“ப்பா…” என்று அவரை பார்க்கவும், பேசவுமே தவித்து போனாள்.
“சரி சரி. எதையும் நினைக்காம போய் ரெடியாகு…” என்றார் அமுதன்.
திருமணம், அதுவும் அதிரனுடன். ஆனாலும் முழுதாய் மகிழ்ந்துவிடவில்லை மேகா.
அவளால் மகிழ்ச்சியாய் முகத்தை வைத்துக்கொள்ள கூட முடியவில்லை. வீட்டின் இறுக்கம் அவளை இன்னுமே இறுக்கியது.
“ப்பா, உங்களுக்கு இஷ்டமில்லைன்னா வேண்டாம்ப்பா. அவங்களை போக சொல்லுங்க…” என்றாள் தன் மனதை கல்லாக்கிவிட்டு.
“இஷ்டம் இல்லாம எப்படிம்மா? இப்பவும் அவங்க பொண்ணு பார்க்க வரேன்னு சொல்லலை. அதுக்காக வரவங்க முன்னாடி நீ இப்படி அழுது நிக்கனுமா? அதான் போய் முகம் கழுவி பளிச்சுன்னு வா…” என்றவர்,
“அப்பா எதுவும் நினைக்கலைடா. நேத்து கொஞ்சம் குழம்பிட்டேன். ஆனா முடிவு சரிதான். அப்பா முழு மனசோட தான் சம்மதிச்சேன்…”
இருவரும் பேசிக்கொண்டிருக்க மலரும், மோனிகாவும் வந்துவிட்டார்கள் அங்கே.
“என்ன இது?…” என மலரிடம் கேட்க,
“உங்க மக இன்னும் மதிய சாப்பாடு சாப்பிடலைல. அதான் தோசை ஊத்தி கொண்டு வந்தேன்…” என்றார் மலர்.
இன்னும் மகளிடம் முகம் கொடுத்து பேசவில்லை அவர். அவரால் முடியவும் இல்லை.
மனைவியை கண்டனத்துடன் பார்த்த அமுதினியன் மருமகளிடம் பார்த்துக்கொள்ளும்படி தலையசைத்துவிட்டு,
“நீ வா என்னோட…” என அழைத்து சென்றார். வெளியே வந்தவர்,
“உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? அவ முகத்தை பாரு. கொஞ்சம் கூட சந்தோஷமே இல்லை. இப்படியா என் பொண்ணை நீ இன்னொரு வீட்டுக்கு அனுப்புவ?…” என திட்ட,
“நான் மட்டும் அவ சந்தோஷமா இருக்க கூடாதுன்னா நினைக்கறேன்?…” மீண்டும் மலர் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு கண்ணை கசக்க,
“மலரு, அவங்க வர நேரம் இப்படி இருக்காத. இதுதான் நிஜம். ஏத்துக்கிட்டு தான் ஆகனும்…” என்றார் புரிந்துகொள்ளவேண்டுமே என அழுத்தமாக.
“அவ சந்தோஷமா இருந்தா அதுவே போதும் எனக்கு. வேறென்ன வேணும்…” என்று மலர் மூக்கை உறிஞ்ச,
“சரி போ, போய் ஆகவேண்டியதை பாரு…” என அனுப்பினார்.
இன்னும் செல்வம் வீட்டிற்கு செல்லவில்லை. அங்கேயே தான் இருந்தார். பேச வருகிறவர்கள் என்ன பேச போகிறார்களோ என்றிருந்தது அவருக்கு.
தன் மனைவிக்கு கூட இன்னும் எதையும் அவர் பகிர்ந்திருக்கவில்லை. முதலில் ஒரு நல்ல முடிவுக்கு வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என தான் இருந்தார்.
மீண்டும் அமுதன் வரவும் பல்லவனும் கடைக்கு சென்றுவிட்டு வரவும் அமர்ந்து பேச ஆரம்பித்தனர்.
அறையில் கொண்டுவந்த தட்டை டேபிளில் வைத்துவிட்டு அஷ்வினை கட்டிலில் அமர வைத்த மோனிகா,
“குளிச்சுட்டு வந்து சாப்பிடறியா வரு?…” என மோனிகா கேட்க தலையசைப்பு மட்டுமே அவளிடத்தில்.
“சரி நீ குளிச்சுட்டு வா. நான் இவனுக்கு இந்த பாலை குடிக்க வச்சிடறேன். இல்லன்னா சிணுங்கிட்டே இருப்பான்…” என்று மகனுக்கு தம்ளரில் பாலை ஆற்ற ஆரம்பித்தாள்.
