு. இப்ப வரு. அதுவும் அந்த பையன் போய்…” என்ன முயன்றும் முகம் சுளித்துவிட்டது மலருக்கு.
“மலரு, பேச்சுல கவனம் இருக்கனும். அதே மாதிரி முகத்துலையும்…” என்றார் செல்வம் சற்றே கண்டிப்புடன்.
அமுதன் எதுவும் பேசவில்லை. ஆரம்பத்தில் இருந்தே எல்லாம் கை மீறித்தானே சென்றுகொண்டிருக்கிறது.
சோர்ந்துவிட்டார் அவரும். என்று மகளின் விருப்பம் தெரிந்ததோ அன்றே ஏற்றுக்கொள்ள முயன்றாலும் மனதின் ஓரத்தில் வலி இல்லாமல் இல்லை.
“அவங்க பேசட்டும். ஆக வேண்டியதை பார்ப்போம்….”
“இன்னும் என்ன ஆகனும்? வாழ போறவளே முடிவுக்கு வந்துட்டா…” என்றவர்,
“இன்னும் என்னால நம்ப முடியலை. நெஞ்செல்லாம் அடைக்குது. பொய் சொல்லி என் பொண்ணு வீட்டை தாண்டி போயிருக்கா. காலையில எவ்வளவு நேரம் அவளுக்கு ஊட்டிவிட்டு பேசிட்டு இருந்து. எப்படி அவளுக்கு மனசு ஏமாத்த வந்துச்சு…”
மலர் அங்கேயே அமர்ந்துகொண்டு பேச பேச தனது ஆற்றாமையை எல்லாம் பேச்சில் கொட்டினார்.
“எல்லாம் சரிதான்ம்மா. உன் பொண்ணு சொன்னதை கேட்ட தானே? இஷ்டம் இல்லைன்னா பார்க்கலை, பேசலை. ஆனா கல்யாணமே வேண்டாம்ன்னு சொல்லிட்டா. உங்களை எல்லாம் ஏமாத்தறோம்ன்னு வரு எவ்வளவு வேதனைப்பட்டிருப்பா? அதை நீ யோசிக்கலையே?…”
செல்வம் சரியான வழியில் சென்றார். தாயின் வேதனை எந்தளவுக்கு முக்கியமோ, அதே நேரத்தில் மகளும் அதை தானே அனுபவித்திருப்பாள் என்று சுட்டி காட்டவும் மலருக்கும் மகளின் முகம் மனதில் வந்தது.