“மோனி தான் இவ்வளோ பேசுவா. நான் கொஞ்சம் தான்…” மலர் சொல்ல,
“பேச்சுல என்ன கொஞ்சம்? அதெல்லாம் மனசுல தோன்றதை சொல்லிடனும்…” என்று அங்கேயே வழக்கடித்துக்கொண்டு நின்றார்.
“ம்மா…” என்றான் அதிரன்.
“சரி வாங்க…” என்று சுபத்ரா முன்னே நடக்க அவருடன் மோனிகாவும், மலருமே செல்ல மேகா அங்கேயே தான் நின்றாள்.
“மேகா…” என்ற அதிரனின் அழைப்பில் நிமிர்ந்து பார்க்க,
“சில்…” என புன்னகைத்தவன் மீண்டும் அங்கிருந்து அகன்றான்.
இன்னும் நடப்பை நம்ப முடியாமல் மேகா தன் கையை கிள்ளி பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டாள்.
உண்மை தான் என்று சற்றே வலிக்கவும் உடனே வேண்டுதல். கண்ணனை மூடி நின்ற இடத்தில் இருந்தே இந்த திருமணம் எந்தவித தடங்கலும் இன்றி நடந்தேற வேண்டினாள்.
முக்கியமாக தன் குடும்பத்தினருக்கு எந்தவித சங்கடத்தையும் தந்துவிடாமல் நடத்தி தர வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள்.
வேண்டுதல்கள் வரிசையாய் அவள் வைத்துக்கொண்டிருக்க ஹாலில் திருமண பேச்சு வார்த்தையை ஆரம்பித்திருந்தார்கள்.
“உங்க விருப்பப்படி உங்க அண்ணன், அக்கா வீட்டுல பேசிட்டே சொல்லுங்க. அதுக்காக கல்யாணம் நடத்தறதை பத்தி பேசாம இருக்க முடியாது. இல்லையா?…” என்றார் தேவராஜ்.
“இந்த ஜாதகம்?…” மலர் ஆரம்பிக்க,
“மனசு ஒன்னான பின்னால ஜாதகம் எதுக்குங்கம்மா? இந்த கல்யாணமே ஏகப்பட்ட நிகழ்வுக்கு பின்னாடி நடக்குது. இனி எந்த சங்கடமும் இருக்க வேண்டாம். நம்ம பிள்ளைங்களுக்காக பார்ப்போம்…” என்ற தேவராஜ்,
“நல்ல மனசோட என்ன செஞ்சாலும் கடவுள் அனுகிரகம் நாம தேடாமலே நம்மை சேரும்மா. நீங்க கவலைப்படாம இருங்க…” என்றார்.
அதற்கு மேல் ஜாதகம் என்ற பேச்சிற்கே இடமில்லை. இதே தான் பல்லவனின் திருமணத்திலும் நடந்தது.
மோனிகா, பல்லவனுக்கு ஜாதக பொருத்தம் பார்க்கவில்லை. இதோ அவர்கள் நன்றாக வாழ்கின்றார்களே என நினைத்துக்கொண்டார் மலர்.
செல்வமும், அமுதினியனும் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக்கொண்டார்கள்.
எத்தனை பெரிய இசை ஜாம்பாவான். அவர் தன் மனைவிக்கு தரும் மரியாதையும், அந்த பார்வையின் கனிவும் மனதிற்கு இதமாய் இருந்தது.
இப்படி ஒரு பெற்றோரின் மகன், அவர்களின் அன்னியோனியத்தை ஆசையுடன் கவனித்து வளரும் ஆண்மகன் எப்படி தவறாக கூடும் என்று சிந்திக்க பல்லவனுக்கும் அதே யோசானை தான்.
மனதின் இறுக்கம் தளர்ந்து இன்னும் முகத்தில் வெளிச்சம் கூடியது. சற்றே இலகுவாய் அமர்ந்தான் பல்லவன்.
“சரி சொல்லுங்க. கேட்போம். என்ன செய்யலாம்?…” அமுதினியன் இன்னும் ஆர்வமாகிவிட்டார்.