மேகா ஒரு சுடிதாரை எடுத்துக்கொண்டு குளித்து வர முகம் இன்னும் வீக்கம் குறையவில்லை. கண்ணெல்லாம் சிவந்திருந்தது.
தலைவலியில் முகத்தை சுருக்கியபடியே சோர்வாய் இருந்தாள். அவளுக்கு தெரிந்திருந்தது தனக்காக மட்டுமே இதற்கு சம்மதித்திருகிறார்கள் என்று.
“வரு என்ன இது? சுடிதார்ல இருக்க? புடவை மாத்தலாமே?…” மோனி கேட்க,
“இல்லண்ணி, எனக்கு அந்த மனநிலை இல்லை. ப்ளீஸ்…” என்றாள்.
“சரி இதை சாப்பிட்டு இந்த மாத்திரையை போடு. அத்தை குடுத்துட்டு போனாங்க…” என்றதும் தோசையை எடுத்து வைத்துக்கொண்டவள்,
“யார் கால் பண்ணியிருந்தாங்க அண்ணி?…” என்றாள்.
“வேற யார்? அதிரன் தான். உன் அப்பா நம்பருக்கு கூப்பிட்டிருந்தார். கிளம்பி வரோம்னு சொல்ல…”
“ஓஹ்…”
“ஆனா பேசினது உன் அண்ணன் தான். மாமா போன் அட்டன் பண்ணலை…”
“ஹ்ம்ம்…”
“என்ன ஹ்ம்ம்? ஆமா உனக்கு எதுவும் மெசேஜ் பண்ணலையா?…”
“இல்லையே?…”
“சரி வந்து பார்த்துப்போம்ன்னு இருக்காங்க போல?…” என்றாள் மோனிகா.
அந்த வீட்டில் இலகுவாய் வலம் வந்தது மோனிகாவும், அஷ்வினும் மட்டுமே தான்.
“ஏன் உம்முன்னு இருக்க? கொஞ்சம் சந்தோஷமா சிரிச்ச முகமா தான் இரேன்…”
“ஹ்ம்ம் என்னவோ, அதை நான் கேட்க மாட்டேன். அதுக்கு மேல உங்க சீக்ரெட். ஆனா நீ கொஞ்சம் தெளிவா இருக்கலாம்…” எனவும் புரியாமல் பார்த்தாள் மேகா.
“ஒரு கெஸ்ல உனக்கு கால் ட்ரை பண்ணேன்னு சொன்னா இத்தனை பதறிட்ட? ஏன் நான் கால் பண்ணா உனக்கு நோட்டிபிகேஷன் காமிச்சிருக்கும் தானே? யோசிக்கமாட்டியா?…”
மோனிகா சொல்லவும் தான் அது ஞாபகத்திற்கே வந்தது மேகாவிற்கு. அசடுவழிய அவளை பார்த்தாள்.
“ஹ்ம்ம், இருக்கட்டும் இருக்கட்டும். நீ சாப்பிட்டு டேப்லெட் போடு. இவனை வெளில விளையாட விடறேன். மாமாவும், பெரியமாமாவும் பார்த்துப்பாங்க…” என்று சொல்லி எழுந்து செல்ல மேகா முடிந்தளவு சாப்பிட்டு மாத்திரையை போட்டுவிட்டு எழுந்துவந்து தலையை வாரினாள்.
ஒப்பனை செய்யவும் தோன்றாமல் கண்ணாடியின் முன்னிலையில் அமர்ந்திருந்தாள் அவள்.
இப்படி அமர்ந்திருந்த அன்று ஆரம்பித்தது தானே இத்தனையும்? நினைக்க நினைக்க நம்பவே முடியவில்லை.
அன்று அந்த நிகழ்வு நடக்கவில்லை என்றால் அதிரன் யாரோ. அவனுக்கு தான் யாரோ.
ஸ்டிக்கர் பொட்டை மட்டும் வைத்துக்கொண்டவள் தன் தாயை தேடி அறையின் வெளியே வர அஷ்வினை கையில் ஏந்தியபடி உள்ளே வந்துகொண்டிருந்தான் அதிரன் தேவராஜ்.
அந்த நொடி அந்த நேரம் மின்சாரம் பாயும் உணர்வு. எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி, வேறு யாருமின்றி அவன் மட்டும் வந்து நிற்க கனவோ என்று கண்ணை சிமிட்டி பார்த்தாள் மீண்டும்.
