அதிரன் குடும்பம் கிளம்பி சென்றதும் இன்னும் வாசலில் கூட்டம் குறையாதிருக்க அதனை பார்த்துக்கொண்டே உள்ளே வந்தனர் அமுதினியன் குடும்பத்தினர்.
மேகா மீண்டும் தன் அறைக்குள் வந்துவிட்டிருக்க ஹாலில் வந்து அமர்ந்தவர்களிடம் அஷ்வின் அதிரனை கேட்டுக்கொண்டே இருந்தான்.
“மாமா, மாமா, மாமா. கொஞ்ச நேரத்துல எத்தனை மாமா? போய் உன் அப்பாவை கேளு. அவர் கூப்பிட்டா தான் திரும்ப இங்க உன் மாமா வருவார்…” என பல்லவனை மாட்டிவிட்டாள் மோனிகா.
மோனிகா சொல்லவும் அவளை முறைத்து பார்த்தான் பல்லவன். வேண்டுமென்றே தன்னை மகனிடம் கோர்த்துவிடுகிறாள் என்று தெரிந்தது.
“ப்பா…” என்று காலை கட்டிக்கொண்டு மடியில் முகத்தை வைத்து இங்குமங்கும் முகத்தை திருப்பினான்.
“மாமா…” என்று உதட்டை பிதுக்கி அதிரனை கேட்க,
“சொந்த தாய்மாமன்ட்ட கூட இவ்வளோ ஒட்டலை இவன். வந்து கொஞ்ச நேரத்துல அவர் மடியைவிட்டு இறங்குவேனான்னு இருக்கானே? கார் கிளம்பற வரைக்கும் அவரையே பார்த்துட்டு கையை நீட்டறான்…”
மலர் இதனை சாதாரணமாக சொன்னாலும் அனைவருமே கவனித்திருக்க ஆமாமென தலையசைத்தனர்.
“தாய்மாமன், என் அண்ணன் அப்படி இருந்தா ஏன் என் பிள்ளை தேடாம இருக்க போறான் த்தை?….” என்று கசப்புடன் சொல்லிவிட்டு மோனிகா மகனுக்கு கை நீட்டினாள்.
“ம்ஹூம், மாமா…” என மறுக்க,
“உன் அத்தைட்ட கேளு. பேசலாம் மாமாட்ட…” என மோனிகா சொல்ல,
“அத்தை இல்ல. மேகம்…” என திருத்தமாய் சொல்லி மோனிகாவை பார்த்து இடுப்பில் கை வைத்து முறைப்பாய் நின்றான் அஷ்வின்.
“சுத்தம்…” என்று மோனிகா தலையில் கை வைக்க அனைவருமே சிரித்துவிட்டனர்.
“ஓகே, அவக்கிட்ட போய் மாமாட்ட பேசனும்ன்னு சொல்லு. பேசு…” என்று அழைத்துக்கொண்டு செல்ல பல்லவன் மகனையும் மனைவியுமே பார்த்தான்.
“நான் பொதுவா சொன்னது மோனிக்கு சங்கடமாகிடுச்சோ?…” மலருக்கு தாய்மாமன் பேச்சு என்னவோ போல் ஆனது.
“ம்மா, நீங்க வேற. அவ அப்படி எடுத்துக்கமாட்டா. அவ வருத்தம் நம்ம மேல இல்லை. சும்மா இருக்கீங்களா…” என்றான் சற்றே டென்ஷனுடன்.
“என்னப்பா நீ ஏன் ஒருமாதிரி இருக்க?…” செல்வம் பல்லவனிடம் கேட்க,
ப்பா, இருக்கலாம். ஆனா யோசிச்சு பாருங்க. அதிரன் குடும்பத்துக்குள்ள போன பின்னாடி நம்ம வரு இப்ப மாதிரி அப்பவும் அப்படி இருக்க முடியுமா?…” என்றான் பல்லவன்.
“ஏன் முடியாது? அவங்க பேசினதை கவனிச்சீங்க தானே?…” என்று வந்தாள் மோனிகா.