சுபத்ரா சொல்லியதை போல இது என் மகள் கல்யாணம். என் கனவும் கூட. இதை விட முடியுமா?
சுபத்ராவை பார்த்து புன்னகைத்தவர் இன்னும் இயல்பாகி பேச ஆரம்பித்தார் அமுதினியன்.
“கல்யாணம் உங்க விருப்பப்படி, உங்க முறைப்படி நடத்தலாம். ரிஷப்ஷன் எங்க பொறுப்பு. என்ன சொல்றீங்க?…” என்றார் தேவராஜ்.
“கல்யாணம் உங்க ரிலேட்டிவ்ஸ் அன்ட் உங்க ப்ரெண்ட்ஸ் சர்க்கிள் இப்படி இன்வைட் பண்ணிடலாம். அதே மாதிரி எங்க க்ளோஸ் சர்க்கிள் மட்டும். ரொம்ப இருக்காது…” என்ற அதிரன்,
“ரிசப்ஷன்க்கு இண்டஸ்ட்ரி பீப்பிள்ஸ் எல்லாம் இன்வைட் பண்ணனும். கல்யாணத்துக்கு எல்லாரையும் இன்வைட் பண்ண முடியாது. அதை தான் ஸார் அப்பா சொல்றாங்க…” என்று விளக்கினான்.
“இன்னும் என்ன ஸார்? வரு என்னை அத்தை சொல்லியாச்சு. நீ மாமா சொல்லு அதி…” என்றார் சுபத்ரா.
அதிரன் புன்னகையுடன் அமுதனை பார்க்க அவருக்கு சங்கடமாக இருந்தது அவன் சொல்லிய ஸார் என்ற அழைப்பு.
ஆனால் எப்படி கூப்பிட சொல்ல என்று கவனிக்காததை போல இருந்துவிட இப்போதும் சுபத்ரா பொட்டென்று உடைத்து பேசிவிட்டார் ‘உறவாய் அழை’ என.
“ஆமா, நீங்க மாமான்னு கூப்பிடுங்க மாப்பிள்ளை…” என அழைத்துவிட்டார் செல்வம்.
“ஓகே மாமா…” என சிரிப்புடன் பொதுவாய் சொல்லியவன் மீண்டும் அமுதனை பார்த்தான்.
அவருக்கு இன்னும் சங்கடமே. அன்று ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்தது ஏனோ கண் முன்னே வந்துகொண்டே இருக்க வலுக்கட்டாயமாய் விரட்டியடித்தார் அந்நினைவை.
அவர் அதை தான் நினைக்கிறாரோ என்று அதிரனுக்கு தோன்றினாலும் காட்டிக்கொள்ளவில்லை அவனும்.
“நீங்க என்ன சொல்றீங்க பல்லவன்?…” தேவராஜ் அவனையும் உள்ளே இழுக்க,
“ஹாங், நான் என்ன சொல்ல மாமா?…” என்று அவனறியாமலே வந்துவிட்டது பல்லவனுக்கு.
“நீங்க பெரியவங்களா முடிவு பண்ணுங்க…” என்று சொல்லிவிட்டான்.
“ஓகே, ஒருநாள் முறைப்படி பொண்ணு கேட்டு வரோம். அன்னைக்கு மத்ததை எல்லாம் பேசிக்கலாம்…” என்று தேவராஜ் சொல்ல,
“அதுக்குள்ளே கிளம்பறோமா? நீங்க இன்னும் பொண்ணை பார்க்கலையே?…” சுபத்ரா இழுத்துப்பிடிக்க,
“மலரு….” என்றார் அமுதன்.
“அத்தை நீங்க இருங்க, நான் போய் கூட்டிட்டு வரேன்…” என்று மோனிகா உள்ளே செல்ல அங்கே மேகா கண்ணாடி முன்பு அமர்ந்திருந்தாள் கையை கூப்பியபடி.
“அண்ணி இருக்கட்டுமே. என்னை தான் பார்த்திருக்காங்களே?…” என்றாள் மேகா.
