“இந்த கொஞ்ச நாளா அவ ரொம்ப தவிச்சு போய்ட்டா. எங்க முகத்தை நேருக்கு நேர் பார்த்து பேச முடியாம, தப்பு செஞ்சிட்டோமேன்னு அவ குறுகி குறுகி வந்து நிக்கிறது இனியும் வேண்டாம்…” என்றார்.
“என்னங்க?…”
“உனக்கு தெரியாது மலரு. நான் என் பொண்ணை கவனிச்சுட்டே தான் வரேன். சாதாரணமா ஏதாவது வரன் பத்தியோ, அவ கல்யாணம் சம்பந்தமாகவோ பேசினா என்ன பாடுபடறா தெரியுமா? என்னால பாக்க முடியலைம்மா…” என்றார் மனைவியிடம்.
“மனசுல ஒரு நம்பிக்கை இருக்கு. அவ சந்தோஷமா இருப்பான்னு. எல்லாத்துக்கும் பின்னாடி இறைவன் செயல்ன்னா அவனே இதையும் பார்த்துக்கட்டும். நான் ஒப்படைச்சுட்டேன்…” என்றார் அன்னார்ந்து பார்த்து.
அதற்கு மேல் மலர் என்ன பேச? எழுந்து மகனின் அறைக்கு சென்று அமர்ந்துகொண்டார் பேரன் அருகே.
‘சீக்கிரமே மீட் பண்ணுவோம் சேம்ப்’ என அன்று மருத்துவமனையில் அதிரன் தன் பேரனை தூக்கி முத்தமிட்டது ஞாபகம் வந்தது மலருக்கு.
‘இவனுக்கு புடிக்க வேற பொண்ணே இல்லையா? என் பொண்ணு தானா கிடைச்சா?’ என மனதிற்கு அத்தனை வருத்தம்.
வெளியே செல்வத்திடம் பேசிக்கொண்டிருந்த அமுதன் கவலை அடுத்ததாய் தன் உடன் பிறப்புகளிடம் சென்றது.
“என்னன்னு இதை அண்ணன்கிட்டையும் அக்காக்கிட்டையும் பேச அண்ணே?…” என்றார்.
“இப்ப எதுக்கு இதை எல்லாம் நினைக்கிற? அதெல்லாம் பேச வேண்டாம். முதல்ல நீங்க ரெண்டு குடும்பமா பேசி முடிவு பண்ணுங்க. அப்பறமா என்ன செய்யலாம்னு பல்லவன்கிட்ட விடு…”
“அவன்கிட்டையா?…” அமுதன் யோசித்தார்.
“அவங்களுக்கு உன் பையன் தான் சரி. பல்லவன் பேசிக்கட்டும்…” என செல்வம்.
அறைக்குள் காபியை குடித்து முடிக்கும் வரை அதிரன் பற்றி எதுவும் கேட்காமல் இருந்த பல்லவன் மீண்டும் கேள்வி எழுப்பினான்.
“இப்ப சொல்லு. எப்படி இந்த பழக்கம்?…” என கேட்க,
“போன் பண்ணிருந்தாங்க…” மேகா அச்சத்துடனே பதில் சொன்னாள்.
“அதான் எப்போ?…” என கூர்மையாக கேட்கவும் தைரியத்தை வரவழைத்து கொண்டவளாக,
“புடவை நகை எல்லாம் குடுக்க பிரதாப் வீட்டுக்கு நீங்க போனப்போ…” என்று சொல்ல இது மோனிகாவிற்குமே பேரதிர்ச்சி.
“அப்பவேவா?…” என்று அவள் எழுந்துவிட்டாள்.
மோனிகா அதிர்ச்சியில் எழுந்து நின்றுவிட பல்லவன் அவளைத்தான் முறைத்து பார்த்தான்.
‘ம்க்கும், இந்த மனுஷன் வேற கூடவே சுத்தினியே செவ்வாழ மாதிரியே பாக்காரே’ என பல்லவனை பார்த்தவள்,
“சத்தியமா இது எனக்கு தெரியாதுங்க…” என்றாள் மோனிகா.