“எல்லாம் கவனிக்க தான் செஞ்சோம். இப்ப என்ன?…” பல்லவன் பார்க்க,
“அவங்க சொன்ன வார்த்தையை ஞாபகப்படுத்தி பாருங்க. எங்க கல்யாணம் நடக்கறதால இதை எல்லாம் பண்ண முடியலையேன்னு நம்ம வரு எப்பவும் நினைச்சிட கூடாதுன்னு அதிரன் சொன்னார். அதுக்காக தான் கல்யாணம் நம்ம இஷ்டப்படின்னும் சொன்னார்…”
மோனிகா ஞாபகப்படுத்த அனைவருக்கும் ஞாபகம் இருந்தது. அதிரன் அதனை சொல்லியிருக்க பல்லவனுக்கோ இது நடப்பில் சாத்தியமில்லை என்றே தோன்றியது.
“இப்ப கல்யாணம் செய்ய எவ்வளோ வேணும்னாலும் சொல்லுவாங்க மோனி. ஆனா அதுக்கப்பறம்…” பல்லவனுக்கு இன்னும் நம்பிக்கை இல்லை அந்த விஷயத்தில்.
“அதை விடுங்க. அடுத்து போன் வரும். பேச ரெடியா இருங்க…” என்று சொல்ல பல்லவனும் பெருமூச்சுடன் எழுந்து அறைக்குள் சென்றான்..
கடைக்கு அதற்கு மேல் செல்ல முடியாது. ஏனோ அத்தனை சோர்வாக இருந்தது. மகிழ்ச்சியை முழுமனதாக அனுபவிக்க முடியவில்லை.
நிறைய யோசனைகள் பல்லவனுக்குள். மோனிகாவின் திருமணத்தின் போதும் இப்படித்தான் அவன் வீட்டினர் நினைத்திருப்பார்களோ என்று தோன்றியது.
அதுவரை அவன் அறியாத அவர்கள் பக்கம் இருந்த கோபமும், வருத்தமும் புரிந்தது பல்லவனுக்கு.
இதுவரை ஒரு இறுமாப்பு இருந்தது அவனிடத்தில். மோனிகாவை திருமணம் முடித்து ‘பார் என் மனைவியை நான் எப்படி வைத்திருக்கிறேன் பார்’ என கர்வமாக காட்டுவதை போல அத்தனை மிதப்புடன் தான் பார்த்து வந்தான்.
இப்போது தானும் அந்த நிலையில் இருக்க, தன்னை போல அவசரப்படாமல் இத்தனை நிதானமும், அமைதியும் அதிரனிடம்.
நினைக்கையில் ஒருபக்கம் பிரமிப்பாக இருந்தது. தேவராஜ் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டதாகட்டும், சுபத்ராவின் பேச்சாகட்டும் எதிலும் குறை சொல்லமுடியவில்லை.
பேச்சிலும், பார்வையிலும், வார்த்தையிலும் அத்தனை தன்மை, அத்தனை கரிசனை. அத்தனை அருமையான அணுகுமுறை.
யாருக்கும் பாதகமில்லாத, வலிக்காத பேச்சுக்கள். முன்பு இருந்த ரணங்களை தொடாதவகையில் இருந்தது அவர்கள் வந்ததும், சென்றதும்.
அதிலும் தன் தங்கையிடம் அவன் காட்டிய இடைவெளியும், பேச்சுக்களும் கூட கவரத்தான் செய்தது.
அழுதிருக்கிறாள், அருகில் இருக்கிறான். தானாக அவ்விடத்தில் இருந்திருந்தால் அந்த நேர அரவணைப்பு எத்தகையதாக இருந்திருக்கும்?
ஆனால் கண்ணியமாய் எட்டி இருந்து மென்னகையுடன் பேச்சுக்கள். தான் உள்ளே சென்ற பொழுதும் கூட கொஞ்சமும் பதட்டமில்லா இயல்பான பார்வைகள், கள்ளமில்லா புன்னகை.