“இப்போ அதிரனை பார்க்க வேண்டாமா?…” என்ற மோனிகா,
“இப்ப நீ வரலன்னா உன் மாமியார் இங்கயே கூட்டிட்டு வந்திருவாங்க எல்லாரையும். என் மருமக பயப்படறா, தேவைன்னா அங்க வந்து பாருங்கன்னு சொல்லி…” என்றதும் மேகாவிற்கு சிரிப்பு வந்துவிட்டது.
மோனிகா தள்ளி நின்று மேகாவை நன்றாக பார்த்துவிட்டு மீண்டும் அருகே வந்து நின்றாள்.
“சுடிதார் நல்லா தான் இருக்கு. இருந்தாலும் பேசாம புடவை கட்டுன்னு சொல்லியிருக்கனுமோ? நான் பயந்தமாதிரி பெருசா எந்த பேச்சும் இல்லை. நல்லாவே சுமூகமாவே போயிருச்சு…” என்று மோனிகா சொல்ல,
“இருக்கட்டும் அண்ணி…” என்றாள் மேகா.
“என்ன இருக்கட்டுமோ? பர்ஸ்ட் டைம் உன் மாமனார், மாமியார் நேர்ல பார்க்கறாங்க உன்னை. உன் அம்மாவும் ஒன்னும் சொல்லாம இருந்துட்டாங்க பாரு…” என்று சங்கடமாகியது மோனிகாவிற்கு.
“இரு இந்த ஜிமிக்கியை மாத்திரு. கழுத்துக்கு இந்த குட்டி நெக்லஸ் போட்டுக்கோ….” என்று கடகடவென்று எடுத்து மாட்ட போக,
“அண்ணி ப்ளீஸ்…” என்றாள்.
“என்ன யோசிக்கிற வரு?…”
“தெரியலை. ஒருமாதிரி சங்கடமா பீல் ஆகுது அண்ணி. எல்லாம் சரியா போனாலும் என்னவோ எங்கையோ எனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கு. அம்மா சொன்ன வார்த்தை. நம்பிக்கை…” என்ற பொழுதே தொண்டை அடைத்தது.
“அட என்ன பொண்ணு நீ? இப்ப போய் என்னென்னவோ யோசிச்சிட்டு? இந்த மாதிரி விஷயமெல்லாம் நடக்கும் போதே அனுபவிக்கனும். இப்போ போய் வருத்தப்படுவாங்களா? வா வா….”
மேகாவை தேற்றி ஹாலுக்கு அழைத்து வந்தாள் மோனிகா. மெதுவாய் வந்தவள் அனைவருக்கும் பொதுவாய் வணக்கம் வைக்க,
“வரு…” என்று மலர் தேவராஜ் காலில் விழும்படி கண்ணை காட்டினார்.
“இருக்கட்டும்ம்மா…” என சொல்லும் பொழுதே மேகா அவரின் பாதங்களை தொட்டு வணங்கி எழுந்தாள்.
“எல்லா சந்தோஷத்தையும் பெற்று நூறு வயசு என் பிள்ளையோட நீ நல்லா இருக்கனும்ப்பா…” என்று எழுந்து நின்று மேகாவின் தலையை தொட்டு ஆசிர்வதித்தார்.
இன்னும் மனதில் இருந்த கலக்கம் அகலாமல் வெளிறிப்போய் இருந்தது மேகாவின் முகம். அதை கவனித்தவர்,
“என்னப்பா, கஷ்டமா இருக்கா?…” என்றார் அவளிடத்தில்.
“ஹ்ம்ம், ம்ஹூம்…” என மேகா தலையசைக்க அதிரன் பார்வை மொத்தமும் அவளிடம் தான்.
“எனக்கு புரியுதும்மா. நீ, உங்க குடும்பம் எத்தனையை க்ராஸ் பண்ணி வந்திருப்பீங்கன்னு. இது அத்தனை சுலபமும் இல்லை. உங்களுக்காக நாங்க வருந்தாத நாளில்லை. ஆனா கொஞ்சம் நாளாகட்டும் நேர்ல பேசுவோம்ன்னு இருந்தோம்…”