மேகாவிற்கு அந்த சூழ்நிலையை கடக்க முடியவில்லை. தன்னிடம் கேட்க பதில் சொல்லவே தள்ளாடி போனாள்.
“அன்னைக்கு தான் கால் பண்ணினாங்க, நிச்சயம் நின்னது தெரிஞ்சு கால் பண்ணினதா சொன்னாங்க….”
“அப்போ அதிரன் வாட்ச் பண்ணிட்டே இருந்திருக்கனும். அப்படித்தானே?…” என்ற பல்லவனுக்கு தலையை கூட அசைக்கவில்லை.
“டெய்லி பேசுவீங்களா?…”
“ண்ணா…”
“இப்பவாச்சும் உள்ளத சொல்லு வரு…” என்றவனிடம்,
“அன்னைக்கும், அதுக்கப்பறம் கடைக்கு வந்தன்னைக்கும், நேத்தும் தான் பேசினோம். இன்னைக்கு நேர்ல பார்த்தோம்…” என சொல்ல மூணுதடவை தான் பேசியிருக்கானா?
பல்லவனால் நம்பவே முடியவில்லை. இந்த மூன்றுமுறை பேச்சுவார்த்தையில் அவனை என்ன தெரியும் தன் தங்கைக்கு என தோன்றியது.
“என்ன பண்ணிருக்க வரு? அவனை பத்தி எதுவும் தெரியாம? இந்த மூணே தடவை பேசினதுல எப்படி இந்த முடிவுக்கு வந்த? இன்னைக்கு போய் வேற பார்த்திருக்க?…” என்றான்.
அவனால் கேட்காமலும் இருக்க முடியவில்லை. அத்தனை ஆதங்கம் பல்லவனுக்கு.
எதுவும் தெரியாமல் இந்த பெண் என்ன செய்து வைத்திருக்கிறது என்று மருகி போனான்.
ஆனால் அவனுக்கேங்கே தெரிந்திருக்கும் இருவரின் காதல் பேச்சுவார்த்தைகளில் வளர்ந்ததா என்ன என்று?
மேகாவால் அதனை விளக்கவும், விளக்கம் தரவும் முடியவில்லை. எப்படி உயிர் சுமக்கும் உணர்வுகளை விவரிக்க முடியும் என மௌனமாக இருந்தாள்.
“உனக்கு எப்படி தெரியும் வரு இந்த வாய்ஸ் ரெக்கார்ட் கேட்கிறான்னு?…”
“கொஞ்ச நாள் முன்னாடி…” மோனிகா சொல்ல,
“அதான் எப்போ?…”
“ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்த பின்னால ஒரு பத்துநாள் கழிச்சுன்னு நினைக்கறேன். வரு வாஷ்ரூம் போனப்போ அஷ்வின் போனை தூக்கிட்டு வந்து என் காதுல மாட்டிவிட்டுட்டான். அப்போதான் கேட்டேன்…” என்றாள் மேகாவை பார்த்துக்கொண்டே.
“ஆனா வருக்கிட்ட காமிச்சிக்கலை. கேட்கவும் இல்லை…” என சொல்ல,
“நான் உன் புருஷன் தானே?…” பல்லவன் பல்லை கடிக்க,
“உங்க டவுட்க்கு எல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது. வேணும்னா கல்யாண ஆல்பம் எடுத்து பாருங்க…” என்றாள் அவள்.
“மனுஷன் பேசுவானா உன்கிட்ட…” என்ற பல்லவன் அதற்கு மேல் அங்கே இருக்க முடியாமல் எழுந்து சென்றுவிட்டான்.
“என்ன கல்யாண பொண்ணே, அண்ணிக்கு உன் மேரேஜ்ல என்ன கிப்ட்?…” என்று எழுந்துவந்து மேகாவின் அருகே மோனிகா அமர்ந்துகொள்ள அப்படியே அவள் மடியில் சாய்ந்துகொண்டாள் மேகா.
“என்னாலயும் தான் உங்கண்ணன் முகத்தை பார்க்க முடியலை. ஆனா கல்யாணம் பண்ணி வாழலையா?…” என்றாள் அவளை தேற்றுவதற்கென்றே.