அதிரனின் பார்வை மேகாவிடம் ஆராய்ச்சியாக இருக்க அவன் முகத்தில் புன்னகை எப்போதும் போல் குடியிருந்தது.
“வாங்க உட்காருங்க…” என அவன் பின்னே வந்த செல்வம் அப்போது தான் மேகாவை பார்த்தார்.
“நீ உள்ள போ வரு…” என்று சொல்ல வீட்டினரும் அவளை திரும்பி பார்க்க அந்த நொடி என்ன செய்வதென்று தெரியாமல் பிரம்மையுடன் நின்றுவிட்டாள்.
“வரு…” என மோனிகா அவளை தட்டவும்,
“ஹாங்…” என்று உறக்கத்தில் இருந்து விழிப்பவளை போல் அதிரனை பார்த்துவிட்டு பதட்டமாய் அறைக்குள் நுழைய அதிரனின் முகத்தில் ஒரு விரிந்த புன்னகை.
இருவரையுமே கவனிக்கத்தான் செய்தார்கள் இரு குடும்பத்தினரும். ஆம், சுபத்ராவும், தேவராஜும் வந்திருந்தனர் அதிரனுடன்.
அமுதனும், பல்லவனும் அவர்களை அமர சொன்னாலும் முகத்தில் ஒட்ட வைத்த சிரிப்பு தான்.
அத்தனை பதட்டம் அவர்களுக்கு. இப்போதே வீட்டு வாசலில் கூட்டம் சேர்ந்திருந்தது. அதிரனின் பாதுகாவலர்கள் காவலாக வெளியே இருக்க அத்திறனை பார்க்க அத்தனை சலசலப்பு.
அதுவே அமுதன் குடும்பத்தை சற்று ஆட்டிப்பார்த்தது. இனி இது ஒவ்வொரு நிகழ்விற்கும் தொடருமோ என்று.
மலர் இது தேவையா என்பதை போல முகத்தில் காண்பிக்க, மோனிகா சகஜமப்பா என்று இலகுவாய் இருக்க அஷ்வின் அதிரனின் முகத்தையே பார்த்தபடி அவனின் மடியில் அமர்ந்திருந்தான்.
“ப்பா, பேசலாம்…” அதிரன் சொல்ல,
“என்னை தெரிஞ்சிருக்கும், கேள்விப்பட்டிருப்பீங்க…” என தன்னை அமைதியாக அறிமுகப்படுத்திக்கொண்ட தேவராஜ்,
“என்ன நீங்க? சுத்தி வளைக்காம எப்போ கல்யாணம் வச்சுக்கலாம் சம்பந்தின்னு கேளுங்க…” என சுபத்ரா தடாலடியாக பேச மலர் மட்டுமல்லாது அனைவரும் திகைத்து பார்த்தனர்.
திருமண பேச்சு தான். ஆனால் இப்படி உடனே கேட்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.
“அது, அது…” என்று அமுதன் மகனை பார்க்க,
“கல்யாணம் பிக்ஸ் பண்ணிடலாம். ஆனா அதுக்கு முன்னாடி எங்களோட ரிலேட்டிவ்ஸ்கிட்டயும் நாங்க கலந்துக்கனும்…” என்று சொல்லிய பல்லவன் பார்வை அதிரனை தொட அவன் புன்னகைத்தான்.
பல்லவனால் இன்னும் நம்ப முடியவில்லை. போனில் அத்தனை தவிப்புடன் பேசியவன் முகத்தில் இத்தனை நிதானமும், புன்னகையும் எப்படி சாத்தியம் என்று.
தன்னுடைய திருமண நேரத்தில் மோனிகாவின் வீட்டினர் மீது அத்தனை கோபத்தில் இருந்தான். பேச்சுக்கள் திருமணத்தில் முடிந்தாலும் ஒருவரிடமும் இயல்பாய், சகஜமாக பேசிவிடவில்லை.
இங்கோ உள்ளே வந்ததில் இருந்து தன் மகனை கையில் தூக்கி கொண்டது வரை இப்போது தன்னை பார்த்து புன்னகைப்பதும் என பல்லவன் விழித்தான் எப்படி எதிர்கொள்வதென்று.
“என்ன அஷ்வின், உன் மாமா என்ன சொல்றாங்க?…” என கேட்டபடி மோனிகா அனைவருக்கும் குடிக்க காபி எடுத்து வந்தாள்.