பல்லவன் மனதில் மீண்டும் மீண்டும் தான் சந்தித்த அதிரனே உயர்வாய் ஓடிக்கொண்டிருந்தான்.
அறைக்குள் காய்ந்த துணிகளை சுமந்தபடி மோனிகா உள்ளே வர அவளை பார்த்ததும் அழுந்தவன்,
“எங்க அஷ்வின்?…” என்றான்.
“வரு ரூம்ல இருக்கான்…” என்றவள்,
“போய் தூக்கிட்டு வந்து அத்தைட்ட விடுங்களேன். சாப்பாடு ஊட்டட்டும்…”
“ஏன் நீ என்ன செய்ய போற? நீ ஊட்டேன்….”
“அப்ப சரி, இந்த ட்ரெஸ் எல்லாம் மடிச்சு வச்சுட்டு அப்படியே அயர்ன் பன்றதையும் பண்ணிடுங்க. நான் அஷூக்கு ஊட்டிட்டு தூங்க வச்சுட்டு வந்திடறேன்…” என்றாள்.
“ப்ச், என்னவோ பண்ணு. நான் பார்த்துக்கறேன்…”
“அது…” என்றவள்,
“அத்தைட்டன்னா அவன் கொஞ்சம் ஒழுங்கா சாப்பிடுவான். தெரிஞ்சுட்டே என்னை கேட்கறீங்க…” என்று உடைகளை மடிக்க ஆரம்பித்தாள்.
அறையை விட்டு வெளியே வர மலரும், அமுதனும் மெல்லிய குரலில் இவனை கவனிக்காமல் பேசிக்கொண்டிருந்தார்கள்.
அதனை பார்த்தபடியே தங்கையின் அறைக்கு செல்ல வாசலில் அப்படியே நின்றுவிட்டான்.
புதிய மொபைலில் அதிரனுடன் அஷ்வின் என்னவோ பேசிக்கொண்டிருக்க மேகா அவன் பேசுவதை மொழி பெயர்த்துகொண்டு இருந்தாள் மெல்லிய குரலில்.
அத்தனை இனிமையான உரையாடல் அவர்களுக்கிடையே. அதிரன் அஷ்வினின் கேள்விக்கேற்ப பதிலை சளைக்காமல் சொல்ல ஐந்து நிமிடத்திற்கும் மேல் அங்கேயே நின்றுவிட்டான் பல்லவன்.
மகன் தங்களை கடந்து செல்லவும் தான் மலர் கவனித்து திரும்பி பார்க்க அவன் நின்றதை பார்த்து தானும் எழுந்து வந்தார்.
“என்னப்பா…” என்ற மலரை பார்த்தவன் வாயில் கை வைத்து அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டு அங்கே பார்த்தான்.
மலருக்கு மகளின் ஒளிர்ந்த முகமும் கண்களை எட்டிய புன்னகையும் பெற்ற வயிறை குளிர வைத்தது.
இத்தனை மாதங்களில் அவள் முழுமனதாக சிரித்து அன்று தான் காண்கிறார். நிச்சயம் நின்றதிலிருந்து பெயருக்கு ஒரு சிரிப்பு. அவ்வளவே.
இன்று தலையை ஆட்டி ஆட்டி அஷ்வினின் பேச்சுக்களுக்கு அவளும் எடுத்து கொடுக்க அந்த தருணம் வீட்டினரின் மனதை நிறைக்க போதுமானதாக இருந்தது.
“பரவாயில்லை அந்த பையன்…” என மலர் சொல்லிக்கொள்ள,
“இப்பவும் உனக்கு பையன் தானா?…” என்ற கேள்வி அமுதனிடம்.
அப்போதுதான் அவரும் இதனை கவனிக்க வந்ததே மற்ற இருவருக்கும் தெரிந்தது.
“அங்க என்ன வரு ரூம் முன்னாடி நின்னு வேடிக்கை பார்த்திட்டு இருக்கீங்க?…” என மோனிகா.