“என்னை எல்லாம் என்னா அடி அடிச்சாங்க தெரியுமா? என் அண்ணன் கொஞ்ச நஞ்ச அராஜகமா பண்ணான். ம்ஹூம். அடியை வாங்கிட்டு அழவே மாட்டேன். சுனா பானா மாதிரி போற வார நேரமெல்லாம் அடி தான்…”
“அதுக்குன்னு யாரை வேணும்னாலும் லவ் பண்ணனும்னு சொல்லலை. நம்மளோட செலெக்ஷன் சரியா இருக்கும் போது நம்ம கொஞ்சம் கஷ்டப்படறதுல தப்பில்லை…” என்ற மோனிகா,
“அதிரன் மேலையும் தப்பில்லை. பேசினதை கேட்ட தானே? நீ மட்டுமா? நாங்களும் தான். அத்தையும், மாமாவும், ஏன் உன் அண்ணணுமே அப்படியே ஷாக் ஆகிட்டாங்க. உடனே ஒத்துக்க தான் மனசு வராது…”
மோனிகா மேகாவை பேசி பேசியே இயல்பு நிலைக்கு கொண்டுவந்தாள். கொஞ்சம் தெளிந்தவள் கேட்டுக்கொண்டே அப்படியே உறங்கி போக மீண்டும் கண் விழித்த நேரம் மாலை ஆகி இருந்தது.
“தூங்கினது போதும் வரு…” என்று எழுப்ப அவளால் எழுந்துகொள்ளவே முடியவில்லை.
கண்ணெல்லாம் எரிந்து தலை பாரமாய் இருந்தது மேகாவிற்கு. அப்படி ஒரு வலி எடுக்க மறுபக்கம் திரும்பினாள்.
“நீ கேட்கமாட்ட…” என்று மோனிகா மேகாவின் போனிலிருந்து அதிரன் குரலை எடுத்து போட மேகா மட்டுமல்ல சத்தத்தில் அவன் தான் வந்துவிட்டானோ என பல்லவனும், மலரும் கூட ஓடி வந்துவிட்டனர்.
அடித்துபிடித்து மேகா எழுந்தமர பல்லவனும், மலரு அங்கே வர மோனிகா திருதிருவென்று விழித்தாள்.
“உன்னையெல்லாம்….” என்று பல்லவன் பல்லை கடிக்க,
“வரு எழுந்துக்கலை. அதான்…” என்று சொல்ல மலர் மகளை பார்த்தார்.
அவருக்கு பார்த்ததும் தெரிந்தது அவளின் முகமாற்றத்தில் என்ன செய்கிறதென்று. ஒரு பெருமூச்சுடன்,
“மோனி இங்க வா. அவளுக்கு தலை வலிக்குதா இருக்கும். இன்னும் சாப்பிடவும் இல்லைல…” என்று மருமகளை அழைத்துகொண்டே செல்ல,
“எழுந்து குளி. இப்ப வந்திருவாங்க…” என சொல்லி சென்றாள் மோனிகா.
“அண்ணி…” என்று அவள் அழைக்க அழைக்க மோனிகா திரும்பவே இல்லை.
‘வருகிறார்களா? யார் அதிரனா? அவனின் வீட்டிலுமா?’ நினைக்கும் பொழுதே பதட்டம் கூடியது.
தனது மொபைலை எடுத்து பார்த்தாள். எந்த அழைப்பும் அவனிடம் வந்திருக்கவில்லை.
அப்படியே முகத்தை மூடியபடி அமர்ந்துவிட்டாள் மேகா. இத்தனை பிரச்சனையிலும் இவ்வளவு நேரம் தூங்கி இருக்கிறேனே? என்று வேறு வருத்தமாகியது.
மீண்டும் தகப்பன், தாயின் நினைவு. அவர்களை ஏமாற்றி நம்பிக்கையை உடைத்துவிட்டோம் என்னும் தாக்கம் அவளை அதிகமாய் பாதித்தது.
மேகா இன்னும் அப்படியே அங்கே அமர்ந்திருக்க அவளை தேடி வந்தார் அமுதினியன்.
“என்னப்பா உக்கார்ந்துட்ட?…” என்று மகளிடம் கேட்க கண்ணில் நீர் பெருகியது.